முதல் வாசகம்


அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 22: 8-13; 23: 1-3

அந்நாள்களில் தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, �ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன்� என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான். பின் எழுத்தன் சாப்பான் அரசரிடம் வந்து பதில் மொழியாக, �அரசே! உம் அடியார்கள் கோவிலில் கிடைத்த பணத்தைச் சேகரித்து, ஆண்டவரின் இல்லத்தில் வேலை செய்வோரின் மேற்பார்வையாளரிடம் கொடுத்து விட்டனர்� என்று சொன்னான். மேலும் அவன் அரசரிடம், �குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார்� என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான். அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார். பின் குரு இல்க்கியாவையும், சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்கோரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, �அரசர் இட்ட கட்டளை இதுவே: நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். ஏனெனில் இந்நூலில் நமக்காக எழுதப்பட்டுள்ளவற்றிற்கு நம் மூதாதையர்கள் செவிகொடுக்கவும் இல்லை. அவற்றின்படி நடக்கவும் இல்லை. எனவே ஆண்டவரின் சினம் நமக்கெதிராகக் கொழுந்து விட்டு எரிகிறது� என்றார். அரசரது அழைப்புக்கிணங்கி யூதாவிலும் எருசலேமிலும் இருந்த பெரியோர்கள் யாவரும் அவரிடம் வந்து குழுமினர். அப்பொழுது அரசரும், யூதா நாட்டினர் அனைவரும், எருசலேம் குடிகள் அனைவரும், குருக்களும், இறைவாக்கினரும், சிறியோர் முதல் பெரியோர் வரை மக்கள் அனைவரும் ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தனர். அரசரோ ஆண்டவரின் இல்லத்தில் கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை நூலில் எழுதப்பட்டிருந்த யாவற்றையும் அவர்கள் காதில் விழுமாறு வாசித்தார். அரசர் தூணருகில் நின்று கொண்டு ஆண்டவரைப் பின்பற்றி நடப்பதாகவும், அவருடைய விதிமுறைகளையும், ஒழுங்கு முறைகளையும், நியமங்களையும் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் கடைப்பிடிப்பதாகவும், அந்நூலில் எழுதப்பட்டிருந்த உடன்படிக்கையின் சொற்களை நிறைவேற்றுவதாகவும் ஆண்டவர் திருமுன் உடன்படிக்கை செய்துகொண்டார். மக்களும் அவ்வுடன்படிக்கைக்கு உடன்பட்டனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 119: 33-34. 35-36. 37,40

பல்லவி: ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியைக் கற்றுத்தாரும்.

33 ஆண்டவரே! உம் விதிமுறைகள் காட்டும் வழியை எனக்குக் கற்றுத்தாரும்;
நான் அவற்றை இறுதிவரை கடைப்பிடிப்பேன்.
34 உம் திருச்சட்டத்தின்படி நடக்க எனக்கு மெய்யுணர்வு தாரும்.
அதை நான் முழு உள்ளத்தோடு கடைப்பிடிப்பேன். -பல்லவி

35 உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்;
ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
36 உம் ஒழுங்குமுறைகளில் என் இதயம் நாட்டங்கொள்ளச் செய்யும்;
தன்னலத்தை நாட விடாதேயும். -பல்லவி

37 வீணானவற்றை நான் பாராதபடி என் கண்களைத் திருப்பிவிடும்;
உம் வழிகளின் வாயிலாய் எனக்கு வாழ்வளித்தருளும்.
40 உம் நியமங்களைப் பெரிதும் விரும்பினேன்;
நீர் நீதியுள்ளவராய் இருப்பதால் எனக்கு வாழ்வளியும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 15: 4,5b

அல்லேலூயா, அல்லேலூயா! நான் உங்களோடு இணைந்து இருப்பது போல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மத்தேயு 7:15-20

பொதுக்காலம் 12 வாரம் புதன்

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 15-20

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``போலி இறைவாக்கினரைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். ஆட்டுத் தோலைப் போர்த்திக் கொண்டு உங்களிடம் வருகின்றனர். ஆனால், உள்ளேயோ அவர்கள் கொள்ளையிட்டுத் தின்னும் ஓநாய்கள். அவர்களின் செயல்களைக் கொண்டே அவர்கள் யாரென்று அறிந்து கொள்வீர்கள். முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப் பழங்களையோ பறிக்க முடியுமா? நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும். கெட்ட மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் நச்சுக் கனிகளைக் கொடுக்க இயலாது. கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுக்க இயலாது. நல்ல கனி கொடாத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு நெருப்பில் எறியப்படும். இவ்வாறு போலி இறைவாக்கினர் யாரென அவர்களுடைய செயல்களைக் கொண்டே இனங்கண்டு கொள்வீர்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

2 அரசர்கள் 22: 8 – 13, 23: 1 – 3
இறைவனின் திருவுளம் அறிந்து கொள்ள…

"ஆண்டவரின் இல்லத்தில் சட்டநூலைக் கண்டெடுத்தேன்" என்று, தலைமைக்குரு இல்க்கியா கூறும் வார்த்தைகள் இன்றைய வாசகத்தின் தொடக்கத்தில் அமைந்திருக்கின்றன. இந்த நூலின் முக்கியத்துவம் என்ன? இந்த நூல் எதைப்பற்றிக் கூறுகிறது? இந்த நூலில் மோசே இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்திருந்த சட்டங்களும், இஸ்ரயேல் மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளும் கொடுக்கப்பட்டிருந்தன. 2 அரசர்கள் 23: 2ல், இது உடன்படிக்கை நூல் என்று குறிப்பிடப்படுகிறது. 2 குறிப்பேடு 17: 9 ல், "ஆண்டவரின் திருச்சட்ட நூலுடன் அவர்கள் போதித்தனர்" என்கிற வார்த்தைகள் இந்த நூலையே குறிப்பிடுகிறது. 2 அரசர்கள் 11: 12 ல், யோவாசு அரசனாகிறபோது, உடன்படிக்கைச் சுருளேடு அவனிடம் கொடுக்கப்படுவது, அதனுடைய இருப்பை வெளிப்படுத்துகிறது. இணைச்சட்டம் 31: 26 ல், மனாசேயின் ஆட்சிக்காலத்தில், உடன்படிக்கைப் பேழை அருகில் அது வைக்கப்படுவதைப் பார்க்கிறோம், "இத்திருச்சட்ட நூலை எடுத்து, ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் அருகில் வையுங்கள். அங்கே அது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்". ஆனால், அரைநூற்றாண்டு காலமாக அதை யாரும் பயன்படுத்தாததால், அதை மக்கள் மறந்து விட்டனர். மீண்டும் திருக்கோவிலை பழுது பார்க்கிற நேரத்தில், அது கிடைக்கப் பெறுவதை இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம்.

இந்த திருச்சட்ட நூலை கடவுள் எதற்காக வழங்கினார்? அந்த திருச்சட்ட நூல் மக்களுக்கு எப்படி அமைந்தது? திருச்சட்ட நூல் என்பது மக்களை நல்வழிப்படுத்துவதற்காக, இறைவன் வழங்கிய நெறிமுறைகளாகும். மக்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை எப்படி அமைத்துக் கொண்டால், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள் என்பது, திருச்சட்ட நூலில் எழுதப்பட்டிருந்தது. மற்றவர்களை மதித்து வாழ்வதே, அறம் சார்ந்த வாழ்க்கை என்பது தான், திருச்சட்ட நூலின் மையமாக விளங்கியது. இறைவன் ஒருவரே முதன்மையானவர், அவரை அன்பு செய்து, அவருடைய நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது, இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த முதன்மையான கட்டளை. ஆனால், காலப்போக்கில் அவர்கள் அதனைக் கருத்தில் கொள்ளாமல், தங்கள் மனம்போன போக்கில் வாழ ஆரம்பித்தனர். இறைவனின் கோபத்திற்கு ஆளாகினர். திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்காததால், இறைவனின் திருவுளம் என்ன? என்பதை அறிய இயலாது போனது.

இறைவனின் திருவுளத்தை அறிந்து கொள்வது எளிதானது. எப்போது நாம் இறைவனின் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோமோ, அப்போது, இறைவனின் திருவுளம் எது? என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவர்களாக இருக்கிறோம். ஆனால், அதனை மறந்து, அதிலிருந்து விலகிச் செல்கிறபோது, அந்த ஆற்றலை இழந்துவிடுகிறோம். இறைவனின் திருவுளம் அறிய, நாம் எப்போதும் அவருடைய வார்த்தைகளைக் கடைப்பிடித்து நடப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

உண்மை கிறிஸ்தவர்களாக வாழ…

ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுகிறது என்பது, யூதர்கள், கிரேக்கர்கள் மற்றும் உரோமையர்கள் ஏற்றுக்கொண்ட பொது சிந்தனை. மத்திய கிழக்குப்பகுதிகளில் “வேரைப்போல அதன் கனி” என்கிற பழமொழி மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இன்றைய நற்செய்தியில் இயேசு ”முட்செடிகளில் திராட்சைப் பழங்களையோ, முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையோ பறிக்க முடியுமா?” என்று கேட்கிறார். முட்செடிகளுக்கும் திராட்சைப்பழங்களுக்கும் என்ன தொடர்பு? முட்பூண்டுகளுக்கும், அத்திப்பழங்களுக்கும் என்ன ஒற்றுமை?

பாலஸ்தீனப்பகுதியில் ஒரு சில முட்செடிகள், சிறிய பழங்களைக் கொண்டிருந்தது. அது திராட்சைப் பழங்களைப் போன்ற தோற்றம் உடையதாக இருந்தது. அதேபோல முட்பூண்டுகளில் இருக்கும் பழங்கள், அத்திப்பழங்களை நினைவுபடுத்துவது போன்று இருந்தது. எவ்வளவுதான் அவைகள் தோற்றத்தில், திராட்சைப் பழங்களையும், அத்திப்பழங்களையும் நினைவுபடுத்துவது போல இருந்தாலும், அவைகள் திராட்சைப்பழங்களாகவோ, அத்திப்பழங்களாகவோ மாறிவிட முடியாது. அதேபோலத்தான் போலி இறைவாக்கினர்களும். அவர்கள் இறைவாக்கினர்களைப் போல உடையில் காணப்பட்டாலும், அவர்கள் இறைவாக்கினர்கள் ஆகிவிட முடியாது. எனவே, அவர்களைக் குறித்து எச்சரிக்கையாய் இருக்க, இயேசு நமக்கு அழைப்புவிடுக்கிறார்.

கிறிஸ்தவர்களாக வெறும் தோற்றத்தில் இருந்தால் அதனால் பலன் ஒன்றுமில்லை. வெறும் அருள் அடையாளங்களைப் பெற்றுக்கொள்வதால், நாம் கிறிஸ்தவர்களாக மாறிவிட முடியாது. மாறாக, கிறிஸ்துவை நமது வாழ்வில் பிரதிபலிக்க வேண்டும். கிறிஸ்தவ மதிப்பீடுகளை நமது வாழ்வாக்க வேண்டும். அதுதான் கடவுளுக்கு ஏற்புடையவர்களின் வாழ்வாக இருக்க முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

எச்சரிக்கையோடு இருப்போம்

இயேசுவின் காலத்தில் ‘ஓநாய்’ என்கிற வார்த்தை போலி இறைவாக்கினர்களுக்கும், போலி அரசர்களுக்கும் பயன்படுத்தப்பட்ட வார்த்தையாகும். இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்தில் நாம் பார்க்கிறோம்: 22: 27 “இஸ்ரயேலின் தலைவர்கள் இரையைக் கிழிக்கும் ஓநாய்கள் போல் உள்ளனர். அநீதியாய்ச் செல்வம் ஈட்ட மக்களைக் கொலை செய்து குருதி சிந்துகின்றனர்”. செப்பனியா 3: 3 “அந்நகரின் தலைவர்கள் கர்ச்சனை செய்யும் சிங்கங்கள்: அதன் நீதிபதிகள் மாலையில் கிடைப்பதை காலைவரை வைத்திராத ஓநாய்கள்”. இஸ்ரயேல் தலைவர்களின் வாழ்வை இங்கே இறைவாக்கினர் ஓநாயோடு ஒப்பிட்டுப் பேசுவதைப்பார்க்கிறோம். பவுல் தான் எபேசு நகரைவிட்டு செல்கின்றபோது வருகின்ற தீமைகளைப்பற்றி எச்சரிக்கை விடுக்கிறார் 20: 29 “உங்களை விட்டு நான் சென்ற பின்பு ஓநாய்கள் உங்களுக்குள் நுழையும் என்பது எனக்குத்தெரியும். அவை மந்தையைத் தப்பவிடாதவாறு தாக்கும்”. இவ்வாறு போலிப் போதகர்கள், இறைவாக்கினர்கள் ஓநாயோடு ஒப்பிடப்படுவதை பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் நாம் பார்க்கிறோம்.

இயேசு போலி இறைவாக்கினர்களை ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்களாக சித்தரிக்கிறார். பொதுவாக ஆடுகளை மேய்க்கின்ற இடையர்கள் ஆட்டுத்தோல் போர்த்தியிருப்பார்கள். ஆனால் இடையர் அல்லாதவர்களும் அதைப்பயன்படுத்துவர். ஆட்டுத்தோல் என்பது பொதுவாக இறைவாக்கினர்களின் அடையாளமாக இருந்தது. ஒருசில வேளைகளில் மற்றவர்களும் இறைவாக்கினர்கள் என்று மற்றவர்களிடம் ஏமாற்றுவதற்காக இதுபோன்ற ஆட்டுத்தோல் ஆடைகளைப் பயன்படுத்தினர். எனவேதான் செக்கரியா 13: 4 ல் பார்க்கிறோம் “அந்நாளில் இறைவாக்கினருள் ஒவ்வொருவனும் இறைவாக்கு உரைக்கும்போது தான் கண்ட காட்சியைக்குறித்து வெட்கமடைவான். ஏமாற்றுவதற்காகக் கம்பளி மேலாடையைப் போர்த்திக்கொள்ள மாட்டான்”. போலி இறைவாக்கினர்களிடத்தில் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என்பது இயேசு நமக்கு கற்றுத்தரும் பாடம்.

இந்த சமுதாயத்தில் நல்லவர்கள் என்கிற போர்வையில் பல கெட்டவர்கள் வாழ்ந்து இந்த சமுதாயச்சீரழிவுகளுக்கு காரணமாக இருக்கின்றனர். அவர்களிடத்தில் எச்சரிக்கை உணர்வோடு இருக்க அழைக்கப்படுகிறோம். அவர்களை அடையாளம் கண்டுகொண்டு, மற்றவர்களுக்கும் எச்சரிக்கை உணர்வு ஊட்டுவது நம் அனைவரின் கடமையாகும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

2 அர 22: 8-13, 23:1-3
மத் 7: 15-20

போலி இறைவாக்கினர்!

இன்று எங்கும் போலிகளின் நடமாட்டம் பெருகிவிட்டது. உணவுப் பொருள்கள், நுகர்வுப் பொருள்களில் போலிகள் இருக்கின்றன. மருத்துவர்கள், ஆன்மீகவாதிகளிலும் போலிகள் நுழைந்துவிட்டதைப் பார்த்து உலகம் அதிர்ந்து நிற்கிறது.

எனவே, ஆன்மீகத் தலைவர்கள் தாங்கள் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் என்பதை வெளிப்படையாக மக்களுக்கு எடுத்துக்காட்டும் கடமையில் இருக்கின்றனர். ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய் போல் அல்லாமல், நேர்மையான, கள்ளமற்ற பணிகளை ஆற்ற இன்று அழைக்கப்படுகின்றனர்.

ஆண்டவர் கூறுவது போல, நல்ல மரங்கள் கெட்ட கனியைத் தரா. அவ்வாறே, போலி இறைவாக்கினர்களை அவர்களது செயல்களைக் கொண்டே, (சொற்கள், போதனைகளைக் கொண்டல்ல!) அறிந்துகொள்ளலாம். எனவே, துறவிகள், குருக்கள், ஆன்மீகத் தலைவர்கள் தங்கள் வாழ்வையும், பணியையும் பற்றி விழிப்பாயிருப்பார்களாக!

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். வெளிவேடமற்ற, உள்நோக்கமற்ற நேர்மையான பணிகளை ஆற்றுவதன் மூலம் நாங்கள் உமது நேர்மையான சீடர்கள் என எண்பிக்க எங்களுக்கு அருள்தாரும், ஆமென்.

 

அருள்பணி. குமார்ராஜா

 

செயல்களைக் கொண்டேரூhநடடip; !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

போலி இறைவாக்கினர்களுக்கும், இறையடியார்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன? என்னும் கேள்விக்கு மிக எளிதாக விடை பகர்கின்றார் நம் பெருமான் இயேசு. ஒருவரது கொள்கைகளைக் கொண்டோ, அவரது பேச்சினைக் கொண்டோ அவரது ஆன்மீகத்தை நாம் எடைபோட முடியாது. மாறாக, அவரது செயல்களைக் கொண்டே கண்டுகொள்ள முடியும். அதற்கு இயேசு தரும் எடுத்துக்காட்டுதான் மரமும், கனியும். நல்ல மரம் நல்ல கனிகளைத் தருகிறது. நச்சு மரமோ நச்சுக் கனிகளையே தரும். நல்ல ஆன்மீகம் கொண்டவர்கள் நல்ல கனிகளைத் தரும் மரத்திற்கு ஒப்பானவர்கள். அவர்களின் செயல்களில் அவர்களின் ஆன்மீகம் வெளிப்படும். எனவே, பிறரது சொற்களைக் கொண்டு அவர்களின் ஆன்மீகத்தை எடைபோடக்கூடாது. நாமும் நற்செயலால் நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை அறிவிக்க மறக்க வேண்டாம்.

மன்றாடுவோம்: காலத்தை வென்ற காவிய நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நாங்கள் நல்ல கனி தரும் மரங்களாக, எங்கள் செயல்களைக் கொண்டே உண்மையான இறைவாக்கினர்களாக எங்களை வெளிப்படுத்த அருள்தாரும். இறைவா,  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

---------------------------------

 

இவையே நிஐம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

மனித வாழ்க்கை நன்றாக இருக்க போலிகளை உருவாக்கக் கூடாது. போலிகளை இனம்கண்டு அவைகளை அழிக்க வேண்டும். போலிகளை உருவாக்குவதும் மனிதன்தான். அதை அழிக்க முடியாமல் பல இழப்புக்ளைச் சந்திப்பதும் அதே மனிதன்தான்.பொருட்களில் உள்ள போலிகள் கூட, மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி, மனிதனைப் பல சிரமங்களுக்குள்ளாக்கிவிடுகிறது.

கள்ள நோட்டுகள் பொருளாதரத்தைத் சிதைத்துவிடுகிறது. போலி மருத்துவர், மனிதனின் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறார். இதுவே போலி இறைவாக்கினர் என்றால்,பொருளும் உயிரும் ஆன்மாவும் பாதிப்புக்குள்ளாகிவிடுகிறது. இவ்வுலக வாழ்வும் மறுவுலக வாழ்வும் பாதிக்கப்படுகிறது. ஆகவே, போலி இறை வாக்கினர்கள் மனிதர்களுக்குப் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்துகிறார்கள். இவர்கள் மட்டில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என இயேசு எச்சரிப்பது சரியானதே.

உண்மை இறைவாக்கினர்கள், சமுதாயத்தின் பொய்த் திறைகளுடன் சமரசம் பேசாத நெருப்புச் சுவாலைகள். சமுதாயத்தின் அரசியல் குழப்பங்களிலும் ஒழுக்கச் சரிவுகளிலும் தனித்து ஒலிக்கும் ஒலிவாங்கிகள். கடவுளின் கருத்துக்களை ஓங்கி ஒலிக்கும் இறைவனின் குரல் நாண்கள். பாசப்பிணைப்புகளால், ஆசை அலைகளால் அசைக்கமுடியாத வச்சிரத் தூண்கள். ஆழமான ஆன்மீகத்தால், செப உறவால் இறைவனோடு இருக்கமாகக் கட்டப்பட்டவர்கள். அர்ப்பணத்திலும் கீழ்ப்படிதலிலும் தம்மை தகனப்பலியாக்கும் தியாகச் செம்மல்கள். தீமைகளை அஞ்சாது வேரறுக்கும் வீர வாள்கள். இக்கனிகளைக்கொண்டு உண்மை இறைவாக்கினர்களை அடையாளம் காண்போம்.அவர்களைப் பாராட்டுவோம்; அவர்கள் வழி நடப்போம் . இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்