முதல் வாசகம்

எண்ணிக்கை நூலிலிருந்து வாசகம் 24: 2-7,15-17

அந்நாள்களில் பிலயாம் ஏறிட்டுப் பார்க்கவே, குலம் குலமாகப் பாளையம் இறங்கிய இஸ்ரயேலைக் கண்டார். அப்போது கடவுளின் ஆவி அவர்மேல் இறங்கியது. அவர் திருஉரையாகக் கூறியது: �பெகோர் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்கிறவனின், பேராற்றல் வாய்ந்தவரின் காட்சியைக் கண்டு கீழே விழுந்தும் கண் மூடாதவனின் திருமொழி! யாக்கோபே! உன் கூடாரங்களும், இஸ்ரயேலே! உன் இருப்பிடங்களும் எத்துணை அழகு வாய்ந்தவை! அவை விரிந்து கிடக்கும் பள்ளத்தாக்குகள் போன்றவை; ஆண்டவர் நட்ட அகில் மரங்கள் போன்றவை; நீர் அருகிலுள்ள கேதுரு மரங்கள் போன்றவை. அவனுடைய நீர்க்கால்களிலிருந்து தண்ணீர் ஓடும்; அவனது விதை நீர்த்திரளின்மேல் இருக்கும்; அவனுடைய அரசன் ஆகாகைவிடப் பெரியவன்; அவனது அரசு உயர்த்தப்படும்.'' பிலயாம் திருஉரையாகக் கூறியது: �பெகோரின் புதல்வன் பிலயாமின் திருமொழி! கண் திறக்கப்பட்டவனின் திருமொழி! கடவுளின் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதர் அளித்த அறிவைப் பெற்று பேராற்றல் உடையவரின் காட்சி கண்டு கீழே வீழ்ந்தும் கண் மூடப்படாதவனின் திருமொழி! நான் அவரைக் காண்பேன்; ஆனால் இப்போதன்று; நான் அவரைப் பார்ப்பேன்; ஆனால் அண்மையிலன்று; யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்! இஸ்ரயேலிலிருந்து செங்கோல் ஒன்று எழும்பும்!''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 25: 4-5. 6,7. 8-9
பல்லவி: ஆண்டவரே, உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.

4 ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்;
5 உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள். -பல்லவி

6 ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்;
ஏனெனில், அவை தொடக்கமுதல் உள்ளவையே. 7bஉ உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்;
ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர். -பல்லவி

8 ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9 எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோர்க்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். -பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

மத்தேயு 21:23-27

திருவருகைக் காலம் மூன்றாம் வாரம் திங்கள்

நற்செய்தி வாசகம்

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 23-27

அக்காலத்தில் இயேசு கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, �எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, �நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன். யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?'' என்று அவர் கேட்டார். அவர்கள், � `விண்ணகத்திலிருந்து வந்தது' என்போமானால், `பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை' எனக் கேட்பார். `மனிதரிடமிருந்து' என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்சவேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர்'' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். எனவே அவர்கள் இயேசுவிடம், �எங்களுக்குத் தெரியாது'' என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், �எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

------------------------

அதிகாரப்போதை

இயேசுவை ஆளும்வர்க்கமும், அதிகாரவர்க்கமும் எதற்காக எதிர்த்தார்கள்? என்பதற்கான விடையாக வருவது இன்றைய நற்செய்தி வாசகம். தலைமைக்குருக்களும், மூப்பர்களும் கடவுளைப்பற்றிய செய்தியையும், மக்களை ஆன்மீகத்தில் கட்டி எழுப்புவதற்காக நியமிக்கப்பட்டவர்கள். உண்மையில் இயேசு அந்த பணியைத்தான் செய்துகொண்டிருந்தார். அப்படியென்றால், அவர்கள் இயேசுவின் பணியை, போதனையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் இயேசுவின் மீது கோபப்படுகிறார்கள். இயேசுவை விரோதியாகப் பார்க்கிறார்கள். எதற்காக?

அதிகாரம் தான் அங்கே மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஆள்வதில் ஏற்கெனவே அரசர்களுக்குள்ளாக அதிகாரப்பிரச்சனை. இதில் சமயமும் விலக்கல்ல என்ற தவறான முன் உதாரணத்திற்கு, இவர்கள் அனைவருமே எடுத்துக்காட்டுகள். ஆள்வதும், அதிகாரமும் மக்களை நல்வழிப்படுத்தவே. அதனை இயேசு செய்துகொண்டிருக்கிறார். மக்கள் நலனில் அவர்கள் அக்கறை கொண்டிருந்தால், நிச்சயம் இயேசுவை ஒரு விரோதியாகப் பார்த்திருகக மாட்டார்கள். மாறாக, அவர்கள் இயேசுவை தங்களுக்கு உதவி செய்யக்கூடியவராகப் பார்த்திருப்பார்கள். அதிகாரம் தான் அவர்களை கடவுளையே எதிர்ப்பவர்களாக மாற்றியிருந்தது.

இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திலும் அதிகாரப்போட்டிக்காக எத்தனை இழப்புக்களை இந்த சமுதாயம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால், எத்தனை உயிர்ச்சேதம், பொட்சேதம். ஆனாலும், அதிகாரப்போதைக்காக இன்றைக்கு எத்தனையோ பேர் சண்டையிட்டு, மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமல் இருக்கிறார்கள். நாமும் அந்த கூட்டத்தோடு சேராது, கிறிஸ்துவின் பணியாளர்களாய் இருப்பதில் நிறைவுகொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

------------------------------------------------------

உண்மைக்குச் சான்று பகர்வோம்

தலைமைச்சங்கம் என்பது யூதர்களின் சமயம் சார்ந்ததாக இருந்தாலும், அவர்களின் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தது. அதற்கென்று பல அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. அதற்கென்று பொறுப்புகளும் இருந்தன. குறிப்பாக, யார் உண்மையான இறைவாக்கினர்? யார் போலியான இறைவாக்கினர்? என்று பகுத்து ஆராய்ந்து பார்க்கக்கூடிய பொறுப்பு தலைமைச்சங்கத்திற்கு இருந்தது. 

திருமுழுக்கு யோவான் விண்ணிலிருந்து வந்தவர் என்பது அவர்களுக்குத் தெரியும். அவருடைய நற்செய்திப்பணி, துணிவு, புதுமை செய்யும் ஆற்றல் போன்றவை, அவரை தனித்துவமிக்க இறைவாக்கினராக, மக்களுக்கு அடையாளம் காட்டியது. சாதாரண மக்களே, அவரை இறைவாக்கினராக ஏற்றுக்கொண்டால், புரிந்துகொண்டால், தலைமைச்சங்கத்தில் இருக்கிறவர்களுக்கு நிச்சயமாகப் புரிந்திருக்கும். ஆனாலும், உண்மையை ஏற்றுக்கொள்ளவோ, உரைக்கவோ வக்கற்றவர்களாக அவர்கள் இருந்தனர். இதுபோன்ற கோழைத்தனம் கண்டிக்கத்தக்கது. தவறை தவறு என்று சொல்வதும், உண்மையை உரைக்கச்சொல்வதும் தான், மனிதனின் மாண்பு. அந்த மாண்பையே இழந்தவர்களாக, இங்கு சுட்டிக்காட்டப்படக்கூடிய தலைமைச்சங்க உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை என்னவென்று சொல்வது? தூங்குகிறவர்களை எழுப்பலாம். தூங்குகிறவர்களைப்போல நடிக்கிறவர்களை என்ன செய்தாலும் எழுப்ப முடியாது.

நமது வாழ்விலும், சுயநலத்திற்காக, நமது பதவி, அதிகாரம், புகழைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பலவேளைகளில் உண்மையை உரைக்காது இருந்திருக்கிறோம். பொய்மைக்கு உடந்தையாக இருந்திருக்கிறோம். அதை தவறான தருணங்களாக உணர்வோம். உண்மைக்கு உறுதியாக குரல் கொடுப்போம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

----------------------------------------------------------

இயேசுவின் ஞானம்

இயேசு செய்த அரும்பெரும் செயல்களைப்பார்த்து, யூத அதிகாரவர்க்கத்தினர், ”எந்த அதிகாரத்தினால் இதைச்செய்கிறீர்?” என்று இயேசுவைப்பார்த்துக் கேட்டதில் வியப்பேதுமில்லை. இயேசு அவர்களுக்கு நேரடியான பதிலைத்தர விரும்பவில்லை. அவருடைய பதில் வழக்கமான கேள்வி பதில் வடிவில் அமைந்திருக்கிறது. ஏனென்றால், கடவுள் அவருக்காக அமைத்திருந்த நேரம் இன்னும் வரவில்லை. ஒருவேளை, இயேசு நேரடியாகப்பதில் சொல்லியிருந்தால், அந்த பதில் அவருடைய முடிவை வேகப்படுத்தியிருக்கும். தான் ஆற்றுவதற்கான பணி இன்னும் அதிகம் இருக்கிறது என்பது இயேசுவுக்கு நன்றாகத்தெரியும். எனவே, இயேசு நேரடியாகப்பதில் சொல்ல விரும்பவில்லை.

இயேசுவின் கேள்வி ஞானமுள்ள கேள்வி. இயேசு கேட்ட கேள்வியின் பதில் அதிகாரவர்க்கத்தினருக்குத் தெரியும். ஆனால், அவர்கள் சொல்ல விரும்பவில்லை. நேரடியாகப்பதில் தராது, மற்றவர்களின் பதில் மூலமாக, அதற்கேற்ற பதிலைச்சொல்வது இயேசுவின் பாணி. அந்த வலையில் அவர்கள் வீழ்ந்து விட்டார்கள். பதில் சொல்ல விரும்பாத அவர்கள், வாயை மூடி மெளனியாக இருக்க விரும்பவில்லை. ”எங்களுக்குத் தெரியாது” என்ற மிகப்பெரிய பொய்யை அவர்கள் சொல்கின்றனர். மற்றவர்களை விட, திருமுழுக்கு யோவான் உண்மையிலே மாபெரும் இறைவாக்கினர் என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்தவர்கள். ஆனாலும், அவர்கள் இயேசுவிடம் நேரடியாகத் தோற்றுப்போக விரும்பவில்லை. கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டாத கதைதான் இங்கும் நடைபெறுகிறது. உண்மையை ஏற்றுக்கொள்ளாத நிலை, அவர்களை பொய்மைக்கு இட்டுச்செல்கிறது. தோல்வியைத் தழுவ விரும்பாத அவர்களின் மனநிலை, அவர்களின் மதிப்பையே குறைத்துவிடுகிறது.

தோல்வி என்பது அவமானம் அல்ல. தெரியாததை, தெரியவில்லை என்று சொல்வது தவறு அல்ல. உண்மை தெரிந்தும் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதுதான் தவறு. தோல்வியை ஏற்றுக்கொள்ளாத நிலைதான் அவமானம். அப்படிப்பட்ட இழிவான நிலைக்கு நாம் செல்லக்கூடாது.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவின் அதிகாரம் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தது யார்? என்ற இரண்டு கேள்விகளைத் தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும் இயேசுவிடம் கேட்டனர். இயேசுவோ இதற்கான விடைகளைக் கூறமாட்டேன் என்று சொல்லிவிட்டார். அவர்களின் கடின மனத்தைக் குறித்தே இவ்வாறு சொன்னார். ஆனால், உண்மையில் இந்த இரண்டு கேள்விகளுக்குமான விடை இயேசுவுக்கும் தெரியும். நமக்கும் தெரியும்.

இயேசுவின் அதிகாரம் தந்தை இறைவனிடமிருந்தே வந்தது. தந்தையே விண்ணிலும், மண்ணிலும் உள்ள அனைத்தின்மீதும் இயேசுவுக்கு அதிகாரம் வழங்கினார். இந்த அதிகாரம் இரு வகைகளில் இயேசுவிடம் குடிகொண்டிருந்தது. 1. தந்தை இறைவனுடன் அவருக்கிருந்த நெருக்கம். இயேசு எப்போதும் தந்தையுடனே ஒன்றித்திருந்தார். தனது சிந்தனை, செயல் அனைத்திலும் தந்தையின் திருவுளத்தையே மனதில் கொண்டிருந்தார். தனக்கென்று தனியான திட்டங்கள் எதுவும் இயேசுவிடம் இல்லை. தந்தையின் திட்டமே இயேசுவின் திட்டம். எனவேதான், தந்தை இயேசுவைப் பெருமைப்படுத்தினார். விண்ணிலும், மண்ணிலும் உள்ள அனைத்தின்மீதும் அவருக்கு அதிகாரம் வழங்கினார் (பிலி 2:6-11).  2. இயேசுவின் வாழ்விலும், பணியிலும் எந்த முரண்பாடுகளும் இருந்ததில்லை. அவர் சொன்னதைச் செய்தார். செய்ததைப் போதித்தார். அவரிடம் யாரும் எந்தக் குற்றமும் காண முடியவில்லை. எனவே, இயேசு பிறரின் குற்றங்களை இறைவாக்கினருக்குரிய முறையில் சுட்டிக்காட்ட முடிந்தது. தந்தையுடன் நெருக்கம், முரண்பாடற்ற வாழ்வு--- இந்த இரண்டும்தான் இயேசுவின் அதிகாரத்தின் இரகசியங்கள். நாமும் இவற்றைப் பின்பற்றலாமே!
 
மன்றாடுவோம்: புகழ்ச்சிக்குரியவரான ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். உம்மிடமிருந்த அதிகாரத்தை நாங்களும் கொண்டிருக்க விரும்புகிறோம்;. எனவே, செபத்தில் தந்தை இறைவனுடன் ஒன்றிக்கவும், அவரது விருப்பப்படியே வாழவும், முரண்பாடுகள் இல்லாமல் திகழவும் அருளைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

------------------------

''யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது?
விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா?' என்று இயேசு கேட்டார்...
அவர்கள் இயேசுவிடம் 'எங்களுக்குத் தெரியாது' என்று பதிலுரைத்தார்கள்'' (மத்தேயு 21:25,27)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- திருமுழுக்கு யோவானைப் பற்றி இயேசு பல முறை குறிப்பிட்டார். அவர் ஒரு தலைசிறந்த மனிதர் என இயேசு சுட்டிக்காட்டினார். கடவுளின் பெயரால் மக்களுக்குச் செய்தி அறிவித்த யோவானை மக்கள் ஏற்கவில்லை. குறிப்பாக, யூத சமயத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்தோர் யோவானைப் புறக்கணித்தனர். யோவானைப் போலவே இயேசுவும் கடவுளாட்சி பற்றிப் பேசினார். மக்கள் மனம் மாற வேண்டும் என அழைப்பு விடுத்தார். அதுவும் யூத சமயத் தலைமைக் குருக்களுக்கும் மக்களின் மூப்பர்களுக்கும் எரிச்சலை மூட்டியது (காண்க: மத் 21:23). குறிப்பாக, யூதர்களின் மைய இடமாகிய எருசலேம் கோவிலுக்குச் சென்ற இயேசு அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களை விரட்டியடித்ததும், கோவிலில் போதித்துக் கொண்டிருந்ததும் யூத தலைவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அவர்கள் திருமுழுக்கு யோவான் பற்றி என்ன நினைத்தார்கள் என இயேசு கேட்டார். அவர்களோ ''எங்களுக்குத் தெரியாது'' என்று பதில் கூறித் தப்பிவிடலாம் என நினைக்கிறார்கள். இது உண்மையான அறியாமையா?

-- அறியாமை என்பது இருவகைப்படும். ஒன்று குற்றமற்ற அறியாமை மற்றது குற்றமுள்ள அறியாமை. குற்றமற்ற அறியாமை என்பது நாம் ஒரு பொருள் பற்றித் தெரிந்திராத தகவல் சாதாரணமாக நம்மால் தெரிந்துகொள்ள முடியாததாக இருப்பதால் எழுகிறது. ஆனால் குற்றமுள்ள அறியாமை என்பது நாம் வேண்டுமென்றே ஒரு பொருள்பற்றி அறிய முன்வராமலிருப்பதைக் குறிக்கும். இந்த இரண்டாம் வகை அறியாமையைத்தான் நாம் தலைமைக் குருக்களிடமும் மக்களின் மூப்பர்களிடமும் காண்கிறோம். அவர்கள் திறந்த மனத்தோடு கடவுளின் செய்திக்குச் செவிகொடுத்திருந்தால் யோவான் யாரென்று அறிந்திருப்பார்கள்; இயேசு யார் என்றும் அடையாளம் கண்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் உள்ளம் திறந்திருக்கவில்லை. அவர்களது இதயம் ஒருவிதத்தில் மழுங்கிப்போய் இருந்தது. இயேசுவையும் அவருடைய போதனையையும் நாம் அறிய வேண்டும் என்றால் நம் உள்ளத்தில் நேர்மை வேண்டும். நம் இதயத்தில் அன்பு வேண்டும். குற்றம் காண்கின்ற மனப்பான்மையோடு மட்டுமே நாம் வாழ்ந்தால் கடவுளின் குரல் நம் உள்ளத்தில் எதிரொலிப்பதைக் கேட்க நாம் தவறிவிடுவோம்.

மன்றாட்டு
இறைவா, எங்களுக்கு உண்மையான அறிவைத் தந்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்;

---------------------

''எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?'' (மத்தேயு 21:23)

அன்பார்ந்த இணைதள நண்பர்களே!

-- இயேசு புரிந்த அதிச செயல்களைக் கண்ட மக்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். சிலர் அந்த வியப்பு உணர்வைத் தாண்டிச் சென்று, இயேசு யார் என்னும் கேள்வியை எழுப்பினார்கள். அவர்களுள் ஒரு சிலர் இயேசு அலகையின் உதவியோடுதான் புதுமைகள் செய்கிறார் என்றார்கள். வேறு சிலரோ இயேசு கடவுளால் அனுப்பப்பட்டவர் என்னும் உண்மையைக் கண்டுகொண்டார்கள். இவர்கள்தான் இயேசுவிடத்தில் ''நம்பிக்கை கொண்டனர்''. இயேசுவை நம்புவோர் கடவுளின் வல்லமையை ஏற்கின்றனர்; முற்காலத்தில் பல மனிதர் வழியாகத் தம்மையே வெளிப்படுத்திய கடவுள் நம் காலத்தில் தம் ஒரே மகன் இயேசுவை நம் மீட்பராக அனுப்பினார் எனவும், அவர் வழியாகவே நாம் வாழ்வு பெறுகிறோம் என்பதையும் இவர்கள் அறிந்துள்ளனர். என்றாலும், இயேசு ஓர் இறைவாக்கினர் போல மக்களுக்குக் கடவுளின் திட்டத்தை அறிவித்ததால் அவரைப் பற்றி அறிய மக்கள் ஆர்வம் கொண்டிருந்தனர். இயேசுவின் செயல்பாடுகளுக்கும் பிற இறைவாக்கினருக்கும் இடையே நிலவிய ஒரு பெரிய வேறுபாடு இயேசு ''அதிகாரத்தோடு போதித்தார்'' என்பதாகும்.

-- எருசலேம் கோவிலில் வாங்குவதும் விற்பதுமாக மக்கள் இருந்ததால் அங்கே பெரிய சந்தடி நிலவியது. இயேசு இதைக் கண்டித்தார். அங்கிருந்த வியாபாரிகளையும் பிறரையும் துரத்தினார். இதைக் கண்டதும் இயேசுவின் எதிரிகள் அவரிடம் கேட்ட கேள்வி இது: ''எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?'' இதற்கு இயேசுவின் வாழ்க்கையே பதிலாக அமைந்தது எனலாம். இயேசுவின் அதிகாரம் கடவுளிடமிருந்து அவருக்கு வந்த அதிகாரம்தான். எனவே, இயேசு கடவுளின் பெயரால் மட்டும் பேசவில்லை; மாறாக, கடவுளுக்கு எந்த அதிகாரம் உரித்தானதோ அதே அதிகாரம் தமக்கும் உண்டென இயேசு அறிவித்தார். இயேசுவின் அதிகாரம் கடவுளின் திருவுளத்திற்கு அவர் அமைந்த நடந்ததால் அவருக்கு வழங்கப்பட்டது. இன்றைய திருச்சபையும் இயேசுவின் பெயரால் அதிகாரத்தோடு போதிக்க அனுப்பப்பட்டுள்ளது. திருச்சபை இருப்பதும் வாழ்வதும் தனக்காகவல்ல, மாறாக, இயேசுவின் வழியாகக் கடவுள் தம்மை வெளிப்படுத்தினார் என்னும் உண்மைக்குச் சான்று பகர திருச்சபை அழைக்கப்படுகிறது. திருச்சiபின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் இப்பொறுப்பில் பங்குண்டு.

மன்றாட்டு
இறைவா, இயேசுவை உறுதியான உள்ளத்தோடு ஏற்றிட எங்களுக்கு அருள்தாரும்.

-அருட்திரு பவுல் லியோன் வறுவேல்