முதல் வாசகம் மத்தேயு 13:36-43 பொதுக்காலம் 17 வாரம் செவ்வாய்
------------------------ எது வேண்டும்: அங்கலாய்ப்பா? ஆசீர்வாதமா? "விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே! உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக!. உமது ஆட்சி வருக!" என நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து ஜெபித்தார். தந்தையின் ஆட்சியை இம்மண்ணுலகில் நிறுவுவதே இயேசுவின் திருவுளம். தந்தையின் ஆட்சிக்கு யாரெல்லாம் உதவி செய்கிறார்களோ அவர்கள் இயேசுவிடம் இருந்து பாராட்டு பெறுவர். யாரெல்லாம் இடறலாக இருக்கிறார்களோ அவர்கள் தண்டனை பெறுவர். அங்கலாய்ப்பா? ஆசீர்வாதமா? மனதில் கேட்க… மனதில் பதிக்க… எரேமியா 14: 17 – 22 இறைவன் தன் மக்களுடைய கண்ணீரையும், துன்பங்களையும் கண்டு மனமிரங்குகிறவராக இன்றைய வாசகத்தில் நமக்கு அறிவிக்கப்படுகிறார். இஸ்ரயேல் மக்கள் தங்கள் தவறான வாழ்க்கை முறையிலிருந்து திருந்தி வர பல வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றன. அவை யாவும் அவர்களால் நிராகரிக்கப்படுகிறது. அவர்களது வாழ்க்கை முறை மிக மோசமான நிலையை அடைகிறது. அவர்களுக்கான தண்டனையை அவர்கள் நிச்சயம் அறுவடைய செய்து தான் ஆக வேண்டும் என்கிற நிலை வருகிறபோது, வேறு வழியில்லை. கடுமையாக வேற்றுநாட்டினரால் தாக்கப்படுகிறது. எங்கும் மரண ஓலம், உயிருக்கான போராட்டம் என இஸ்ரயேல் சீரழிந்தநிலையில் காணப்படுகிறது. அவர்களின் நிலைகண்டு கடவுள் துவண்டு போகிறார். என்னதான் ஒரு தாய் தன் அறிவுரைக்கு விரோதமாக குழந்தை சென்றாலும், அது துன்பப்படுகிறபோது நிச்சயம் அவளுடைய உள்ளம் உடைந்து போகும் தானே! அந்த நிலையில் இங்கு கடவுளும் இருக்கிறார். "என் கண்கள் இரவு பகலாக கண்ணீர் சொரியட்டும். இடைவிடாது சொரியட்டும். ஏனெனில், என் மக்களாம் கன்னிமகள் நொறுங்குண்டாள்" என்கிற வார்த்தைகள், கடவுளின் வேதனையை எடுத்துரைப்பதாக அமைந்திருக்கின்றது. தாங்கள்படுகிற வேதனையில், இஸ்ரயேல் மக்கள் புலம்புகிறார்கள். கடவுள் தங்களை கைவிட்டு விட்டாரோ? என்று வேதனைப்படுகின்றனர். கடவுள் தங்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையின் பொருட்டு, தங்கள் மீது இரக்கம் காட்ட அவர்கள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். நாம் செய்கிற தவறான செயல்களுக்கு நிச்சயம் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும். திருந்துவதற்கு வாய்ப்புக்கள் தரப்படுகிறபோது, அதற்கு நாம் செவிசாய்க்க வேண்டும். அப்படி இல்லை என்றால், இஸ்ரயேல் மக்களின் நிலை, நம் நிலையாகிவிடும். கடவுள் அன்புள்ளவர். அதேவேளையில் நாம் நன்றாக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறவர். அவருடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வாழ்வை நாம் வாழ முற்படுவோம். இறைவன் படைத்த உலகம் ஒரு விவசாயி நெல்லை விதைக்கிறான். அதற்கான காரணம் என்ன? அவனுடைய நோக்கம் என்ன? நல்ல அறுவடையைப் பெற வேண்டும் என்பதுதான். நல்ல அறுவடையைப் பெறுவதற்காக அவன் அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறான். மரங்கள் செழித்து வளர்கிறது. அவைகளின் நோக்கம் என்ன? நல்ல பழங்களை மக்களுக்குக் கொடுக்கிறது. இவ்வாறு இந்த இயற்கையில் காணப்படும் அனைத்துமே, பலன் கொடுப்பதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது. மனிதன் கடவுளின் சாயலாகப் படைக்கப்பட்டிருக்கிறான். படைப்பின் சிகரமாக படைக்கப்பட்டிருக்கிறான். இந்த உலகத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருக்கிறான். இந்த உலகத்திற்கே கடவுள் அவனை பொறுப்பாளனாக மாற்றியிருக்கிறார். அப்படியென்றால், நாம் எந்த அளவுக்கு பலன் தரக்கூடியவர்களாக இருக்க வேண்டும், என்பதை உணர்த்துகின்றது இன்றைய நற்செய்தி பகுதி. இந்த உலகத்தை அழகுபடுத்துவதற்கும், அதனைப் பயன்படுத்தி இன்னும் பல சாதனைகளைச் செய்வதற்கும் கடவுள் நமக்கு படைப்பாற்றலைக் கொடுத்திருக்கிறார். ஆனால், ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு இதனைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, நாம் அழிவுக்கு இட்டுச்செல்லக்கூடிய காரியங்களுக்கு இந்த உலகம் என்னும் பூமியை நாம் சிதைத்துக்கொண்டிருக்கிறோம். நமது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து நாம் மீள வேண்டும். இந்த உலகத்தைப் பாதுகாப்பதில் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும். நாம் இந்த உலகத்தை மாசுபடுத்தக்கூடாது என்கிற எண்ணம் நமக்கு வேண்டும். இந்த உலகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்கிற எண்ணம் நமக்கு வேண்டும். இந்த உலகத்தை தூய்மையாக வைக்க நாம் என்ன செய்ய முடியுமோ, அதனைச் செய்ய உறுதி எடுப்போம்.
----------------------------------------- வாழ்வின் சுமைகளை பொறுமையோடு எதிர்கொள்வோம் வயலில் விளையும் களைகள் விவசாயிகளின் சாபக்கேடு. அவை வளருகிற சமயத்தில் பிடுங்கவும் முடியாமல், வளரவிடவும் முடியாமல் ஒரு விவசாயிபடுகிற துன்பத்தைச் சொல்லிமாள முடியாது. ஏனென்றால், அவைகள் தொடக்கத்தில் கோதுமைப்பயிர்களையும், களைகளையும் அடையாளம் காண முடியாதபடி உருவ அமைப்பில் ஒத்திருக்கின்றன. களைகளை சிறியதாக இருக்கிறபோது பிடுங்குவது எளிது என்றபோதிலும், இரண்டுமே ஒரே போல இருப்பதால், தவறாக கோதுமைப்பயிர்களை பிடுங்கவும் வாய்ப்பிருக்கிறது. இதனால், இரண்டையும் வளரவிடுவார்கள். வளர்ந்தபிறகு கோதுமைப்பயிருக்கும், களைகளுக்கும் நல்ல வித்தியாசம் தெரியும். ஆனாலும், இப்போது களைகள் நன்றாக தனது வேரை இறுகப்பாய்ச்சிருக்கும். இப்போது களைகளைப் பிடுங்கினால், அதோடு கோதுமையும் பிடுங்கப்பட்டுவிடும். எனவே, அறுவடை நேரம் வரை காத்திருந்து, பொறுமையாகக் களைகளையும், பயிர்களையும் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். இந்த உலகத்தில் களைகள் என்று சொல்லப்படும் அலகையின் ஆதிக்கம் எப்போதும் இருக்கும். நாம் அதைப்பார்த்து பதற்றப்படத் தேவையில்லை. பொறுமையோடு, நம்பிக்கையோடு, உறுதியாக அதைத்தவிர்க்கும் மனநிலையை வளர்த்துக்கொண்டோம் என்றால், காலம் கனிகிறபோது, அதை எதிர்த்து வெற்றி பெற முடியும். இன்றைய தலைமுறையினர் சோதனைத்தாங்குவதற்கு திடமற்றவர்களாக இருக்கின்றனர். வாழ்க்கை எப்போதும், ஒரேமாதிரி செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். வாழ்க்கை அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முரணாகச் செல்கிறபோது, அவர்கள் அழுது அங்கலாய்க்கின்றனர். வாழ்வை அதன் வழியில் ஏற்றுக்கொண்டு, பொறுமையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்வோம்.
-------------------------------------------------------- வறட்சியின்போது மன்றாட்டு ! இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, கடும் வறட்சியின் காரணமாக இஸ்ரயேல் மக்கள் பெரிதும் துன்புற்றபோது, இறைவாக்கினர் எரேமியா அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர்களது குற்றத்தை உணரச் செய்தார், மீண்டும் அவர்கள் இறைவனிடம் திரும்பி வர அழைத்தார். அவரே அவர்களுக்கு செபிக்கவும் கற்றுக்கொடுக்கிறார். அந்த மன்றாட்டின் ஒரு பகுதியைத்தான் இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கக் கேட்டு, மனம் உருகுகின்றோம். அவர்கள் தங்கள் குற்றங்களையும், தமது மூதாதையரின் தீமையையும் ஏற்றுக்கொள்கின்றனர். இறைவன் வான்மழை பொழிந்து, நிலத்தைக் குளிர்விக்க வேண்டுமென்று வேண்டுகின்றனர். உலகம் வெப்பமயமாகும் நிகழ்வை நம் கண்களால் காணுகின்ற நாமும் எரேமியாவின் இந்த செபத்தில் பங்கேற்கும் நிலையில் உள்ளோம். நமது முன்னோர் மற்றும் நமது சொந்த தன்னலத்தின் காரணமாக இந்த உலகையும், இயற்கையையும் மாசு படுத்தி, வறட்சிக்கும், வெப்பத்திற்கும் வழிவகுத்த நாம் அதற்காக மனம் வருந்துவோம். இறைவன் மீண்டும் தமது அருளால் நிலத்தையும், வான்வெளியையும் குளிர்விக்கவேண்டுமென்று நாமும் மன்றாடுவோம். மன்றாடுவோம்: அருள் மழை பொழிகின்ற நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உலகை மாசுபடுத்திய எங்கள் குற்றங்களை எல்லாம் மன்னித்து, எம்மையும் இந்த உலகையும் புதுப்படைப்பாக மாற்றியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். -- அருட்தந்தை குமார்ராஜா
களைகளின் முடிவு ! இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே, தீமையையே சிந்திக்கிறவர்கள், இழிவானதைப் பேசுபவர்கள், பிறருக்குத் தீங்கு செய்வதிலேயே குறியாக இருப்பவர்கள் என்று சில மனிதர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆண்டவர் இவர்களுக்குக் கொடுத்திருக்கம் பெயர்தான் களைகள். அலகை விதைக்கும் விதைகளின் விளைவுதான் களைகள். இவர்கள் தீயோனைச் சார்ந்தவர்கள் என்று இயேசு கூறுகிறார். காலம் வரும்போது இந்தக் களைகள் வெட்டப்பட்டு, தீயிலிடப்படும். மன்றாடுவோம்; வார்த்தையான இயேசுவே, உம்மைப் போற்றுகிறேன். பல நேரங்களில் பிறரோடு என்னை ஒப்பிட்டு, எனக்கு நன்மைகள் நிகழவில்லையே, தீயவர்கள் செழிக்கின்றார்களே என்று புலம்பியிருக்கிறேன். அந்த நேரங்களுக்காக மனம் வருந்துகிறேன். காலம் நிறைவுறும்போது களைகளை அகற்றி நீர் நெருப்பில் இடுவீர் என்று நம்புகிறேன். எனவே, எனது கடமைகளை நேர்மையுடன், நேர்த்தியுடன் ஆற்ற விரும்புகிறேன். அருள் தாரும் ஆண்டவரே. உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். -- அருட்தந்தை குமார்ராஜா ''அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அன்பார்ந்த இணையதள நண்பர்களே! -- இயேசு இறையாட்சி பற்றி மக்களுக்குப் போதிக்க உவமைகளைப் பயன்படுத்தினார். அவற்றுள் இரு உவமைகளுக்கு இயேசுவே விளக்கம் அளித்ததாக மத்தேயு பதிவுசெய்துள்ளார். விதை விதைப்போர் பற்றிய உவமைக்கு விளக்கம் அளித்த இயேசு (காண்க: மத் 13:18-23) வயலில் தோன்றிய களைகள் பற்றிய உவமைக்கும் விளக்கம் தருகிறார் (மத் 13:36-43). இந்த விளக்கம் தொடக்க காலத் திருச்சபை இயேசு உரைத்த உவமையைப் புரிந்துகொண்டதைக் காட்டுகிறது. இயேசு மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, தம் சீடருக்கு மட்டுமே விளக்கம் தருகிறார். இயேசுவோடு இருக்கவும் அவர் கூறியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளவும் சீடர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அது கடவுளே அவர்களுக்கு அளிக்கின்ற ஒரு தனிக் கொடை (காண்க: மத் 13:16). அதே நேரத்தில், இயேசுவைப் பின்செல்வோர் திறந்த மனத்தோடு கடவுளின் வார்த்தைக்குச் செவிமடுக்க வேண்டும். அந்த வார்த்தை வழியாகக் கடவுள் தம்மோடு பேசி தம் வாழ்க்கையை நல்வழிப்படுத்துவதை அவர்கள் அறிந்திட வேண்டும். -- சீடர்களுக்கு வழங்கப்படுகின்ற இறைவார்த்தையை அவர்கள் ஏற்று அதற்கேற்ப வாழாவிட்டால் அவர்களும் ''தீயோனைச் சேர்ந்தவர்களாக'' (காண்க: மத் 13:38) மாறிவிடுகின்ற ஆபத்து உள்ளது. மாறாக, அவர்கள் ''கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்களாக'' வாழ்ந்திட அழைக்கப்படுகிறார்கள் (மத் 13:38). கடவுளின் ஆட்சி அன்பையும் இரக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது. அங்கே பகைமைக்கும் வன்முறைக்கும் இடம் கிடையாது. மன்னிக்கும் மனிநிலையும் பிறரைக் கடவுளின் பிள்ளைகளாக மதிக்கும் பார்வையும் கடவுளின் ஆட்சியில் நிலவும் பண்புகள். இயேசுவின் சீடர்கள் இறைவார்த்தையை மையமாகக் கொண்டு வாழும்போது ''கதிரவனைப் போல் ஒளிவீசுவார்கள்'' (மத் 13:43). அவர்கள் ''ஒளியின் மக்களாக'' வாழ்வதைக் கண்டு பிறரும் கடவுளிடம் நம்பிக்கை கொள்வர். ''இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்ன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்'' (மத் 5:16) என இயேசு இன்றுவாழும் நம்மைப் பார்த்துக் கூறுவதை நாம் செவிமடுத்துக் கேட்க வேண்டும் (மத் 13:43). மன்றாட்டு --அருட்திரு பவுல் லியோன் வறுவேல்
விதை விதைப்பவரும் அவரே. களையை அனுமதிப்பவரும் அவரே. அன்பார்ந்த இணையதள நண்பர்களே! எல்லா விளக்கமும் தந்தவர், தூங்கப்போன வேலையாள் யார் என்று சொல்லவில்லை. அதுதான் நம் இறைவனின் பண்பு. யாரையும் குறை சொல்பவர் அல்ல நம் இறைவன். பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதுதான் அவரது பண்பு. மனிதனுடைய குறைகளையும் பலவீனங்களையும் பெரிதுபடுத்துபவர் அல்ல நம் இறைவன். --அருட்திரு ஜோசப் லீயோன் |