முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 5: 1-7

என் நண்பரைக் குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன். செழுமைமிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது. அவர் அதை நன்றாகக் கொத்திக் கிளறிக் கற்களைக் களைந்தெடுத்தார்; நல்ல இனத் திராட்சைக் கொடிகளை அதில் நட்டுவைத்தார்; அவற்றைக் காக்கும் பொருட்டுக் கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்; திராட்சைப் பழம் பிழிய ஆலை ஒன்றை அமைத்தார்; நல்ல திராட்சைக் குலைகள் கிட்டும் என எதிர்பார்த்துக் காத்திருந்தார்; மாறாக, காட்டுப் பழங்களையே அது தந்தது. இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்; எருசலேமில் குடியிருப்போரே, யூதாவில் வாழும் மனிதரே, எனக்கும் என் திராட்சைத் தோட்டத்திற்கும் இடையே நீதி வழங்குங்கள். என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யாது நான் விட்டு விட்டதும் இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ? நற்கனிகளைத் தரும் என்று நான் காத்திருக்க, காட்டுப் பழங்களை அது தந்ததென்ன? என் திராட்சைத் தோட்டத்திற்குச் செய்யப் போவதை உங்களுக்கு நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்: ``நானே அதன் வேலியைப் பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்; அதன் சுற்றுச் சுவரைத் தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும். நான் அதைப் பாழாக்கி விடுவேன்; அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை; களையை அகற்ற மண் கொத்தப் படுவதுமில்லை; நெருஞ்சியும், முட்புதர்களுமே அதில் முளைக்கும்; அதன்மீது மழை பொழியாதிருக்க மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.'' படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே; அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று யூதா மக்களே; நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்; ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி; நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்; ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 80: 8,11. 12-13. 14-15. 18-19
பல்லவி: ஆண்டவரது திராட்சைத் தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே.

8 எகிப்தினின்று திராட்சைக் கொடி ஒன்றைக் கொண்டு வந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர்.
11 அதன் கொடிகள் கடல் வரையும் அதன் தளிர்கள் பேராறு வரையும் பரவின. பல்லவி

12 பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச் செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!
13 காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன. பல்லவி

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்தத் திராட்சைக் கொடிமீது பரிவு காட்டும்!
15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்ந்த மகவைக் காத்தருளும்! பல்லவி

18 இனி நாங்கள் உம்மை விட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.
19 படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 6-9

சகோதரர் சகோதரிகளே, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும். இறுதியாக, சகோதரர் சகோதரிகளே, உண்மையானவை எவையோ, கண்ணியமானவை எவையோ, நேர்மையானவை எவையோ, தூய்மையானவை எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுதற்கு உரியவை எவையோ, நற்பண்புடையவை எவையோ, போற்றுதற்குரியவை எவையோ, அவற்றையே மனத்தில் இருத்துங்கள். நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்டவை, என் வழியாய்ப் பெற்றுக்கொண்டவை, என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்வில் நீங்கள் கண்டுணர்ந்தவை யாவற்றையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும் கடவுள் உங்களோடு இருப்பார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். அல்லேலூயா.

 

மத்தேயு 21:33-43

ஆண்டின் பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு

நற்செய்தி வாசகம்

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 33-43


அக்காலத்தில் இயேசு தலைமைக் குருக்களையும் மக்களின் மூப்பர்களையும் நோக்கிக் கூறியது: ``மேலும் ஓர் உவமையைக் கேளுங்கள்; நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டம் போட்டு, சுற்றிலும் வேலி அடைத்து, அதில் பிழிவுக் குழி வெட்டி, ஒரு காவல் மாடமும் கட்டினார்; பின்பு தோட்டத் தொழிலாளர்களிடம் அதைக் குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார். பழம் பறிக்கும் காலம் நெருங்கி வந்தபோது அவர் தமக்குச் சேரவேண்டிய பழங்கiளைப் பெற்று வரும்படி தம் பணியாளர்களை அத்தோட்டத் தொழிலாளர்களிடம் அனுப்பினார். தோட்டத் தொழிலாளர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து, ஒருவரை நையப் புடைத்தார்கள்; ஒருவரைக் கொலை செய்தார்கள்; ஒருவரைக் கல்லால் எறிந்தார்கள். மீண்டும் அவர் முதலில் அனுப்பியவர்களை விட மிகுதியான வேறு சில பணியாளர்களை அனுப்பினார். அவர்களுக்கும் அப்படியே அவர்கள் செய்தார்கள். தம் மகனை மதிப்பார்கள் என்று அவர் நினைத்துக்கொண்டு அவரை இறுதியாக அவர்களிடம் அனுப்பினார். அம்மகனைக் கண்டபோது தோட்டத் தொழிலாளர்கள், `இவன்தான் சொத்துக்கு உரியவன்; வாருங்கள், நாம் இவனைக் கொன்றுபோடுவோம்; அப்போது இவன் சொத்து நமக்குக் கிடைக்கும்' என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். பின்பு அவர்கள் அவரைப் பிடித்து, திராட்சைத் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்று போட்டார்கள். எனவே, திராட்சைத் தோட்ட உரிமையாளர் வரும்போது அத்தொழிலாளர்களை என்ன செய்வார்?'' என இயேசு கேட்டார். அவர்கள் அவரிடம், ``அத்தீயோரை ஈவிரக்கமின்றி ஒழித்து விடுவார்; உரிய காலத்தில் தமக்குச் சேரவேண்டிய பங்கைக் கொடுக்க முன்வரும் வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக் குத்தகைக்கு விடுவார்'' என்றார்கள். இயேசு அவர்களிடம், `` `கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது; நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!' என்று நீங்கள் மறைநூலில் ஒருபோதும் வாசித்தது இல்லையா? எனவே உங்களிடமிருந்து இறையாட்சி அகற்றப்படும்; அவ்வாட்சிக்கு ஏற்ற முறையில் செயல்படும் ஒரு மக்களினத்தார் அதற்கு உட்படுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

01.03.2024 வெள்ளி
புறக்கணிப்பற்றவர்களாய் ...
மத் 21 : 33 - 43, 45-46

புறக்கணிப்பு என்பது நம்முடைய சமுதாயத்திலே தொடர்ந்து நடைபெறக்கூடிய செயலாக மாறிவிட்டது. ஒருசிலர் மொழி, மதம், இனத்தினால் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இன்னொருபுறம் பொருளாதார அடிப்படையில் புறக்கணிக்கப்படுகின்றார்கள். மற்றொருபுறம் பார்க்கின்றபோது சமுதாய அடிப்படையில் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இவ்வாறு புறக்கணிப்பு என்பது அன்றாட செயல்பாடாகவே மாறிவிட்டது. சிக்மண்ட் ப்ராய்டு உளவியல் சிந்தனையாளர் கூறுவார் ‘ஒருவன் மற்றவனை புறக்கணிக்க காரணம் ஏற்றத்தாழ்வு அல்ல மாறாக என்னைப்போன்று வளர்ந்து விடக்கூடாது என்ற எண்ணம் என்பார்.

இத்தகைய புறக்கணிப்பைத்தான் இன்றைய வாசகங்கள் நமக்கு சுட்டிக்காட்டுகின்றன. முதல் வாசகத்தில் யோசேப்பு தன் சொந்த சகோதரர்களால் புறக்கணிக்கப்படுகின்றார். அதனால் அவர்கள் எத்தகைய விளைவை சந்தித்தார்களென்று விவிலியம் நமக்கு சான்றுபகர்கிறது. நற்செய்தி வாசகத்திலே இயேசு புறக்கணிக்கப்படுகின்றார். இயேசு தன்னை சுட்டிக்காட்டியே இந்த உவமையை துவங்குகின்றார். ஏனென்றால் தான் எவ்வாறெல்லாம் இந்த மக்களால் புறக்கணிக்கப்பட இருக்கிறார் என்பதனை முழுமையாக இயேசு அறிந்திருந்தார். இவை அனைத்திற்குமே காரணம் நான் என்ற அகந்தை. ஏனென்றால் ஒருபுறம் தலைமைக்குருக்கள் தாங்கள் பெரியவர்கள் என்ற கண்ணோட்டத்தில் மிதக்கின்றார்கள். இன்னொருபுறம் பரிசேயர்கள். இத்தகைய நான் என்ற தீராத பசி இயேசு புறக்கணிக்கப்பட காரணமாக அமைகிறது.

நாம் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு வாழ்கிறோமா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

===========================

மத்தேயு 21: 33 – 43, 45 - 46
புறக்கணிப்பு

நாம் வாழும் இந்த சமுதாயத்திலே புறக்கணிப்பு என்பது இருந்து கொண்டேயிருக்கிறது. பெண்கள் பலவீனமானவர்கள் என்பதனால், ஏழைகள் இல்லாவதர்கள் என்பதனால், விவசாயிகள் குறைவான மதிப்புள்ள தொழில் புரிபவர்கள் என்பதனால். ஆனால் இவற்றை மறு ஆய்வு செய்து பார்த்தால் இவர்கள் தான் கடவுளின் பார்வையில் விலையுயர்ந்த மனிதர்கள். இந்த உலகம் மீட்படைய கடவுள் முதலில் ஒரு பெண்ணைத்தான் தோ்வு செய்தார். பிறப்பின் முதல் செய்தி ஏழை. எளிய வாழ்வு நடத்திய இடையர்களுக்குத் தான் முதன் முதலில் அறிவிக்கப்பட்டது. மக்களுக்கு உவமையை எடுத்துரைக்க விவசாயத்தைத் தான் தெரிவு செய்தார். நாம் எவற்றை புறக்கணிக்கிறோமோ கடவுள் அவற்றைத் தான் தோ்வு செய்கிறார்.

அது போல தான் இன்றைய வாசகங்களிலும் இத்தகைய புறக்கணிப்பை நாம் பார்க்கின்றோம். முதல் வாசகத்தில் யாக்கோபை தன் சொந்த சகோதரர்கள், தன் சொந்த விருப்பங்களுக்காக புறக்கணிக்கின்றார்கள். ஆனால் கடவுள் பஞ்ச காலத்திலும் அவருக்கு உணவளித்து ஆசீர்வதிக்கின்றார். அது போல தான் நற்செய்தி வாசகத்தில் இயேசு புறக்கணிக்கப்படுகின்றார். ஏனென்றால் அவர் புதுமைகள் செய்கின்றார். உரோமை பேரரசை எதிர்க்கின்றார். மக்களுக்கு போதித்து அவர்களின் நெறிதவறிய வாழ்வை சீர்படுத்துகின்றார். எனவே தான் பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் அவரை எப்படியாவது ஒழித்து விட வேண்டும் என எண்ணி அவரை புறக்கணிக்கின்றார்கள். அவரை சிலுவைச் சாவுக்கு இழுத்துக் கொண்டு செல்கின்றார்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிர்பெறச் செய்து புதுவாழ்வினை கொடுக்கின்றார். இதனால் தான் கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டிடத்தின் மூலைக்கல் ஆயிற்று என்று இயேசு கூறி அவர்களுக்கு பாடம் புகட்டுகின்றார்.

நாம் சிந்திப்போம், நாம் கடவுள் முன்னிலையில் மதிக்கப்பட வேண்டுமென்றால், மற்றவர்களை ஏற்றுக் கொள்வோம். புறக்கணிக்கப்பட வேண்டுமென்றால், மற்றவர்களை புறக்கணிப்போம்.

- அருட்பணி. பிரதாப்

========================

திருப்பாடல் 80: 8 – 11, 12 – 13, 14 – 15, 18 – 19
”படைகளின் ஆண்டவரே! மீண்டும் வாரும்”

திருப்பாடல்களில் பெரும்பான்மையான பாடல்கள் விண்ணப்பங்களாகவும், தங்களது துன்பத்தை வெளிப்படுத்தும் பாடலாகவும் அமைந்துள்ளன. இந்த பாடலும் இதிலிருந்து விதிவிலக்கான பாடல் அல்ல. ஆண்டவரின் உதவியைக் கேட்கிற ஒரு மனிதரின் கேவல் குரலாக இந்த பாடல் அமைந்துள்ளது. இது மன்னிப்பாகவும் வெளிப்படுகிறது. இஸ்ரயேலின் ஆண்டவர் அவர்களுக்கு பலவிதமான நன்மைகளைச் செய்தார். அந்த நன்மைகளை எல்லாம் மறந்துவிட்டு, இஸ்ரயேல் தவறான பாதைக்குச் சென்றது. அதற்கான பலன்களை மிக விரைவிலேயே பெற்றுக்கொண்டது.

உண்மை உரைத்தவுடன், வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கச்செய்கிறது. அதனுடைய விளைவு: மீண்டும் கடவுளிடம் திரும்பி, திருந்தி வர வேண்டும் என்கிற எண்ணம். அந்த எண்ணத்தைத்தான் இங்கு நாம் பார்க்கிறோம். கடவுள் செய்த நன்மைகளையெல்லாம் மறந்தவிட்டதற்கான் தண்டனையாக இப்போதுள்ள நிலையை, ஆசிரியர் பார்க்கிறார். இப்போது இருக்கிற மோசமான நிலைக்கு தாங்கள் முழுக்க தகுதியானவர்கள் என்பதும் ஆசிரியரின் கருத்தில் வெளிப்படுகிறது. ஆனாலும், கடவுள் தங்களை கனிவோடு மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், தங்கள் மீது அன்பு காட்ட வேண்டும் எனவும் இந்த பாடல் நமக்கு அழைப்புவிடுக்கிறது.

நமக்கு தேவை என்றவுடன் கடவுளைப் பயன்படுத்துவதும், இல்லையென்றால், கடவுளை புறக்கணிப்பதும் மோசமான செயலாகும். இறைவனோடு இருப்பதே நமக்கு மகிமை. அதுதான் நம்முடைய அடையாளம். அதுதான் நமக்கான சிறப்பு. அதனை நாம் முழுமையாக அர்ப்பண உள்ளத்தோடு வாழ்ந்திட மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

பொறுப்பு

இஸ்ரயேல் நாடு கடவுளின் திராட்சைத்தோட்டமாகப் பார்க்கப்பட்டது. ”படைகளின் ஆண்டவரது திராட்சைத்தோட்டம் இஸ்ரயேல் குடும்பத்தாரே” (எசாயா 5: 7). திராட்சைத்தோட்டங்கள் கரடிகளிடமிருந்தும், திருடர்களிடமிருந்தும் காப்பாற்றப்பட முள்வேலிகளால் அடைக்கப்பட்டிருந்தது. அதேபோல திராட்சைப்பழங்களிலிருந்து திராட்சைச்சாறு எடுக்க, ஒவ்வொரு திராட்சைத்தோட்டங்களிலும் குழிகள் வெட்டப்பட்டிருந்தன. அதேபோல திருடர்களைக்கண்காணிக்கவும், வேலைசெய்கிறவர்கள் தங்கவும் கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இயேசு வாழ்ந்த காலத்தில் பாலஸ்தீனம் வசதி வாய்ப்புகளற்ற ஒரு பகுதியாக இருந்தது. பணக்காரர்கள், வசதி படைத்தவர்கள் தங்க இயலாத இடமாக அது இருந்தது. எனவே, நிலக்கிழார்கள் திராட்சைத்தோட்டத்தை யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு, குத்தகைப்பணம் வாங்குவதில் மட்டும் தான் குறியாக இருந்தனர். குத்தகைப்பணம் மூன்று வகைகளில் ஏதாவது ஒன்றில் பெறப்பட்டது. பணமாகவோ, திராட்சைப்பழங்களாகவோ, விளைச்சலில் குறிப்பிட்டப்பகுதியாகவோ பெறப்பட்டது. இயேசு இந்த நற்செய்தியை சமயத்தலைவர்களுக்கு சொல்கிறார். அதாவது, எவ்வாறு இஸ்ரயேலை ஆண்டுவந்த தலைவர்கள் இறைவாக்கினர்களுக்குச்செவிசாய்க்காமல், இறுதியில் அவருடைய ஒரே மகனையே கொல்ல இருக்கிறார்கள் என்பதை இந்த உவமை நமக்கு அறிவிக்கிறது.

நாம் தான் பொறுப்பாளிகள் என்பதற்காக, நாம் நினைத்ததைச் செய்துவிடக்கூடாது. உயர்ந்த பொறுப்பு இருக்கிறவர்களுக்கு அதிகக்கடமையும் இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த பொறுப்புக்கேற்ற நம் வாழ்வையும், கடமை உணர்வோடு வாழ வேண்டும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

கொடிய தொழிலாளர்கள்!

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

கொடிய குத்தகைதாரர் உவமை என்று அழைக்கப்படும் இந்த உவமை வழியாக இயேசு தம்மை ஏற்க மறுத்த பரிசேயர்கள், குருக்கள் மற்றும் ய+தர்களின் நிலையை எடுத்துரைக்கிறார். உவமையில் வருகின்ற தொழிலாளர்கள் கண்மூடித்தனமாக வகையில் செயல்பட்டுள்ளனர் என்;பது கண்கூடு. அவர்களுடைய அறியாமை அவர்களை நிலக்கிழாருக்கெதிராக சதி செய்யத் துhண்டுகிறது. அவர்களின் நன்றியற்ற தன்மை நிலக்கிழாரின் மகனையே கொல்லத்துணிகிற அளவுக்கு அவர்களின் பார்வையைப் பறிக்கிறது. இறுதியில், அவர்கள் தண்டனை பெறுகிறார்கள்.

இந்த உவமையை நம் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் யார்? நாம்தான் அந்த கொடிய தொழிலாளர்கள். இறைவன் நமக்கு விடுக்கின்ற பல்வேறு செய்திகளையும், செய்தியாளர்களையும் நாம் புறக்கணிக்கிறோம். இறைத் திருவுளத்துக்கு எதிராக நடக்கிறோம். இறைவார்த்தையைப் புறக்கணிக்கிறோம். நன்றியற்ற முறையில் வாழ்கிறோம். இறைவனைப் புறக்கணிக்கிறோம். அதன் விளைவாக நிறைவாழ்வை இழக்கவிருக்கிறோம். இன்றே நாம் இதை உணர்ந்துகொள்வோமா?

மன்றாடுவோம்: நிறைவின் நாயகனே இறைவா, உம்மால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களாகிய நாங்கள் உம்மைப் புறக்கணித்து, நன்றியற்ற வகையில் வாழ்வதற்காக வருந்துகிறோம். மன்னியும். அன்றாடம் நீர் தரும் செய்திகளை, அழைப்புகளை ஏற்று செவிசாய்த்து வாழ உமது ஞானத்தைத் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருள்தந்தை குமார்ராஜா

----------------

 

''நிலக்கிழார் ஒருவர் தோட்டத் தொழிலாளர்களிடம் தோட்டத்தைக்
குத்தகைக்கு விட்டுவிட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்'' (மத்தேயு 21:33)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- தோட்டத்தில் வேலை செய்து காய்கறிகளைப் பயிரிடுவதும் மலர்களை முகிழச் செய்வதும் மனத்திற்கு இதமான பொழுதுபோக்காகவோ தொழிலாகவோ இருக்கலாம். இயேசு வாழ்ந்த பாலஸ்தீன நாட்டில் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்து பழங்களைக் கனியச் செய்யும் தொழில் சாதாரணமாக நடந்துவந்தது. அதுவே இயேசுவின் வாயில் ஓர் அழகிய உவமையாக உருவெடுக்கிறது. தோட்டத் தொழிலாளர்களிடம் தம் தோட்டத்தைக் குத்தகைக்கு விட்டுவிட்டுப் பயணமாகிச் செல்கிறார் நிலக்கிழார் ஒருவர். அவர் உரிய காலத்தில் பழங்களைப் பெற்றுவரும்படி அனுப்பிய தூதர்களை அக்குத்தகைக்காரர்கள் துன்புறுத்திக் கொன்றுபோடுகிறார்கள். ஏன், நிலக்கிழாரின் சொந்த மகனையே அவர்கள் கொலைசெய்துவிடுகின்றனர். இயேசு இந்த உவமையைத் தம்மைப் பற்றியே கூறினார். அவர்தான் அனுப்பப்பட்ட ''மகன்''. அவரைத்தான் மக்கள் தோட்டத்திற்கு வெளியே தள்ளிக் கொன்றுபோட்டார்கள் (மத் 21:39). இது இயேசு எருசலேம் நகருக்கு வெளியே சிலுவையில் அறையப்பட்டுக் கொல்லப்பட்டதைக் குறிக்கிறது. இவ்வாறு கொடிய மனத்தோடு செயல்பட்ட அக்குத்தகைக்காரர்களிடமிருந்து ''இறையாட்சி அகற்றப்பட்டு, வேறு மக்களினத்தாரிடம் கொடுக்கப்படும்'' என இயேசு கூறுகிறார்.

-- இஸ்ரயேல் மக்கள் பிரமாணிக்கமற்ற விதத்தில் நடந்துகொண்டதால் அவர்களிடமிருந்து இறையாட்சி எடுக்கப்பட்டு, பிற இனத்தாரிடம் கொடுக்கப்படும் என இயேசு கூறியதை நாம் நமக்குப் பொருத்திப் பார்க்கலாம். நம் கையில் ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்துவிட்டு கடவுள் ''பயணம் போகிறார்'' என நாம் ஒருவிதத்தில் கூறலாம். ஆனால் கடவுள் நம்மைத் தேடி மீண்டும் வரவிருக்கின்றார். அப்போது நாம் என்ன கணக்கு ஒப்புவிப்போம்? நம்மிடம் பொறுப்பாகத் தரப்பட்ட ''தோட்டத்தை'' நாம் நல்முறையில் பண்படுத்தி, அதிலிருந்து பலன் கொணர்ந்தோமா? அல்லது நம் தோட்டத்தைத் தரிசாக விட்டுவிட்டோமா? நாம் கொணர்கின்ற பலன் கடவுளுக்கு உரியது. ஏனென்றால் அவருடைய அருளின்றி நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. இவ்வாறு நாம் பொறுப்புடைய மனிதராக வாழ்ந்தால் கடவுள் நமக்கு வாக்களிக்கின்ற பேரின்பம் நமதாகும்.

மன்றாட்டு
இறைவா, எங்களுக்குக் கொடைகள் பல அளித்த உமக்கு நாங்கள் எப்போதும் நன்றியறிந்திருக்கச் செய்தருளும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

 

''வேறு தோட்டத் தொழிலாளர்களுக்கு அத்திராட்சைத் தோட்டத்தைக்
குத்தகைக்கு விடுவார்'' (மத்தேயு 21:41)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- கடவுளின் திராட்சைத் தோட்டம் பரந்து விரிந்த இப்பாருலகைக் குறிப்பதாகக் கொள்ளலாம். இத்தோட்டத்தின் பொறுப்பு மனிதரின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தோட்டத்தைப் பண்படுத்தி, அதில் தரமான செடிகளை நட்டு, அவற்றிற்கு உரமிட்டு, நீர்ப்பாய்ச்சிக் கண்காணித்து, செழிப்பான விளைச்சலைக் கொணர்கின்ற பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளது. பொறுப்பற்ற விதத்தில் செயல்படுவோர் தண்டனைக்கு உள்ளாவர்; ஆனால் பொறுப்பாகச் செயல்படுவோர் கடவுளிடமிருந்து கைம்மாறு பெறுவர். உலகத்தின் பொறுப்பு மனிதரிடம் உள்ளது என்றால் அவ்வுலகத்தை அவர்கள் தங்கள் விருப்பம்போல, மனம்போன போக்கில் சுறண்டலாம் என்று பொருளாகாது. இவ்வுலகத்தின் வளங்கள் எல்லைக்கு உட்பட்டவையே. நிலத்தின் கீழ் உள்ள தாதுப்பொருள்களும், எண்ணெய் வளங்களும் தோண்டத் தோண்ட வந்துகொண்டே இருக்கும் என நாம் நினைத்தலாகாது. அதுபோலவே, சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்ற நச்சுப் பொருள்களை நாம் உற்பத்திசெய்துகொண்டே இருக்கலாம் என நினைப்பதும் பொறுப்பற்ற சிந்தனையே.

-- இயற்கையைப் பொறுப்போடு பராமரிக்க வேண்டும் என்பதோடு மனித சமுதாயத்தையும் நாம் கடவுளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்பது தெளிவு. மனிதரிடையே நிலவ வேண்டிய உறவுகள் அன்பு, நீதி ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டுமே ஒழிய அதிகாரம் அடக்குமுறை போன்ற எதேச்சைப் போக்குக்கு அங்கே இடமில்லை. ''உரிய காலத்தில்'' கனி வழங்கும் பொறுப்பு நம்மிடம் தரப்பட்டுள்ளதால் அப்பொறுப்பைச் சரிவர நிறைவேற்றினால் நாம் திராட்சைத் தோட்ட உரிமையாளராகிய கடவுளின் ஆட்சியில் பங்கேற்கும் அருளைக் கடவுளே நமக்குத் தருவார் (மத் 21:43).

மன்றாட்டு
இறைவா, உம் தோட்டத்தில் பணிசெய்ய எங்களை அழைத்ததற்கு நன்றி!

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்