முதல் வாசகம்
சீராக்கின் ஞான நூலிலிருந்து வாசகம் 48: 1-4, 9-11

இறைவாக்கினர் எலியா நெருப்புப்போல் எழுந்தார்; தீவட்டிபோல் அவருடைய சொல் பற்றியெரிந்தது. மக்கள்மீது பஞ்சம் வரச் செய்தார்; தம் பற்றார்வத்தால் அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். ஆண்டவருடைய சொல்லால் வானம் பொழிவதை நிறுத்தினார்; மும்முறை நெருப்பு விழச் செய்தார். எலியாவே, உம்முடைய வியத்தகு செயல்களில் நீர் எத்துணை மாட்சிக்குரியவர்! உமக்கு இணையாய் யார் பெருமை பாராட்டக்கூடும்? தீச்சூறாவளியில் நெருப்புக் குதிரைகள் பூட்டிய தேரில் நீர் எடுத்துக்கொள்ளப்பட்டீர். ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும் தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும் குறித்த காலங்களில் நீர் கடிந்துகொள்வீர் என்று எழுதப்பட்டுள்ளது. உம்மைக் கண்டவர்களும் உமது அன்பில் துயில் கொண்டவர்களும் பேறுபெற்றோர். நாமும் வாழ்வது உறுதி.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 80: 1,2b. 14-15. 17-18
பல்லவி: கடவுளே, உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்.

1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே!
கெருபுகளின் மீது வீற்றிருப்பவரே, ஒளிர்ந்திடும்!
2 உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! -பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்;
இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! -பல்லவி

17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக!
உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக!
18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்;
நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காக பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

மத்தேயு 17:14-20

திருவருகைக் காலம் இரண்டாம் வாரம் சனி

நற்செய்தி வாசகம்�

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 10-13


இயேசுவும் சீடர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தபோது சீடர்கள் அவரிடம், �எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்களே, அது எப்படி?'' என்று கேட்டார்கள். அவர் மறுமொழியாக, �எலியா வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியா ஏற்கெனவே வந்துவிட்டார். அவரை மக்கள் கண்டுணரவில்லை. மாறாக, தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவ்வாறே மானிடமகனையும் அவர்கள் துன்புறுத்துவார்கள்'' என்றார். திருமுழுக்கு யோவானைப் பற்றியே அவர் தங்களோடு பேசினார் என்பதை அப்பொழுது சீடர்கள் புரிந்துகொண்டார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதி நீங்கள்!
மத்தேயு 17:9, 10-13

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

திருமுழுக்கு யோவானை ஒரு சீர்திருத்தவாதி என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனெனில் அவர்தான் மெசியாவின் வருகைக்காக அனைத்தையும் சீர்ப்படுத்தினார். உள்ளங்களை தயாரித்தார். மக்கள் மனமாற மணிக்கணக்கில் போதித்தார். மாற்றத்தை விளைவித்தார். அவரைப்போன்று நாமும் ஒரு சீர்ப்படுத்தும் சீர்திருத்தவாதியாக மாற அழைக்கப்படுகிறோம். இரண்டு சீர்திருத்தங்கள் அவசியமாக செய்ய வேண்டும்.

1. கற்பதில் சீர்திருத்தம்
நாம் எதை கற்கிறோமோ அதற்கேற்றாற்போல் தான் நம் வாழ்வு அமையும். திருமுழுக்கு யோவான் நல்லதை தன்னுடைய குடும்பத்திலிருந்து கற்றுக்கொண்டார். தீமையானவற்றை வெறுத்து ஒதுக்கினார். ஆகவே அவரால் சீர்திருத்தங்களை கொண்டு வர முடிந்தது. தீமையை கற்பவரால் நன்மையை கொண்டு வர முடியாது. ஆகவே தீமையை வெறுத்து ஒதுக்கும் சீர்திருத்ததை நம்மில் கொண்டு வருவோம்.

2. வாழ்வதில் சீர்திருத்தம்
வாழ்வதில் இப்படிதான் வாழ வேண்டும் என்ற சீர்திருத்தத்தை திருமுழுக்கு யோவான் கொண்டிருந்தார். ஆகவே தான் அவரால் ஆதிக்க கும்பலை எதிர்த்து அவ்வளவு துணிச்சலாக நிற்க முடிந்தது. நாம் இப்படி வாழ வேண்டும் என்ற வரையறையை நம்முள் வைக்கும்போது தான் நம் வாழ்வில் சீர்திருத்தம் இருக்க முடியும். திருமுழுக்கு யோவானைப் போன்று மிகச்சிறந்த சீர்திருத்தவாதியாக மாற நம் வாழ்வை சீரமைப்போம்.

மனதில் கேட்க…
1. திருமுழுக்கு யோவானிடம் இருந்த சீர்திருத்த பண்பு என்னிடம் உள்ளதா?
2. கற்பதில், வாழ்வதில் சீர்திருத்தங்களை கொண்டு வர முயற்சிகள் எடுக்கலாம் அல்லவா?

மனதில் பதிக்க…
பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும்(எசா 40:4)
அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா
====================

சீராக் 48: 1 – 4, 9 – 11
இயற்கை கற்றுத்தரும் பாடம்

சீராக் புத்தகம் கடவுளின் பிள்ளைகளுக்கான அறிவுரையாக நமக்குத் தரப்பட்டுள்ளது. நாம் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கைநெறிகளை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. நம்முடைய வாழ்வில் நடக்கும் ஒரு சில நிகழ்வுகளுக்கான காரணத்தையும், நாம் புரிந்து கொள்வதற்கு முயற்சி எடுக்கிறது. அப்படிப்பட்ட ஒரு பகுதி தான், இன்றைய முதல் வாசகமாக நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இறைவன் தன்னுடைய மக்கள் மீது, இறைவாக்கினர் எலியா வழியாக பஞ்சம் வரச் செய்தார். அவர்களை எண்ணிக்கையில் சிலராக்கினார். வானம் பொழிவதை நிறுத்தினார். அதற்கான காரணம் என்ன?

”ஆண்டவருடைய சினம் சீற்றமாய் மாறுமுன் அதைத் தணிப்பதற்கும், தந்தையின் உள்ளத்தை மகனை நோக்கித் திருப்புவதற்கும் யாக்கோபின் குலங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்கும்..” இவை நடைபெற்றிருப்பதாக, சீராக் புத்தகம் கூறுகிறது. தவறு செய்கிறவர்கள், தங்களின் தவறை உணர்ந்து திருத்துவதற்கான காலம் தான், இயற்கை தன்னுடைய அருள் வழங்குவதை நிறுத்திக் கொள்வதற்கான காலம். அப்படி இயற்கை நமக்கு ஒரு சிலவற்றைக் கற்பிக்கிறபோது, நம்முடைய வாழ்க்கையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அதில் தவறுகள் இருக்கும்பட்சத்தில் அவற்றைத் திருத்திக் கொள்ள வேண்டும். அல்லது அது கடவுளின் சினத்திற்கு வழிவகுக்கும்.

நம்முடைய வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள், விரும்பத்தகாததாக இருக்கிறபோது, நம்முடைய வாழ்வை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இறைவன் நமக்கு அந்த நிகழ்வு வாயிலாக என்ன சொல்ல விரும்புகிறார்? என்பதை, நினைத்துப் பார்க்க வேண்டும். நம்முடைய வாழ்வில் திருத்துவதற்கு ஏதேனும் இருந்தால், நாம் திருத்துவதற்கு முன்வர வேண்டும். அப்போது, கடவுளின் அருளையும், ஆற்றலையும் நிறைவாகப் பெற்றுக் கொள்ளலாம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------

திருப்பாடல் 80: 1, 2ஆ, 14 – 15, 17 – 18
”கடவுளே! உமது முக ஒளியைக் காட்டி எம்மை மீட்டருளும்”

 

வேதனையில் மற்றவரின் உதவிக்காக காத்திருக்கும் ஓர் ஆன்மாவின் குரல் தான், இந்த திருப்பாடல். கடவுளிடமிருந்து நன்மைகளைப் பெற்று, அந்த நன்மைத்தனத்திற்கு உண்மையாக இல்லாமல், அவரை விட்டு விலகிச்சென்று, மீண்டும் வரவிரும்புகிற ஏக்கம் தான், இந்த பாடல். கடவுளின் அன்பை எப்படியெல்லாம் அனுபவித்தோம், என்பதை எண்ணிப்பார்த்து, அவற்றை நினைவூட்டி, மீண்டும் அத்தகைய அன்பைப் பெறுவதற்காக விரும்புகிற பாடல், இந்த பாடல்.

திராட்சைக்கொடி என்பது இஸ்ரயேலுக்கு உவமையாகச் சொல்லப்படுவது ஆகும். இஸ்ரயேலை ஆண்டவர் தான், நட்டு வைத்தார். அவர் தான் பாதுகாத்தார். ஒன்றுமில்லாத நிலையிலிருந்து இஸ்ரயேல் மக்களுக்கு, ஓர் அடையாளத்தைக் கொடுத்தது ஆண்டவர் தான். இப்படி அடையாளத்தைப் பெற்ற இஸ்ரயேல், இப்போது அந்த அடையாளத்தை இழந்து இருக்கிறது. இழந்த அடையாளத்தை பெற விரும்புகிற முயற்சியாக, இறைவனை நோக்கி இந்த பாடல் பாடப்படுகிறது. இறைவன் நினைத்தால், மீண்டும் இழந்த அடையாளத்தைக் கொடுக்க முடியும் என்பது, திருப்பாடல் ஆசிரியரின் நம்பிக்கை. அதனை இந்த பாடலில் வெளிப்படுத்துகிறார்.

நம்முடைய வாழ்வில் இறைவனோடு நெருங்கியிருப்பது தான், நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தருகிறது. இறைவனோடு இருப்பது நமக்கு நிறைவைத் தருகிறது. இறைவனின் ஆசீர்வாதம் நம்மோடு இருக்கிறபோது, நம்மால் எதையும் செய்ய முடியும் என்கிற உணர்வோடு, இந்த திருப்பாடலை தியானிப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

---------------------------------------------------

கடவுள் மீது கொண்டிருக்கிற விசுவாசம்

மறைநூல் அறிஞர்களின் நம்பிக்கையின்படி, மெசியா வருவதற்கு முன்னால் எலியா தோன்றுவார். இந்த நம்பிக்கையின்படி பார்த்தால், எலியா இன்னும் வரவில்லை. எனவே, இயேசு கண்டிப்பாக மெசியாவாக இருக்க முடியாது என்று, மறைநூல் அறிஞர்கள் கூறுகிறார்கள். ஏனென்றால், மக்கள் இயேசுவை மெசியா என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். இயேசுவும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தன்னை மெசியாவாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், இயேசு அவர்களின் போதனைக்கு விளக்கம் கொடுக்கிறார்.

எலியாவை திருமுழுக்கு யோவானுக்கு ஒப்பிடுகிறார். ஏனெனில், அதிகாரவா்க்கம் திருமுழுக்கு யோவானை கொலை செய்துவிட்டாலும், மக்கள் அனைவருமே திருமுழுக்கு யோவானை மிகப்பெரிய இறைவாக்கினராக எண்ணிக்கொண்டிருந்தனர். இயேசுவின் இந்த விளக்கத்தை நிச்சயமாக மறைநூல் அறிஞர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால், மக்களுக்கு அவருடைய விளக்கம் தெளிவாக்கப்பட்டு விட்டது. அவர்கள் இயேசுவின் விளக்கத்தை நிச்சயம் ஏற்றுக்கொண்டிருப்பார்கள். இது இயேசு தான் மெசியா என்பதை, மீண்டும் மக்களுக்கு வலியுறுத்தக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது.

இயேசுவை அதிகாரவர்க்கமும், ஆளும்வர்க்கமும் தான் மெசியாவாக ஏற்றுக்கொள்ளத் தயங்கினர். ஏனெனில், அவர்களுக்கு தங்களது பதவி போய்விடுமோ என்கிற அச்சம் இருந்தது. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை அவர்கள் வைத்திருந்தால், இதுபோன்ற தேவையற்ற அச்சங்களை அவர்கள் தவிர்த்திருக்கலாம். கடவுள் மீது நாம் கொண்டிருக்கிற விசுவாசமாவது சிறந்த விசுவாசமா? சிந்திப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

சீடர்களின் அனுபவம்

நமது வாழ்வில் பல வேளைகளில் இயேசுவின் வாழ்வு, பாடுகளைப் பற்றி பல கேள்விகளைக் கேட்டிருக்கிறோம். இயேசுவின் இறப்பு எப்படி எனக்கு வாழ்வைத்தர முடியும்? ஏன் இறந்துதான், இயேசு தான் கடவுளின் மகன் என்று நம்மிடம் நிரூபிக்க வேண்டுமா? தனது வல்லமையின் மூலமாக நிரூபிக்கலாமே? ஏன் துன்பம்? எதற்காக துன்பம்? இதனையெல்லாம் எப்படிப் புரிந்து கொள்வது என்று பலமுறை நாம் மற்றவர்களையும், சில சமயங்களில் நமக்கு நாமே கூட இந்தக் கேள்விகளைக் கேட்டிருக்கலாம். இதற்கான விடையாகவும் இன்றைய நற்செய்தி வாசகத்தை நாம் பார்க்கலாம்.

கடவுளுடைய திட்டத்தை மனிதர்களால் எந்த காலத்திலும் புரிந்து கொள்ள முடியாது. பல சமயங்களில் அது நமது அறிவுக்கு எட்டாதது. இயேசுவின் சீடர்கள் இயேசுவோடு மூன்று ஆண்டு காலம் இருந்தார்கள். அவரோடு உண்டார்கள். உறவாடினார்கள். ஆனால், அவர்களுக்கே இயேசுவைப் புரிந்து கொள்ள முடியவில்லை. பல வேளைகளில், மற்றவர்களுக்குப் புரியாத உவமைகளை இயேசு, தன்னுடைய சீடர்களுக்கு மட்டும், விளக்கமாகச் சொன்னார். அப்போதும் அவர்கள் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆனால், இயேசுவின் விண்ணகத்திற்குப் பிறகு, அவர்கள் துன்பப்பட்டபோது, அதனை முழுமையாக அனுபவித்தனர். அவர்கள் பெற்ற அனுபவம் இயேசுவின் வார்த்தைகள் எவ்வளவுக்கு உண்மையானவை என்பதை அறிந்து கொள்ள உதவியது. கடவுளின் திட்டத்தின் மகிமையை, மகத்துவத்தை உணர்ந்தார்கள்.

இன்றைக்கு நாமும் பல வேளைகளில் நமது வாழ்வில் நடக்கும் பல காரணங்களுக்கு விடை தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறோம். ஏன் இப்படி நடக்க வேண்டும் என்று நாம் பரிதவித்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சீடர்களின் அனுபவம், நமது அனுபவமாக மாறுகிறபோது, நாம் நமது வாழ்விற்கான விடையைப் பெற்றுக்கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இயேசுவை முழுமையாக அறிந்து கொள்வோம்

யூதர்களின் மனதில் மெசியாவைப்பற்றி எண்ணம் ”வெற்றி வீரர்” என்பதாக இருந்தது. போர்க்களத்தில் வெற்றிவாகை சூடுகிறவராக மக்கள் பார்த்தனர். அதேபோல, மெசியாவின் வருகைக்காக தயாரிக்க வருகிறவரும், இந்த வழியிலே இருப்பார் என்று அவர்கள் நினைத்தனர். மலாக்கி 4: 5 – 6 ”இதோ! பெரியதும் அச்சத்தைத் தோற்றுவிப்பதுமான ஆண்டவரின் நாள் வருமுன், இறைவாக்கினர் எலியாவை நான் உங்களிடம் அனுப்புகிறேன். நான் வந்து உலகைச் சபித்துத் தண்டிக்காதபடி, அவர் பெற்றோரின் உள்ளங்களைப் பிள்ளைகளிடத்தும், பிள்ளைகளின் உள்ளங்களைப் பெற்றோரிடத்தும் திருப்புமாறு செய்வார்”. ஒவ்வொரு வார்த்தையும் எலியா வந்து, மெசியா வருவதற்கான ஆயத்தங்களைச் செய்வார் என்ற பாணியில் அமைந்திருந்தது. அதாவது எலியாவையும், மெசியாவின் தூதுவராக, போர் வீரராகவே யூதர்கள் நினைத்தனர்.

இயேசு எலியா எப்படிப்பட்டவராக இருப்பார்? என்பதற்கான விளக்கத்தை இங்கு தருகிறார். எலியாவைப்பற்றி மக்கள் மனதில் இருக்கக்கூடிய தவறான விளக்கத்தை அழித்துவிட்டு, உண்மையான புரிதலை இயேசு அவர்களுக்குத் தருகிறார். எலியாவும், மெசியாவும் போர் வீரர்களாக அல்ல, மாறாக, துன்பங்களைத்தாங்குவதன் மூலமாக, மக்களுக்கு மீட்பளிக்கப்போகிறார் என்பதை இயேசு விளக்குகிறார். இப்போது எலியா வந்துவிட்டார். திருமுழுக்கு யோவான்தான் அந்த எலியா. அவர் துன்புறுத்தப்பட்டது போல, மெசியாவும் துன்பங்களைத்தாங்கி, மக்களுக்கு விடுதலை தருவார் என்று இயேசு சொல்கிறார்.

இயேசுவை அறிவிப்பதற்கு முன்னதாக, இயேசுவை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். இயேசுவை தவறாகப் புரிந்துகொண்டால், நமது போதனையும் தவறாக அமைந்துவிடும். தெளிவான புரிதல், தெளிந்த வாழ்விற்கு அடித்தளமாக இருக்கும். இயேசுவை முழுமையாக அறிந்து கொள்ளாததால் தான், யூதாஸ் இயேசுவைக்காட்டிக்கொடுத்தான். சீடர்கள் பயந்து ஒளிந்து கொண்டது. எப்போது இயேசுப்புரிந்து கொண்டார்களோ, அன்றே அவர்களின் வாழ்வும் மாற்றம் பெறுகிறது. நாமும் இயேசுவை சரியாகப் புரிந்து கொள்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

நம்பிக்கையினால் வாழ்வு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

கி.மு. 600 ஆம் ஆண்டையொட்டி யூதா நாட்டில் வாழ்ந்த இறைவாக்கினர்தான் அபக்கூக்கு. வடக்கிலிருந்து பாபிலோனியர்கள் படையெடுத்து வந்து தாக்கும் ஆபத்து எப்போதும் சூழ்ந்திருந்தது. யூதாவிலோ நாட்டின் ஒற்றுமையும், நீதியும் குலைந்து, வலியோர் எளியோரை ஒடுக்கிக்கொண்டிருந்தனர். இத்தகைய சூழலில்தான் அபக்கூக்கு இறைவாக்குப் பணியில் ஈடுபடுகிறார். கயவர்களை ஏன் இறைவன் தண்டிக்காமல் விட்டுவைக்கிறார்? பொல்லாதவர்கள் நேர்மையாளர்களை விழுங்கும்போது இறைவன் ஏன் மௌனமாய் இருக்கிறார்? என்னும் கேள்விகளை அபக்கூக்கு எழுப்பி, அவற்றுக்கு விடை காண முயல்கிறார். பன்னெடுங்காலமாக மானிட இனத்தைத் தட்டி எழுப்பும் கேள்வி அல்லவா இது! ஏன் இந்த உலகில் தீமை? ஏன் தீயவர்கள் தழைக்கிறார்கள், நல்லவர்கள் துன்புறுகிறார்கள்? இக்கேள்விக்கு விடை காண முயலும் இறைவாக்கினருக்கு ஆண்டவர் தரும் பதில்: நம்பிக்கையோடிருங்கள். எனவேதான், மிகப் பிரபலமான இந்த வார்த்தைகளோடு இன்றைய முதல் வாசகம் நிறைவுக்கு வருகிறது: “நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்”.

மன்றாடுவோம்: நம்பிக்கையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். நேர்மையுடையவர்கள் தம் நம்பிக்கையினால் வாழ்வடையவர் என்னும் உம் வார்த்தைகளுக்காக நன்றி. என்ன நேர்ந்தாலும் நன்றி கூறவும், உமது திருவுளத்தின்படி வாழவும் எங்களுக்கு ஆழமான நம்பிக்கையைத் தந்தருள்வீராக.  உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

நம்பிக்கைக் குறைவு !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

அந்தப் பேயை ஏன் சீடர்களால் ஓட்ட இயலவில்லை? நியாயமான கேள்வி. எழுந்தது சீடர்களின் உள்ளத்தில். அதை இயேசுவிடம் கேட்கவும் செய்தார்கள். நச் என்று இயேசு கொடுத்த பதில்; உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். அந்தப் பேயைத் தங்களால் ஓட்;ட இயலும் என்னும் தன்னம்பிக்கையும்  அவர்களிடம் குறைவாக இருந்தது. தங்கள் வழியாக இறைவன் அதைச் செய்வார் என்ற இறைநம்பி;க்கையும் அவர்களிடம் குறைவாகவே இருந்தது. எனவேதான், அவர்களால் அப்பேயை ஓட்ட இயலவில்லை.

இயேசுவோ தன்னம்பிக்கை, இறைநம்பிக்கை இரண்டிலும் நிறைவுபெற்று விளங்கினார். எனவே, அவரால் எதையும் சாதிக்க முடிந்தது.

நம் வாழ்விலிருந்து தீமைகளை, பேய்களை, அடிமைத்தனங்களை விரட்ட முடியவில்லையென்று பலமுறை நாம் குறைப்பட்டிருக்கிறோம். குறிப்பாக, குடி, புகைத்தல், திரை மோகம், போன்ற அடிமைத்தனப் பேய்களை நம்மால் நம்மிடமிருந்தே ஓட்ட இயலுவதில்லை.நமது நம்பிக்கைக் குறைவுதான் காரணம் என்று ஆண்டவர் இன்று சுட்டிக்காட்டுகிறார். நமது நம்பிக்கைக் குறைவை ஏற்றுக்கொள்வோம். ஆண்டவரே, எங்கள் நம்பிக்கைக் குறைவைப் போக்க உதவும் என்று மன்றாடுவோம்.

மன்றாடுவோம்; நம்பிக்கையின் ஊற்றே இயேசுவே, நம்பிக்கை என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். தன்னம்பிக்கையும், இறை நம்பிக்கையும் இருந்தால் எதுவும் செய்ய முடியும் என்று ஏற்றுக்கொள்கிறேன். என்னிடமுள்ள தீய பழக்கங்கள், அடிமைத்தனங்கள் என்னும் பேயை என்னால் விரட்ட இயலாததற்கு எனது நம்பிக்கைக் குறைவே என்று உணர்ந்து மன்னிப்புக் கோருகிறேன். இறiவா, என் நம்பிக்கைக் குறைவைப் பொறுத்தருளும். என் நம்பிக்கையை வளர்த்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

-------------------------

''இயேசு சீடர்களை நோக்கி, 'உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து,
'இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ' எனக் கூறினால் அது பெயர்ந்து போகும்' என்றார்'' (மத்தேயு 17:20)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- வலிப்பு நோயால் துன்புற்ற ஒரு சிறுவனின் தந்தை இயேசுவை அணுகுகிறார். தன் மகன் அனுபவித்த துன்பங்கள் பற்றியும், இயேசுவின் சீடரால் அச்சிறுவனைக் குணப்படுத்த இயலவில்லை என்பதையும் இயேசுவிடம் அவர் எடுத்துக் கூறுகிறார். கடவுளின் வல்லமையில் முழுமையான நம்பிக்கை இருந்தால் எந்த அதிசய செயலையும் செய்ய முடியும் என்றும், சீடரிடம் அத்தகைய நம்பிக்கை இல்லாததால்தான் அவர்களால் அச்சிறுவனைக் குணமாக்க முடியவில்லை எனவும் இயேசு கூறுகிறார். கடவுளை நாம் நம்பினால் எதையும் சாதிக்கலாம் என்னும் உண்மையை இயேசு உணர்த்துகிறார்.

-- இயேசுவை நாம் நம்பும்போது கடவுள் நம்மோடு இருந்து நம்மைத் திடப்படுத்துகிறார் என நாம் ஏற்றுக்கொள்கிறோம். கடவுளின் வல்லமை நம்மோடு இருக்கும்போது நம்மால் எதையும் சாதிக்கக் கூடும். இதிலிருந்து நாம் கற்றுக்கொள்கின்ற பாடங்கள் இரண்டு. மனிதர் அனைவருமே கடவுளின் படைப்புகள் என்பதால் அவர்கள் கடவுளின் வல்லமையோடுதான் எதையும் சாதிக்க இயலும். அதே நேரத்தில் அதிசய செயல்கள் நிகழ வேண்டும் என நாம் கடவுளை வேண்டும்போது நாம் எதிர்பார்க்கின்றவை நிகழாவிட்டால் நம்மிடம் நம்பிக்கை இல்லை என நாம் முடிவு செய்தல் சரியாகாது. ஏனென்றால் நாம் எதிர்பார்க்கின்றவை எல்லாம் நிகழும் என்பதும் சரியல்ல, நாம் நினைப்பதுபோல் நடக்காவிட்டால் நம்மிடம் நம்பிக்கை இல்லை என முடிவுசெய்வதும் சரியல்ல. மாறாக, நாம் கடவுளின் வல்லமையில் நம்பிக்கை கொண்டு செயல்பட வேண்டும். அதே நேரத்தில் நம் எதிர்பார்ப்புக்கு மாறாக நிகழ்கின்றவற்றையும் நாம் மன அமைதியோடு ஏற்கின்ற பக்குவத்தைப் பெற வேண்டும். அப்போது நாம் கடவுளிடம் கொண்டுள்ள நம்பிக்கை மேலும் வளரும்.

இறைவா, இன்னல்கள் எழும்போதும் நாங்கள் உம்மையே நாடி வர அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------

''பின்பு சீடர்கள் தனிமையாக இயேசுவை அணுகி வந்து,
'அதை (பேயை) ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?' என்று கேட்டார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, 'உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம்...' என்றார்'' (மத்தேயு 17:19-20)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- நம்மிடம் ''நம்பிக்கை'' மட்டும் இருந்தால் நம்மால் அதிசய செயல்களைச் செய்யக்கூடும் என இயேசு கற்பிக்கிறார். நோய்களை விளக்குவதற்கு அறிவுப்பூர்வமான தெளிவுகள் இல்லாதிருந்த அக்காலத்தில் எல்லா நோய்களுக்கும் ''பேய்''தான் காரணம் என மக்கள் கருதியதுண்டு. வலிப்புநோயால் அவதிப்பட்ட மனிதரைப் பிடித்திருந்தது வலிப்புப் பேய். அதை ஓட்டிட இயேசுவின் சீடரால் இயலவில்லை. அதற்குக் காரணமாக இயேசு காட்டியது அவர்களது ''நம்பிக்கைக் குறைவு''. நம்பிக்கை என்றால் என்ன? விவிலியப் பார்வையில் நம்பிக்கை என்பது கடவுளிடத்தில் நாம் முழுமையாக நம்மையே கையளிப்பதைக் குறிக்கும். கடவுளிடத்தில் யார் அடைக்கலம் புகுகின்றார்களோ அவர்களிடத்தில் நம்பிக்கை உள்ளது எனலாம். இந்த நம்பிக்கை நம்முடைய சொந்த சக்தியால் எதையும் சாதிக்கலாம் என எண்ணாது; மாறாக, எல்லையற்ற வல்லமையுள்ள கடவுள் நினைத்தால் எந்த அதிசய செயல்களையும் ஆற்ற முடியும் என உறுதியாக இருப்பதே நம்பிக்கை.

-- இயேசு நம்மிடம் எதிர்பார்ப்பது இந்த ஆழ்ந்த நம்பிக்கையைத்தான். இங்கே இரண்டு வகையான மிகைப் போக்குகளை நாம் தவிர்த்தல் வேண்டும். ஒன்று, கடவுளிடத்தில் நம் சுமைகளைப் போட்டுவிட்டு நாம் வாளா இருந்துவிடலாம் என நினைக்கின்ற அலட்சியப் போக்கு. மற்றொன்று, கடவுளை நாம் முழுமையாக நம்பியபோதும், அவரை நோக்கி உருக்கமாக மன்றாட்டுக்களை எழுப்பிய பிறகும் நாம் எதிர்பார்த்துக் கேட்டது நடக்காமல் போய்விட்டால் கடவுளையோ நம்மையோ குறைகூறுகின்ற போக்கு. சில வேளைகளில் நமக்கு ஏதாவது நோய் வந்துவிட்டால் அதிலிருந்து விடுதலை பெற நாமும் பிறரும் உருக்கமாக வேண்டுகிறோம். அதன்பிறகும் நோய் தணியாவிட்டால் நம்மிடம் நம்பிக்கை இல்லை எனச் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்; அல்லது நம்மீது பழியைப் போடுகின்றனர். இது சரியான போக்கு அல்ல. நம்பிக்கை என்பது மாயா வித்தை அல்ல. கடவுளை முழுமையாக நாம் நம்பினால் நாம் எதிர்பார்த்தது நடக்காவிட்டாலும் நாம் நம்பிக்கையில் தளர மாட்டோம். மாறாக, நம் நம்பிக்கையை ஆழப்படுத்த இறைவனை வேண்டுவோம்.

மன்றாட்டு
இறைவா, உம்மில் நம்பிக்கை கொள்வதில் நாங்கள் தளராதிருக்க எங்களுக்கு அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;