:

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 29: 17-24

இறைவனாகிய ஆண்டவர் கூறுவது: இன்னும் சிறிது காலத்தில் லெபனோன் வளம்மிகு தோட்டமாக மாறுமன்றோ? வளம்மிகு நிலம் காடாக ஆகிவிடுமன்றோ? அந்நாளில் காது கேளாதோர் ஏட்டுச் சுருளின் வார்த்தைகளைக் கேட்பர்; பார்வையற்றோரின் கண்கள் காரிருளில் இருந்தும் மையிருளில் இருந்தும் விடுதலையாகிப் பார்வை பெறும். ஒடுக்கப்பட்டோர் மீண்டும் ஆண்டவரில் மகிழ்ச்சி பெறுவர்; மானிடரில் வறியவர் இஸ்ரயேலின் தூயவரில் அகமகிழ்வர். கொடியோர் இல்லாதொழிவர்; இகழ்வோர் இல்லாமற் போவர்; தீமையில் நாட்டம் கொள்வோர் அழிந்து போவர். அவர்கள் ஒருவர்மேல் பொய்க் குற்றம் சாட்டி, நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவோரை இடறச் செய்கின்றனர்; பொய் புனைந்து நேர்மையாளரின் வழக்கைப் புரட்டுகின்றனர். ஆதலால் ஆபிரகாமை மீட்ட ஆண்டவர் யாக்கோபு வீட்டாரைப்பற்றிக் கூறுவது: இனி யாக்கோபு மானக்கேடு அடைவதில்லை; அவன் முகம் இனி வெளிறிப் போவதுமில்லை. அவன் பிள்ளைகள் என் பெயரைத் தூயதெனப் போற்றுவர்; நான் செய்யவிருக்கும் என் கைவேலைப் பாடுகளைக் காணும்போது யாக்கோபின் தூயவரைத் தூயவராகப் போற்றுவர்; இஸ்ரயேலின் கடவுள்முன் அஞ்சி நிற்பர். தவறிழைக்கும் சிந்தைகொண்டோர் உணர்வடைவர்; முறுமுறுப்போர் அறிவுரையை ஏற்றுக்கொள்வர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்�

திபா 27: 1. 4. 13-14

பல்லவி: ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு.

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு;
யாருக்கு நான் அஞ்சவேண்டும்?
ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;
யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? -பல்லவி

4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்;
அதையே நான் நாடித்தேடுவேன்;
ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்,
ஆண்டவரின் அழகை நான் காணவேண்டும்;
அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். -பல்லவி

13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக்
காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன்.
14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்;
உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! இதோ, நம் ஆண்டவர் வல்லமையுடன் வருவார்; தம் ஊழியரின் கண்களுக்கு ஒளி தருவார். அல்லேலூயா.

மத்தேயு 9:27-31

திருவருகை காலம்; முதல் வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்�

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 27-31


அக்காலத்தில் இயேசு தம் சொந்த ஊரை விட்டு வெளியே சென்றபோது பார்வையற்றோர் இருவர், �தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர். அவர் வீடு வந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, �நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், �ஆம், ஐயா'' என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, �நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'' என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி, �யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்'' என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார். ஆனால் அவர்கள் வெளியே போய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

நடந்ததை சொல்லு...
மத்தேயு 9:27-31

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்பிய அனைவருக்கும் அதிசயம் நடக்கிறது. அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கிறது. பார்வையற்ற இருவர் நம்பியதால் அவர்களுக்கு ஆச்சரியம் நடக்கிறது. கண்கள் மிக அற்புதமாய் திறக்கின்றன. அதிசயம் நடந்த பிறகு அவர்கள் செய்தது மிகவும் கவனிக்கத்தக்கது. ஆண்டவர் இயேசு நடந்ததை வெளியே சென்று அறிவிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அவர்கள் அதையெல்லாம் தாண்டி நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியை பரப்புகிறார்கள்.

அன்புமிக்கவர்களே! நாமும் பார்வையற்ற இருவரை பின்பற்ற அழைக்கப்படுகிறோம். நாம் ஆண்டவரிடம் இருந்து அதிசயம், புதுமைகளைப் பெற்ற பிறகு அவர்களைப் போன்று ஆண்டவரின் வல்லமையை அறிவிக்க வேண்டும். எப்படி அறிவிக்கலாம்? இரண்டு முறைகளில் அதை செய்வது சிறப்பு

1. அன்பியங்களில் அறிவி
அன்பியக் கூட்டங்களில் இறைமக்கள் நிறைய பேர் கலந்துக்கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. இறைமக்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வதற்கு அங்கு நேரம் தரப்படுகிறது. அந்த நேரத்தில் பலர் மெளனமாகவே இருந்துவிட்டு வீடு வருகின்றனர். இந்த நேரத்தை இதற்காக பயன்படுத்தினால் நலமாக இருக்கும். ஆண்டவர் செய்த நல்ல செயல்களை சாட்சியாக அறிவித்தால் அது மிகவும் இனிமையாக இருக்கும். இனி செய்வோமா!

2. அன்பர்களிடம் அறிவி
நமக்கு பிரியமான அன்பர்கள் பலர் இருக்கிறார்கள் அல்லவா! அவர்களிடம் ஆண்டவரின் வல்ல செயல்களை, அவர் செய்த புதுமைகளை எடுத்துரைக்கலாம். அலைபேசியில் பல அவசியமற்றவைகளை பேசாமல் நமக்கு ஆண்டவர் செய்த நல்லவைகளை பேசலாம். அதன் மூலமாக ஆண்டவரின் பெருமைகளை பலரும் அறியச் செய்யலாம்.

மனதில் கேட்க…
1. என் வாழ்வில் இயேசு செய்ததை யாரிடமாவது சொல்லியிருக்கிறேனா?
2. அன்பியக் கூட்டங்களுக்கு செல்லும் பழக்கம் உண்டா?

மனதில் பதிக்க…
பார்வையற்ற இருவர் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள் (மத் 9:31)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எசாயா 29: 17 – 24
இறைவனின் அளப்பரிய அன்பு

திருவருகைக்காலத்தில் வழங்கப்படுகிற வாசகங்கள், உலக முடிவு பற்றியும், உலக முடிவில் நடைபெறும் நிகழ்வுகள் பற்றியும் அதிகமாகப் பேசுகிறது. இறைவனுடைய செய்தி, இரண்டு விதமானவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஒன்று நல்லவர்கள், மற்றொன்று கெட்டவர்கள். நல்லவர்களுக்கு அல்லது நல்லவர்களாக வாழ வேண்டும என்கிற எண்ணம் உள்ளவர்களுக்கு பொதுவாக உள்ள சிந்தனை: நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? தீமை செய்கிறவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள். ஆனால், நல்லது செய்கிற நாம் இவ்வளவுக்கு வாழ்க்கையில் துன்பப்படுகிறோமே? நமக்கு விடிவு கிடையாதா? என்பது. அவர்களுக்கு கடவுள் கொடுக்கிற செய்தி, மீட்பு அவர்களுக்கு அண்மையில் உள்ளது என்பது ஆகும். அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். இறைவன் அவர்கள் அருகில் இருக்கிறார். அவர்களுக்கு வழங்கவிருக்கிற மீட்பை உறுதிப்படுத்தி, நிச்சயம் அவர்கள் மகிழ்வடையச் செய்வார்.

தீய வாழ்க்கை வாழ்கிறவர்களுக்கும், கெட்டவர்களுக்கும் இங்கு ஒரு செய்தி வழங்கப்படுகிறது. அது என்ன செய்தி? கெட்டவர்களின் பொதுவான் எண்ணம் என்ன? நல்லது செய்து நல்லவர்கள் பெரிதாகப் பெற்றுக்கொண்டார்கள்? ஆனால், தீமை செய்தாலும் நாங்கள் நன்றாகவே இருக்கிறோம் என்பது. அவர்களுக்கு கடவுள் எச்சரிக்கை விடுக்கிறார். வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் மாற்றம் பெறலாம். எனவே, கிடைக்கிற நாட்களை வாய்ப்புக்களாகப் பயன்படுத்திக் கொண்டு, நல்ல முறையில் அவர்களது வாழ்வைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும்.

மக்கள் அனைவரும் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாலும், இறைவன் தருகிற மீட்பு விருந்திற்கு, தங்களையே தகுதிக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இறைவன் விரும்புகிறார். இறைவன் நம் மீது வைத்திருக்கிற அந்த பாசத்தை ஏற்று, எப்போதும் இறைவனின் பிள்ளைகளாக வாழ வரம் வேண்டி, ஆண்டவரிடம் மன்றாடுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

கடவுளின் இரக்கம்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்வையற்ற மனிதர்கள் இயேசுவிடத்தில் வந்து, தங்களுக்கு கடவுளின் இரக்கம் கிடைக்க மன்றாடுகிறார்கள். இங்கே, அந்த இரண்டு பேரும் தாங்கள் கடவுளின் கொடையைப் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்ற மனநிலையோடு வரவில்லை. மாறாக, தாங்கள் கடவுளின் இரக்கத்திற்காக காத்துநிற்கக் கூடியவர்களாக தங்களை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். இது அவர்கள் கடவுள் மட்டிலே கொண்டிருக்கிற தாழ்ச்சியையும், தங்களது பாவ வாழ்வை உணர்ந்ததனாலும் வந்த உணர்வு. அதை இயேசு பாராட்டுகிறார். அவர்களது தேவையைப் பூர்த்தி செய்கிறார்.

இங்கு இயேசுவின் வல்லமையும் வெளிப்படுகிறது. இயேசு தீய ஆவிகளுக்கு எதிராக தன்னுடைய வல்லமையை வெளிப்படுத்துகிறார். வீசும் புயல் காற்றை கடிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு தன்னிடத்தில் இருக்கிற ஆற்றலை அவர் காட்டுகிறார். இவற்றின் மீது மட்டுமல்ல, உடல் நோய் குறைபாடுகளையும் தன்னால் குணப்படுத்த முடியும், அந்த வல்லமையையும் கடவுள் தந்திருக்கிறார் என்று அவர் சான்று பகரக்கூடிய நிகழ்வு தான், இந்த குணப்படுத்தல் நிகழ்வு. கடவுள் இந்த உலகத்தின் மீது தனது முழுமையான பார்வையை வைத்திருக்கிறார் என்பதையும், அவரது ஆளுமையின் கீழ், இந்த உலகத்தின் அனைத்தும் இருக்கிறது என்பதையும், இது நமக்கு வெளிக்காட்டுவதாக இருக்கிறது.

பார்வையற்ற மனிதர்களிடத்தில் இருந்த அந்த தாழ்ச்சியான மனநிலை தான் இன்றைக்கு, நமது செப வாழ்விற்குத் தேவைப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதுதான் நம்மை கடவுள்பால ஈர்க்கக்கூடியதாகவும், அவரது அருளைப் பெற்றுத்தரக்கூடியதாகவும் இருக்கும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

இயேசுவின் வல்லமை

மருத்துவம் அவ்வளவாக வளர்ச்சியடையாத காலக்கட்டம். பார்வையின் மகத்துவம் தெரியாத மனித சமூகம். இவற்றிற்கு மத்தியில் அறியாமை. இதனால், இயேசு வாழ்ந்த காலத்தில் ஏராளமான போ் தங்களது கண்பார்வையை இழந்திருந்தனர். கண் பார்வை இழப்பிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அவையனைத்துமே சாதாரண காரணங்கள் தான். சூரிய ஒளியிலிருந்து சில சமயங்களில் வரக்கூடிய கடுமையான ஒளி, சரியாக கண்களைப் பராமரிக்காமை, தொற்று போன்றவை, பார்வை இழப்பிற்கு காரணங்களாக இருந்தன. அப்படிப்பட்ட சூழ்நிலை நிலவிய காலக்கட்டத்தில், இரண்டு பார்வையற்ற மனிதர்கள் இயேசுவிடத்தில் பார்வை பெற வருகிறார்கள்.

இயேசு அவர்கள் கூப்பிட்டவுடன் பதில் சொல்லிவிடவில்லை. அவர்களின் தேடல் உண்மையானதா? உறுதியானதா? என்று உறுதிப்படுத்திக்கொள்கிறார். அது உண்மையானதும், உறுதியானதும் என்பதை உணர்ந்தவுடன் அவர், அவர்களுக்கு உதவி செய்கிறார். கடவுளிடத்தில் நாம் செபிக்கிறபோது, அது உண்மையானதாக, உறுதியானதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால், கடவுளிடத்தில் நாம் தொடர்ந்து சென்று கொண்டேயிருப்போம். எப்போது நாம் வெறும் தேவைக்காகச் செல்கிறோமோ, அப்போது நம்மிடத்தில் உண்மையிருக்காது. உறுதியிருக்காது. அந்த இரண்டு பார்வையற்றவர்களும் இயேசுவை, கடவுளை நம்பினர். கடவுள் அவர்களுக்கு பார்வை தர முடியும், என்று நம்பினர். எனவே, அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

நமது விசுவாச வாழ்வு வெறும் தேவையை நிறைவேற்றுவதாக இருக்கிறதா? அல்லது அந்த தேவைகளையும் தாண்டி, கடவுளின் அன்பில், உண்மையாக, உறுதியாக இருக்கிறோமா? எனச்சிந்திப்போம். கடவுளைப்பற்றிய நமது தேடல், நற்செய்தியில் வருகிற பார்வையற்றவர்களைப் போல இருக்க வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

தாவீதின் மகனே…..

“தாவீதின் மகன்” என்கிற சொல்லாடலை நிச்சயம் இயேசு விரும்பியிருக்க மாட்டார். ஏனெனில், இஸ்ரயேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்கக்கூடியவர் தாவீது குலத்தினில் பிறப்பார் என்று யூதர்கள் நம்பினா். அவர்களுடைய நம்பிக்கை, எவ்வாறு தாவீது வலுவுள்ளவராக, நாடுகளுக்கு எதிராகப்போரிட்டு, இஸ்ரயேல் நாட்டின் எல்கையை விரிவுபடுத்தினாரோ, அதேபோல், தாவீதின் வழியில் வருகிறவர், அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுப்பார் என்ற பாணியில் அமைந்திருந்தது. இயேசு நிச்சயம் அவர்களை, போரிட்டு அடிமைத்தனத்திலிருந்து மீட்பார் என்பதுதான், தாவீதின் மகனே என்பதின் பொருள்.  அதனால் தான் இயேசு நிச்சயம் அதனை விரும்பியிருக்க மாட்டார் என ஓரளவு நாம் ஊகிக்கலாம்.

தன்னை நோக்கிக்கூப்பிடும் ஒவ்வொருவருக்கும் கடவுள் செவிகொடுக்கிறார் என்கிற செய்தியை இந்த நற்செய்தி நமக்குத்தருகிறது. கடவுள் ஆணென்றும், பெண்ணென்றும் பார்ப்பதில்லை. அடிமை என்றும், யூதரென்றும் எண்ணுவதில்லை. நம்பிக்கையோடு கேட்கிற அனைவரும் நிச்சயமாகப்பெற்றுக்கொள்வர். அவ்வளவுதான். இன்றைய நற்செய்தியில் வருகிற குருடர்களுக்கு மிகப்பெரிய பின்புலம் ஒன்றும் கிடையாது. அவர்கள் எளியவர்கள். பாமரர்கள். ஆனால், கடவுளை நோக்கி நம்பிக்கையோடு கூப்பிட்டவர்கள். சாதாரண பறவைகளுக்கும், புற்களுக்கும் பார்த்துப்பார்த்து செய்கிற இறைவன், தன்னை நோக்கிக்கூப்பிடுகிற மனிதர்களை மறப்பாரா?

கடவுளிடத்திலே நாம் கேட்கின்றபோது, விசுவாசம் என்ற ஒன்று மட்டும் இருந்தால் போதும். அதுதான் நம் தகுதி. அந்த தகுதியின் அடிப்படையில் நாம் கடவுளிடமிருந்து அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்..

- அருட்பணி. தாமஸ் ரோஜர்
=======================

ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு

இறை இயேசுவில் அன்புக்குரியவர்களே இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துக்கள்!!

இன்றைய வாசகங்கள் இயேசுதான் ஆண்டவர் என தெளிவாக எடுத்துரைக்கிறது. நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காண்கிறோம்.இந்த வாக்குறுதிகள் இயேசுவை நம்பிய மனுக்குலம் அனைத்துக்கும் பொருந்தும். இதைத்தான் இயேசு அந்த பார்வையற்றவரிடம் கேட்டார் “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” அதற்கு அவர்கள், ஆம், ஐயா'' என்றார்கள். பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்'' என்றார். உடனே அவர்களின் கண்கள் திறந்தன.

நம் வாழ்க்கை சூழ்நிலைகளில் நம் நம்பிக்கை யார்மீது உள்ளது?
நம் குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்போது யாரை நாடி செல்கிறோம்?
வியாதியின் கொடுமையில் நம் எண்ணம் எப்படி செல்கிறது?
கடன் பெருகி நம்மை மூழ்கடிக்கும்போது என்ன நினைக்கிறோம்?

நம் சொந்த திறமையை நம்புகிறோமா? (அ) மந்திரவாதிகளை / ஜோசியர்களை நம்புகிறோமா? (அ) யாரையும் நம்பாமல் மனம்தளர்ந்து போகிறோமா? அப்படியென்றால் நாம் இயேசுவின் அன்பை, அவரது அதிகாரத்தை அறிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.

சமீபத்தில் ஒரு நோயாளியை மருத்துவமனையில் சந்தித்தபோது அவர் மிகவும் மனம் தளர்ந்த நிலையில், இன்னும் ஒரு வாரம்தான் உயிரோடு இருப்பேன் என்று கூறி அழ ஆரம்பித்துவிட்டார். நாங்கள் அவருக்கு ஆதரவுகூறி செபித்து வந்தோம். இயேசுவால் முடியாத காரியம் எதுவுமில்லை. இதை நாம் நம்பவேண்டும். அவருடைய நாமத்தை சொல்லி செபிக்கும் எந்த இடத்திலும் அற்புதம் நடக்கும். இறைவனிடம் நம்மை, நம் தேவைகள் அனைத்தையும் ஒப்புக்கொடுக்க வேண்டும். அவரே நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார். ஒரு சுலபமான வழி என்னவென்றால், முடிந்தவரை ஒவ்வொருநாளும் திருப்பலியில் பங்கு கொள்வோம். நம் அனைத்து பிரச்சினைகளையும் நம் காணிக்கையாக இறைவனிடம் சமர்ப்பிப்போம்!! அவரையே நம்புவோம்!! இறைவனிடம் ஆசீர்வாதம் பெற்று திரும்புவோம்!!!

இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக!!

- பிஃரட்ரிக்

நம்பியபடி நிகழட்டும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு செய்த அருங்குறிகள் பலவற்றுக்கும் அடிப்படை நலம் பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்று சொல்கிறார் இயேசு. எனவே, யாரிடம் நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களிடையே மட்டுமே அவர் அற்புதங்கள் செய்தார். அதுமட்டுமல்ல, மாற்கு நற்செய்தியிலே நம்பிக்கை பற்றிய செய்தி ஒன்று அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயேசுவின் சொந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்தபோது, அவர்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு இயேசு வியப்புற்றார். அது மட்டுமல்ல, அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை (மாற் 6:5) என்னும் விசித்திரமான, கொஞ்சம் துணிச்சலான செய்தியைப் பார்க்கிறோம். எனவே, நம்பிக்கை இருக்கிறர்களுக்கு மட்டுமே வியப்புக்குரிய செயல்களை இறைவன் செய்கிறார். எனவே, நாமும் நமது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம். இறை நம்பி;க்கையை மட்டுமல்ல, நமது தன்னம்பி;க்கையையும்கூட. நம்மீது, நமது ஆற்றல்கள்மீது நமக்கு நம்பிக்கை இருந்தால், நாம் நம்பியபடி நமக்கு நிகழும்.

மன்றாடுவோம்: நம்பிக்கையின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களிடமுள்ள நம்பிக்கைக் குறைவை மன்னித்து, எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்த உம்மை இறைஞ்சுகிறோம். உம்மால் அனைத்தும் முடியும் என்று நம்பி, உம்மை நோக்கி மன்றாட அருள்தாரும். எங்கள் தன்னம்பிக்கைக் குறைவைப் போக்கி, எங்களை வலிமைப்படுத்தியருளும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருள்தந்தை குமார்ராஜா

 

-------------------------

''இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர்,
'தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'
என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்'' (மத்தேயு 9:27)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு மக்களுக்குக் கடவுள் பற்றியும் கடவுளின் ஆட்சி பற்றியும் போதித்தார். ஆனால் அவருடைய போதனை வெறும் சொல்லளவில் நிற்கவில்லை. அவர் தம் செயல்கள் வழியாகத் தம் போதனையை எண்பித்தார். கடவுளின் அன்பு பற்றி அறிவித்த இயேசு அந்த அன்பு மக்களின் துன்பத்தைப் போக்குவதைச் செயல்முறையில் காண்பித்தார். பார்வையற்ற இரு மனிதர் இயேசுவை அணுகி, ''தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரத்த குரலில் கத்திக்கொண்டே செல்கின்றார்கள். அவர்கள் இயேசுவைத் ''தாவீதின் மகன்'' என அழைப்பது கருதத் தக்கது. தாவீது மன்னர் யூத மக்கள் வரலாற்றில் தலைசிறந்த அரசராக விளங்கியவர். அவர் வழித்தோன்றலாக மெசியா வருவார் என்னும் செய்தி யூத மக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே, தாவீதின் மகன் என்பதும் மெசியா என்பதும் ஒரே பொருளைக் கொடுப்பனவாக அமைந்தன. இயேசுவை மெசியா என அடையாளம் கண்ட அந்த இருமனிதரும் உண்மையிலேயே புறப் பார்வையற்றவர்களாக இருந்தாலும் அகப்பார்வை கொண்டிருந்தார்கள் என்பதை மத்தேயு காட்டுகின்றார்.

-- இவ்வாறு இயேசுவை மெசியா என அழைத்த அந்த இரு மனிதர்களும் இயேசுவிடமிருந்து எதிர்பார்த்தது என்ன? தங்களுக்குப் பார்வை கிடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததை இயேசுவால் அளிக்க முடியும் என அவர்கள் உண்மையாகவே நம்ப வேண்டும் என்பதுதான் இயேசுவின் கோரிக்கை. அந்த மனிதர்களின் நம்பிக்கை வீண்போகவில்லை. இயேசு அவர்களின் கண்களைத் திறக்கின்றார். பார்வை பெற்ற மனிதர்கள் ஒருவிதத்தில் புது வாழ்வு பெற்றார்கள் எனலாம். அவர்களால் தங்கள் மகிழ்ச்சியை அடக்கிக் கொள்ள இயலவில்லை. எனவே ''நாடெங்கும் போய் இயேசுவைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்'' (காண்க: மத் 9:31). நாமும் இயேசுவை அணுகிச் சென்று நம்பிக்கையோடு வேண்டினால் நம் கண்கள் திறக்கப்படும். நம்மைச் சூழ்ந்திருக்கின்ற இருள் அகன்று போகும். பார்வையற்ற மனிதர்கள் புறக்கண்பார்வை பெறுவதற்கு முன்னரே அகக்கண் திறக்கப்பட்டோராக இயேசுவை அணுகியது போல நாமும் உள்ளொளி பெற்று இயேசுவிடம் சென்றால் அவர் நமக்கு வாக்களிக்கின்ற நன்மைகளைக் ''கண்டுகொள்வோம்''. புதுப்பார்வை பெற்ற மனிதர்களாக நாம் மாறுவோம். அப்போது இயேசு பற்றிய நற்செய்தியை நாமும் உலகெங்கும் அறிவிக்கப் புறப்படுவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் அகக்கண்களைத் திறந்து நம்பிக்கையில் எங்களை உறுதிப்படுத்துகின்ற உம்மைக் ''கண்டுகொள்ள'' எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''இயேசு பார்வையற்றோரின் கண்களைத் தொட்டு,
'நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்' என்றார்.
உடனே அவர்களின் கண்கள் திறந்தன'' (மத்தேயு 9:29-30)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசுவை அணுகிச் சென்று அவருடைய உதவியை நாடியவர்கள் பலர். இவ்வாறு தம்மைத் தேடிவந்த மனிதரை இயேசு அன்போடு வரவேற்றார். அவர்களுடைய துன்பங்களைப் போக்குவதற்கு இயேசு முன்வந்தார். இயேசுவிடத்தில் கடவுளின் சக்தி துலங்கியதை அவர்கள் கண்டுகொண்டனர். என்றாலும், இயேசு தம்மை அணுகிவந்த மனிதரிடம் ஒரு முக்கியமான பண்பை எதிர்பார்த்தார். அப்பண்புதான் ''நம்பிக்கை'' என அழைக்கப்படுகிறது. இந்த நம்பிக்கையில் இரு அம்சங்களை நாம் காணலாம். முதலில், இயேசுவை அணுகி உதவி தேடியவர்கள் அவர் நினைத்தால் தங்களுடைய துன்பத்திலிருந்து விடுதலை தர முடியும் என உறுதியாக ஏற்றுக்கொண்டார்கள். இரண்டாவது, அவர்கள் இயேசுவின் வழியாகக் கடவுளே அதிசய செயல்களை ஆற்றினார் என்னும் உறுதிகொண்டிருந்தனர்.

-- இவ்வாறு உறுதியான உள்ளத்தோடும் ஆழ்ந்த எதிர்பார்ப்போடும் இயேசுவை அணுகிச் சென்றவர்கள் ஒருபோதுமே ஏமாற்றமடையவில்லை. நம் வாழ்விலும் இது நிகழ்வதை நாம் காணலாம். நம் உள்ளத்தில் உறுதி இருக்கும்போது நடக்கவியலாது என நாம் நினைப்பதும் நடப்பதுண்டு. நம் உள்ளத்தில் உறுதியற்ற நிலை தோன்றிவிட்டால் நாம் வெற்றியடைய இயலாது என்னும் எதிர்மறை எண்ணம் நம்மில் வேரூயஅp;ன்றி, நம் உறுதிப்பாட்டைக் குலைத்துவிடும். அந்த வேளைகளில் நம் முயற்சி வெற்றிதராமல் போய்விடுவதுண்டு. இது மனித வாழ்வில் நாம் பெறும் அனுபவம். ஆனால், கடவுளை அணுகிச் செல்வோர் கடவுளின் கைகளில் தங்களையே முழுமையாகக் கொடுத்துவிடுவதால் வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். தமக்கு வெற்றியாகத் தோன்றுவது உண்மையில் தோல்வியாகவும், தோல்வியாகத் தோன்றுவது உண்மையில் வெற்றியாகவும் மாறிடக் கூடும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். எனவே, கடவுள்மீது நம்பிக்கை கொள்வோர் தம் சொந்த சக்தியில் நம்பிக்கை கொள்ளாமல் தம் வாழ்வினையே கடவுளிடம் தந்துவிட்டு, கடவுள் தம்மிடம் எதிர்பார்ப்பதைச் செய்வதில் முனைந்துநிற்பார்கள். இயேசுவை அணுகிச் சென்று பார்வை பெற விரும்பிய பார்வையற்றோருக்கு இயேசுவிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்ததுபோல நாமும் நம்பிக்கையோடு அவரை நாடிச் சென்றால் நம் ''கண்கள் திறக்கும்''. அப்போது நாம் உண்மையிலேயே ''பார்வை பெறுவோம்.'' கடவுளே நமக்கு ஒளியாயிருந்து நம்மைக் கைபிடித்து வழிநடத்திச் செல்வார்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் அகக் கண்களைத் திறந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

---------------------------------

இறை நம்பிக்கை வாழ்கையின் முதுகெலும்பு

நம்பிக்கை எப்பொழுதும் கை கொடுக்கும். இறை நம்பிக்கை இருந்தால் சந்தேகமே வேண்டாம். எங்கிருந்தாவது நமக்கு உதவி வரும். இறைவன் மீது நம்பிக்கை இருந்தால் அயலான் மீது நம்பிக்கை பிறக்கும். நம் மீதும் நமக்கு நம்பிக்கை அதிகமாகும். இந்த மன உறுதி அந்த பார்வையற்ற மனிதனிம் இருக்கிறதா என்று இயேசு எதிர்பார்க்கிறார். அந்த பார்வையற்ற மனிதனும் தன்மீதும் அடுத்திருக்கும் மனிதர்கள்மீதும் ஆண்டவன்மீதும் தனக்கு நம்பிக்கை உண்டு என்பதை ஏற்கெனவே வெளிப்படுத்தியுள்ளான்.

" தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்"(மத்9'28) கத்திக்கொண்டே இயேசுவின் வீடுவரை வந்துள்ளனர். நம்பிக்கை என்பது ஒரு இலக்கை நோக்கி இறுதிவரைப் போராடும் பண்பு. ஒருமுறை அல்லது இருமுறை குரல் எழுப்பி அதன்பின் அசந்துவிடுவது அவநம்பிக்கையின் வெளிப்பாடு. ஆனால் பார்வையற்ற அவ்விருவரும் குரல் எழுப்பிக்கொண்டு, சிரமம் பாராமல் இயேசுவின் வீடுவரை வந்துள்ளனர். இது நம்பிக்கையின் உச்ச கட்டம்.

நாமும் நம்பிக்கையோடு குரல் எழுப்ப வேண்டும். இயேசுவின் வீடு தேடி வரவேண்டும்.ஆண்டவனின் ஆலயம் வரை வரவேண்டும். வெறுமனே நம் வீட்டிலிருந்து கடவுளை நோக்கி முறையிட்டு புலம்புதல் நம்பிக்கையின் அறிகுறி அல்ல, மாறாக, புலம்பல். ஒரு பயனும் அதனால் விழையாது. ஆனால் ஆழ்ந்த நம்பிக்கை ஆண்டவனைத் தேடி வரும். தொடர்ந்து போராடும். எதையும் தாங்கிக்கொள்ளும். இறுதியில் எதிர்பார்த்ததையும் பெற்றுக்கொள்ளும்.

-- அருட்திரு ஜோசப் லியோன்