முதல் வாசகம்


அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 8-17

யோயாக்கின் அரசனான போது அவனுக்கு வயது பதினெட்டு. எருசலேமில் மூன்று மாதமே அவன் அரசாண்டான். எருசலேமைச் சார்ந்த எல்நாத்தானின் மகள் நெகுஸ்தா என்பவளே அவனுடைய தாய். யோயாக்கின் தன் தந்தை செய்த அனைத்தின்படியே ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைச் செய்தான். அக்காலத்தில் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் படைவீரர் எருசலேமின் மீது படையெடுத்து வந்து நகரை முற்றுகையிட்டனர். அப்பொழுது பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும் வந்து நகரை முற்றுகையிட்டிருந்த வீரர்களோடு சேர்ந்து கொண்டான். எனவே யூதாவின் அரசன் யோயாக்கினும் அவன் தாயும் அவன் அலுவலர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் பாபிலோன் மன்னனிடம் சரணடைந்தனர். அவனைப் பாபிலோன் மன்னன் தான் ஆட்சியேற்ற எட்டாம் ஆண்டில் சிறைப்படுத்தினான். பின்பு அவன் ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் இருந்த செல்வங்களை எல்லாம் எடுத்துச் சென்றான். ஆண்டவர் உரைத்த வாக்கின்படி, ஆண்டவரின் இல்லத்தில் இஸ்ரயேலின் அரசர் சாலமோன் செய்து வைத்திருந்த எல்லாப் பொன்கலன்களையும் துண்டு துண்டாக்கினான். மேலும் அவன் எருசலேம் முழுவதையும், தலைவர்கள் அனைவரையும், ஆற்றல் வாய்ந்த பதினாயிரம் படை வீரர்களையும் சிற்பக் கலைஞர்களையும், கொல்லர்களையும் நாடு கடத்தினான். நாட்டில் ஏழை மக்களைத் தவிர எவரையும் விட்டுவைக்கவில்லை. மேலும் அவன் யோயாக்கினையும், அரசனின் தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின் தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான். மேலும் வலிமை வாய்ந்த ஏழாயிரம் பேர்களைக் கொண்ட முழுப்படையையும், போர்த் திறனும் உடல் ஆற்றலும் கொண்ட ஆயிரம் தச்சர்களையும், கொத்தர்களையும் அவன் சிறைப்படுத்திப் பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் �செதேக்கியா� என்று மாற்றினான்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 79: 1-2. 3-5. 8-9

பல்லவி: உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களை விடுவியும் ஆண்டவரே.

1 கடவுளே, வேற்று நாட்டினர் உமது உரிமைச் சொத்தினுள் புகுந்துள்ளனர்;
உமது திருக்கோவிலைத் தீட்டுப்படுத்தியுள்ளனர்; எருசலேமைப் பாழடையச் செய்தனர்.
2 உம் ஊழியரின் சடலங்களை வானத்துப் பறவைகளுக்கு உணவாகவும் உம் பற்றுமிகு அடியாரின்
உடல்களைக் காட்டு விலங்குகளுக்கு உணவாகவும் அவர்கள் அளித்துள்ளார்கள். -பல்லவி

3 அவர்களின் இரத்தத்தைத் தண்ணீரென எருசலேமைச் சுற்றிலும் அள்ளி இறைத்தார்கள்;
அவர்களை அடக்கம் செய்ய எவரும் இல்லை.
4 எங்களை அடுத்து வாழ்வோரின் பழிச்சொல்லுக்கு இலக்கானோம்;
எங்களைச் சூழ்ந்துள்ளோரின் நகைப்புக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிவிட்டோம்.
5 ஆண்டவரே! இன்னும் எவ்வளவு காலம் நீர் சினம் கொண்டிருப்பீர்? என்றென்றுமா?
உமது வெஞ்சினம் நெருப்பாக எரியுமோ? -பல்லவி

8 எம் மூதாதையரின் குற்றங்களை எம்மீது சுமத்தாதேயும்!
உம் இரக்கம் எமக்கு விரைவில் கிடைப்பதாக! நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டிருக்கின்றோம்.
9 எங்கள் மீட்பராகிய கடவுளே! உமது பெயரின் மாட்சியை முன்னிட்டு எங்களுக்கு உதவி செய்தருளும்;
உமது பெயரை முன்னிட்டு எங்களை விடுவித்தருளும்;
எங்கள் பாவங்களை மன்னித்தருளும். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மத்தேயு 7:21-29

பொதுக்காலம் 12 வாரம் வியாழன்


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 21-29

அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: ``என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி, `ஆண்டவரே, ஆண்டவரே, உம் பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உம் பெயரால் பேய்களை ஓட்டவில்லையா? உம் பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா?' என்பர். அதற்கு நான் அவர்களிடம், `உங்களை எனக்குத் தெரியவே தெரியாது. நெறி கேடாகச் செயல்படுவோரே, என்னை விட்டு அகன்று போங்கள்' என வெளிப்படையாக அறிவிப்பேன். ஆகவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும் பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டின் மேல் மோதியும் அது விழவில்லை. ஏனெனில் பாறையின்மீது அதன் அடித்தளம் இடப்பட்டிருந்தது. நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படாத எவரும் மணல்மீது தம் வீட்டைக் கட்டிய அறிவிலிக்கு ஒப்பாவார். மழை பெய்தது; ஆறு பெருக்கெடுத்து ஓடியது; பெருங்காற்று வீசியது; அவை அவ்வீட்டைத் தாக்க, அது விழுந்தது; இவ்வாறு பேரழிவு நேர்ந்தது.'' இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்தபோது அவரது போதனையைக் கேட்ட மக்கள் கூட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்தனர். ஏனெனில் அவர்கள்தம் மறைநூல் அறிஞரைப் போலன்றி அதிகாரத்தோடு அவர்களுக்கு அவர் கற்பித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

2 அரசர்கள் 24: 8 – 17
இறைவனின் குரல்

பாபிலோனி வரலாற்றை மாற்றி எழுதிய மிகச்சிறந்த அரசர் உண்டென்றால், நிச்சயம் அது நெபுகத்நேசராகத்தான் இருக்க முடியும். யோயாக்கின் அரசனின் நான்காவது ஆண்டு ஆட்சியில், இந்த படையெடுப்பு நிகழ்ந்தது. அது நெபுகத்நேசரின் முதலாவது ஆண்டு ஆட்சி. தன்னுடைய தந்தை இறந்ததால், படைப்பொறுப்பை ஏற்று, தன்னுடைய எல்கையை விரிவுபடுத்தத் தொடங்கினார். அவருடைய படை, தனக்கு கப்பம் கட்டும் நாடுகளின் படைவீரர்களைக் கொண்டிருந்த மிகப்பெரிய படையாக இருந்தது. நெபுகத்நேசர் யூதாவிற்கு எதிராக வெற்றி பெற்றாலும், அது அவர் பெற்ற வெற்றியாக யூதர்கள் கருதவில்லை. மாறாக, அது ஆண்டவர் அவர்களுக்குக் கொடுத்த வெற்றியாகவே கருதினர்.

இஸ்ரயேல் மக்கள் எதற்காக, பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரின் வெற்றியை, ஆண்டவர் அவர்களுக்கு அளித்த வெற்றியாக கருதினர்? 2அரசர்கள் புத்தகத்தில்(24: 1, 2) பார்க்கிறோம்: "அவனது ஆட்சிக்காலத்தில் பாபிலோன் மன்னன் நெபுகத்னேசர் யூதாவின் மேல் படையெடுத்து வந்தான். எனவே, யோயாக்கிம் மூன்று ஆண்டுகள் அவனுக்கு அடி பணிந்திருந்தான். பின்பு மனத்தை மாற்றிக்கொண்டு, அவனுக:கு எதிராகக் கிளர்ச்சி செய்தான். ஆண்டவர் கல்தேயா, சிரியா, மோவாவு, அம்மோன் ஆகிய மக்களினங்களைச் சார்ந்தக் கொள்ளைக் கூட்டத்தாரை அவன் மீது ஏவி விட்டார். அவர் தம் அடியாரான இறைவாக்கினர் மூலம் உரைத்திருந்தவாக்கின்படி, யூதாவுக்கு எதிராக அதனை அழிப்பதற்காகவே, அவர்களை அங்கே அனுப்பினார்". ஆக, ஆண்டவரின் சட்டங்களுக்கு கீழ்ப்படிந்து நடக்காததாலும், இறைவாக்கினரின் அறிவுரையை மதிக்காத காரணத்தினாலும், ஆண்டவர் யூதாவின் எதிரிகளைப் பயன்படுத்தி, அவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றார். இந்த வெற்றி பாபிலோனியர்களின் வலிமையினால் பெற்ற வெற்றி அல்ல, மாறாக, ஆண்டவர் அருள் புரிந்ததால் பெற்ற வெற்றியாகும்.

இறைவன் நம்மை நல்வழிப்படுத்துவதற்காக பல மனிதர்களைப் பயன்படுத்தி நமக்கு அறிவுரை கூறுகிறார். நாம் செல்கிற பாதை தவறானது என்பதையும் நமக்கு அறிவிக்கிறார். இறைவன் நமக்குக் காட்டும் இந்த வழிமுறைகளை உணர்ந்து, அதற்கு ஏற்ப, நம்முடைய வாழ்வை மாற்றிக் கொள்ள முன்வர வேண்டும். இல்லையென்றால், அதனால் ஏற்படும் விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

செயல்பாடுள்ள கிறிஸ்தவர்கள்

இயேசு வாழ்ந்த காலம் புதுமைகளுக்கு பெயர் போன காலம். பல போதகர்களால் புதுமைகளும் அற்புதங்களும் அரங்கேறின. புதுமைகள் பொதுவாக நடக்கக்கூடிய நிகழ்வுகளாக இருந்தன. பல நோய்கள் உளவியல் நோய்களாக இருந்தன. கடவுளின் பெயரைச்சொல்லி வேண்டுகிறபோது, கடவுள் மீது உள்ள நம்பிக்கை, பல பேருக்கு சுகத்தை கொடுத்தது. இந்த பிண்ணனியில் தான், நாம் இந்த நற்செய்தி வாசகத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

தொடக்ககால திருச்சபை தலைவர்கள், புதுமைகளை மறுக்கவில்லை. தொடக்ககால திருச்சபையில் இயேசுவை நம்பாத சிலரும், உதட்டளவில் இயேசுவின் பெயரைச் சொல்லி, பல பேய்களை ஓட்டினர். ஆனால், கடவுளை நம்பாதவர்கள், கடவுளின் பெயரைச் சொல்லி காரியம் சாதிக்கிறபோது, அதற்கான விளைவை, அவர்கள் சந்தித்தே ஆக வேண்டும் என்பது இயேசு கொடுக்கிற எச்சரிக்கை செய்தி. புதுமைகள் செய்வதனாலோ, கடவுளின் பெயரால் காரியங்கள் சாதிப்பதனாலோ, ஒருவர் கடவுளுக்கு உகந்தவர் ஆகிவிட முடியாது. கடவுளுக்கு ஒருவர் உகந்தவர் ஆக வேண்டுமென்றால், கிறிஸ்தவத்தை முழுமையாக வாழ முயற்சி எடுக்க வேண்டும். அதைத்தான் இயேசு நமக்கு கற்றுக்கொடுக்கிறார்.

வெறும் வார்த்தைகள் செயல்பாடுகளுக்கு இணையானதாக மாறிவிட முடியாது. செயல்பாடுகள் தான் ஒருவருடைய தரத்தை நிர்ணயிப்பதாக இருக்கிறது. ஆக, கிறிஸ்தவம் என்பது செயல்பாடுகளுக்கு முன்னுரிமையும், முதன்மையான இடத்தையும் கொடுப்பதாக அமைய வேண்டும். செயல்பாடுகள் நிறைந்த கிறிஸ்தவர்களாக நாம் மாறுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

உண்மையான வழிபாடு

இயேசு வாழ்ந்த காலத்தில் பேயோட்டும் வழக்கம் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. பல வேற்றுத்தெய்வங்களின் பெயரைச்சொல்லி, அவர்கள் பேயோட்டினார்கள். இயேசுவுக்குப்பின்னர், அவர்கள் இயேசுவின் பெயரால் கூட பேயோட்டி வந்தனர். திருத்தூதர்பணி 19: 13 ல் பார்க்கிறோம்: ”சுற்றித்திரிந்து பேயோட்டும் யூதர் சிலர் பொல்லாத ஆவி பிடித்திருந்தவர்கள் மீது, ஆண்டவராகிய இயேசுவின் பெயரைப் பயன்படுத்த முயன்றனர். “பவுல் அறிவிக்கின்ற இயேசுவின் பெயரால் நான் உங்களுக்கு ஆணையிடுகிறேன்” என்று அவர்கள் கூறிவந்தார்கள்”. ஆக, ஒரு சில யூதர்கள் இயேசுவை நம்பிவில்லை என்றாலும், தங்களின் சுயநலத்திற்காக, அவரது பெயரைப்பயன்படுத்தி, பேயோட்டினார்கள். இந்தப் பிண்ணனியில்தான், நற்செய்தியை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

”என்னை நோக்கி, ஆண்டவரே, ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்கிற இயேசுவின் வார்த்தைகள், உதட்டளவில் கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுகிறவர்களுக்கு கொடுக்கப்படும் மிகப்பெரிய சவுக்கடி. அதனை இயேசு ”நெறிகேடான வாழ்வு” என்று சொல்கிறார். உண்மையான வாழ்வு என்பது, கடவுளை உதட்டளவில் அல்ல, உள்ளத்து அளவில் போற்றுவது. வெறும் உதட்டளவில், சுயஇலாபத்திற்காக கடவுளைப் போற்றுவது, தண்டனைக்குரிய குற்றமாகும். உண்மையாக கடவுளைப் போற்றிப் புகழ வேண்டும்.

இன்றைக்கு நமது வழிபாடு, வெறும் உதட்டளவிலான வழிபாடாகத்தான் இருக்கிறது. கடவுளை நமது சுயஇலாபத்திற்காகத்தான் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். நமது வழிபாடு உள்ளத்தின் ஆழத்திலிருந்து வெளிப்பட வேண்டும். கடவுளைத்தேடுவது, நமது இதயத்திலிருந்து புறப்பட வேண்டும். அதுதான் உண்மையான வழிபாடாக இருக்க முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உண்மையான உள்ளத்தோடு…..

இயேசு வாழ்ந்த காலத்தில் புதுமைகள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றானதாக இருந்தது. நோய், நொடிகளுக்கு காரணம் சாத்தானின் தூண்டுதல் தான் என்ற எண்ணமும் மக்கள் மனதில் மேலோங்கியிருந்தது. மனிதர்களை தன்னுடைய வசியத்தால் சிறைபிடித்து, அவர்களுக்குள்ளாக சாத்தான் ஆட்சி செய்வதுதான் நோய்களுக்கு காரணம் என்று நம்பினர்.

யாராவது ஒருவர் நோயாளியிடம் சாத்தான் அவரை ஆட்கொண்டதாகக்கூறினால், அதையே அவர் நம்பி, அதையே கற்பனை செய்து, தனக்குள் சாத்தான் இருக்கிற எண்ணம் அவரின் நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடுகிறது. ஆனால், அதே நம்பிக்கையோடு இருக்கிற நோயாளியை, தன்னுடைய சாதுர்யத்தால், சாத்தானை வசியப்படுத்தி வெளியேற்றி விட்டதாக நம்ப வைத்தால், அந்த மருத்துவர் பேய்களை ஓட்டுகின்ற வல்லமையைப்பெற்றுவிடுகிறார். இயேசு வாழ்ந்த காலத்தில் பலர் இயேசுவின் பெயரைச்சொல்லி பேய்களை ஓட்டி வந்தனர். பணம் சம்பாதித்தனர். இயேசுவின் பெயரைச்சொல்லி பணம் சம்பாதி;த்தவர்களுக்கு உண்மையில் இயேசு மீது நம்பிக்கையோ, விசுவாசமோ இல்லை. தங்களுடைய சுயநலத்துக்காக, சுய இலாபத்திற்காக இயேசுவின் பெயரைப் பயன்படுத்தினர். இது தவறு என்பதுதான் நற்செய்தி நமக்குக்கற்று தரும் பாடம்.

இயேசுவின் பெயரை நமது சுயஇலாபத்திற்காக நாம் பயன்படுத்தக்கூடாது. இயேசுவை வழிபடுவது நேர்மையானதாக, உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுவதாக அமைய வேண்டும். நேர்மையற்ற உள்ளத்தோடு வழிபடுவது கடவுளையே களங்கப்படுத்துவதாகும். உண்மையான விசுவாசத்தோடு இயேசுவை அன்பு செய்வோம்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

2 அர 24: 8-17
மத் 7: 21-29
உதடும், உள்ளமும்

நமது இறைவேண்டுதல் எவ்வாறு அமையவேண்டும் என்னும் தெளிவினை இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு வலிமையாகத் தருகின்றார்.

“ஆண்டவரே, ஆண்டவரே, எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை.  மாறாக, விண்ணகத்திலுள்ள என்  தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்னும் சொற்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன.

எனவே, செப ஆர்வலர்கள் அனைவரும் விழிப்படைய வேண்டும். இறைபுகழ்ச்சி, இடைநில்லாத் தியானம், திருவிழிப்பு செபம்... எனப் பல்வகைப் பக்தி முயற்சிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபடுவோர் அனைவரும் தம் வாழ்வைக் கொஞ்சம் ஆய்வு செய்துபார்க்க வேண்டும். செபத்தில் செலவிடும் நேரம், செப முறை, செப ஆற்றல் ... இவற்றைவிட நாம் எவ்வாறு வாழ்கிறோம் என்பதே முதன்மையானது. எனவே, நமது போலித்தனமான வேண்டல்களைக் குறைத்துவிட்டு, இறைவனின் திருவுளத்தின்படி, விருப்பப்படி வாழ அருள் வேண்டுவோம்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் எங்களுக்குக் கற்றுத் தந்தவாறே நாங்கள் செபத்தைவிட, வாழ்வுக்கு அதிக முதன்மைத்துவம் கொடுத்து, இறைத் தந்தையின் பிள்ளைகளாக வாழ அருள் தந்தருளும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

''இயேசு, 'நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு இவற்றின்படி செயல்படுகிற எவரும்
பாறைமீது தம் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவார்' என்றார்'' (மத்தேயு 7:24)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு வழங்கிய ''மலைப் பொழிவின்'' இறுதிச் சொற்கள் இருவிதமான வீடுகள் பற்றி விவரிக்கின்றன. பாறைமேல் கட்டப்பட்ட வீடு நிலைத்துநிற்கும்; மணல்மீது கட்டப்பட்ட வீடு நிலைத்துநிற்காது. இந்த இரு வகை வீடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இயேசு வேறு உருவகங்கள் வழியாகவும் எடுத்துரைத்தார். இடுக்கமான வாயில், அகன்ற வாயில் (மத் 7:12-14); நல்ல மரம், கெட்ட மரம் (மத் 7:17); ஆண்டவரே ஆண்டவரே என்போர், தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவோர் (மத் 7:21) என்னும் வெவ்வேறு உருவகங்களும் குறித்து நிற்பது ஒரே அடிப்படை உண்மைதான். அதாவது, இயேசுவைப் பின்செல்ல விரும்புவோர் உறுதியான உள்ளத்தோடு, முழுமையான ஈடுபாட்டோடு அவரைப் பின்செல்ல வேண்டும். மேலெழுந்த வாரியான போக்கு இயேசுவின் சீடருக்கு ஒவ்வாத ஒன்று. பாறை என்னும் உருவகம் பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கு உருவகமாக வருகிறது (காண்க: இச 32:4; 18:31; திபா 18:2; 28:1; எசா 17:10). மலைப் பொழிவில் ''பாறைமீது வீடுகட்டுவது'' இயேசு என்னும் உறுதியான அடித்தளத்தில் நம் வாழ்க்கை ஊன்றியிருப்பதைக் குறிக்கிறது. பின்னர் இயேசு ''பாறை'' என பேதுருவைக் குறிப்பிடுவார் (காண்க: மத் 16:18).

-- நம் வாழ்க்கை இயேசு என்னும் பாறையில் கட்டப்பட வேண்டும் என்றால் பொருள் என்ன? முதன்முதலில், இயேசு நம் வாழ்க்கை முறையை நமக்கு நிர்ணயித்துத் தருகிறார் என்பதை நாம் நம்பிக்கையோடு ஏற்க வேண்டும். அவர் தம் சொற்களாலும் செயல்களாலும் நமக்குக் கற்பித்ததை நாம் உளமார ஏற்று, முழுமையாகக் கடைப்பிடிக்கும்போது நம் வாழ்க்கை அவரில் வேரூயஅp;ன்றியதாக அமையும். இயேசுவின் போதனையோடு அவருடைய உடனிருப்பும் நமக்கு உறுதியான அடித்தளமாகிறது. துன்பங்கள் அனுபவித்து, சிலுவையில் உயிர்துறந்த இயேசு வரலாற்றில் வாழ்ந்த பிற மனிதர்களைப் போல வெறும் ''நினைவு'' என மங்கலாக மட்டுமே நமக்குத் தெரிவதில்லை. மாறாக, இயேசு நம்மோடு எந்நாளும் இருப்பதாக வாக்களித்துள்ளார். அவருடைய ஆவியின் துணை நமக்கு உள்ளது. எனவே, நம் வாழ்க்கையானது இயேசுவின் மன நிலையைப் பிரதிபலிக்கின்ற போது பாறைமேல் கட்டப்பட்ட வீடு போல நிலைத்து நிற்கும் பண்பு கொண்டிருக்கும். ஆக, இயேசுவின் போதனை, செயல்பாடு, உடனிருப்பு ஆகியவை நம் வாழ்க்கைக்கு அடித்தளம் ஆகும்போது நாம் உறுதியான உள்ளத்தோடு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம். ''ஆண்டவரே, ஆண்டவரே'' என்று வெளிப்படுகின்ற வெற்றுச் சொற்களாக இல்லாமல், கடவுளின் திருவுளத்தை நடைமுறையில் செயல்படுத்துகின்ற விதத்தில் நமது வாழ்க்கை அமையும். இந்த உறுதியான அடித்தளம் இல்லாதபோது நம் வாழ்க்கை மணல்மீது கட்டப்பட்ட வீடுபோல எளிதில் விழுந்துவிடும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகன் இயேசு என்னும் அடித்தளத்தில் கட்டப்பட்ட வீடாக எங்கள் வாழ்க்கை அமைந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

பாறை மேல் வாழ்க்கை

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

பாறை மீது நண்பர்களே உங்கள் வீட்டைக் கட்டுங்கள். இதை நான் சொல்லாமலே செய்வீர்கள்; செய்திருப்பீர்கள். இங்கே கொடுக்கப்படும் அழைப்பு உங்கள் வாழ்க்கையைப் பாறை மீது கட்டுவதற்கு. இந்த அழைப்புக்கு எத்தனை பேர், எவ்வளவு ஆர்வத்தோடு செவி சாய்க்கிறோம், செயல்படுத்துகிறோம் என்பது அவரவர் வாழ்க்கைக்கு மிக முக்கியம். திருத்தூதர்கள், இறைவாக்கினர்கள் ஆகியோர்களை அடித்தளமாகவும், கிறிஸ்து இயேசுவையே மூலைக்கல்லாகவும் கொண்டு அமைக்கப்பட்ட வாழ்வாக நம் வாழ்வு அமைய வேண்டுமென பவுலடியார் கேட்டுக்கொள்கிறார்.(எபேசி 2:20)

கடவுள் என்ற பாறை மீதுள்ள நம்பிக்கையில் வாழ்க்கையைக் கட்டி எழுப்புங்கள். "ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர்; என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்"(திருப் பாடல் 18 :2). "உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே; என் கோட்டையும் அவரே; எனவே நான் சிறிதும் அசைவுறேன். (திருப்பாடல் 62 :2)

நம் கத்தோலிக்கத் திருச்சபை ஒரு பாறை. அதன் வழிகாட்டுதலிலும் தோழமையிலும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டும் உங்கள்வாழ்க்கையைக் கட்டி எழுப்புங்கள். உங்கள் வாழ்வில் செல்வமும் செழிப்பும் ஆசீர்வாதமாய் நிறைந்திருக்கும். "இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி கொள்ளா. "(மத்16:18) திருப்பலியிலும் செபத்திலும் உங்கள் குடும்பத்தை ஆண்டவரோடு இணைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பம் பாறை மீது கட்டப்பட்ட வீடாக இருக்கும். "சுழல் காற்றக்குப்பின் பொல்லார் இராமற்போவர்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களோ என்றுமுள்ள அடித்தளம் போல நிற்பார்கள்"( நீதி மொழிகள் 10:25) இறை வார்த்தையில் புதுப்பிக்கப்பட்டு புதுவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்; செபிக்கிறேன்.

--அருட்திரு ஜோசப் லீயோன்