முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 3: 14-17


மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்; ஏனெனில், நானே உங்கள் தலைவன்; நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு இருவரையுமாகத் தெரிந்தெடுத்து உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன். என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள். நீங்கள் நாட்டில் பல்கிப் பெருகும் அக்காலத்தில் யாரும் ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழை பற்றியே பேசமாட்டார்கள். அது அவர்கள் எண்ணத்திலோ நினைவிலோ இராது. அது இல்லை என்று வருந்தி இனி ஒன்றும் செய்யமாட்டார்கள், என்கிறார் ஆண்டவர். அக்காலத்தில் எருசலேமை `ஆண்டவரின் அரியணை' என அழைப்பார்கள். ஆண்டவரின் பெயரை முன்னிட்டு எல்லா மக்களினத்தாரும் எருசலேமில் வந்து கூடுவர். தங்கள் தீய இதயப் பிடிவாதத்தின்படி இனி நடக்க மாட்டார்கள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

எரே 31: 10. 11-12. 13

பல்லவி: ஆயர் தம் மந்தையைக் காப்பது போல் ஆண்டவர் நம்மைக் காத்திடுவார்.

10 மக்களினத்தாரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;
தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்;
`இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்;
ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள். -பல்லவி

11 யாக்கோபை ஆண்டவர் மீட்டார்; அவனிலும் வலியவன் கையினின்று அவனை விடுவித்தார்.
12 அவர்கள் வந்து சீயோனின் உச்சியில் பாடி மகிழ்வார்கள்;
தானியம், திராட்சை இரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள்,
கன்றுகாலிகள், ஆகிய ஆண்டவரின் கொடைகளை முன்னிட்டுப் பூரிப்படைவார்கள்;
அவர்களது வாழ்க்கை நீர்வளம் மிக்க தோட்டம் போல் இருக்கும். -பல்லவி

13 அப்பொழுது கன்னிப் பெண்கள் நடனம் ஆடிக் களித்திருப்பர்;
அவ்வாறே இளைஞரும் முதியோரும் மகிழ்ந்திருப்பர்;
அவர்களுடைய அழுகையை நான் மகிழ்ச்சியாக மாற்றுவேன்;
அவர்களுக்கு ஆறுதல் அளிப்பேன்; துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை அருள்வேன். -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர் பேறுபெற்றோர். அல்லேலூயா.

மத்தேயு 13:18-23

பொதுக்காலம் 16 வாரம் வெள்ளி

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 18-23


அக்காலத்தில் இயேசு தம் சீடருக்குக் கூறியது: ``விதைப்பவர் உவமையைப் பற்றிக் கேளுங்கள்: வழியோரம் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறையாட்சியைக் குறித்த இறைவார்த்தையைக் கேட்டும் புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்கள் உள்ளத்தில் விதைக்கப்பட்ட விதைகளைத் தீயோன் கைப்பற்றிச் செல்வான். பாறைப் பகுதிகளில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டவுடன் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் வேரற்றவர்கள்.

எனவே அவர்கள் சிறிது காலமே நிலைத்திருப்பார்கள்; இறைவார்த்தையின் பொருட்டு வேதனையோ இன்னலோ நேர்ந்த உடனே தடுமாற்றம் அடைவார்கள். முட்செடிகளுக்கு இடையில் விழுந்த விதைகளுக்கு ஒப்பானோர் இறை வார்த்தையைக் கேட்டும் உலகக் கவலையும் செல்வ மாயையும் அவ்வார்த்தையை நெருக்கிவிடுவதால் பயன் அளிக்கமாட்டார்கள். நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர் இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

தேர்வில் வெற்றியா? மதிப்பெண் என்ன?
மத்தேயு 13:18-23

காலையில் கண்விழித்தது முதல் இரவு கண்களை மூடும் வரை இறைவார்த்தையானது நம் உள்ளத்திலே விதைக்கப்படுகிறது. அது பல வடிவங்களிலே விதைக்கப்படுகிறது. திருவிவியத்தைப் படிக்கும்போதும், அருட்தந்தையர்களின் மறையுரைகளைக் கேட்கும் போதும் ஒரு சில சான்றோர்கள் நம்மோடு உறவாடும் போதும் இறைவார்த்தையானது உள்ளத்திலே விதைக்கப்படுகிறது. விதைக்கப்பட்ட இறைவார்த்தையை எடுத்து அதை வாழ்ந்து காட்டுபவர்களை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவர்களின் மதிப்பெண்களையும் நாம் பார்க்கலாம்.

1. முப்பது மதிப்பெண்கள்
இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். ஆனால் கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை சாத்தான் அவர்களிடமிருந்து எடுத்துவிடுவதால் எல்லாமே இடையிலே முடிந்துவிடுகிறது. இவர்களின் மதிப்பெண்கள் முப்பது. தோல்வியடைகிறார்கள்.

2. அறுபது மதிப்பெண்கள்
இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். கடைப்பிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக உண்டு. ஒருசிலவற்றை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால் இடையில் சாத்தான் தொந்தரவு கொடுப்பதால் அவர்களால் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவதில்லை. இவர்களின் மதிப்பெண் அறுபது. ஏதோ தத்தி முத்தி வெற்றியடைந்து விடுகிறார்கள்.

3. நூறு மதிப்பெண்கள்
இவர்கள் இறைவார்த்தையை ஆர்வமாக கேட்கிறார்கள். கடைபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு. சாத்தானை வென்று விடுகிறார்கள். ஆகவே வெற்றியடைகிறார்கள். நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறுகிறார்கள். இவர்கள் தான் சாதிப்பவர்கள். இவர்கள் தான் கடவுளை நம்பினால் எப்படி வாழ்வும், மகிழ்ச்சியும் கிடைக்கும் என்பதை நிரூபிப்பவர்கள்.

மனதில் கேட்க…
• என் மதிப்பெண் என்ன? வெற்றியா? தோல்வியா?
• நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க முயற்சி எடுக்கலாமா?

மனதில் பதிக்க…
என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! (திபா 119:105)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எரேமியா 3: 14 – 17
இறைவன் காட்டும் அன்பு

மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள் என்று, ஆண்டவர் அழைப்புவிடுக்கின்றார். எங்கிருந்து திரும்பி வர வேண்டுமென்று அழைக்கிறார்? பாவ வழிகளிலிருந்து அவர்கள் திரும்பி வர வேண்டுமென்று அழைப்புவிடுக்கின்றார். உண்மையான கடவுளாகிய இஸ்ரயேலின் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அழைப்புவிடுக்கின்றார். நல்வாழ்வுக்கு, இறைவன் அவர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கிற விருந்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று அழைப்புவிடுக்கின்றார். இறைவனின் இந்த அழைப்பு பல அருமையான சிந்தனைகளை நமக்குத் தருகிறது.

முதலாவதாக, இறைவன் நம் மீது எத்துணை அன்பு வைத்திருக்கிறார் என்பது இங்கே புலப்படுகிறது. இறைவன் தன் மக்கள் மீது அதிகமான அன்பு வைத்திருக்கிறார். ஒரு தாய் தன் குழந்தையின் மீது வைத்திருக்கிற அன்பை யாராலும் சந்தேகிக்க முடியாது. அதற்கும் பல மடங்கு, கடவுள் தன் மக்கள் மீது அன்பு வைத்திருக்கிறார். அந்த அன்பு மேலோட்டமான அன்பு அல்ல. மற்றவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்கிற அன்பு அல்ல. மாறாக, தவறு செய்கிறபோது கண்டித்து திருத்துவதும், தண்டனைக்குப்பின் அழைப்பு கொடுத்து ஏற்றுக்கொள்வதுமான உண்மையான தாயன்பு. இரண்டாவதாக, தண்டனையில் அவர்கள் இருந்தாலும், அவர்களை எதிரிகளின் பிடியினின்று விடுவிக்கிறவராகவும் ஆண்டவர் இருக்கிறார். வெறுமனே அவர்களை விட்டுவிடவில்லை. மாறாக, அவர்களோடு இருக்கிறார். அவர்களை கண்ணின் கருவிழி போல பாதுகாத்து அரவணைக்கிறார்.

இறைவனுடைய இந்த அன்பை நாம் அனைவரும் பெற்றிருப்பதற்கு தவம் செய்திருக்க வேண்டும். அந்த இறைவனின் அன்பை நாம் உணரவில்லை என்றால், நமக்கு மன்னிப்பே கிடையாது. இறையன்பிலும், இறையருளிலும் நாம் ஆழமாக வேரூன்ற வரம் வேண்டி, மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இதயத்திற்கேற்ற மேய்ப்பர்கள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

“என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உங்களை அறிவுடனும், முன் மதியுடனும் வழிநடத்துவார்கள்â€? என்னும் எரேமியா இறைவாக்கினர் வழியாக வந்த வாக்குறுதியை இன்று தியானிப்போம். இறைவனின் வாக்குறுதிகளில் இது இனிமையானது. காரணம், நல்ல தலைவர்களை, மேய்ப்பர்களை, வழிகாட்டிகளைத் தருவதாக அவர் வாக்களிக்கின்றார். நடக்க வேண்டிய பாதையைக் காட்டி, அதில் தாமும் நடந்து, தம் பின்தொடர்பவர்களை வழிநடத்துபவர்தான் நல்ல மேய்ப்பர். அவர் அறிவுடனும், முன் மதியுடனும் மக்களை வழிநடத்த வேண்டும். காரணம், பல்வேறுவிதமான தீமைகளும், சிக்கல்களும் வழியில் காத்திருக்கின்றன.

இறைவன் அனுப்பிய மேய்ப்பர்கள் அனைவரிலும் இறைவனின் இதயத்துக்கேற்ற சிறந்த மேய்ப்பன் இயேசுதான். “நானே நல்ல ஆயன்â€? என்று அவரே கூறினார். இன்று அவரைப் போன்ற முன்மதி மிக்க, அறிவுத்திறனுடைய, குறிப்பாக இறைவார்த்தை அறிவும், ஞானமும் நிறைந்த நல்ல தலைவர்கள் திருச்சபைக்குத் தேவை. அதற்காக நாம் மன்றாடுவோம்.

மன்றாடுவோம்: நல்ல மேய்ப்பனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். இயேசு என்னும் நல்ல ஆயனைத் தந்ததற்காக நன்றி கூறுகிறோம். எங்கள் திருச்சபையை வழிநடத்த இறையறிவும், தூய ஆவியின் முன்மதியும் மிக்க நல்ல தலைவர்களை எங்களுக்குத் தந்தருள்வீராக.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

 

 

உலகக் கவலையும், செல்வ மாயையும் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

விதைப்பவன் உவமையைப் பலமுறை கேட்டுள்ளோம், சிந்தித்துள்ளோம். இன்று முட்செடிகளுக்கு நடுவே விழுந்த விதைகளைப் பற்றி மட்டும் சற்று சிந்திப்போம். நான்கு வகையான விதைகள். அவைகளுள் மூன்றாம் வகைதான் முட்செடிகள் நடுNவு விழுந்தவை. இவை இறைவார்த்தையை ஆர்வமுடன் கேட்டு, ஏற்றுக்கொள்பவர்களைக் குறிக்கிறது. ஏறக்குறைய நம்மைத்தான்!

அடிப்படையில், நாமெல்லோருமே இறைவார்த்தையிலும், ஆன்மீக வாழ்விலும் ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர்கள்தான். (இல்லாவிட்டால், இந்த இணைய தள சிந்தனைகளை நீங்கள் இந்நேரம் வாசித்துக்கொண்டிருக்க மாட்டீர்கள், இல்லையா?).

நம்மைப் போன்றவர்களுக்கு வருகின்ற சோதனைகளை ஆண்டவர் குறிப்பிட்டு எச்சரிக்கிறார். அவை; உலகக் கவலையும், செல்வ மாயையும். இவை இரண்டும் நமது இறைவார்த்தைத் தாகத்தையும், ஆன்மீக ஈடுபாட்டையும் நெருக்கிவிடுகின்றன என்கிறார் ஆண்டவர்.

உலகக் கவலை என்று தெளிவாகக் கூறுகிறார். அதாவது, எதை உண்பது, உடுப்பது, எங்கே வாழ்வது... போன்ற அன்றாடத் தேவைகள் பற்றி அளவுக்கதிகமான கவலை, அக்கறை. இரண்டாவது, செல்வ மாயை. பணம்தான் வாழ்வில் அனைத்தும் என்ற தவறான கொள்கை. இதனால், பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருந்து, வாழ்வின் இதர உறவுகளையும், மதிப்பீடுகளையும் இழந்துவிடுவது.

எனவே, நமது உலகக் கவலைகளையும், செல்வத்தின்மீது கொள்ளும் அதிக ஈடுபாட்டையும் குறைத்துக்கொண்டால், இறைவார்த்தை நம்மில் வளர்ந்து நிறைவான பலன் கொடுக்கும்.

மன்றாடுவோம்; வார்த்தையான இறைவா,  உம்மைப் போற்றுகிறேன். இன்று தந்த இனிய வார்த்தைகளுக்காக நன்றி. நாள்தோறும் இறைவார்த்தையை வாசிக்கும், கேட்கும் நான் அதிக பலன் தராமல் போவதற்குக் காரணமான உலகக் கவலைகள் மற்றும் செல்வ மாயைக்காக மனம் வருந்துகிறேன். என்னை மன்னியும். என்னைத் தூய்மைப்படுத்தி உம்மையே பற்றிக்கொண்டு நிறைவாக வாழ அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

''இயேசு, 'நல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதைகளுக்கு ஒப்பானோர்
இறைவார்த்தையைக் கேட்டுப் புரிந்துகொள்வார்கள். இவர்களுள் சிலர் நூறு மடங்காகவும்,
சிலர் அறுபது மடங்காகவும் சிலர் முப்பது மடங்காகவும் பயன் அளிப்பர்' என்றார்'' (மத்தேயு 13:23)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இறையாட்சி பற்றிய நற்செய்தியை அறிவித்த இயேசு உவமைகள் வழி மக்களுக்குப் போதித்தார். இந்த உவமைகள் தனித்தன்மை வாய்ந்த கதைகள். அவை பொதுவாக மக்களைச் சிந்திக்கத் தூண்டுகின்ற பண்புடையவை. இயேசுவின் உவமைகளைக் கேட்ட மக்கள் கடவுளின் வார்த்தையை ஏற்று, அது விடுக்கும் சவாலுக்குப் பதிலளிக்க அழைக்கப்பட்டார்கள். பொதுவாக இயேசு உவமைகளை விளக்கி, அவற்றின் பொருள் இதுதான் என்று கூறுவதில்லை. நற்செய்தி நூல்களில் இரு உவமைகளுக்கு மட்டுமே இயேசு விளக்கம் அளித்தார். அவை விதைப்பவர் பற்றிய உவமையும் (மத் 13-19), வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமையும் ஆகும் (மத் 13:36-43). இந்த விளக்கங்கள் இயேசுவால் நேரடியாக வழங்கப்பட்டன என்பதைவிட, தொடக்க காலத் திருச்சபை இயேசுவின் உவமைகளை எவ்வாறு புரிந்துகொண்டது என்பதையே காட்டுகின்றன என அறிஞர் கருதுகின்றனர்.

-- உவமையில் வருகின்ற நிலங்கள் நான்கு வகை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பண்பு கொண்டவை. வழியோரப் பகுதி, பாறைப் பகுதி, முட்செடிப் பகுதி, நல்ல நிலம் என நான்கு வகை நிலங்களும் விவரிக்கப்படுகின்றன. இறைவார்த்தையைக் கேட்கின்ற மனிதர்கள் எல்லாருமே முழு மனத்தோடு அதைக் கேட்டு, உள்ளத்தில் ஏற்று, அதன்படி செயல்பட முன்வருவதில்லை என இந்த உவமை காட்டுகிறது. நல்ல நிலம் என்றால் என்ன? நம்மைத் தேடி வருகின்ற இறைவார்த்தையை நாம் ஏற்க முன்வர வேண்டும் (வழியோரப் பகுதி). இறைவார்த்தை நம்மில் ஆழமாக வேரூயஅp;ன்றி உறுதியாக நிலைக்க வேண்டும் (பாறைப் பகுதி). கடவுளிடமிருந்து நம்மைப் பிரிக்கின்ற உலகக் கவலை மற்றும் செல்வ மாயைகளுக்கு இடம் கொடாமல் இறைவார்த்தையைக் காத்திட வேண்டும் (முட்செடிப் பகுதி). இவ்வாறு செயல்படுவோர் பண்பட்ட, நல்ல நிலமாக இருந்து இறைவார்த்தை என்னும் விதையைத் தம்முள் ஏற்பார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் இறைவார்த்தை வேரூயஅp;ன்றி வளரும்; சுவைமிகுந்த கனியைக் கொடுக்கும். நாம் நல்ல நிலமாக விளங்க வேண்டும் என்றால் நம் இதயம் பண்பட வேண்டும்; நம் சிந்தனைகள் கடவுளின் எண்ணத்தைப் பிரதிபலிக்க வேண்டும்; நம் உணர்வுகள் கடவுளின் விருப்பத்திற்கேற்ப நெகிழ்ச்சி பெற வேண்டும்; நம் செயல்கள் அவருடைய திட்டப்படி வடிவம் ஏற்க வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் வார்த்தையை ஏற்க எங்கள் உள்ளத்தைப் பண்படுத்தியருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்