முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 10: 5-7,13-16


ஆண்டவர் கூறியது: அசீரிய நாடு! சினத்தில் நான் பயன்படுத்தும் கோல் அது; தண்டனை வழங்க நான் ஏந்தும் தடி அது. இறைப் பற்றில்லா நாட்டினர்க்கு அந்நாட்டை நான் அனுப்புகிறேன்; எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க அதற்கு ஆணை கொடுக்கிறேன்; அம்மக்களைக் கொள்ளையிடவும் அவர்கள் பொருள்களைச் சூறையாடவும், தெருவில் கிடக்கும் சேற்றைப்போல அவர்களை மிதித்துப் போடவும், அதற்குக் கட்டளை தருகிறேன். அசீரிய அரசன் நினைப்பதோ வேறு, அவனது உள்ளத்தில் எழும் திட்டங்கள் வேறு; மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத் தன் இதயத்தில் எண்ணுகிறான்; பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த அவன் விரும்புகிறான். ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்: ``என் கை வலிமையாலே நான் அதைச் செய்து முடித்தேன்; என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மை யாலும் அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்; மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள எல்லைகளை அகற்றினேன்; அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்; அரியணையில் வீற்றிருந்தோரை ஒரு காளை மிதிப்பதுபோல் மிதித்துப்போட்டேன். குருவிக் கூட்டைக் கண்டு பிடிப்பதுபோல் என் கை மக்களினங்களின் செல்வங்களைக் கண்டு எடுத்துக்கொண்டது; புறக்கணித்த முட்டைகளை ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல் நாடுகள் யாவற்றையும் ஒருங்கே சேர்த்துக்கொண்டேன். எனக்கெதிராக ஒருவரும் இறக்கை அடிக்கவில்லை. வாய் திறக்கவில்லை, கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.'' வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு மேலாகக் கோடரி தன்னை மேன்மை பாராட்டுவதுண்டோ? அறுப்பவனைவிடத் தன்னைச் சிறப்பு மிக்கதாக வாள் கருத இயலுமோ? தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக் கைத் தடியால் கூடுமோ? மரம் அல்லாத மனிதனைத் தூக்க மரத்தால் ஆன கோலால் இயலுமோ? ஆதலால் தலைவராகிய படைகளின் ஆண்டவர் பாழாக்கும் கொள்ளை நோயை அவனுடைய கொழுத்த வீரர்கள்மேல் அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ் தீ ஒன்றை வைப்பார்; அவர் நெருப்பு மூட்டுவார்; அது கொழுந்துவிட்டு எரியும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 94: 5-6. 7-8. 9-10. 14-15

பல்லவி: ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்.

5 ஆண்டவரே! அவர்கள் உம் மக்களை நசுக்குகின்றனர்;
உமது உரிமைச் சொத்தான அவர்களை ஒடுக்குகின்றனர்.
6 கைம்பெண்டிரையும் அன்னியரையும் அவர்கள் வெட்டி வீழ்த்துகின்றனர்;
திக்கற்றவரை அவர்கள் கொலை செய்கின்றனர். -பல்லவி

7 `ஆண்டவர் இதைக் கண்டுகொள்வதில்லை; யாக்கோபின் கடவுள் கவனிப்பதில்லை' என்கின்றனர்.
8 மக்களிடையே அறிவிலிகளாய் இருப்போரே, உணருங்கள்;
மதிகேடரே, எப்பொழுது நீங்கள் அறிவு பெறுவீர்கள்? -பல்லவி

9 செவியைப் பொருத்தியவர் கேளாதிருப்பாரோ? கண்ணை உருவாக்கியவர் காணாதிருப்பாரோ?
10 மக்களினங்களைக் கண்டிப்பவர், மானிடருக்கு அறிவூட்டுபவர் தண்டியாமல் இருப்பாரோ? -பல்லவி

14 ஆண்டவர் தம் மக்களைத் தள்ளிவிடார்; தம் உரிமைச் சொத்தாம் அவர்களைக் கைவிடார்.
15 தீர்ப்பு வழங்கும் முறையில் மீண்டும் நீதி நிலவும்; நேரிய மனத்தினர் அதன் வழி நடப்பர். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், விண்ணரசின் மறைபொருளைக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். அல்லேலூயா.

மத்தேயு 11:25-27

பொதுக்காலம் 15 வாரம் புதன்


நற்செய்தி வாசகம்


மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-27

அக்காலத்தில் இயேசு கூறியது: ``தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம். என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டுமென்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்'' என்று கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

உங்களிடத்தில் கடவுளைப் பார்க்கலாமா?
மத்தேயு 11:25-27

கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்ட மனிதர்கள் கடவுள் போன்று செயல்படுவதில்லை. அவர்களுக்குள்ளே இருக்கும் கடவுளை வெளியே பிரதிபலிப்பதில்லை. மனிதர்கள் தங்களுக்குள்ளே கொண்டிருக்கும் அன்பில்லாமை, அடக்கமின்மை, அதிகாரமின்மை இவையனைத்தும் கடவுளின் பண்புகளை மறைக்கின்றன. ஆகவே மனிதன் கடவுளை வெளியே கொண்டு வர முடியவில்லை.

கடவுளை வெளியே கொண்டு வர என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நம்முடைய ஆர்வமான கேள்விக்கு விடை கொடுக்கிறது நற்செய்தி வாசகம். ஞானிகள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அறிஞர்கள் கடவுளை வெளியே கொண்டு வர முடியாது. அவர்களுக்கு கடவுளுடைய வெளிப்படுத்துதல் இல்லை. காரணம் தடைக்கற்காளாக அவர்களுடைய ஆணவம், அதிகாரம், அகங்காரம் இருக்கின்றன. கடவுள் எளிய உள்ளம் கொண்டவர்கள் உள்ளத்தில் குடிகொள்கிறார். குழந்தை உள்ளம் கொண்டவர்களோடு தங்குகிறார். அவர்கள்தான் கடவுளை வெளியே கொண்டு வருகிறார்கள். காரணம் அவர்கள் அவசியமற்றவைகளிலே சிக்குவதில்லை. ஆகவே அவர்கள் அழகாக ஆண்டவரை வெளியே கொண்டு வருகிறார்கள்.

மனதில் கேட்க…

• நான் கடவுளை வெளியே கொண்டு வர தடைக்கற்கள் என்னென்ன?
• என்னிடத்தில் கடவுளை கொண்டு வர முயற்சி எடுப்பேனா?

மனதில் பதிக்க…

"உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் குழந்தைகளாக மாறாவிடில், விண்ணரசில் நுழையமாட்டீர்கள்(மத்தேயு 18:3)

- அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

கடவுளின் பார்வையில்…

கடவுளுடைய எண்ணங்கள் வேறு. மனிதனுடைய எண்ணங்கள் வேறு. கடவுளின் பார்வை வேறு. மனிதனின் பார்வை வேறு. இதுதான் இந்த நற்செய்தி வாசகத்தின் மையக்கருத்து. நாம் அனைவருமே நமது அனுபவத்தின் அடிப்படையில், நமது அறிவின் அடிப்படையில், நமது ஆளுமையின் அடிப்படையில் சிந்திக்கிறோம். முடிவெடுக்கிறோம். உண்மை என்று நம்புகிறோம். ஆனால், அது சரி என்று நம்மால் சொல்லமுடியாது. காரணம், நமது அறிவும், ஆற்றலும், ஆளுமையும் வரையறைக்கு உட்பட்டது. ஆனால், கடவுள் எல்லைகளைக் கடந்தவர்.

ஐந்து குருடர்கள் கதையை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஐந்துபேரும் யானையின் ஒவ்வொரு பகுதியைத்தொட்டுப்பார்த்து, அதுதான் யானை என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னதில் உண்மை இருந்தது. ஆனால், அதுதான் உண்மை என்று ஆகாது. முழுமையாகப் பார்க்கக்கூடிய மனிதரால் தான், உண்மையை அறிந்து கொள்ள முடியும். அதேபோலத்தான், கடவுள் மட்டும் தான் உண்மையை அறிந்திருக்கிறவராக இருக்கிறவர். அவரைத்தவிர வேறுயாருக்கும் அந்த வல்லமை கிடையாது.

நம்மால் எதனுடைய உண்மையையும் அறிந்து கொள்ள முடியாது என்றாலும், எந்த ஒரு நிகழ்வையும் நாம் கடவுளின் பார்வை கொண்டு பார்க்க வேண்டும். கடவுளின் பார்வையில் பார்க்கிறபோது, நிச்சயமாக சாதாரணமான பார்வையைவிட, ஒரு நிகழ்வை சிறப்பாக பார்க்க முடியும். அந்த வல்லமையை கடவுளிடம் நாம் கேட்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------

எளிய உள்ளம்

இந்த உலகத்திலே பலர் தங்களை ஞானிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். தங்களுக்கு அறிவிருப்பதால், தங்களது அறிவாற்றலைக்கொண்டு பலவற்றை அறிந்திருப்பதால், எல்லாம் தஙக்ளுக்குத் தெரியும் என்கிற எண்ணம் அவர்களுக்குள்ளாக மேலோங்கியிருக்கிறது. ஆனால், இவர்களை நாம் ஞானிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால், உண்மையான ஞானி யார்? என்ற கேள்வி நமக்குள்ளாக எழும். இந்த உலகத்தில், யாரெல்லாம் கடவுளைப்பற்றிக் கொண்டு, தங்களது வாழ்வை நகர்த்திக்கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் தான் ஞானிகள். தங்களது அறிவுச்செருக்கினால், தங்களின் எண்ணத்தை, சிந்தனையை முன்னிறுத்தி வாழ்கிறவர்கள், ஞானிகளாக இருக்க முடியாது.

இயேசு வாழ்ந்த காலத்தில், பரிசேயர், மறைநூல் அறிஞர், சதுசேயர் தங்களின் அறிவாற்றலைக்கொண்டு எல்லாம் சாதித்து விட முடியும் என்று நினைத்தார்கள். தாங்கள் சொல்வதுதான் சரி என்றும் அவர்கள் எண்ணினார்கள். கடவுளை அவர்கள் உயர்த்திப்பிடித்தாலும், தாங்கள் கடவுளையும் மிஞ்சியர்வர்கள் என்னும் எண்ணம், அவர்களது சிந்தனையில் ஊறிப்போயிருந்தது. இத்தகைய எண்ணத்தோடு வாழ்ந்தவர்களைத்தான், இயேசு கண்டிக்கிறார். கடவுள் இல்லாமல், தங்களது அறிவினால் அனைத்தையும் சாதித்து விடலாம் என்று எண்ணுகிறவர்களின் மனநிலையை இங்கே படம்பிடித்துக்காட்டி, அவர்களது எண்ணத்தை உடைத்தெறிகிறார் இயேசு.

இயேசுவை அறிந்துகொள்ள, அனுபவிக்க அறிவாற்றல் தேவை இல்லை. எளிய உள்ளம் போதும். பணம், பதவி, அதிகாரம் தேவையில்லை. மற்றவர்கள் மீது கரிசனை கொள்கிற உள்ளம் போதும். எளிய உள்ளத்தோடு, இயேசுவின் கரம் பற்றி நடப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இறை அனுபவம்

இயேசு தன்னுடைய அனுபவத்தை இங்கு விவரிக்கிறார். அவருடைய அனுபவம் என்ன? சாதாரண, எளிய மக்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். ஆனால், ஆளுகின்றவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல் புறந்தள்ளுகின்றனர். இயேசு இங்கு அறிவு ஆற்றலை கண்டிக்கவில்லை. மாறாக, அறிவுச்செருக்கை சாடுகிறார். தன்னை ஏற்றுக்கொள்ளாததால் கோபப்படவில்லை. மாறாக, உண்மைக்கு அவர்கள் செவிசாய்க்காததால் கண்டனம் செய்கிறார். நற்செய்தியை அறிவுப்பூர்வமாக அணுகினால் புரிந்து கொள்ள முடியாது. மாறாக, இதயப்பூர்வமாக அணுக வேண்டும். சாலமோன் போல ஞரனத்தைப்பெற்றிருந்தாலும், குழந்தையின் இதயத்தையோ, எளிமையையோ, கடவுள் நம்பிக்கையையோ பெற்றிருக்கவில்லை என்றால், அதனால் பயன் ஒன்றும் இல்லை.

யூதப்போதகர்களும் கூட இதை தாங்கள் வாழ்ந்த காலகட்டத்தில் ஏற்றுக்கொண்டிருந்தனர். அறிவினால் அல்ல, எளிமையான நம்பிக்கையினால் கடவுளை அடைய முடியும் என்பது அவர்கள் ஏற்றுக்கொண்ட உண்மை. தங்களை விட சாதாரண மக்கள் கடவுளுக்கு நெருக்கமாக இருந்தனர் என்பது அவர்கள் உணராதது அல்ல. இருந்தபோதிலும் அவர்களின் அறிவுச்செருக்கு, கடவுளைப்பற்றி நாங்கள் முழுமையாக அறிந்து வைத்திருக்கிறோம் என்கிற மமதை, அவர்கள் கடவுளை நெருங்கா வண்ணம் விலக்கி வைத்திருந்தது. கடவுளை நாங்கள் அடக்கி ஆள முடியும் என்ற தவறான சிந்தனையும் அவர்களின் இத்தகைய நிலைக்கு மிகப்பெரிய காரணம்.

கடவுளை அணுக எளிய உள்ளத்தவராக நாம் மாற வேண்டும். கடவுள் நமக்கு எட்டாதவர் அல்ல. அவர் நம்மோடு நெருங்கி வர ஆவல் கொண்டிருக்கிறவர். அப்படிப்பட்ட அன்பு வைத்திருக்கிற கடவுளை எளிய மனத்தோடு நெருங்குவோம். கடவுள் அருள் நிச்சயம் நமக்கு உண்டு.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

எசா 10: 5-7, 13-16
மத் 11: 25-27

இயேசுவின் இறைபுகழ்ச்சி !

இன்றைய நற்செய்தி வாசகம் இயேசுவின் செபங்களுள் ஒன்றினைத் தருகிறது. நாம் எப்படி செபிக்க வேண்டும் எனக் கற்றுத் தருகிறது இந்தச் செபம்.

1. முதலில் இது ஓர் இறைபுகழ்ச்சி செபம். விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரான தந்தை இறைவனைப் போற்றுகிறார் இயேசு. நமது செபத்தில் இறைபுகழ்ச்சி இடம் பெறுகிறதா என ஆய்வுசெய்வோம். இறைவனைப் போற்றுதல் இல்லாத செபம் நிறைவற்றது. எனவே, இறைவனை, இயேசுவை, தூய ஆவியாரைப் போற்றுவோம்.

2. இரண்டாவதாக, இது தன்னலமற்ற இறைபுகழ்ச்சி. நமது வாழ்வில் இறைவன் நமக்குச் செய்த நன்மைகளுக்காக இறைவனைப் போற்றுவதும் இறைபுகழ்ச்சிதான். (அதையும் செய்யாமல் எத்தனைபேர் இருக்கிறோம்?). ஆனால், அதைவிட மேலான இறைபுகழ்ச்சி இறைவனை மையப்படுத்தியது. இங்கே இயேசு இறைவனின் திருவுளத்திற்காக தந்தையைப் போற்றுகிறார்.

3. மூன்றாவதாக, இது எளியோர் சார்பான இறைபுகழ்ச்சி. ஆம், குழந்தைகள், மற்றும் குழந்தைகளைப் போன்றவர்களுக்கு இறைவன் தமது திருவுளத்தை வெளிப்படுத்த விருப்பம் கொண்டதற்காக இயேசு இறைவனைப் போற்றுகிறார். "வலியோரை வீழ்த்தி, தாழ்ந்தோரை உயர்த்தும்" இறைவனின் பெருமைகளைப் புகழ்ந்த அன்னை மரியாவின் பாடலை இச்செபம் நினைவுபடுத்துகிறது.

நாமும் நமது வேண்டுதல்களில் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, தன்னலமற்ற, எளியோர் சார்பான இறைபுகழ்ச்சி செபங்களை இணைத்துக்கொள்வோமாக!

மன்றாடுவோமாக: அன்புத் தந்தையே இறைவா, நீர் எளியோரின் சார்பாக செயலாற்றுவதற்காக உம்மைப் போற்றுகிறோம். இயேசுவைப் போல, நாங்களும் தன்னலமற்ற வகையில் உம்மை வழிபட அருள்தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

ஆண்டவரின் கருவி அசீரியா ! (முதல் வாசகம்)

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அசீரியர்கள் இஸ்ரயேல் மக்களைத் தோற்கடித்து, அடி பணியச் செய்த நிகழ்ச்சியை இறைவனின் பார்வையில் பார்த்து, பொருள் கொள்கிறார் எசாயா இறைவாக்கினர். இஸ்ரயேல் இறைவனைவிட்டுப் பிரிந்து சென்றதால், அதற்கு ஒரு பாடம் கற்றுத் தரும் நோக்குடன், அசீரியாவைத் தனது கருவியாக இறைவன் பயன்படுத்தினார் என்று சொல்கிறார் எசாயா. சில நேரங்களில் நமது வாழ்விலும் இதுபோன்று நிகழலாம். நாம் மனம் திரும்ப வேண்டும், இறைவனிடம் திருந்தி வரவேண்டும் என்பதற்காக, நமது எதிரிகளைக் கருவியாகப் பயன்படுத்துகிறார் இறைவன். நம்மைத் தாழ்வுக்கு உட்படுத்துகிறார். இவ்வாறு, அனைத்தும் இறைவனின் திருவுளப்படியே நிகழ்கின்றன என்னும் ஞானத்தை எசாயாவிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்கிறோம். நமக்குத் துன்பம் இழைக்கின்றவர்கள்கூட, இறைவனின் அனுமதியோடுதான் செயல்படுகின்றார்கள் என்பது ஒரு விடுதலை தரும் எண்ணம்.

மன்றாடுவோம்: தீமையையும் உமது கருவியாகப் பயன்படுத்தும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் ஆணவத்தை அடக்கி, உம் பக்கம் எங்கள் இதயங்களைத் திருப்பவே, நீர் தீமைகளை, தோல்விகளை, அவமானங்களை எங்கள் வாழ்வில் அனுமதிக்கிறீர் என்னும் ஞானம் நிறைந்த செய்திக்காக உமக்கு நன்றி சொல்கிறோம்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

--------------------------------

 

குழந்தைகளுக்காக நன்றி!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு, தந்தை இறைவனுக்கு இறைபுகழ் கூறும் இனிய பகுதியை  இன்றைய நற்செய்தி வாசகமாகப் பெற்றுள்ளோம். இறைபுகழ்ச்சி என்பது நம் அனைவரின் வாழ்விலும் தவறாது இடம்பெற வேண்டிய ஒன்று. இயேசு நமக்கு அதன் மாதிரியாகத் திகழ்கிறார்.

எண்ணிலடங்கா நன்மைகளுக்காக, கொடைகளுக்காக நாள்தோறும் நாம் இறைவனைப் போற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். அக்கொடைகளுள் ஒன்று குழந்தைகள். பெற்றோர், பெரியவர்கள், ஆசிரியர்கள், குழந்தைகளோடு நாள்தோறும் தொடர்புடையவர்கள் அனைவரும் குழந்தைச் செல்வங்கள் நம் வாழ்வுக்குச் சேர்க்கும் இனிமைக்காக நன்றி செலுத்த வேண்டும். குழந்தைகளே இல்லாத ஓர் உலகை எண்ணிப் பார்த்தால் எவ்வளவு வறண்டதாகத் தோன்றும்!

குழந்தைகளுக்குத்தான் இறைவன் தமது ஞானத்தையும், எளிமையின்  இனிமையையும், மாசற்ற மாண்பையும், சார்புத் தன்மையின் மேன்மையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். எனவே, குழந்தைகளுக்காக இன்று தந்தை இறைவனுக்கு நன்றி செலுத்துவோம்.

குழந்தைகளைப் போன்ற மனநிலை உடையவர்களுக்காகவும்; இறைவனைப் போற்றுவோம். மாசற்ற மனிதர்கள் இவ்வுலகில் மழையையும், ஒளியையும் இன்னும் நமக்குப் பெற்றுத் தருகிறார்கள். அத்தகைய எளிய மனத்தோர்க்காகவும் நன்றி கூறுவோம்.

நாமும் குழந்தைகள்போல மாற, வாழ இறையருள் வேண்டுவோம்.

மன்றாடுவோம்; மாசற்றோரை அன்ப செய்யும் இயேசுவே, இன்றைய நாளில் என் குடும்பத்திலுள்ள, நான் அறிந்த அனைத்துக் குழந்தைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன். அவர்களின் இனிமையில், மாசின்மையில் உமது உடனிருப்பை உணர்கின்றேன். உம்மைப் போற்றுகிறேன். இறiவா, உலகெங்கும் உள்ள அனைத்துக் குழந்தைகளையும் ஆசிர்வதித்து, அவர்களின் உணவு, உடை, உறைவிடம் மற்றும் அன்பு என்னும் தேவைகளை நிறைவேற்றுவீராக. நானும் குழந்தையைப் போல மாறி, விண்ணரசில்; இடம் பெறுவேனாக. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

--------------------------------

''அவ்வேளையில் இயேசு, 'தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன்.
ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு
வெளிப்படுத்தினீர்'...என்றார்'' (மத்தேயு 11:25)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- சாக்கடல் அருகே கும்ரான் என்னும் பகுதியில் வாழ்ந்த துறவியர் பயன்படுத்திய ''நன்றிக் கீதம்'' போலவும், யோவான் நற்செய்தியில் இயேசு தந்தையை நோக்கி எழுப்புகின்ற வேண்டுதல் போலவும் அமைந்த ஒரு மன்றாட்டை இயேசு எழுப்புகிறார் (மத் 11:25-27; காண்க: லூக் 10:21-22). இதில் உலகைப் படைத்துக் காக்கும் கடவுளுக்கும் இயேசுவுக்கும் இடையே நிலவுகின்ற உறவு வெளிப்படுகின்றது. அது ஓர் ஆழ்ந்த, நெருக்கமான உறவு. கடவுள் யார் என்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்துகிறார். ஏதோ கடவுள் ஒரு சிலரை மட்டும் தேர்ந்துகொண்டு பிறரைத் தண்டனைக்கு உட்படுத்துகிறார் என்னும் முடிவு சரியல்ல. அதுபோலவே, கடவுளைப் பற்றி ஆழமாக அறிந்திட மனித அறிவு முயல்வதை இயேசு கண்டிக்கிறார் என்பதும் சரியல்ல. மாறாக, மனித அறிவு எல்லைகளுக்கு உட்பட்டதே என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார். நம் சொந்த அறிவால் கடவுளை நாம் முழுமையாக அறிந்திட இயலாது. எனவேதான் கடவுளின் முன்னிலையில் நாம் ''குழந்தைகளாக'' மாறிட வேண்டும். குழந்தைகள் தம் தேவைகளை நிறைவு செய்ய தம் பெற்றோரைச் சார்ந்திருக்கின்றன. அதுபோல நாமும் நம் தந்தையும் தாயுமாகிய கடவுளிடமிருந்து அனைத்தையும் பெறுகின்றோம் என்னும் உணர்வோடு வாழ வேண்டும்; நன்றியுடையோராகச் செயல்பட வேண்டும்.

-- மேலும், இயேசுவின் போதனையை அறிந்து புரிந்துகொள்வதில் அவருடைய சீடர்களும் ஒருவிதத்தில் ''குழந்தைகளே''. அதாவது, அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியவை இன்னும் பல உண்டு. இது நமக்கும் பொருந்தும். கடவுளைப் பற்றியும் அவர் உருவாக்கிய உலகு மற்றும் மனிதர் பற்றியும் நாம் அறிந்து, கடவுளை முழு மனத்தோடு அன்பு செய்து, மனித சமுதாயத்தின் நலனுக்காக உழைப்பதில் நாமும் ''குழந்தைகளாகவே'' இருக்கிறோம். கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பதுபோல நாம் ''ஞானம்'' பெற்றிட உழைக்க வேண்டும். அதே நேரத்தில் கடவுளின் முன்னிலையில் குழந்தைகளாகவே நாம் இருக்கிறோம் என்பதையும் ஏற்று, அவருடைய அருளை நன்றியோடு ஏற்றிட எந்நாளும் நம் இதயத்தைத் திறந்திட வேண்டும். அப்போது இயேசுவின் வழியாகக் கடவுள் வழங்குகின்ற வெளிப்பாடு நம் உள்ளத்தில் ஒளியாகத் துலங்கி நம் பயணத்தில் நமக்கு வழிகாட்டியாக அமையும்.

மன்றாட்டு
இறைவா, உமது ஞானத்தை எங்களுக்குத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"தந்தையே,...ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக்
குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" (மத்தேயு 11:25)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துவிட்டது என்று இயேசு நற்செய்தி கூறினார். அதைக் கேட்ட அறிஞர்கள் பலர் இருந்தார்கள். இயேசு புரிந்த அதிசய செயல்களைக் கண்ணால் கண்ட ஞானிகளும் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இயேசு யார் என்பதைக் கண்டுணரத் தவறிவிட்டார்கள்.

-- குழந்தை உள்ளம் கொண்டு, கடவுளின் வெளிப்பாட்டைத் திறந்த மனத்தோடு ஏற்க முன்வந்தவர்கள் இறையாட்சியின் மறைபொருளைப் புரிந்துகொண்டார்கள். இயேசு இத்தகையோரைப் புகழ்ந்துரைக்கிறார். யார்யார் தங்கள் இதயத்தை இறுகவைத்துக்கொண்டு, கடவுளின் வல்ல செயலுக்கு முட்டுக்கட்டை இடுகிறார்களோ அவர்கள் கடவுளாட்சியின் மாட்சியை அறிந்துகொள்ளத் தவறிவிட்டார்கள் என்றே கூற வேண்டும். இந்த இழிநிலை நமக்கு ஏற்படாமல் நாம் குழந்தை மனம் கொண்டவர்களாகக் கடவுளை நம் உள்ளத்தில் ஏற்றிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, கல்லான இதயத்தை எடுத்துவிட்டு எங்களுக்குக் கனிவான இதயத்தைக் கொடுத்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

 

குழந்தை உள்ளம் குறைவற்ற வாழ்வு

இந்த பெரிய நாடுகள், பெரிய நகரங்கள், பெரிய மனிதர்கள், இந்த பெரியவைகள் எல்லாம் தண்டனைக்கும் தீர்ப்;புக்கும் உள்ளாகும். அவ்வாரே ஞானிகள், விவேவிகள், அறிவாளிகள். ஆணவக்காரர்கள்; இறைவனைக் காண மாட்டார்கள்.

ஆனால் சிறிய நாடுகள்,சிறிய நகரங்கள்;,சிறியவர்கள், குழந்தைகள் கடவுளின் ஆசி பெருவார்கள். சிறியவர்கள், குழந்தைகள் எளிய மனத்தோர் இவர்கள் தெய்வத்தின் தரிசனம் பெருவார்கள். இவரடகளில் அகங்காரம், ஆணவம், ஆர்ப்பரிப்பு இல்லை. எதிலும் தெய்வத்தை நம்பி வாழும் பற்றுருதி கொண்டவர்கள்.
கடவுளைச் சார்ந்து வாழும் இவரகளை கடவுள் ஒருபோதும் கைவிடார். இத்தகையோருக்கு தெய்வத்தின் ஆசியில் குறையே இல்லை. எல்லாசூழலிலும் கடவுள் அவர்களோடு இருப்பார். துந்தை இறைவன் தாமே தம் திருவுளத்தை இத்தகையோருக்கு வெளிப்படுர்துவதால், எல்லா சூழலிலும் தெழிவு, திறமை, திடம்பெற்று மகிழ்வோடு வாழ மனவலிமை பெறுவர்.

இயேசுவே. புழந்தை உள்ளம் கொண்டு நிறைவுடன் வாழ வரம் அருளும்

--அருட்திரு ஜோசப் லீயோன்