முதல் வாசகம்
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே! என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித் தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப் பட்டிராது.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 1: 1-2. 3. 4,6
பல்லவி: ஆண்டவரே, உம்மைப் பின்தொடர்பவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்.

1 நற்பேறு பெற்றவர் யார்? - அவர் பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்; இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;
2 ஆனால், அவர் ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப்பற்றி இரவும் பகலும் சிந்திப்பவர். -பல்லவி

3 அவர் நீரோடை ஓரம் நடப்பட்ட மரம் போல் இருப்பார்;
பருவகாலத்தில் கனிதந்து, என்றும் பசுமையாய் இருக்கும் அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும் வெற்றி பெறுவார். -பல்லவி

4 பொல்லார் அப்படி இல்லை; அவர்கள் காற்று அடித்துச் செல்லும் பதரைப்போல் ஆவர்.
6 நேர்மையாளரின் நெறியை ஆண்டவர் கருத்தில் கொள்வார்;
பொல்லாரின் வழியோ அழிவைத் தரும். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் வரவிருக்கிறார். அவரை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில், அமைதியின் அரசர் அவரே. அல்லேலூயா.

மத்தேயு 11:16-19

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் வெள்ளி


நற்செய்தி வாசகம்�

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 16-19

அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்துக்குக் கூறியது: �இத்தலைமுறையினரை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தை வெளியில் உட்கார்ந்து மறு அணியினரைக் கூப்பிட்டு, `நாங்கள் குழல் ஊதினோம்; நீங்கள் கூத்தாடவில்லை. நாங்கள் ஒப்பாரி வைத்தோம்; நீங்கள் மாரடித்துப் புலம்பவில்லை' என்று கூறி விளையாடும் சிறுபிள்ளைகளுக்கு ஒப்பானவர்கள். எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ `அவன் பேய் பிடித்தவன்' என்கிறார்கள். மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, `இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

புறணி பேசுபவர்கள் தீவிரவாதிகளே!
மத்தேயு 11:16-19

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

திருத்தந்தை பிரான்சிஸ் தன்னுடைய ஒரு உரையில் புரணி பேசுபவர்கள் தீவரவாதிகள் என்கிறார். ஏனெனில் அவர்கள் அடுத்தவர்கள் மீது வெடிக்குண்டுகளை வீசிவிட்டு அமைதியான முறையில் கலைந்துச் செல்கிறார்கள். ஆகவே அவர்களைக் குறித்து அதிகம் கவலைப்பட வேண்டாம் என்றும் திருத்தந்தை அவா்கள் கூறுகிறார்கள். நற்செய்தி வாசகமும் அதே கருத்தைதான் நம் முன்னே வைக்கிறது. ஒருவர் நமக்கு எதிராக புரணி பேசும்போது நாம் அதை எப்படி அணுகுவது என்று நமக்கு சொல்லி தருவதோடு அதற்கான இரண்டு வழிகளை கற்பிக்கிறது.

1. வேண்டு
"தந்தையே! இவர்களை மன்னியும், ஏனெனில் தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்கிறார்கள்" என்று இயேசு ஜெபித்ததுபோல நாமும் ஜெபிக்க வேண்டும். பகையை அந்த நபரோடு வளர்ப்பது தவறு. மாறாக அமைதியை அந்த இடத்தில் விதைப்பது நல்லது. இந்த ஜெபம் கண்டிப்பாக நம்மை அமைதியாக்கும். இயேசுவை நினைத்து நம்மை அதில் பொருத்தி பொறுமையோடு இருந்தால் நாம் பெறும் நன்மைகள் பன்மடங்கு.

2. நாடு
இப்படி நம்மைப் பற்றி புரணி பேசும்போது நம் ஆன்மீக்தந்தையை நாட வேண்டும். அவரிடம் அனைத்தையும் கொட்ட வேண்டும். மனது எப்படி எல்லாம் வலிக்கிறது என்பதை சொல்லி மனதை சுதந்திரமாக மாற்ற வேண்டும். அவர் வழங்கும் ஆன்மீக நிவாரணத்தை கடைப்பிடிக்க வேண்டும். இதன் வழியாக புரணி பேசுபவர்கள் தொடா்ந்து நம் வாழ்வில் வரும்போது அதை எளிதாக சந்திப்பதற்கான பலத்தையும், பாதையையும் தெளிவாக பெற வேண்டும்.

மனதில் கேட்க…
1. நான் பேசும் புரணிகள் நல்லது இல்லை – பின் ஏன் அதை தொடர்கிறேன்?
2. என்னைப் பற்றி பிறர் புரணி பேசும்போது எப்படி அதை அணுக வேண்டும் எனக்கு தெரிகிறதா?

மனதில் பதிக்க…
எவரும் தீமைக்குப் பதில் தீமை செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுள் ஒருவருக்கொருவர் மட்டுமன்றி, எல்லாருக்கும், எப்பொழுதும் நன்மை செய்யவே நாடுங்கள்(1தெச 5:15)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எசாயா 48: 17 – 19
இறைவனின் குரலுக்குச் செவிகொடுப்போம்

இஸ்ரயேல் மக்கள் எந்த இடத்தில் தடம்புரண்டார்கள்? அவர்களின் இன்றைய இழிநிலைக்கு காரணம் என்ன? என்பதை, இன்றைய வாசகத்தில் பார்க்கிறோம். இஸ்ரயேல் மக்கள் தங்களை இதுநாள் வரை வழிநடத்தி வந்து, வெற்றி தேடிக்கொடுத்த, இறைவனின் வார்த்தைகளுக்கு செவிகொடுக்காமல் நடந்தது தான், அவர்களின் மோசமான நிலைக்கு காரணமாக, இறைவாக்கினர் அறிவிக்கின்றார். இறைவன் ஒருவா் தான், பயனுள்ளவற்றையும், மனிதர்கள் மகிழ்ச்சியாயிருக்கத் தேவையானவற்றையும் கற்பிக்கிறவர்.

ஆனால், மனிதன், கடவுளை நம்பாமல், வேற்றுத் தெய்வங்களையும், வேற்று நாட்டினரையும் நம்பி மோசம் போனான். அப்படி அவர்கள் இறைவனின் குரலுக்குச் செவிகொடுத்து, மற்றவர்களைப் புறம்தள்ளியிருந்தால், இன்றைக்கு அவர்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள். பலவற்றை இழந்திருக்க மாட்டார்கள். அவர்களது பெயர் கடவுளின் திருமுன்னிலையிலிருந்து அகற்றப்பட்டிருக்காது. இப்போதோ, அவர்கள் அனைத்தையும் இழந்துவிட்டார்கள். ஆனாலும், அவர்களுக்கான வழி அடைக்கப்படவில்லை. இப்போது அவர்கள் தங்கள் வழிகளை மாற்றிக்கொண்டு, இறைவனின் வார்த்தைக்கு செவிகொடுத்தாலும், அவர்களின் வாழ்வில் வசந்தம் வரும். அவர்கள் மீண்டும் இழந்தவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். எனவே, அவர்களுக்கான வாய்ப்பு இன்னும் முற்றிலுமாக முடிவுபெற்று விடவில்லை. இறைவன் கொடுக்கிற இந்த அழைப்பை ஏற்று, அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் திருத்திக் கொள்வதற்கு முன் வர வேண்டும் என்பதே இறைவனின் ஆசை.

நம்முடைய வாழ்விலும் இறைவன் நமக்கு பல வாய்ப்புக்களை வழங்குகிறார். அவருடைய குரலுக்குச் செவிகொடுக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார். அவருடைய வழிகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று நம்மை அழைக்கிறார். இறைவனின் அழைப்பை ஏற்று, அவருடைய பிள்ளைகளாக நாம் வாழ, இறையருள் வேண்டுவோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6
”ஆண்டவரைப் பின்தொடர்கிறவர் வாழ்வின் ஒளியைக் கொண்டிருப்பார்”

கடவுளைப் பின்தொடர்வது என்றால் என்ன? பின்பற்றுவது என்பது, ஒருவரின் சிந்தனைகளால் கவரப்பட்டு, எடுத்துக்காட்டான வாழ்வால் உந்தப்பட்டு, அவரைப்போல வாழ வேண்டும் என்று ஆசைப்படுவது அல்லது அவருடைய படிப்பினைகளுக்கு ஏற்ப நடக்க வேண்டும் என்று உறுதிஎடுப்பது. கடவுளைப் பின்பற்றுவது என்பது, கடவுளின் சட்டங்களுக்கு ஏற்ப வழிநடக்க வேண்டும் என்று உறுதி எடுத்து, அதனை வாழ்வில் செயல்படுத்துவது ஆகும்.

கடவுளின் கட்டளைகளை வாழ்வது எளிதா? நிச்சயம் இல்லை. அது கடினமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கடவுள் அருளும் வாழ்வின் ஒளியை அவர் பெற்றுக்கொள்ள முடியும். கடவுளின் சட்டங்களைப் பின்பற்றுவதால், ஒருவர் பெறுகிற நன்மைகளை இந்த திருப்பாடல் எடுத்துச்செல்கிறது. அவர் வளமையாக இருப்பார். அவருடைய வாழ்க்கை எல்லாவிதமான நலன்களையும் பெற்றதாக இருக்கும். அவர் செய்ய விரும்பும் எல்லா செயல்களும், இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவதாய் இருக்கும்.

நம்முடைய வாழ்வில் நாம் ஆண்டவரின் சட்டங்களுக்கு ஏற்ப வாழ முயற்சி எடுப்போம். ஆண்டவரின் சட்டம் அன்பை அடித்தளமாகக் கொண்ட சட்டம். ஆண்டவரின் சட்டம் எல்லாரையும் சகோதர, சகோதரிகளாக ஏற்றுக்கொள்ளக்கூடிய சட்டம். ஆண்டவருடைய சட்டங்களைக் கடைப்பிடித்து, வாழ்வில் வளமையாக வாழ்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------

நாம் வாழப்போகும் வாழ்க்கை

முரண்பாடுகளின் உலகம் நாம் வாழக்கூடியது. இங்கே குறைகள் சொல்லக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகம். நல்லவற்றைப் பாராட்ட வேண்டும் என்பதோ, குறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டும் என்பதோ, இங்கேயிருக்கிற மனிதர்களுக்கு பழக்கமல்ல. ஒருவர் எதைச்செய்தாலும் அதில் எப்படி குற்றம் கண்டுபிடிக்கலாம் என்கிற மனப்பான்மை தான், இன்றைய தலைமுறையினரிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.

இயேசுவும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த முரண்பாட்டை விளக்குகிறார். இயேசு வாழ்ந்த போது, திருமுழுக்கு யோவானும் அவருடைய சமகாலத்தவராக இருந்தார். திருமுழுக்கு யோவான் ஒருவிதமான தவ வாழ்க்கையை வாழ்ந்தவர். தன்னை முழுமையாக வருத்திக் கொண்டவர். ஆடம்பரங்களை விரும்பாதவர். தனிமையை விரும்பி, தனிமையாக வாழ்ந்தவர். இயேசு மக்களோடு மக்களாக, மக்களில் ஒருவராக வாழ்ந்தவர். இரண்டு பேரையும் மக்கள் குறைகூறினார்கள். ஒருவரைப் பற்றி சொன்ன குறையைத்தான் மற்றவர் வாழ்ந்தார். ஆனால், அப்படிப்பட்ட வாழ்வையும் மக்கள் குறைகூறினார்கள்.

நமது வாழ்க்கையில் நாம் குறைகூறுகிறவர்களாக இருக்கிறோமா? அடுத்தவர் ஒரு செயலைச் சிறப்பாகச் செய்யும்போது, அதனைப் பாராட்டக்கூடியவர்களாக இருக்கிறோமா? சிந்திப்போம். மற்றவர்களைப் பாராட்டக்கூடிய மக்களாக வாழ முயற்சி எடுப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------

நேர்மையை ஆடையாக உடுத்துவோம்

இன்றைக்கு மக்கள் மத்தியில் நீதியோ, உண்மையோ, நேர்மையோ இல்லாத தன்மை, இயேசுவின் வார்த்தையில் வெளிப்படுகிறது. இன்றைக்கு மக்கள் விழுமியங்களுக்காக வாழவில்லை. மதிப்பீடுகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லை. தங்களது சுயநலத்தோடு நீதியை கொன்று கொண்டிருக்கிறார்கள். உண்மையோ, நீதியோ இருவேறாக இருக்க முடியாது. உண்மை ஒன்றாகத்தான் இருக்க முடியும். ஆனால், இங்கே நடப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. நீதியையும், உண்மையையும் தங்களுக்கு ஏற்றாற்போல சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய இரட்டை மனப்பாங்கை, இயேசு கண்டிக்கிறார்.

ஆளும் அரசு, ஆண்ட அரசு இவைகளுக்கு நல்ல உதாரணங்களாகும். ஆளும் அரசு பொதுமக்கள் பயன்படுத்தும் சேவைக்கட்டணத்தை உயர்த்துகிறபோது, ஆண்ட அரசுகள் கிளர்ந்தெழுகின்றன. இது தவறு என்று, மக்களை தூண்டிவிட்டு, அரசுக்கெதிராகப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். ஆனால், ஆண்ட அரசுகள் ஆளுகின்ற அரசாக மாறுகிறபோது, அதே தவறைச் செய்கிறார்கள். எது தவறு என்று வீதியில் இறங்கி போராடினார்களோ, அதே தவறைச் செய்கிறார்கள். ஆளும் அரசு, ஆண்ட அரசாக மாறுகிறபோது, தாங்கள் செய்ததை, மற்றவர் திருப்பிச்செய்யும்போது, அவர்களும் கூப்பாடு போடுகிறார்கள். ஆக, தங்களது சுயநலத்தை மையமாக வைத்து ஆட்சி செய்யும் இந்த அரசுகளால், மக்கள் முழுவதுமாகப்பாதிக்கப்படுகிறார்கள். மக்களை மையப்படுத்தாத எந்த அரசுகளும், கேலிக்கூத்தானவைகளே.

இன்றைக்கு அரசியல் தலைவர்களைப் பற்றிப் பேசுவதற்கு முன்னதாக, நமது ஆன்மீக வாழ்வை எண்ணிப்பார்க்கிறபோது, அதற்கும், இதற்கும் மிகுந்த வேறுபாடு இல்லைதான். அரசியலில் நடக்கும் கேலிக்கூத்துகள் நமது சமய வாழ்விலும் நடப்பது உண்மையிலே மகிப்பெரிய முரண்பாடு தான். இவற்றையெல்லாம் தாண்டி நாம் வருவதற்கு, முயற்சி எடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

முரண்பாடு

இயேசு மனித மனம் காட்டும் முரண்பாட்டை எண்ணி வருந்துகிறார். தனது வருத்தத்தை சந்தைவெளியில் சிறுபிள்ளைகளின் மனப்பாங்கில் வெளிப்படுத்துகிறார். சந்தைவெளியில் ஒரு குழு, மற்றொரு குழுவிடம், ”வாருங்கள், திருமணவிருந்தில் இசைக்கலாம்” என்று அழைப்புவிடுக்கிறது. மறுகுழுவோ ”மகிழ்ச்சியாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கு மறுப்பு தெரிவிக்கிறது. மீண்டும் அந்த குழு, அடுத்த குழுவிடம், ”சரி, அடக்க வீட்டிலாவது ஒப்பாரி வைக்கலாம்” என்று சொன்னால், ”கவலையாக இருக்கும் மனநிலை இல்லை” என்று அதற்கும் மறுப்பு வருகிறது. எதைச்சொன்னாலும் அதை செய்யக்கூடாத மனநிலையும், எதிலும் குற்றம் காணும் மனநிலையை இந்த உவமை வாயிலாக இயேசு படம்பிடித்துக்காட்டுகிறார்.

இயேசுவையும், திருமுழுக்கு யோவானையும் மக்கள் எப்படிப்பார்த்தனர்? என்பதற்கு இயேசு இந்த விளக்கத்தைக்கொடுக்கிறார். இரண்டு பேருமே வெவ்வெறான மனநிலை உடையவர்கள். இரண்டு பேருமே, வேறு வேறு கண்ணோட்டத்தில் நற்செய்தியைப் போதித்தவர்கள். ஆனால், இரண்டு பேரிலும் மக்கள் குறைகண்டனர். இரண்டு பேரையும் மக்கள் வசைபாடினர். இரண்டு பேரையும் அதிகாரவர்க்கத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இத்தகைய முரண்பாட்டை இயேசு வருத்தத்தோடு குறிப்பிடுகிறார். அவர்களின் செயல்பாடு, உண்மையை ஏற்றுக்கொள்ளத்தாங்கள் தயாராக இல்லை என்பதைக்குறித்துக் காட்டுவதாக இயேசு சொல்கிறார். எதையும் குற்றம் காண வேண்டும் என்கிற அவர்களின் மனப்போக்கு, சரியானது அல்ல என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார்.

உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். எதையும் திறந்த மனதோடு, மனநிலையோடு பார்க்க வேண்டும். அப்படி இல்லையென்றால், நமது வாழ்வே எதிர்மறையான வாழ்வாக மாறிவிடும். பரிசேயர்களும், சதுசேயர்களும் அடிப்படையில் நல்லவர்கள் என்றாலும், எதையும் குற்றம் காணும் நோக்கும், திறந்த மனநிலையோடு பார்க்காத குறையும் தான், இன்றைக்கு அவர்களை, எதிர்மறையாகப்பார்க்கத் தூண்டுகிறது. நாம் எதையும் திறந்த மனநிலையோடு பார்ப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

ஞானம் மெய்யானது !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

தன் காலத்து மக்களை இயேசு நன்றாக அறிந்து வைத்திருந்தார். அவர்களிடமிருந்த குறை காணும் மனநிலையையும், எதிர்மறையான பார்வையையும் அவர் தெரிந்திருந்தார். அவற்றைச் சுட்டிக்காட்டி, நேர்மறையாகச் சிந்திக்க இன்றைய நற்செய்தி வாசகம் மூலமாக ;அழைப்பு விடுக்கிறார். இயேசு காலத்தைய யூதர்கள் இயேசுவிடமும் குறை கண்டனர். அவரது முன்னோடியான திருமுழுக்கு யோவானிடமும் குறை கண்டனர். இருவரும் எதிரெதிரான செயல்பாடுகளைக் கொண்டிருந்தனர். ஆனால், இருவரையும் ஒரே விதமாகப் புறக்கணித்தனர். இது அவர்களின் உள்மனக் குறைபாட்டையே எடுத்துக்காட்டுகிறது.

ஒருசிலர் மட்டும் திருமுழுக்கு யோவானையும் ஏற்றுக்கொண்டனர். அவர் சுட்டிக்காட்டிய இறைவனின் செம்மறியாம் இயேசுவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் திறந்த மனம் என்னும் ஞானம் நிறைந்தவர்களாக இருந்தனர். இவர்களின் செயல்பாடுகள் சான்று பகர்வனவாக இருந்தன. எனவே, இயேசு கூறுகிறார்: ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக்கொண்டோரின் செயல்களே சான்று. இயேசுவையும், அவரது போதனையையும் ஏற்றுக்கொள்ளும் நாம் நமது சான்று பகரும் செயல்களால் நாம் ஞானம் மிக்கவர்கள் என்பதை எண்பிப்போமாக!

மன்றாடுவோம்: ஞானத்தின் ஊற்றே இயேசுவே, உமக்கு நன்றி. நாங்கள் நேர்மறையோடு அனைவரையும் பார்க்கின்ற ஞானம் நிறைந்த கண்களை, உள்ளத்தை எங்களுக்குத் தந்தருளும். எங்கள் செயல்கள் இந்த ஞானத்தை வெளிப்படுத்துவனவாக அமைய எங்களுக்கு அருள்; தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

------------------------

''இயேசு, 'மானிடமகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார், குடிக்கிறார்.
இவர்களோ, 'இம்மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும்
பாவிகளுக்கும் நண்பன்' என்கிறார்கள்' என்றார்'' (மத்தேயு 11:19)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- சிறு பிள்ளைகள் விளையாடுவது இயேசுவின் வாயில் ஓர் உவமையாக உருவெடுக்கிறது. குழல் ஊதினால் கூத்தாட வேண்டும்; ஒப்பாரி வைத்தால் மாரடித்துப் புலம்ப வேண்டும். இதுதான் விளையாட்டு ஒழுங்கு. ஆனால் ஒரு தரப்பினர் குழல் ஊதும்போது மறு தரப்பினர் கூத்து ஆடாவிட்டால் அங்கே இருதரப்பினருக்கிடையே புரிதல் இல்லை என்பதே பொருள். திருமுழுக்கு யோவான் பாலைநிலத்தில் தோன்றி, ஒட்டக மயிராடை அணிந்து, காட்டுத்தேனும் வெட்டுக்கிளியும் உண்டவராக வந்தார் (மத் 3:1-4). அவருக்குப் பேய்பிடித்துவிட்டது என்று கூறி அவரை ஏற்க மறுத்தார்கள். இயேசுவோ விருந்துகளில் கலந்துகொண்டு மக்களோடு உணவருந்தியவராக வந்தார். அவரைப் பார்த்து, ''பெருந்தீனிக்காரன், குடிகாரன்'' என்றெல்லாம் குறை கூறி ஏற்க மறுத்தார்கள் (மத் 11:19). இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொண்ட மக்களைக் கண்டு இயேசுவுக்கு ஆத்திரம் வருகிறது. அம்மக்கள் காலத்தின் அறிகுறிகளைக் கண்டு உணர்ந்து, கடவுள் அவர்களுக்கு அறிவித்த செய்தியைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களே என இயேசு வருத்தம் கொள்கிறார்.

-- இன்றும் கூட இந்நிலை மாறவில்லை என்றுதான் கூற வேண்டும். இயேசு உலகுக்கு அறிவித்த செய்தி என்னவென்பதை அறிந்துகொள்ள மறுக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். அதற்கு அவர்கள் காட்டுகின்ற காரணங்கள் பல. இயேசு அறிவித்த செய்தி வேறு சமயங்களிலும் இருக்கிறதே என்பது ஒரு காரணமாகக் காட்டப்படுகிறது. இயேசுவின் போதனைப்படி கிறிஸ்தவர்கள் நடக்கிறார்களா என்றொரு கேள்வியைக் கேட்போர் இருக்கின்றார்கள். இந்நிலையில் இயேசுவை நாம் இருபத்தோராம் நூற்றாண்டு மன நிலைக்கு ஏற்ப அறிவிப்பது எப்படி என்பது ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. பிற சமயங்களில் தலைசிறந்த போதனைகள் உண்டு என்பதை நாம் மறுக்கமுடியாது. அதுபோலவே, உலகில் உள்ள எல்லாக் கிறிஸ்தவர்களும் இயேசுவின் போதனைப்படி நடக்கிறார்கள் எனவும் கூற இயலாது. ஆனால் இக்காரணங்களைக் காட்டி இயேசு பற்றி அறிய மறுப்பது சரியல்ல. உலகில் வாழ்ந்த மாபெரும் மனிதருள் ஒருவர் இயேசு. அவர் அறிவித்த செய்தியைக் கேட்டு, அதன்படி தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட பல்லாயிரம் மக்கள் வரலாற்றில் வாழ்ந்திருக்கின்றார்கள். எனவே, இயேசு அறிவிக்கின்ற செய்தி என்னவென்று அறிகின்ற பொறுப்பு எல்லாருக்குமே உண்டு. அதே நேரத்தில் பல கிறிஸ்தவர்கள் இயேசுவின் போதனையைக் கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி அப்போதனையை ஒதுக்கிவைப்பதும் முறையல்ல. திறந்த உள்ளத்தோடு இயேசுவை அணுகிச் சென்று, அவர் அறிவிக்கின்ற செய்தியைக் கேட்க தங்கள் இதயத்தைத் திறக்கின்ற மனிதர்கள் ஏமாற்றம் அடைய மாட்டார்கள். இயேசுவின் ஒளி அவர்களது உள்ளத்தில் நிலவும் இருளை அகற்றி அவர்களது வாழ்வை ஒளிமயமானதாக மாற்றும் என்பது உறுதி.

மன்றாட்டு
இறைவா, திறந்த உள்ளத்தோடு உம்மை அணுகிவர எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

---------------------

சிறுபிள்ளையாவோம்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

குழந்தை உள்ளம் அவசியம் ஆனால் சிறுபிள்ளைத்தனம் ஏற்றுக் கொள்ள முடியாது. இயேசு இங்கே சுட்டிக்காட்டுவது அவரது தலை முறையினரிடமிருந்த சிறுபிள்ளைத்தனத்தை. குழந்தை உள்ளம் இருந்தால் குறையின்றி வாழலாம். ஆனால் சிறுபிள்ளைத்தனமிருந்தால், எல்லோரையும் எல்லாவற்றையும் குறை சொல்லி எல்லாமே குறையுள்ளதாக்கிவிடுவோம்.

நாம் அடிக்கும் மேளத்திற்கெல்லாம் மற்றவர்கள் அனைவரும் அதற்கேற்ப ஆடவேண்டும் என்று நினைப்பது சிறுபிள்ளைத்தனம். சொல்லுவதற்கெல்லாம் ஆமாம் என்று தலையாட்ட வேண்டுமென்று எதிர்பார்ப்பதும் சிறுபிள்ளைத்தனமே. தலையாட்டுவதும் அறிவு முதிர்ச்சி பெற்றவரின் செயல் அல்ல. ஊரிலும் சமுதாயத்திலும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஆழ்ந்து சிந்திக்காது, அறிவியல் பார்வையில் அணுகாது, இறையியல் புலமையில் புறிந்துகொள்ளாது, தூய ஆவியின் துணையில் உய்த்துணராது, கூட்டத்தோடு கும்பலாக, தலையாட்டிப் பொம்மையாக இன்று எத்தனை பேர் பங்குகளில் செயல்படுகிறோம். இது சிறுபிள்ளைத்தனம்.

"யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ "அவன் பேய்பிடித்தவன்" என்கிறார்கள். மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, "இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்கிறார்கள்" உண்மைதானா?

--அருட்திரு ஜோசப் லீயோன்

;