முதல் வாசகம்

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 15: 10. 16-21

நாடெங்கும் சண்டை சச்சரவுக்குக் காரணமான என்னைப் பெற்றெடுத்த என் தாயே, எனக்கு ஐயோ கேடு! நான் கடன் கொடுக்கவும் இல்லை; கடன் வாங்கியதும் இல்லை. எனினும் எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள். நான் உம் சொற்களைக் கண்டடைந்தேன்; அவற்றை உட்கொண்டேன்; உம் சொற்கள் எனக்கு மகிழ்ச்சி தந்தன; என் உள்ளத்திற்கு உவகை அளித்தன. ஏனெனில் படைகளின் ஆண்டவரே, உம் பெயரே எனக்கு வழங்கலாயிற்று. களியாட்டக் கூட்டங்களில் அமர்ந்து நான் மகிழ்ச்சி கொண்டாடவில்லை. உம் கை என்மேல் இருந்ததால் நான் தனியனாய் இருந்தேன். சினத்தால் நீர் என்னை நிரப்பியிருந்தீர். எனக்கு ஏன் தீராத வேதனை? குணமாகாக் கொடிய காயம்? நீர் எனக்குக் கானல் நீரென, ஏமாற்றும் ஓடையென ஆகிவிட்டீரோ! எனவே, ஆண்டவர் கூறுவது இதுவே: ``நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். என்முன் வந்து நிற்பாய்; பயனில நீக்கிப் பயனுள பேசின், நீ என் இறைவாக்கினனாக இருப்பாய். அவர்கள் உன்னிடம் திரும்பி வருவார்கள்; நீ அவர்களிடம் திரும்ப வேண்டாம். நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்; அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்; ஆனால், உன்மேல் வெற்றிகொள்ள மாட்டார்கள்; ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். தீயோரின் கையினின்று நான் உன்னைக் காப்பேன்; முரடரின் பிடியினின்று உன்னை மீட்பேன்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.




பதிலுரைப் பாடல்

திபா 59: 1-2. 3. 9-10. 16-17

பல்லவி: நெருக்கடி வேளையில் எனக்கு அரணும் அடைக்கலமும் நீரே.

1 என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்;
என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு அளித்தருளும்.
2 தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்;
கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும். -பல்லவி

3 ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்;
கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர்;
நானோ, ஆண்டவரே! குற்றம் ஏதும் இழைக்கவில்லை;
பாவம் ஏதும் செய்யவில்லை. -பல்லவி

9 நீரே என் ஆற்றல்! உமது உதவியை எதிர்பார்க்கின்றேன்;
ஏனெனில், கடவுளே! நீரே என் அரண்.
10 என் கடவுள் தமது பேரன்பால் என்னை எதிர்கொள்ள வருவார்;
கடவுள் என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் காணும்படி செய்வார். -பல்லவி

16 நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்;
காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்;
ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர்.
17 என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்;
ஏனெனில், கடவுள் எனக்கு அரண்; கடவுளே எனக்குப் பேரன்பு! -பல்லவி



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் கூறுகிறார்: உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். அல்லேலூயா.

மத்தேயு 13:44-46

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 44-46

அக்காலத்தில் இயேசு மக்களை நோக்கிக் கூறியது: ``ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்துவிட்டு, மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும். வணிகர் ஒருவர் நல்முத்துகளைத் தேடிச்செல்கிறார். விலை உயர்ந்த ஒரு முத்தைக் கண்டவுடன் அவர் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அதை வாங்கிக் கொள்கிறார். விண்ணரசு அந்நிகழ்ச்சிக்கு ஒப்பாகும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

துறந்தால் மகிழ்ச்சி தூரமில்லை
மத்தேயு 13:44-46

"கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை" என்பது நமக்குத் தெரிந்த பழமொழி. மனிதர்கள் பெரும்பாலும் இரண்டிற்கும் ஆசைப்படுவதால் ஆபத்தான பல நேரங்களை சந்திக்க நேரிடுகிறது. மனதிற்குள்ளே நாளும் மகிழ்ச்சி மத்தளமிட வேண்டுமென்றால் ஒருசிலவற்றை நம்மிடமிருந்து கழிக்க வேண்டும். ஒருசில அவசியமற்றவைகளை துறந்து தூரே தள்ளிவிட வேண்டும். நம்முடைய ஒருசில தீய பண்புகளையும் நம்மிடமிருந்து எரித்து சாம்பாலாக்க வேண்டும்.

இன்றைய நற்செய்தியில் புதையலை கண்டுபிடித்த ஒருவரும், முத்தை கண்டுபிடித்த ஒருவரும் மகிழ்ச்சியை சம்பாதிப்பதற்காக, உருவாக்குவதற்காக தங்களுக்குள் வைத்திருந்த அவசியமற்ற அனைத்தையும் துறக்கிறார்கள். முழுவதும் வேண்டாமென்று துறக்கிறார்கள். ஏனெனில் இந்த குப்பைகளை தூரே தட்டினால் தான் தங்களுக்குள் பேரின்பம் உண்டு என்பதை உணா்ந்த அவர்கள் இந்த சிறப்பான செயலை செய்கிறார்கள். மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள்.

மகிழ்ச்சி என்பது எப்போதும் நம் அருகிலே உள்ளது. அதை நமக்கு மிகவும் தூரமாக்குவது நாம் தான். நிலையான மகிச்சியை நமக்குள் உருவாக்க வேண்டுமெனில் நாம் இழந்தே ஆக வேண்டும். நம் ஆசைகளை துறந்தே ஆக வேண்டும். துறந்து பாருங்கள். மகிழ்சியின் மனிதராக மாறுங்கள்.

மனதில் கேட்க…
• இதுவரை என் வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவித்திருக்கிறேனா?
• இழப்பு, துறப்பு எனக்கு பிடித்திருக்கிறதா?

மனதில் பதிக்க…
என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும் (மத் 16:24)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

எரேமியா 15: 10, 16 – 21
இறையன்பில் வளர்வோம்

வாழ்க்கை வாழ்வதற்கு கடினமானது தான். ஏனென்றால், மனிதன் பலவீனமானவன். சோதனைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் இரையாகிப் போகிறவன். துன்பங்களால் வெகு எளிதாக துவண்டுவிடுகிறவன். தன்னுடைய பலவீனத்தால் பலமுறை வீழ்த்தப்பட்டு விடுகிறான். அதே வேளையில் கடவுள் நம்மை புரிந்து கொள்கிறவராக இருக்கிறார். நாம் அவரைப்போல புனிதமாக வாழ்ந்தால் தான், அவருடைய அருளைப் பெற முடியும் என்பது கிடையாது. மாறாக, அவரைப் போல வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு, வாழ முயற்சி எடுத்தாலே, இறைவனுடைய அற்புதமான கொடைகளை நாம் பெற்றுவிடுவோம். புனிதர்கள் யாரும் இறைவனுக்கு நிகரான புனித வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் அல்ல. ஆனால், தூய்மையான வாழ்க்கை வாழ திருவுளம் கொண்டவர்கள். எவ்வளவு தான் வீழ்ந்து போனாலும், மீண்டும், மீண்டும் அந்த வாழ்வை வாழ்வதற்கு முயற்சி எடுத்தவர்கள். அதுதான் இறைவனுடைய அளப்பரிய அன்பை அவர்களுக்குப் பெற்றுத்தந்தது. இன்றைய வாசகமும் நமக்குத் தருகிற செய்தி இதுதான்.

கடவுள் கூறுகிறார்: நீ என்னிடம் திரும்பி வந்தால், நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். கடவுள் நம் மீது நம்மால் செய்ய முடிகிற எதிர்பார்ப்புக்களை கொண்டவர் அல்ல. அவர் நம்மை புரிந்து கொள்கிறார். நம்முடைய பழைய தவறுகளை மறந்துவிடுகிறார். அதனை அவர் ஒரு பொருட்டாக எண்ணுவதே கிடையாது. அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது எல்லாம், நாம் அவருடைய பிள்ளைகளாக வாழ முயற்சி எடுக்க வேண்டும் என்பதுதான். நேர்மையானவற்றைத் தேட வேண்டும், இறைவனுக்குகந்த வாழ்க்கை முறையை வாழ வேண்டும், அப்படி வாழ்கிறபோது, நாம் தவறினாலும், மீண்டும் முயற்சி செய்து முன்னேற வேண்டும் என்பதுதான் கடவுளின் விருப்பம். அந்த விருப்பத்தை இறைவாக்கினர் வழியாக வெளிப்படுத்துகிறார்.

நம்முடைய வாழ்வில், இறைவன் நமக்குக் காட்டியிருக்கிற வழிகளின்படி வாழ்வதற்கு நாம் எத்தகைய முயற்சி எடுக்கிறோம்? ஒருவேளை நேர்மையான முறையில் நாம் வாழ்கிறபோது, சோதனைகளுக்கு பலியாகினாலும், மீண்டும் எழுந்து, கடவுளுக்கு பிரமாணிக்கமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம். இறைத்திருவுளத்தின்படி நடப்பதற்கு நாம் உறுதி எடுப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

கடின உழைப்பின் பலன்

யூத ராபிக்களின் போதனைப்படி, ஒரு மனிதர் புதையலைக் கண்டுபிடித்தால் அது அவருக்கு சொந்தமானதாகும். அதற்கு அவர் மட்டும் தான் உரிமை கொண்டாட முடியும். போர்கள் வருகிறபோது, மக்கள் தங்களது நிலபுலன்களை விட்டுவிட்டு அடிக்கடி வேறு இடங்களுக்குச் சென்று விடுவதால், அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம், புதையலாக பல இடங்களில் புதைக்கப்பட்டிருந்தது. எனவே, அடிக்கடி இந்த புதையல்களை மக்கள் கண்டுபிடிப்பது வழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு புதையலைத்தான், அந்த மனிதர் கண்டுபிடிக்கிறார்.

புதையலைக் கண்டுபிடிக்கிற மனிதர் சோம்பேறி அல்ல. புதையலுக்காக அலைகிறவர் அல்ல. அவர் உழைக்கிறார். புதையலுக்காக உழைக்கவில்லை. வழக்கமாக அவர் உழைப்பது போல உழைக்கிறார். அவரது மனதில் புதையலைப்பற்றிய எண்ணமில்லை. தனது கடமையைச் செய்கிறார். அந்த கடமையின் இடையில், இந்த புதையலைக் கண்டுபிடிக்கிறார். நமது வாழக்கையில் சோம்பேறித்தனத்திற்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது. நாம் உழைக்க வேண்டும். நமது கடமையை நிறைவாகச் செய்ய வேண்டும். அதற்கான பலனையும், அதனைவிட பலவற்றையும், கடவுள் நமக்குத் தருவார் என்பதை இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது.

கடமையைச் செய், பலனை எதிர்பாராதே – என்று சொல்வார்கள். கடமையைச் செய்யாமல், நமக்கு வேண்டியதை குறுக்கு வழியில் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் இன்று அதிகமாகி விட்டார்கள். எப்போதும் நாம் நமது உழைப்பை நம்பி வாழ வேண்டிய அருளை கடவுளிடம் வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------

விண்ணரசு

பழங்காலத்தில் முத்துக்கள் மக்கள் மனதில் உயர்ந்த இடத்தைப்பெற்றிருந்தது. மக்கள் அனைவரும் விலையுயர்ந்து, அழகான முத்துக்களை சேர்ப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். விலையுயர்ந்த, அழகான முத்தை கையில் வைத்திருப்பதையே அவர்கள் மிக உயர்வாகவும், பெரும்பேறாகவும் கருதினர். பொதுவாக செங்கடல் அவர்களுக்கு முத்துக்களை தரும் இடமாக இருந்தது. ஆனால், பெரிய வியாபாரிகள் தாங்கள் வாணிபத்திற்காக வெளியே செல்லும்போது, இதுபோன்ற அழகான முத்துக்களை சேகரித்து, தங்கள் நாட்டிற்கு கொண்டு வருவதை பெரும்பேறாக நினைத்தனர்.

விண்ணரசு இத்தகைய விலையுயர்ந்த முத்துக்களுக்கு ஒப்பிடப்படுகிறது. பழங்கால மக்களுக்கு விலையுயர்ந்த இந்த முத்துக்கள் தான் மகிழ்ச்சியின் நிறைவைத்தந்தது. அதைத்தேடுவதற்காக எவ்வளவு பெரிய தியாகத்தையும் செய்வதற்கு அவர்கள் தயாராக இருந்தனர். எவ்வளவு கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டனர். அதைவிட மிகப்பெரிய இன்பம், மகிழ்ச்சி அவர்களுக்கு இல்லை. அதைவிட அழகு வேறுஎங்கும் அவர்களைப்பொறுத்தவரையில் இல்லை. இதை விண்ணரசோடு ஒப்பிடுவோம். விண்ணரசு என்பது கடவுளின் விருப்பத்தை ஏற்று அதை செயல்படுத்துவதாகும். அதாவது கடவுளின் விருப்பத்தை செயல்படுத்துவது ஒரு வேண்டா வெறுப்பாக செய்வது அல்ல, கடினமான சுமையாக இருப்பது அல்ல, மாறாக, அது முழுமகிழ்ச்சியை தரக்கூடிய பணி. எவ்வாறு கடினமான முயற்சிகள் மேற்கொண்டு விலையுயர்ந்த முத்துக்களைச் சேர்ப்பது ஒருவருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியைத்தருமோ, அதேபோலத்தான் கடவுளின் விருப்பத்தை நிறைவேற்றி பெறுகின்ற விண்ணரசும். நமக்கு மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தருகிறது.

கடவுளின் விருப்பத்தை அறிந்து, அதை செயல்படுத்துவது என்பது நமக்கு கொடுக்கப்படுகிற மிகப்பெரிய பாக்கியம். அதற்கு ஈடாக இந்த உலகத்தில் எதுவும் இருக்க முடியாது. அதற்காக எதை இழந்தாலும் அது தகும். அத்தகைய மனநிலையைப் பெற இறைவனிடம் மன்றாடுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-------------------------------------------------------

ஓர் இறைவாக்கினரின் வேதனை !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எரேமியா இறைவாக்கினரின் தனிமை உணர்வையும், வேதனைகளையும் இன்றைய முதல் வாசகத்தில் வாசித்து நாமும் துயரமடைகிறோம். எந்த அளவுக்கு அவர் துயரம் கொண்டார் என்றால், கடன் பட்டார் நெஞ்சம் போல அவர் கலங்கினார் என்று சொல்கிறார். “நான் தனியனாய் இருந்தேன்”, “எனக்கு ஏன் இந்த வேதனை?” என்று
சொல்லிப் புலம்புகிறார். ஆம், தீமைகளை இடித்துரைக்கும் பணி ஒருவரைத் தனிமைப்படுத்துகிறது. பிறரது சாபங்களைப் பெற்றுத் தருகிறது.

ஆனாலும், எரேமியாவின் வெளிப்பாடுகள் புலம்பலிலே மட்டும் முடிந்துவிடவில்லை. அப்படியானால், அவர் எப்படி இறைவனின் பிரதிநிதியாக இருக்க முடியும்? அவரது புலம்பலுக்கு செவி மடுக்கும் இறைவன் அவரை வலிமைப்படுத்துகிறார், அவரது அழைத்தலைப் புதுப்பித்து ஊக்கமூட்டுகிறார். “நான் உன்னை அவர்கள் முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன். அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். ஆனால், உன்மேல் வெற்றி கொள்ளமாட்டார்கள். ஏனெனில், உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன்” என்று சொல்லி ஆசிர்வதிக்கிறார். இதுதான் இறைவாக்கினரின் பேறு.

மன்றாடுவோம்: தாயின் வயிற்றினிலே எங்களைப் பெயர் சொல்லி அழைத்த இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உமது விருப்பப்படி நாங்களும் இறைவாக்கினர்களாக வாழவும், அதனால் ஏற்படும் இடையூறுகளைத் துணிவுடன் சந்திக்கவும் அருள்தாரும்.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

"ஒருவர் நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார்" (மத்தேயு 13:44)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளாட்சி எத்தகையது என்று விவரிக்க இயேசு கூறிய ஒரு சிறிய உவமை "மறைந்திருந்த புதையல்" பற்றியதாகும். இந்த உவமையில் வருகின்ற அடிப்படைக் கருத்தை நம் வாழ்வோடு இணைத்துப் பார்க்கலாம். சிலவேளைகளில் நாம் எதிர்பாராமலே சில நிகழ்ச்சிகள் நடந்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிடுவதுண்டு. நிலத்தைப் பண்படுத்திப் பயிர்செய்வதற்காகத்தான் அந்த மனிதர் வேலையில் ஈடுபட்டார். ஆனால் அவருக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ எக்காலத்திலோ புதைத்துவைத்த புதையல் அவருடைய கண்களுக்குத் தென்பட்டது. திட்டமிட்டுத் தேடிச் சென்று கண்டுபிடித்த புதையல் அல்ல அது. மாறாக, எதிர்பாராவண்ணம் அவரைத் தேடி வந்த செல்வம் அது. பிறருடைய பொருளை அவருடைய இசைவின்றி எடுத்துக்கொள்வது தவறு என்பதை இவண் சுட்டிக்காட்டவேண்டும். எனவே, எதிர்பாராமல் வந்த புதையலை, வேறு யாருக்கோ சொந்தமான புதையலை, அந்த மனிதர் தமக்கென்று எடுத்துக்கொண்டது சரியல்ல என நாம் வாதாடலாம். அதே நேரத்தில், நமது சொந்த முயற்சியால், நமது உழைப்பால் உருவாகாத செல்வங்கள் நம்மைத் தேடிவருவதும் உண்டு. அப்போது அச்செல்வத்தை நாம் நன்றியுணர்வோடு ஏற்றுக்கொண்டு, நன்மை செய்ய அதைப் பயன்படுத்துவது நலமான செயலே எனலாம்.

-- நம்மைத் தேடிவரும் செல்வம் யாது? கடவுள் நமக்கு இயல்பாகவே வழங்கியுள்ள கொடைகளை நாம் நினைத்துப் பார்க்கலாம். அனைத்திற்கும் அடிப்படை, கடவுள் நம்மை இவ்வுலகில் படைத்துக் காத்துவருதாகும். நம்மை அன்போடு ஏற்றுப் பேணுகின்ற மனிதரைப் பெற்றோராக, நண்பராக நாம் பெறுவதும் கடவுளின் கொடையே. கடவுள் நம்மைக் கிறிஸ்துவில் தேர்ந்துகொண்டதும் கொடையே. இவ்வாறு நம்மைத் தேடிவருகின்ற செல்வங்களை நாம் அடுக்கிக்கொண்டே போகலாம். சிலவேளைகளில் நமக்குள்ளேயே மறைந்திருக்கின்ற புதையல்களும் உண்டு. நம்மில் புதைந்துகிடக்கின்ற திறமைகள் ஏராளம். காலப் போக்கில் நமது கவனக்குறைவால் புதைந்துபோகின்ற கொடைகளும் உண்டு. அவற்றைத் தோண்டி வெளிக்கொணர்ந்து, உலகம் வாழப் பயன்படுத்துவது சிறப்பு. பிறர் தம் திறமைகளைக் கண்டுகொள்ள நாம் அவர்களுக்குத் துணைசெய்யலாம் என்பதையும் இவண் குறிப்பிடலாம். ஆக, "மறைந்திருக்கும் புதையல்" அப்படியே மறைந்திருந்தால் அதனால் யாருக்கும் பயனிராது. மாறாக, அப்புதையலை நாம் வெளிக்கொணர்ந்து, அதைப் பயன்படுத்தி நல்லது செய்தால் அது நமக்கும் நலம் பயக்கும், பிறருக்கும் பயனுடையதாகும். அப்போது, கடவுளின் கொடை வீணாகப் போகாமல் கடவுளின் மாட்சியைப் பறைசாற்ற நமக்குத் தூண்டுதலாக அமையும்.

மன்றாட்டு
இறைவா, நாங்கள் கண்டுபிடிக்கும் வண்ணம் எங்கள் வாழ்வில் புதையல்களை மறைத்துவைத்ததற்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்