இரண்டாம் ஆண்டு
பொதுக்காலம் 16 வாரம் வியாழன்
------------------------ மிகவும் முக்கியமான நபராக(VIP) நீங்கள் மாறலாம்… நாம் அனைவரும் நன்கு அறிந்தபடி, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து உவமைகள் வாயிலாக போதித்தார். அவர் போதனைகள் அனைத்தும் நம்மை செதுக்கி சீராக்கி நல்வாழ்விற்கு இட்டுச்செல்ல. நம் உடலில் அழுக்குகள், ஆபத்துக்கள் வந்து சேராமல் அணை போட வேண்டும் என்பதற்காக. மிகவும் குறிப்பாக நம் உடலிலுள்ள மூன்று உறுப்புகளில் அழுக்குகள் வந்து சேராமல் நாம் கருத்தாய் கவனமாய் இருந்தோம் என்றால் நம் வாழ்க்கையில் மகிழ்ச்சி, ஆர்ப்ரிப்பு, ஆனந்தம் வந்து சேர்ந்துக்கொண்டே இருக்கும். மிகவும் முக்கியமான நபராக(VIP) நாம் மாறலாம். கண், காது மற்றும் இதயம் இந்த மூன்றையும் பயன்படுத்தி மிகவும் முக்கியமான மனிதராக நாம் மாறலாம். ஒவ்வொன்றின் படைப்பின் முக்கிய அர்த்தத்தை உணர்ந்து பயன்படுத்தினால் அதன் பலன் நமக்கு பல மடங்கு கிடைக்கும். 1. ஆற்றல் நிறைந்த கண்கள் 2. அருள் நிறைந்த காதுகள் 3. ஆசீர்வதிக்கப்பட்ட இதயம் மனதில் கேட்க… மனதில் பதிக்க… எரேமியா 2: 1 – 3, 7 – 8, 12 – 13 "இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது" என்று இறைவன், இறைவாக்கினர் வழியாக மக்களுக்கு நினைவுறுத்துகிறார். அர்ப்பணம் என்றால் என்ன? இதைச்செய்தால் இது கிடைக்கும் என்று எதிர்பார்த்துச் செயவது சுயநலம். எதிர்பார்ப்பில்லாமல் செய்வது அர்ப்பணம். அர்ப்பணம் என்பது தன்னையே இழப்பது, தன் வாழ்வை இழப்பது, தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் மற்றவர் வாழ்விற்காக தியாகம் செய்வது. அது இழப்பதில் வருத்தப்படுவது கிடையாது. மாறாக, மகிழ்ச்சியடைகிறது. எங்கே அர்ப்பணம் இருக்கிறதோ அங்கே கடவுள் நம்பிக்கை இருக்கிறது. எங்கே அர்ப்பணம் இருக்கிறதோ அங்கே இறையனுபவம் இருக்கிறது. ஆக, எதிர்பார்ப்பு இல்லாமல், இறைவனுக்காக, மக்களுக்காக வாழ்வையே இழக்கக்கூடிய, இழப்பதிலும் மகிழ்ச்சி அடையக்கூடிய தியாகம் தான் அர்ப்பணம். இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்று சொல்லும்போது, மேற்சொன்ன அனைத்துமே அவர்களுக்கு பொருந்துவதாக இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இதிலிருந்து வெளியே வருவதற்கு ஆசைப்பட்டனர். எனவே, கடவுள் இறைவாக்கினர் வழியாக அவர்களுக்கு நினைவூட்டல் செய்கிறார். இஸ்ரயேல் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றால், இறைவனுடைய மீட்புத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது பொருளாகும். இறைவன் இஸ்ரயேல் மக்களை அவர்களுடைய சுயநலத்திற்காக தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, இந்த உலகத்திற்கு மீட்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்தார். உலகத்திலிருக்கிற அனைவரும் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக அவர்களைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், இஸ்ரயேல் மக்களோ, அர்ப்பணம் என்பது தங்களது வளர்ச்சிக்காக என்கிற சுயநலப்போக்கில் சிந்திக்க ஆரம்பித்தனர். விளைவு, பாவங்களைச் செய்யத் தொடங்கினர். தங்கள் வாழ்வில் கடவுளை விட்டு விலகத்தொடங்கினர். இறைவன் அவர்களை மீண்டுமாக அர்ப்பண வாழ்வு வாழ்வதற்கு அழைப்புவிடுக்கிறார். நாம் அனைவருமே இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்கள். இந்த உலகத்தில் நம்மால் இயன்றதைச் செய்து, சுயநலம் இல்லாமல் மகிழ்ச்சியான வாழ்விற்கும், மற்றவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பதற்கும் அழைக்கப்பெற்றவர்கள். அதனை நம்முடைய எண்ணத்தில் பதித்து, நாம் எப்போதும் இறைவனுடைய பிள்ளைகளாக வாழ, இறையருள் வேண்டி மன்றாடுவோம். இயேசுவுடனான நெருக்கம் இயேசுவோடு நெருங்கியிருப்பது, இணைந்திருப்பது எந்த அளவுக்கு, நமது வாழ்வை பக்குவப்படுத்தக்கூடிய அனுபவமாக இருக்கிறது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தான், இன்றைய நற்செய்தி வாசகம். சீடர்கள் சாதாரணமானவர்கள். அறிவிலோ, திறமையிலோ சிறந்தவர்கள் அல்ல. சாதாரணமான பாமரரர்கள். அவர்கள் பல இடங்களுக்குச் சென்று மிகத்திறமையாகப் போதிக்கிறார்கள். பல சவால்களையும், சங்கடங்களையும் துணிவோடு எதிர்கொள்கிறார்கள். இந்த அளவுக்கு அவர்களைப் பக்குவப்படுத்தியது எது? என்று பார்க்கிறபோது, இயேசுவோடு இருந்த நெருக்கம் தான் அது. வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய சவால்கள் எளிதானது அல்ல. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வாழ்க்கைச்சூழல். அவர்கள் சந்திக்கும் சவால்களும் தனித்துவம் வாய்ந்தவை. யாரும், மற்றவருடைய பிரச்சனைகளுக்கு அவரவர் அனுபவத்தைக்கொண்டு தீர்வு காண முடியாது. குறைந்தபட்ச ஆலோசனைகளை மட்டுமே சொல்ல முடியும். ஆனால், எந்த பிரச்சனைகள் வந்தாலும், நாம் இயேசுவோடு நெருங்கியிருக்கிறபோது, கண்டிப்பாக நம்மால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வாழ்வை மகிழ்வோடு நகர்த்த முடியும். நமது வாழ்வில் இயேசுவோடு இணைந்திருப்பதற்கு முயற்சி எடுப்போம். நமது வாழ்வின் பாதிக்கும் மேற்பட்ட பிரச்சனைகளுக்கு அது தீர்வாக அமையும். இயேசுவோடு சீடர்கள் கொண்டிருந்த நெருக்கத்தை நாமும் கொண்டிருப்போம். அது நம்மை வழிநடத்தும் நமக்கு சிறந்த வாழ்வை வாழ முன்னுதாரணமாய் இருக்கும்.
-------------------------------------------------------- இறைவார்த்தையை அறிந்து கொள்ள….. இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கக்கேட்ட பகுதி விளக்குவதற்கும், புரிந்து கொள்வதற்கும் கடினமான பகுதியாகும். இந்த செய்தி, ஒவ்வொரு நற்செய்தியிலும் வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது என்பதிலிருந்து, தொடக்க கால கிறிஸ்தவர்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள எந்த அளவுக்கு கடினப்பட்டிருப்பார்கள் என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடியும். இயேசு எப்போதுமே, தன்னுடைய போதனை மக்களுக்குப் புரியக்கூடாது என்ற எண்ணத்தோடு போதிக்கவில்லை. அவர்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொண்டு தங்களது வாழ்வை மாற்ற வேண்டும் என்றுதான் அவர் விரும்பினார். அதனால்தான், பாமரர்களும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எளிமையாகப் போதித்தார். உண்மையை மறைப்பதற்காக அல்ல, உண்மையை வெளிப்படுத்துவதற்காகவே இயேசு இந்த உலகத்திற்கு வந்தார். ஆனால், கேட்பவர்கள் தெளிந்த பார்வையோடு, ஆர்வத்தோடு, நேர்மையான உள்ளத்தோடு தேடவில்லையென்றால், அவர்களால் மறைபொருளை புரிந்து கொள்ள முடியாது என்பதுதான் இயேசுவின் வாதம். கடவுளின் வார்த்தையைக்கேட்பதற்கு நேர்மையான உள்ளம் தேவை. அப்படியில்லையென்றால், நம்மால் இறைவார்த்தையின் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியாது. ஆர்வமும், இறைவார்த்தையைப்பற்றிய தாகமும் நமக்கு இருந்தால், நிச்சயம் நம்மால் இறைவார்த்தையின் பொருளை அறிந்து கொள்ள முடியும்.
-------------------------------------------------------- உண்மையான தேடல் மறைபொருள்(Mystery) என்கிற வார்த்தையின் பொருள் இங்கே கவனிக்கப்படத்தக்க ஒன்று. மறைபொருள் என்கிற வார்த்தையின் பொதுவான பொருள்: புரிந்து கொள்ள முடியாதது, புரிந்து கொள்வதற்கு வெகு கடினமானது. ஆனால், புதிய ஏற்பாட்டில் “மறைபொருள்“ என்கிற வார்த்தை பயன்படுத்தப்படுகின்ற அர்த்தம் சற்று வேறுபாடானது. மறைபொருள் என்பது குறிப்பிட்ட சிலருக்கு புரிந்து கொள்ளக்கூடியதும், சிலருக்கு புரிந்து கொள்ள இயலாததுமானதாகும். இந்த அர்த்தத்தில்தான் இங்கே பயன்படுத்தப்படுகிறது. யாருக்கு புரிந்து கொள்ள முடியும்? யாருக்கு புரிந்து கொள்ள முடியாது? தேடல் உள்ளவர்களுக்கு புரிந்து கொள்ள முடியும். தேடல் இல்லாதவர்களுக்கு புரிந்து கொள்ள முடியாது. வாழ்வு என்பது ஒரு தேடல். ஒவ்வொரு நிமிடமும் நாம் தேடிக்கொண்டே இருக்கிறோம். தேடிக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், எல்லாரும் இந்த தேடலில் ஈடுபடுகிறார்களா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறியே. இறையாட்சியைப்பற்றிய தேடல் உள்ளவர்களுக்கு இயேசு சொல்வதை நிச்சயம் புரிந்து கொள்ள முடியும். இறையாட்சியைப்பற்றிய கவலை இல்லாதவர்களுக்கு அதைப்பற்றிய புரிதல் நிச்சயம் இருக்க முடியாது. இயேசுவின் சீடர்கள் இயேசுவோடு இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு கிடைக்காத பாக்கியம் சீடர்களுக்கு கிடைத்திருக்கிறது. இயேசுவோடு இணைந்து தேடுவதுதான் அந்த பாக்கியம். அந்த தேடலில் இயேசுவின் உதவியும் அவர்களுக்கு இருக்கும் என்பது அதை விட சிறப்பு. அதைப்புரிந்து கொண்டு அவர்கள் வாழ்வின் தேடலில் இன்னும் அதிக அக்கறையோடு ஈடுபட வேண்டும் என்பது, இயேசு அவர்களுக்கு உணர்த்தும் செய்தி. இறைத்துணை என்றும் நம்மோடு நமக்கு உதவி செய்வதற்கு காத்துக்கொண்டிருக்கிறது. அந்த உதவியோடு நமது வாழ்வின் இறையாட்சியைப்பற்றி தேடலில் முழுமையாக ஈடுபடுவோம். தேடல் என்பது எளிதானது அல்ல. ஆனால், உண்மையான முயற்சி செய்யும்போது, அது கடினமானதும் அல்ல. உண்மையான முயற்சியோடு ஆண்டவரைத்தேடுவோம்.
-------------------------------------------------------- பார்வை பெறவேண்டும் !இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, கண்களால் பார்த்தும், உண்மையைக் கண்டுகொள்ளாதவர்கள்பற்றி இறைவாக்கினர் எசாயாவை மேற்கோள் காட்டி இயேசு கூறுகிறார்; இவர்கள் தம் கண்களை மூடிக்கொண்டார்கள். எனவே, கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறாமலும் இருக்கின்றார்கள். பார்க்க விரும்புகிறவர்கள் இறைவனின் இரக்கப் பெருக்கை வாழ்வின் எந்த நிகழ்விலும் பார்க்க முடியும். கண்களை மூடிக்கொள்பவர்கள் இறைவனின் பேரன்பை எந்த நிகழ்விலும் காண முடியாது. இது மனம் மாறாத தன்மை என்கிறார் ஆண்டவர். பார்க்க இயலாததும், பார்க்க மறுப்பதும் பாவம். நாம் மனம் மாறவேண்டும். கண்களை அகலத் திறந்து இறைவனின் இருத்தலை ஒவ்வொரு நிகழ்விலும் பார்க்கத் துணிவோமாக!
மன்றாடுவோம்; பார்வையின் ஒளியே இயேசுவே, நீரே எமது ஒளி, நீரே எமது, நீரே எமது வாழ்வு. உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நீர் எங்களோடு இருக்கிறீர், உரையாடுகிறீர் என்று காண, உணர, அனுபவிக்க எங்களுக்குப் புதிய பார்வையைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். -- அருட்தந்தை குமார்ராஜா ''இயேசு சீடர்களிடம், 'விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் அன்பார்ந்த இணையதள நண்பர்களே! -- ''விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார்'' எனத் தொடங்கி, இயேசு இயேசு மக்களுக்கு ஒரு கதை சொன்னார் (மத் 13:1-9). அக்கதையின் பொருள் யாது என சீடருக்கு உடனடியாக விளங்கவும் இல்லை; இயேசு ஏன் கதைகள் வழியாகப் பேசுகிறார் என அறியவும் அவர்களுக்கு ஆசை. அப்போது சீடர்கள் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் என இயேசு கூறுகிறார்: ''விண்ணரசின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்துவைத்திருக்கிறது'' (மத் 13:11). அப்படியென்றால், ஒருசிலர் இயேசுவின் செய்தியைப் புரிந்துகொள்வார்கள் எனவும் வேறுசிலர் அதைப் புரிந்துகொள்ளமாட்டார்கள் எனவும் நாம் முடிவுசெய்யலாம். இது ஒவ்வொரு மனிதரும் திறந்த உள்ளத்தோடு இயேசுவை அணுக வேண்டும் என்னும் உண்மையை நமக்கு உணர்த்துகிறது. நம் உள்ளத்தைக் கடினப்படுத்திக் கொண்டு, உண்மையை ஏற்க நாம் மறுத்தால் இயேசுவின் செய்தி நம் காதுகளில் விழாமலே போய்விடும். அப்படியே அச்செய்தியை நாம் கேட்டாலும் அதன் உண்மைப் பொருள் நம் இதயத்தைத் தொட்டு நம்மை மாற்றாது. அதுபோலவே, நம் சொந்தக் கருத்துக்களை விடாது பிடித்துக்கொண்டு, அவற்றின் அடிப்படையில் நாம் கடவுளின் வெளிப்பாட்டை மதிப்பிடுவதாக இருந்தால் நாம் உண்மையைக் கண்டுகொள்ளத் தவறிவிடுவோம். -- இயேசு அறிவிக்கின்ற செய்தியை ஏற்றிட நாம் திறந்த மனமும் இதயமும் கொண்டிருக்க வேண்டும். இயேசுவை முழு மனத்தோடு பின்செல்கின்ற விருப்பம் நம்மிடம் இருக்க வேண்டும். என்றாலும், யார் கடவுளின் சொல்லைக் கேட்டு அதன்படி நடப்பார் என்பது முன்கூட்டியே குறித்தாயிற்று எனவும், விதியை நாம் மாற்ற இயலாது எனவும் முடிவுசெய்வது தவறு. ஏனென்றால், கடவுள் நமக்குச் சுதந்திரத்தைத் தந்திருக்கிறார். நாம் மனதார அவரை ஏற்று, அவருடைய குரலுக்குச் செவிமடுத்து நம் வாழ்க்கையை வடிவமைக்க வேண்டும் என்பதே அவர் விருப்பம். எனவே, கடவுள் நம் வாழ்க்கை முழுவதையும் நம் திட்டங்களையும் முன்கூட்டியே அறிவார் என்றாலும் நமது கதியை நிர்ணயிக்கும் பொறுப்பு நம் கைகளிலேயே உள்ளது. இது நம் அறிவுக்கு முழுமையாக எட்டுகின்ற ஓர் எதார்த்தம் அல்ல. ஆனால், நாம் பொறுப்போடும் சுதந்திரத்தோடும் செயல்பட வேண்டும் என்பதே கடவுளின் விருப்பம். அவர் தருகின்ற அருளை நாம் நன்றியோடு ஏற்று, அவரோடு ஒத்துழைத்தால் நம் வாழ்க்கைக் குறிக்கோளை அடைவோம். அதுவே நம் கடவுளின் அன்புத் திட்டம். மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல் "உங்கள் கண்களோ பேறுபெற்றவை; ஏனெனில் அவை காண்கின்றன" (மத்தேயு 13:16) அன்பார்ந்த இணையதள நண்பர்களே! -- இயேசுவோடு நெருங்கிப் பழகியவர்கள் பேதுரு முதலிய பன்னிரு திருத்தூதர்கள், மற்றும் மரியா, மார்த்தா போன்ற சீடர்கள். இவர்களுடைய கண்கள் பேறுபெற்றவை என இயேசு கூறியது எதற்காக? இங்கே இயேசு தம் சீடரின் புறக்கண்கள் பற்றி மட்டும் பேசவில்லை, அவர்களுடைய அகக்கண்கள் பற்றிப் பேசுகிறார். இயேசுவின் போதனையைக் கேட்ட மனிதர் நூற்றுக் கணக்கில் இருந்தனர்; அவர் ஆற்றிய அரும் செயல்களைக் கண்டவர்கள் ஆயிரக் கணக்கில் இருந்தனர். ஆனால் இயேசுவைக் கண்டு, அவர் பேசியதைக் கேட்ட எல்லா மனிதரும் அவர் யார் என்பதைப் புரிந்துகொள்ளவில்லை. அவருடைய சீடர்கள்தான் அவர் யார் என்பதைத் தெரிந்துகொண்டார்கள். அவர்கள்கூட பல தடவைகளில் இயேசுவின் சொற்களை முற்றிலுமாக நம்பிடவில்லை. இயேசு அவர்களிடத்தில் நம்பிக்கை இல்லை என்று அவர்களைக் கடிந்துகொண்டதும் உண்டு. -- ஆனால், சீடர்கள் இயேசு யார் என்பதைப் படிப்படியாகக் கண்டுணர்ந்தனர். இயேசு கடவுளிடமிருந்து வந்தவர் என்றும், கடவுளின் ஆட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்து, இறைவாழ்வில் நாம் பங்குபெய இயேசு சிலுவையில் இறந்து நமக்காகப் புத்துயிர் பெற்று எழுந்தார் என்றும் சீடர்கள் தம் இதய ஆழத்தில் உணர்ந்தனர். இத்தகைய அறிவை அவர்கள் பெறுவதற்குத் தூய ஆவியின் துணை அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆவி உயிர்த்தெழுந்த இயேசுவின் உடனிருப்பே. எனவே, சீடர்களின் கண்கள் பேறுபெற்றவை, ஏனெனில் அவை இயேசு பற்றிய உண்மையைக் கண்டுகொண்டன. இன்று வாழ்கின்ற சீடராகிய நாமும் இயேசு யார் என்பதைக் கண்டுகொள்ள அழைக்கப்படுகிறோம். நம்பிக்கையோடு நாம் அவரை அணுகிச் சென்றால் அவரை நாம் அடையாளம் கண்டுகொள்வோம். அப்போது நாமும் உண்மையிலேயே பேறுபெற்றவர்கள் ஆவோம். மன்றாட்டு
--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்; இவர்களும் பார்வையற்றவர்களே! அன்பார்ந்த இணையதள நண்பர்களே! இன்று மனிதனின் பார்வை மங்கிவிட்டது. காது கேட்பது மந்தமாகிவிட்டது. அறிவு அற்பமாகிவிட்டது. இதயம் கல்லாகிவிட்டது. ஆன்மீகம் அஸ்தமனம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது.
--அருட்திரு ஜோசப் லீயோன் |