முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 26: 7-9,12,16-19

நீதிமான்களின் நெறிகள் நேரியவை; நீர் நேர்மையாளரின் வழியைச் செம்மையாக்குகின்றீர். ஆண்டவரே, உமது நீதியின் நெறியில் நடந்து, உமக்காகக் காத்திருக்கிறோம், உமது திருப்பெயரும் உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன. என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது; எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது; உம் நீதித்தீர்ப்புகள் நிலவுலகில் நிலைத்திருக்கையில் வாழ்வோர் நேர்மையைக் கற்றுக்கொள்வர். ஆண்டவரே, நிறைவாழ்வை நீர் எங்களுக்கு உரியதாக்குவீர்! ஏனெனில், எங்கள் செயல்கள் அனைத்தையும் எங்களுக்காகச் செய்கின்றவர் நீரே. ஆண்டவரே, துயரத்தில் உம்மைத் தேடினோம்; நீர் எங்களைத் தண்டிக்கும்போது, உம்மை நோக்கி மன்றாடினோம். பேறுகாலம் நெருங்குகையில், கருவுற்றவள் தன் வேதனையில் வருந்திக் கதறுவதுபோல், ஆண்டவரே, நாங்களும் உம் முன்னிலையில் இருக்கின்றோம்! நாங்களும் கருவுற்று வேதனையில் துடித்தோம்; ஆனால், காற்றைப் பெற்றெடுத்தவர் போலானோம்; நாடு விடுதலை பெற, நாங்கள் எதையும் சாதிக்கவில்லை; உலகில் குடியிருக்க, எவரும் பிறக்கப் போவதில்லை. இறந்த உம் மக்கள் உயிர் பெறுவர்; அவர்களின் உயிரற்ற உடல்கள் மீண்டும் எழும்; புழுதியில் வாழ்வோரே, விழித்தெழுந்து மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், நீர் பெய்விக்கும் பனி ஒளியின் பனி; இறந்தோர் நிழல்களின் நாட்டிலும் அதை விழச் செய்கின்றீர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 102: 12-14. 15-17. 18, 20,19

பல்லவி: விண்ணுலகினின்று ஆண்டவர் வையகத்தைக் கண்ணோக்கினார்.

12 ஆண்டவரே! நீர் என்றென்றும் கொலுவீற்றிருக்கின்றீர்;
உமது புகழ் தலைமுறைதோறும் நிலைத்திருக்கும்.
13 நீர் எழுந்தருளி, சீயோனுக்கு இரக்கம் காட்டும்;
இதோ! குறித்த காலம் வந்துவிட்டது.
14 அதன் கற்கள்மீது உம் ஊழியர் பற்றுக்கொண்டுள்ளனர்;
அதன் அழிவை நினைத்துப் பரிதவிக்கின்றனர். -பல்லவி

15 வேற்றினத்தார் ஆண்டவரின் பெயருக்கு அஞ்சுவர்;
பூவுலகின் மன்னர் யாவரும் அவரது மாட்சியைக் கண்டு மருள்வர்.
16 ஏனெனில் ஆண்டவர் சீயோனைக் கட்டியெழுப்புவார்;
அங்கு அவர் தம் மாட்சியுடன் திகழ்வார்.
17 திக்கற்றவர்களின் வேண்டுதலுக்கு அவர் செவிகொடுப்பார்;
அவர்களின் மன்றாட்டை அவமதியார். -பல்லவி

18 இனி வரவிருக்கும் தலைமுறைக்கென இது எழுதி வைக்கப்படட்டும்;
படைக்கப்படவிருக்கும் மக்கள் ஆண்டவரைப் புகழட்டும்.
20 அவர் சிறைப்பட்டோரின் புலம்பலுக்குச் செவிசாய்ப்பார்;
சாவுக்கெனக் குறிக்கப்பட்டவர்களை விடுவிப்பார்.
19 ஆண்டவர் தம் மேலுலகத் திருத்தலத்தினின்று கீழே நோக்கினார்;
அவர் விண்ணுலகினின்று வையகத்தைக் கண்ணோக்கினார். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

மத்தேயு 11:28-30

பொதுக்காலம் 15 வாரம் வியாழன்


நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 28-30

அக்காலத்தில் இயேசு கூறியது: ``பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத் தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா?
மத்தேயு 11:28-30

நீங்கள் சுறுசுறுப்பானவரா? அல்லது தளர்வுற்றவரா? என்ற கேள்வியோடு நாம் கருத்துக்கணிப்பு நடத்தினால் வாழ்க்கையில் பல மனிதர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதில்லை. மாறாக தளர்வுற்றவர்கள் தான் என்பது தெரிய வரும். வாடிய முகத்தோடு அவா்கள் நடப்பதைப் பார்க்கின்றபோது அவர்களிடத்தில் ஆற்றல் தீர்ந்துபோய் விட்டது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

உங்களிடத்திலே சுறுசுறுப்பாக செயல்படுவதற்கான ஆற்றல் தீர்ந்துவிட்டது என்றால் கவலை வேண்டாம். அந்த ஆற்றலைப் பற்றித்தான் இன்றைய நற்செய்தி வாசகம் பேசுகிறது. அந்த ஆற்றலை தருபவர் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

பெருஞ்சுமைகளை இறக்கி வையுங்கள். கவலைகளை கொட்டுங்கள். சோகங்களை சொல்லுங்கள். உங்கள் துயரத்தின் புலம்பலை பற்றி பேசுங்கள். கவலை, சோகம், துயரம், பிரச்சினை, நோய் இவைகள் தானே உங்கள் ஆற்றலை உங்களிடமிருந்து பிடுங்கியது. அதனால்தானே நீங்கள் தளர்வுற்றுப் போனீர்கள்? அதைப்பற்றி கவலைப்படாதீர்ள். இப்போது எல்லாவற்றுக்கும் இளைப்பாறுதல் பெறுங்கள். அனைத்து ஆற்றலையும் அள்ளுங்கள். நிறைய அள்ளுங்கள். ஆண்டவரே அந்த ஆற்றல்.

மனதில் கேட்க…

• இனியும் நான் தளர்வுற்று இருப்பேனா?
• என் ஆற்றல் என் ஆண்டவர் என்பது எனக்கு தெளிவாக தெரிகிறதா?

மனதில் பதிக்க…

"ஆண்டவர் என் வலிமை, என் கேடயம், அவரை என் உள்ளம் நம்புகின்றது (திபா 28:7)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

இயேசுவின் அளவுகடந்த அன்பு

இந்த பகுதியின் முழுமையான பொருளை அறிந்து கொள்ள இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கைப் பிண்ணனி நமக்கு தெரிந்திருக்க வேண்டும். எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்யக் கூடாது? செய்யக்கூடாததைச் செய்தால் அதனால் வரும் இடர்கள் என்ன? என்றும் இஸ்ரயேல் மக்களுக்கு ஆளும்வர்க்கத்தினரால் சொல்லப்பட்டிருந்தது. இது ஒரு வகையான சுமையை. அவர்களை சுந்திரமாக சுவாசிக்க செய்யாமல், ஒருவிதமான அடிமை மனநிலையில், இறுக்கமான மனநிலையில் வைத்திருப்பதற்கான ஒரு சூழ்நிலை. இப்படிப்பட்ட மக்களுக்கு இயேசு போதிக்கிறார். ஒழுங்குகளும், சட்டங்களும் தேவையில்லை என்பது இயேசுவின் வாதமல்ல. மாறாக, அந்த ஒழுங்குகளும், சட்டங்களும் ஒருவிதமான அடிமைநிலைக்கு ஒருவரைக்கொண்டு செல்லுமானால் அது தேவையில்லை என்பதுதான் இயேசுவின் வாதம்.

இப்படிப்பட்ட அடிமைத்தனத்தில் இருக்கிற மக்களுக்கு இயேசுவின் பதில்: ”பெரும் சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்பது. இது, கடவுள் எந்த அளவுக்கு மக்களுக்காக தனது இதயத்தில் இடம் வைத்திருக்கிறார். அவர்கள் வாழ்க்கை எவ்வளவுக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது. நாம் ஒருவர் கூட, வாழ்க்கையில் துன்பப்பட வேண்டும் என்று, இயேசு எண்ணியது கிடையாது. நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றுதான் இயேசு ஆசைப்படுகிறார். அதனுடையா வெளிப்பாடாகத்தான், இந்த வார்த்தைகளை உதிர்க்கிறார்.

நமது வாழ்க்கையில் கடவுள் நம்மோடு இருக்கிறார், நமக்காக இருக்கிறார், நமது துன்பங்களிலும், துயரங்களிலும் உடனிருக்கிறார் என்பது நமக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்க வேண்டும். அந்த ஆறுதல் நிச்சயம் நமது வாழ்வை நம்பிக்கையோடு நடத்திச் செல்வதற்கு உறுதுணையாக இருக்கும்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------

தாயன்பு

ஒரு தாய் தன் குழந்தையின் மீது ஒவ்வொரு மணித்துளியும் நினைவு வைத்திருப்பாள். அந்த குழந்தையின் தேவையை, அவளாகவே அறிந்து, அதனை நிறைவேற்றுகிறவள் தான் தாய். எந்த ஒரு தாயும் தன் குழந்தை வேதனைப்படுவதையோ, துன்பப்படுவதையோ விரும்பமாட்டாள். இந்த தாயன்பு தான், கடவுளின் அன்பாகச் சொல்லப்படுகிறது. இந்த தாயன்பை விட பல மடங்கு மேலானது கடவுளின் அன்பு. தாயன்பையே நாம் வியந்து பார்க்கிறோம். அப்படியென்றால், கடவுளின் அன்பு எந்த அளவிற்கு மகத்துவமானது என்பதை, இங்கே நாம் அறிந்து கொள்ளலாம்.

சுமைகளால் சோர்ந்திருப்பவர்களை இயேசு அழைக்கிறார். வழக்கமாக, நண்பர்களின் மகிழ்ச்சியில் நாம் அதிகமாகப் பங்கெடுப்போம். அவர்களோடு மகிழ்ந்திருப்போம். ஆனால், அவர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டுமென்றால், ”என்னுடைய நிலையே எந்த அளவுக்கு மோசமானதாக இருக்கிறது” என்று, அதிலிருந்து ஒதுங்கிவிடுவோம். துன்பத்திலும், துயரத்திலும் பங்கெடுக்கிறவர்கள் வெகு குறைவுதான். ஆனால், இங்கே இயேசுவே முன்வருகிறார். அவராகவே முன்வந்து, நமது துன்பத்தில் பங்கெடுக்கிறார். நம்மை மீட்பதற்கு துணையாக இருக்கிறார்.

கடவுளின் தாயன்பை வியந்து பார்க்கிற நாம், நமது பெற்றோர்களை வயதான பருவத்தில் எப்படி பார்க்கிறோம்? எந்த அளவுக்கு நம்மை கண்ணின் இமைபோல், உண்ணாமல், உறங்காமல், நம்மை தாலாட்டி, சீராட்டி வளர்த்திருப்பார்கள். அவர்களை நாம் போற்றுகிறோமா? அவர்களை வயதான பருவத்தில் பேணிவளர்க்கிறோமா? சிந்திப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

இயேசு நம் மீது காட்டும் பரிவு

முடிவில்லாத ஒழுங்குகள் தான் சமயம் என்று யூத மக்களால் கருதப்பட்டது. சடங்குகள், சம்பிரதாயங்கள், மத ஒழுங்குகளுக்கு மத்தியில் தான் மக்கள் வாழ்ந்து வந்தனர். எதைச்செய்ய வேண்டும் என்பதற்கு அவர்கள் செவிசாய்ப்பதை விட, எதைச்செய்யக்கூடாது என்பதை, அவர்கள் கட்டாயம் அறிந்திருக்க, சமயத்தலைவர்கள் ஆவணசெய்திருந்தார்கள். எதைச்செய்தாலும், கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், இதையெல்லாம் செய்யக்கூடாது என்று, மக்களை சமயத்தலைவர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். இப்படி கட்டுகளுக்குள் அடக்கி வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு, இயேசுவின் இன்றைய நற்செய்தி வாசகம் மிகுந்த ஆறுதலைத் தருகிறது.

நுகம் என்கிற வார்த்தையின் பொருள், “அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்“ என்கிற ஒப்பந்தத்திற்குள்ளாக நுழைவது. பாலஸ்தீனத்தில் மாடுகளுக்கான நுகம் மரத்தால் செய்யப்பட்டது. அதைச் செய்வதற்கு முன்னதாக, மாடுகளையும் கூட்டிவந்து, சரியான அளவை எடுத்து, அதற்கேற்றாற்போல வடிவமைத்தனர். அந்த நுகம் மாட்டிற்கு சரியாகப் பொருந்துகிறதா? என பார்க்கப்பட்டு, பின்னர் தான், அது மாட்டப்பட்டது. அது மாட்டிற்கு, காயத்தை ஏற்படுத்தாத வண்ணம், நேர்த்தியாகப் பொருத்தப்பட்டது. இதன்மூலம், மாட்டிற்கும் வலி தெரியாமல் இருக்கிறது. அதேபோல, மாட்டின் பயன்பாடும் நமக்குக் கிடைக்கிறது. சரியான அளவில் செய்யப்படும் நுகம் தான், இதற்குக் காரணம். இயேசுவின் நுகமும் இதேபோலத்தான். நாம் தாங்குவதற்கு ஏற்ற, சரியான அளவுகோலாக இருக்கிறது.

இயேசு நமது நுகத்தைத் தாங்கிக்கொண்டார் என்பது, ஏதோ வெறும் கருத்தியல் அடிப்படை அல்ல. அது உண்மை. அது வரலாறு. உண்மையாகவே நம் பிணிகளை அவர் தாங்கிக்கொண்டார் என்கிற வார்த்தைகள், இதற்கு வலுசேர்க்கின்றன. நமது துயரங்களைத் தாங்குவதற்கு கடவுள் இருக்கிறார், என்கிற நமது நம்பிக்கை, நமக்கு மிகப்பெரிய பலம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இயேசுவே நமது வாழ்வின் அருமருந்து

கடவுளை பலவிதமான வழிகளில் களைப்புறாமல் தொடர்ந்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கும், வாழ்வில் எப்போதும் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணி, அதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்களுக்கும் இயேசுவின் வார்த்தைகள் ஆறுதலாக அமைகிறது. கிரேக்கர்கள், ”கடவுளைக்காண்பது அரிது. கடவுளைக்கண்டாலும் அதனை மற்றவர்களுக்கு விளக்கிக்கூறுவது அரிதிலும் அரிது” என்று சொல்வார்கள். யோபு புத்தகத்திலே சோப்பார், யோபுவிடம் கேட்பதும் இதுதான், ”கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை நீர் அறிய முடியுமா?”      (யோபு 11: 7). அப்படியென்றால், கடவுளைக்காணவே முடியாதா? நன்மை செய்கிறவர்களுக்கு சோதனை மேல் சோதனைதான் கிடைக்குமா? அவர்கள் ஆறுதல் கூட பெற முடியாதா? என்கிற கேள்விகள் நமக்குள்ளாக எழலாம். அதற்கு பதில்தான் இயேசுவின் அமுதமொழிகள்.

கடவுளைப்பற்றிய தேடல் இயேசுவில் நிறைவடைகிறது. வாழ்வில் நன்மையே செய்ய வேண்டும் என்று எண்ணுகிறவர்களுக்கு நிறைவு இயேசுவில் கிடைக்கிறது. இயேசு சொல்கிறார், ”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”. இந்த வார்த்தைகள் கடவுளைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கும், வாழ்வில் நன்மையே செய்ய வேண்டும் என எண்ணுகிறவர்களுக்கும் ஆறுதல் தருகின்ற வார்த்தைகள். 1பேதுரு 5: 7 சொல்கிறது: ”உங்கள் கவலைகளையெல்லாம் அவரிடம் விட்டுவிடுங்கள். ஏனென்றால் அவர் உங்கள் மேல் கவலை கொண்டுள்ளார்”. ஆக, இயேசுவை நமது வாழ்வில் பற்றிக்கொண்டால், வாழ்வின் அனைத்துக் கேள்விகளுக்கும் தெளிவான விடைகிடைக்கும்.

நமது வாழ்வில் விடைகாண முடியாத பல கேள்விகளுக்கு இயேசுவில் நிச்சயம் பதில் கிடைக்கும். இயேசுவை உணர்ந்து, அவரை முழுமையாக அறிந்து கொண்டால், அனுபவித்தால் நமது வாழ்வில் கவலை என்பதே இல்லை.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------
அன்பில் வேரூன்றுவோம்

அன்பு உள்ள இடத்தில் மலைச்சுமையும் மாலைச்சுமையாகிவிடும், அன்பில்லா இடத்தில் மாலைச்சுமையும், மலைச்சுமையாகிவிடும் என்று சொல்வார்கள். காரணம், அன்பு உணர்வு கொண்டு சுமக்கிற எதுவும் பளுவாகத் தெரிவதில்லை. நம்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாக நமது சுமைகள் இயேசுவுக்கு கடினமானதாகத் தெரியவில்லை. நமது சுமைகளை நாம் சுமக்க இயலாமல், வருந்துகிறபோது, உண்மையாக, நேர்மையாக வாழ்வதனால் சந்திக்கும் துன்பங்களைப் பார்த்து நாம் பயப்படுகிறபோது, சோர்வுறுகிறபோது, ஆண்டவரின் இரக்கம் நமக்கு நிறைவாகக் கிடைக்கிறது. எனவே தான், இயேசு சொல்கிறார்: ”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்”.

கடவுள் நம்மீது கொண்டிருக்கிற அன்பினால், நமது சுமைகளைச் சுமக்க தயாராக இருப்பதுபோல, நாமும் மற்றவா்களின் சுமைகளைத் தாங்குவதற்கு தயாராக இருப்பதற்கு நாம் அனைவரும் அழைக்கப்படுகிறோம். இந்த உலகத்திலே நோயுற்றிருக்கிற, கைவிடப்பட்டிருக்கிற, வாழ்வையே வெறுத்துப்போயிருக்கிற உள்ளங்களுக்கு ஆறுதலாகவும், அவர்களுடைய சுமைகளை பகிர்ந்து கொள்ளக்கூடியவர்களாகவும் வாழ்வதுற்கு ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் அழைக்கப்படுகிறோம். அதற்கு நாம் அன்பின் வடிவமாக மாற வேண்டும். ஏழைகள் மட்டில் அதிகமாக அன்பு காட்டி, அன்பின் வடிவமாகத் திகழ்ந்தவர் அன்னை தெரசா. அன்பு ஒன்றையே தனது வாழ்வின் முழுநோக்கமாகக் கொண்டு வாழ்ந்து, மக்கள் மத்தியில் பணிசெய்தவர். மற்றவர்களின் சுமைகளைத் தானே சுமந்தவர். இயேசுவின் அடிச்சுவட்டை இறுதிவரை பின்பற்றியவர்.

நம் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா முழுவதையும் அன்பினால் நிரப்ப வேண்டும். அன்பு நம்மை ஆட்கொள்ள வேண்டும். மானிட சமூகம் உருவானதே கடவுளன்பின் வெளிப்பாடுதான். நம்மிலிருந்து அன்பு என்னும் ஆறு பெருக்கெடுத்து ஓடட்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் அன்பு

கடவுளைத்தொடர்ச்சியாக விடாமுயற்சியோடு தேடுவோர்க்கும், நல்லவராக வாழ முயற்சி செய்தும் பலவீனத்தில், மனித குறைபாடுகளில் தொடர்ந்து தவறிக்கொண்டிருக்கிறவர்களுக்கும், அதனால் சோர்வுற்றவர்களுக்கும் இயேசு இந்த நற்செய்தியைத் தருகிறார். அவருடைய அழைப்பு, ”பெருஞ்சுமை சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்” என்பதாகும். இந்த அழைப்பு உண்மையைத்திறந்த உள்ளத்தோடு தேடி, அதனால் சந்தித்த துன்பங்களினால், துயரங்களினால் களைப்படைந்தவர்களுக்கான அழைப்பு. நம்முடைய அறிவை கசக்கிப்பிழிந்தால் கடவுளை அடைந்து விடலாம் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறு. மாறாக, இயேசுவின் மீது நமது பார்வையைத்திருப்பி, அவர் மீது நமது முழுமையான நம்பிக்கை வைத்தால் கடவுளை அடைந்து விடலாம்.

ஒரு பாரம்பரிய யூதருக்கு, மதம் என்பது அவன் மீது சுமத்தப்பட்ட சுமை. ஏனென்றால் சட்டம் என்ற பெயரில் பல சுமைகளை பரிசேயர்களும், சதுசேயர்களும் பாமரர்களுக்கு நடுவில் விதை்திருந்தனர். எனவே, ஒரு யூதனுக்கு மதம் என்பது முடிவில்லாத சட்டங்களைக் கொண்டது. “என் சுமை எளிதாயுள்ளது“ என்று இயேசு சொல்வது வெறும் சுமையைக்குறிப்பது அல்ல, மாறாக, அன்புச்சுமையைக் குறிப்பது. யார் மீதாவது நாம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தால், அவர்களுக்காக நாம் என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தயாராக இருப்போம். அது கடினமானதாக இருந்தாலும், அந்த நபரை நாம் மிகுதியாக அன்பு செய்வதால், அது நமக்கு பெரிய வேதனையைக்கொடுக்காது. நமது அன்புக்குரியவருக்காக செய்கிறோம் என்ற எண்ணமே நமக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதைத்தான் இயேசு இங்கு குறிப்பிடுகிறார்.

இயேசு நம்மை மிகுதியாக அன்பு செய்யக்கூடியவர். அந்த அன்புதான் நமக்காக சிலுவைச்சாவை ஏற்றுக்கொள்ளச் செய்தது. அந்த அன்புதான் நமக்காக உயிரைத்தியாகம் செய்ய தூண்டுகோலாக இருந்தது. இயேசுவின் அன்பில் நம்மை இணைத்துக்கொள்வோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

 

எளியோருக்கான அழைப்பு !

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்னும் இயேசுவின் அழைப்பு அனைவருக்குமானது. சமயம் கடந்த, கத்தோலி;க்க அழைப்பு. அந்த அழைப்புக்காக நன்றி கூறுவோம்.

நாம் வாழும் இன்றைய நாள்கள் மன அழுத்தம், உளைச்சல், அமைதியின்மை நிறைந்த நாள்கள். செல்வமும், வசதியும் பெருகினாலும், அமைதியின்றி, மனதில் பாரத்துடன் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இயேசுவின் அழைப்பு பொருள் நிறைந்த ஒன்று. நமது கவலைகள், கலக்கங்கள், சுமைகள் அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் இறக்கி வைப்போமா?

அத்துடன், இயேசுவின் சீடர்களான நாம், அவரைப்போல இந்த அழைப்பை நமது அயலாருக்கு விடுத்தால் என்ன? நமக்கு அறிமுகமான, அருகில் வாழ்வோரின் சுமைகளை நாம் அறிவோம். நம்மால் இயன்ற அளவு அவர்களின் சுமைகளைக் குறைக்க, ஆறுதல் அளிக்க முயன்றால் என்ன?

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் சுமைகளைத் தாங்கிக்கொள்வதற்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் பிறரின் சுமைகளைத் தாங்க முன்வரும் தாராள உள்ளத்தைத் தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

----------------------------------------------

 

நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று இயேசுவே கூறிய இன்றைய நற்செய்தி. என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார் ஆண்டவர் இயேசு. துன்பமே இல்லாத வாழ்வை, சிலுவைகளே இல்லாத பயணத்தை, முட்களே இல்லாத வழித்தடத்தை இயேசு வாக்களிக்கவில்லை. ஒரு சில மந்திரவாதிகளும், போலி இறைவாக்கினர்களும்தான் இத்தகைய போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். ஆனால், இயேசு அப்படிப்பட்ட போலி வாக்குறுதி எதையும் தரவில்லை. மாறாக, என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்கள் சிலுவையைச் சுமந்துகொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார். ஆனால், இயேசு வேறொரு வாக்குறுதியை நமக்குத் தந்துள்ளார். என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது என்பதுதான் அது. என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அது உங்களை அழுத்தாது என்பதுதான் இயேசுவின் அழைப்பு.

எனவே, நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் நுகங்களாகிய துன்பங்கள், நோய்கள், அறைகூவல்கள், தோல்விகள் ஆகியவற்றை இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வோம். அப்போது அவை எளிதானவையாக மாறும்.

மன்றாடுவோம்: இளைப்பாறுதல் தரும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். எனது வாழ்வின் நுகங்களை முறுமுறுக்காமல் ஏற்றுக்கொள்ளவும், அவற்றை உமது அருளால் எளிதாகச் சுமக்கவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

---------------------------------------

சுகமான சுமைகள்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பல்வேறு சுமைகளால் சோர்ந்துபோன அனைவருக்கும் ஆறுதல் தரும் அருமையான வாக்குறுதியை இன்றைய நற்செய்தி வாசகமாகப் பெற்றிருக்கிறோம்.

வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் என்று இருகரம் விரித்து அழைக்கிறார் நம் ஆண்டவர். எனவே, உடல் நோயா, மன அழுத்தமா, கவலைகளா, அச்சமா, துயரமா, அவமானமா? எத்தகைய சுமை நம்மை அழுத்தினாலும், இயேசுவின் அருகில் வந்து அவரிடம் நம் பாரங்களை இறக்கி வைப்போம். உலகம் தர இயலாத மன ஆறுதலை, உடல் நலத்தை, ஆன்ம வலிமையை அவர் தருவார்.

அத்துடன், இன்னொரு அழைப்பையும் இன்றைய வாசகம் மூலமாக இயேசு விடுக்கிறார். நம் வாழ்வின் சில சுமைகளை நாம் ஒருவேளை சுமந்தே தீரவேண்டும் என்கிற நிலை நம்மில் பலருக்கு இருக்கலாம். தீராத நோய், கடினமாக வாழ்க்கைத் துணைவர், ஊனமுற்ற குழந்தை, ... போன்ற ஏதேனும் ஒரு சுமை இறக்கி வைக்க முடியாததாக, என்றும் நம்மோடு உடன் வருகிற சுமையாக இருந்துவிட்டால் என்ன செய்வது?

இத்தகைய சுமைகளை எளிதாக, இனியவையாக மாற்றுவதாக இயேசு வாக்களிக்கிறார். ஆம், இறக்கி வைக்க முடியாத சுமைகள் இயேசுவின் அருளால் இனிய சுமைகளாக, எளிய சுமைகளாக மாறுகின்றன. காரணம், நம்மோடு சேர்ந்து இச்சுமைகளை இயேசுவும் சுமக்கிறார். அதற்காக நன்றி கூறுவோம். சுமைகளை மகிழ்வுடன் சுமப்போம்.

மன்றாடுவோம்; சுமை தாங்கியான இயேசுவே, எங்கள் சுமைகளையெல்லாம் போக்கி ஆறுதல் தருவதற்காக நன்றி கூறுகிறேன். எனது வாழ்வின் தீராத, மாறாத சுமைகளை உமது அருளால் இனிய, எளிய சுமைகளாப் பார்க்கின்ற புதிய பார்வையை எனக்குத் தந்தருளும். என்னோடு வாழ்கின்றவர்களை சுமைகளாகக் கருதாமல், உறவுகளாக ஏற்கும் மனநிலையை எனக்குத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

------------------------

''இயேசு, 'ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது' என்றார்'' (மத்தேயு 11:30)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- பழைய ஏற்பாட்டில் அடங்கியுள்ள ''சீராக்கின் ஞானம்'' என்னும் நூலின் இறுதியில், கடவுளிடமிருந்து வருகின்ற கொடையாகிய ஞானம் ஒரு நுகத்திற்கு ஒப்பிடப்படுகிறது. கடவுளைப் பற்றிய அறிவை நமக்கு அளித்து, கடவுளின் கட்டளைகளையும் நமக்குத் தெரியப்படுத்துகின்ற ஞானம் நம்மை அழுத்துகின்ற சுமையல்ல, மாறாக நமக்கு வழிகாட்டுகின்ற பயணத் துணை (காண்க: சீஞா 53:26). எகிப்து நாட்டில் அடிமைப்பட்டிருந்த இஸ்ரயேலரை அழுத்தியது ஒரு ''நுகத்தடி'' (காண்க: லேவி 26:13). அதுபோலவே, பாபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மக்களும் ஒரு நுகத்தைச் சுமந்தனர் (காண்க: எசா 47:6). இத்தகைய சுமைகளைச் சுமந்து, களைப்புற்று அவதிப்பட்ட மக்களுக்குக் கடவுள் அளித்த ஒரு ''நுகம்'' இருந்தது (காண்க: எரே 2:20). அது கடவுள் வழங்கிய ''திருச்சட்டம்'' ஆகும். நீதியையும் உண்மையையும் நாடிச் செயல்படுத்துவதே அச்சட்டம் மனிதருக்க அளிக்கின்ற பொறுப்பு (காண்க: எரே 5:1,5).

-- இயேசு நமக்கு அளிக்கின்ற ''நுகம்'' நம்மீது சுமத்தப்படுகின்ற பளு அல்ல. மாறாக, திருச்சட்டத்திற்கு இயேசு அளிக்கின்ற புதிய விளக்கமே அவர் நமக்கு அளிக்கின்ற ''நுகம்'' (காண்க: மத் 5:17-20). இயேசுவின் நுகம் ''அழுத்தாது''; அதன் சுமை ''எளிது'' (மத் 11:30). இதனால் இயேசு திருச்சட்டத்தை அழித்துவிட்டார் என்று பொருளாகாது. மாறாக, திருச்சட்டத்திற்கு இயேசு வேரோட்டமான ஒரு புதிய விளக்கம் தருகிறார் (காண்க: மத் 5:21-48; 10:16-23). இயேசு நமக்குத் தருகின்ற கட்டளைகள் பழைய ஏற்பாட்டுத் திருச்சட்டத்தைவிட ''கடினமாக'' இருக்கலாம். ஆனால், அவை நம்மை அடிமைப்படுத்துவதில்லை; மாறாக, நமக்கு சுதந்திரம் அளிக்கின்றன; நம்மை எல்லாவித அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கின்றன. பரிசேயர் திருச்சட்டத்திற்கு அளித்த விளக்கங்கள் மக்களை அடிமைப்படுத்தின (காண்க: மத் 23:4). மாறாக, இயேசு நமக்கு ''இளைப்பாறுதல்'' தருவதாக வாக்களிக்கிறார் (மத் 11:28). இந்த ''ஓய்வு'' படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஓய்வெடுத்ததை நமக்கு நினைவூட்டுகிறது. கடவுளுக்கும் மனிதருக்கும் படைப்புப் பொருள்களுக்கும் இடையே நல்லுறவு நிலவும்போது இந்த ஓய்வு நமதாகும். அப்போது கடவுளின் ஓய்வில் நாமும் பங்கேற்று அந்த அமைதியில் மகிழ்ந்திருப்போம்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் சுமைகளை எளிதாக்குபவர் நீரே என உணர்ந்து நாங்கள் வாழ்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------------------------------

இதோ ஒரு மாற்றுச் சுமை

சும்மாதெருவில் உள்ள சுமையை இழுத்து தன் தலைமேல் வைத்துக்கொண்டு,நொந்து நொடிந்து அறுந்த பட்டமாக அல்லாடுகிறான் மனிதன். ஆறிவியல் பொருட்கள், நுகர்வு கலாச்சாரம், பொழுதுபோக்கு அம்சங்கள், கலாச்சார சீரழிவு, ஆன்மீக வெற்றிடம் என்னும் பெருஞ்சுமைகளைச் சுமந்து சுமந்து சோர்ந்துபோயுள்ளான்.

இளைப்பாறுதல் தேடி எங்கெங்கோ அலைந்து அதிலும் சோர்ந்துபோயுள்ளான்.பணம் கொடுத்து வாங்கும் முயற்சியில் பலர். மதுவில். மாதுவில் தேடும் ஒரு கூட்டம், போதை. சுpனிமா, ஊடகம் இவறடறில் தேடும். இன்னெரு கூட்டம். அந்த இடம், இந்த ஆள் என்று அலைமோதும் பிறிதொரு கூட்டம். ஆனாலும் இளைப்பாறுதல் கண்டடைந்தார் யாருமில்லை.

"என்னிடம் வாருங்கள், இளைப்பாறுதல் தருவேன்". ஊன் பெருஞ்சமையை என் தோள்மேலட இறக்கி வை. அவற்றை நான் உனக்காக சுமக்கிறேன். உன் குற்றங்களுக்காக நான் தண்டனை அனுபவிக்கிறேன். உன் தவறுகளுக்காக நான் தண்டனை பெற தயாராகயிருக்கிறேன். உனக்கு சுகம் கிடைக்க நான் காயப்பட காத்திருக்கிறேன்

நமது பெருஞ்சுமையை ஆண்டவர்மேல் போட்டுவிட்டு சும்மா அலைவதல்ல சுகம். அது சோம்பலுக்கும், சோதனைக்கும் அதனால் அழிவுக்கும் ஆதாரமாகிவிடும். எனவே, "என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக் கொள்ளுங்கள். அது அழுத்தாது, எளிதானது,இளைப்பாற்று தருவது" என்று ஒரு மாற்றுச்சுமையை நமக்குத் தருகிறார்.

இயேசுவே, நீர் தரும் சுமையைச் சுமந்து உம்மோடு நடந்து என் வாழ்வில் மகிழவேன்

--அருட்திரு ஜோசப் லீயோன்

------------------------------------------------

எளியோருக்கான அழைப்பு !

"பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" என்னும் இயேசுவின் அழைப்பு அனைவருக்குமானது. சமயம் கடந்த, கத்தோலி;க்க அழைப்பு. அந்த அழைப்புக்காக நன்றி கூறுவோம்.

நாம் வாழும் இன்றைய நாள்கள் மன அழுத்தம், உளைச்சல், அமைதியின்மை நிறைந்த நாள்கள். செல்வமும், வசதியும் பெருகினாலும், அமைதியின்றி, மனதில் பாரத்துடன் வாழ்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

இந்தச் சூழ்நிலையில் இயேசுவின் அழைப்பு பொருள் நிறைந்த ஒன்று. நமது கவலைகள், கலக்கங்கள், சுமைகள் அனைத்தையும் இயேசுவின் பாதத்தில் இறக்கி வைப்போமா?

அத்துடன், இயேசுவின் சீடர்களான நாம், அவரைப்போல இந்த அழைப்பை நமது அயலாருக்கு விடுத்தால் என்ன? நமக்கு அறிமுகமான, அருகில் வாழ்வோரின் சுமைகளை நாம் அறிவோம். நம்மால் இயன்ற அளவு அவர்களின் சுமைகளைக் குறைக்க, ஆறுதல் அளிக்க முயன்றால் என்ன?

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, எங்கள் சுமைகளைத் தாங்கிக்கொள்வதற்காக நன்றி கூறுகிறோம். நாங்களும் பிறரின் சுமைகளைத் தாங்க முன்வரும் தாராள உள்ளத்தைத் தாரும், ஆமென்.

அருள்பணி. குமார்ராஜா

 

எசாயாவின் திருப்பாடல் ! (முதல் வாசகம்)

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இன்றைய முதல் வாசகப் பகுதி ‘எசாயாவின் திருப்பாடல்’ என்று அழைக்கப்படுகிறது. திருப்பாடல்களில் காணக் கிடக்கும் உள்ளத்து உணர்வுகளை இந்தப் பகுதி பிரதிபலிப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. “உமது திருப்பெயரும், உமது நினைவும் எங்களுக்கு இன்பமாய் உள்ளன. என் நெஞ்சம் இரவில் உம்மை நாடுகின்றது. எனக்குள்ளிருக்கும் ஆவி ஏக்கத்தோடு உம்மைத் தேடுகின்றது” என்னும் வரிகள் மனித இதயங்களின் ஏக்கத்தை நன்கு வெளிப்படுத்துகின்றன. அத்துடன், துயர வேளையில் இறைவனிடம் அடைக்கலம்  புகுந்து, ஆறுதல் தேடும் வகையிலும் அதன் இறுதிப் பகுதி அமைந்திருக்கின்றது. எசாயாவின் இத்திருப்பாடலையே நம் வாழ்வின் பாடலாக, உணர்வுகளாக மாற்றுவோம். அவரையே ஆர்வமுடன் நாடுவோம். துன்ப வேளைகளில் அவரிடம் அடைக்கலம் புகுவோம்.

மன்றாடுவோம்: எங்களின் இதயங்களின் ஏக்கமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலக இன்பங்களுக்காக, செல்வத்துக்காக நாங்கள் ஏங்காமல், உம்மையே ஆவலுடன் எதிர்நோக்கும் அருளைத் தாரும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

--------------------------------

 

நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளம் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று இயேசுவே கூறிய இன்றைய நற்செய்தி. என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார் ஆண்டவர் இயேசு. துன்பமே இல்லாத வாழ்வை, சிலுவைகளே இல்லாத பயணத்தை, முட்களே இல்லாத வழித்தடத்தை இயேசு வாக்களிக்கவில்லை. ஒரு சில மந்திரவாதிகளும், போலி இறைவாக்கினர்களும்தான் இத்தகைய போலி வாக்குறுதிகளை வழங்குகின்றனர். ஆனால், இயேசு அப்படிப்பட்ட போலி வாக்குறுதி எதையும் தரவில்லை. மாறாக, என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள், உங்கள் சிலுவையைச் சுமந்துகொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார். ஆனால், இயேசு வேறொரு வாக்குறுதியை நமக்குத் தந்துள்ளார். என் நுகம் அழுத்தாது. என் சுமை எளிதாயுள்ளது என்பதுதான் அது. என் நுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால், அது உங்களை அழுத்தாது என்பதுதான் இயேசுவின் அழைப்பு.

எனவே, நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் நுகங்களாகிய துன்பங்கள், நோய்கள், அறைகூவல்கள், தோல்விகள் ஆகியவற்றை இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்வோம். அப்போது அவை எளிதானவையாக மாறும்.

மன்றாடுவோம்: இளைப்பாறுதல் தரும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். எனது வாழ்வின் நுகங்களை முறுமுறுக்காமல் ஏற்றுக்கொள்ளவும், அவற்றை உமது அருளால் எளிதாகச் சுமக்கவும் அருள் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

 

''இயேசு, 'பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்,
நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்' என்றார்'' (மத்தேயு 11:28)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட ஞானத்தைத் தம் சீடர்களோடு பகிர்ந்துகொள்கிறார். அவர் கடவுளோடு நெருங்கிய உறவு கொண்டிருந்ததால் கடவுளை நமக்கு வெளிப்படுத்துகிறார். கடவுளறிவை நாம் இயேசு வழியாகப் பெற்றுக்கொள்கிறோம். இந்த அறிவை நமக்கு அளிக்க விரும்புகின்ற இயேசு நம்மைப் பார்த்து, ''பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள்'' என அன்போடும் கரிசனையோடும் அழைக்கின்றார். சீராக் நூலில் இத்தகையதோர் அழைப்பு உளது. கடவுளைப் பற்றி ஆழ்ந்த அறிவைப் பெற நம்மை ஞானம் அழைக்கின்றது: ''என் அருகே வாருங்கள்; நற்பயிற்சியின் இல்லத்தில் தங்குங்கள்'' (சீராக் 51:23). இயேசு கடவுளின் ஞானம் என்பதால் அவரை அணுகிச் செல்வோருக்குக் கடவுளறிவு கிடைக்கும். அது பெரும் சுமையாக இராது. இயேசுவின் காலத்தில் மறைநூல் அறிஞர் போன்றோர் மக்களின் தோள்களில் பெருஞ்சுமைகளை ஏற்றிவிட்டிருந்தனர். சட்டம் என்பது தாங்கவியலா சுமையாயிற்று. ஆனால் இயேசுவின் போதனை என்னும் நுகம் எளிதானது, இனிமையானது. இயேசு நமக்கு இளைப்பாறுதல் தருகின்றார். ஓய்வு நாள் என்பதன் உண்மைப் பொருளை இயேசு நமக்கு உணர்த்துகிறார். கடவுள் பற்றிய அறிவைப் பெற்று, கடவுளின் இதயத்தில் நாம் ஓய்வு கொள்வதே இயேசு நமக்கு வாக்களிக்கின்ற இளைப்பாறுதல்.

-- மனிதர் தாங்கவியலா சுமைகள் பலவற்றைச் சுமக்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதுண்டு. இயற்கைச் சீற்றத்தால் ஏற்படுகின்ற அழிவுகள் ஒருபுறம், மனிதர் மனிதப்பண்பின்றி நடந்துகொள்வதால் ஏற்படுகின்ற சுமைகள் மறுபுறம் என்று நம்மை வாட்டுகின்ற சுமைகளின் பளுவைக் குறைக்க இயேசு வருகிறார். அவரோடு சேர்ந்து நாமும் சிலுவையைச் சுமந்தால் அது இனிய சுமையாக மாறிவிடும். ஓய்வில்லாத இதயத்தை நமக்குத் தந்த கடவுள் நாம் அவரிடத்தில் ஓய்வுபெற வேண்டும் என்றே நம்மைப் படைத்துள்ளார் என தூய அகுஸ்தீன் அழகாகக் கூறுகிறார். இயேசுவை நாம் அணுகிச் சென்றால் நம் சுமைகள் எளிதாகிவிடும்; நம் உள்ளமும் ஆறுதலைக் கண்டடையும்.

மன்றாட்டு
இறைவா, இயேசுவிடத்தில் துலங்கிய கனிவும் பணிவும் எங்கள் வாழ்வில் ஒளிர்ந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

;