முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 45: 1, 4-6

சைரசுக்கு ஆண்டவர் திருப்பொழிவு செய்துள்ளார்; பிற இனத்தாரை அவர்முன் அடிபணியச் செய்வார். அரசர்களை அவர்முன் ஆற்றல் இழக்கச் செய்வார்; கோட்டை வாயில்களை அவர்முன் பூட்டியிராது திறந்திருக்கச் செய்வார்; அவரது வலக் கையை உறுதியாகப் பற்றிப் பிடித்துள்ளார்; அவரிடம் ஆண்டவர் கூறுவது இதுவே: என் ஊழியன் யாக்கோபை முன்னிட்டும் நான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் பொருட்டும் பெயர் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ என்னை அறியாதிருந்தும் உனக்குப் பெயரும் புகழும் வழங்கினேன். நானே ஆண்டவர்; வேறு எவருமில்லை; என்னையன்றி வேறு கடவுள் இல்லை; நீ என்னை அறியாதிருந்தும் உனக்கு வலிமை அளித்தேன். கதிரவன் உதிக்கும் திசை தொடங்கி மறையும் திசை வரை என்னையன்றி வேறு எவரும் இல்லை என்று மக்கள் அறியும்படி இதைச் செய்கிறேன்; நானே ஆண்டவர்; வேறு எவரும் இல்லை.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 96: 1,3. 4-5. 7-8. 9-10
பல்லவி: மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.

1 ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, ஆண்டவரைப் போற்றிப் பாடுங்கள்;
3 பிற இனத்தார்க்கு அவரது மாட்சியை எடுத்துரையுங்கள்; அனைத்து மக்களினங்களுக்கும் அவர்தம் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். -பல்லவி

4 ஆண்டவர் மாட்சிமிக்கவர்; பெரிதும் போற்றத் தக்கவர்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர் அவரே.
5 மக்களினங்களின் தெய்வங்கள் அனைத்தும் வெறும் சிலைகளே; ஆண்டவரோ விண்ணுலகைப் படைத்தவர். -பல்லவி

7 மக்களினங்களின் குடும்பங்களே, ஆண்டவருக்குச் சாற்றுங்கள்; மாட்சியையும் ஆற்றலையும் ஆண்டவருக்குச் சாற்றுங்கள்.
8 ஆண்டவரின் பெயருக்குரிய மாட்சியை அவருக்குச் சாற்றுங்கள்; உணவுப் படையல் ஏந்தி அவர்தம் கோவில் முற்றங்களுக்குள் செல்லுங்கள். -பல்லவி

9 தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுங்கள்; உலகெங்கும் வாழ்வோரே, அவர் திருமுன் நடுங்குங்கள்.
10 வேற்றினத்தாரிடையே கூறுங்கள்: ஆண்டவரே ஆட்சி செய்கின்றார்; அவர் மக்களினங்களை நீதி வழுவாது தீர்ப்பிடுவார். -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 1-5

தந்தையாம் கடவுளோடும் ஆண்டவராம் இயேசு கிறிஸ்துவோடும் இணைந்து வாழ்கின்ற தெசலோனிக்க சபைக்கு, பவுலும் சில்வானும் திமொத்தேயுவும் எழுதுவது: உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! நாங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இடைவிடாது உங்களை நினைத்து உங்கள் அனைவருக்காகவும் என்றும் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். செயலில் வெளிப்பட்ட உங்கள் நம்பிக்கையையும், அன்பினால் உந்தப்பட்ட உங்கள் உழைப்பையும், ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை எதிர்நோக்கி இருப்பதால் நீங்கள் பெற்றுள்ள உங்கள் மனவுறுதியையும் நம் தந்தையாம் கடவுள்முன் நினைவுகூருகிறோம். கடவுளின் அன்புக்குரிய சகோதரர் சகோதரிகளே! நீங்கள் தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஏனெனில் நாங்கள் நற்செய்தியை உங்களுக்கு வெறும் சொல்லளவிலன்றி, தூய ஆவி தரும் வல்லமையோடும் மிகுந்த உள்ள உறுதியோடும் கொண்டு வந்தோம்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வின் வார்த்தையைப் பற்றிக்கொள்ளுங்கள். உலகில் ஒளிரும் சுடர்களாகத் துலங்குவீர்கள். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மத்தேயு 22:15-21

போதுக்காலம் 29ஆம் ஞாயிறு,

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 15-21

அக்காலத்தில் பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாம் எனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை ஏரோதியருடன் அவரிடம் அனுப்பி, ``போதகரே, நீர் உண்மையுள்ளவர்; எவரையும் பொருட் படுத்தாமல் கடவுளின் நெறியை உண்மைக்கேற்பக் கற்பிப்பவர்; ஆள் பார்த்துச் செயல்படாதவர் என்பது எங்களுக்குத் தெரியும். சீசருக்கு வரி செலுத்துவது முறையா? இல்லையா? நீர் என்ன நினைக்கிறீர் என எங்களுக்குச் சொல்லும்'' என்று அவர்கள் கேட்டார்கள். இயேசு அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்துகொண்டு, ``வெளி வேடக்காரரே, ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்? வரி கொடுப்பதற்கான நாணயம் ஒன்றை எனக்குக் காட்டுங்கள்'' என்றார். அவர்கள் ஒரு தெனாரியத்தை அவரிடம் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்களிடம், ``இதில் பொறிக்கப்பட்டுள்ள உருவமும் எழுத்தும் யாருடையவை?'' என்று கேட்டார். அவர்கள், ``சீசருடையவை'' என்றார்கள். அதற்கு அவர், ``ஆகவே சீசருக்கு உரியவற்றைச் சீசருக்கும் கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' என்று அவர்களிடம் கூறினார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------------------------

திருப்பாடல் 96: 1, 3, 4, 5, 7 – 8, 9 – 10அ, (7ஆ)
”தூய கோலத்துடன் அவரை வழிபடுங்கள்”

தூய கோலத்துடன் ஆண்டவரை வழிபடுவதற்கு ஆசிரியர் அழைப்புவிடுக்கிறார். இந்த திருப்பாடல்களில் வேற்றுத்தெய்வங்களைப் பற்றிய செய்தியும் நமக்கு தரப்படுகிறது. இரண்டிற்கும் இடையேயான தொடர்பு என்ன? இஸ்ரயேல் மக்கள் தங்களை வழிநடத்திய இறைவனை மறந்து வேற்றுத்தெய்வங்களுக்கு ஆராதனை செலுத்தினர். அது மட்டுமல்ல, வேற்றுத்தெய்வங்களுக்கு ஆராதனை செலுத்துகிற அவர்கள் யாவே இறைவனையும் வணங்கினார்கள். இஸ்ரயேல் மக்கள் தூய்மையை அதிகமாக வலியுறுத்துகிறவர்கள். தூய்மையற்ற மனதோடு கடவுளுக்கு வழிபாடு செய்யக்கூடாது என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வந்தனர்.

இப்படிப்பட்ட நம்பிக்கை கொண்ட மக்கள் வேற்றுத்தெய்வங்களுக்கும், யாவே இறைவனுக்கும் ஒரே நேரத்தில் ஆராதனை செலுத்துவது, வேற்று தெய்வங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டனர் என்பதற்கான அத்தாட்சி. ஒருவேளை வேற்றுத்தெய்வத்திற்கு ஆராதனை செலுத்துவது தவறு என்பது தெரிந்திருந்தால், அவர்களை குற்ற உணர்ச்சி ஆட்கொண்டிருக்கும். கடவுளுக்கு ஆராதனை செலுத்துவதற்கு அவர்களுடைய மனம் இடம் தந்திருக்காது. இங்கே அடுத்த தெய்வங்களையும் ஏற்றுக்கொண்டதினால், அவர்களுக்கு எந்த பாவ மனநிலையோ, குற்ற உணர்ச்சியோ இல்லை. அதைத்தான், ஆசிரியர் தவறு என்று சுட்டிக்காட்டுகிறார். இறைவனிடத்தில் பிரமாணிக்கமாக இருக்கவும், அவரை ஏற்று வாழவும், அவருக்கு உண்மையான தூய உள்ளத்துடன் ஆராதனை செலுத்தவும் இந்த திருப்பாடல் அழைப்புவிடுக்கிறது.

நம்முடைய வாழ்வில் அன்பு செய்கிற இறைவனை, இரக்கம் காட்டுகிற இறைவனை, மன்னிப்பு வழங்குகிற இறைவனை நாமும் அன்பு செய்கிறோமா? என்று சிந்தித்துப் பார்ப்போம். இறைவனுக்கு உண்மையானவர்களாக வாழ அருள்வேண்டி மன்றாடுவோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

இறைவனுக்குப் பிரமாணிக்கமாய் இருப்போம்

இயேசுவின் காலத்திலே பாலஸ்தீனம் உரோமையர்களுக்கு அடிமை நாடாக இருந்தது.  ஒவ்வொரு யூதக்குடிமகனும் மூன்று வகையான வரிகளைச்செலுத்த வேண்டியிருந்தது. முதலில் நிலவரி (Ground Tax). நிலத்திலிருந்து பெறப்படும் விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு உரோமையர்களுக்கு வரியாக செலுத்த வேண்டியிருந்தது. இரண்டாவது வருமான வரி(Income Tax). வருமானத்தில் ஒரு சதம் உரோமையர்களுக்கு செலுத்த வேண்டிய வரி. மூன்றாவது, ஆள் வரி (Poll Tax).  14 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆண்மகனுக்கும், 12 வயது முதல் 65 வயது வரை உள்ள பெண்களும் ஒரு தெனாரியம் வரியாக செலுத்த வேண்டும். இங்கே நற்செய்தியில் விவாதிக்கப்படுவது ஆள்வரி(Poll Tax).

வரி செலுத்துவதில் என்ன குற்றம் காண முடியும்? அல்லது என்ன விவாதம் இருக்க முடியும்? என்று கேட்கலாம். யூதர்களைப்பொறுத்தவரையில் அவர்கள் அரசராக ஏற்றுக்கொள்வது கடவுளை மட்டும்தான். வேறு யாரையும் அரசராக ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் உரோமையர்களுக்கு அடிமை நிலையில் இருப்பதால், வேறு வழியில்லாமல் ஒரு சிலவற்றை ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும், உள்ளத்தில் அவர்கள் கடவுளைத்தவிர வேறு எவரையும் அரசராக ஏற்றுக்கொள்வதில்லை. வரி செலுத்துவது என்பது ஒருவரை அவருடைய நிலையில் ஏற்றுக்கொள்வதற்கு சமம். இங்கே ஆள்வரியை செலுத்தினால், உரோமை அரசரை அரசராக ஏற்றுக்கொண்டதற்கு சமம். வரி செலுத்தலாம் என்றால், மக்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரி செலுத்தக்கூடாது என்றால், உரோமையர்களிடம் இயேசுவைக் குற்றப்படுத்தலாம். ஆனால், இயேசுவின் பதில் அவர்களை வியக்க வைக்கிறது.

நாம் எப்போதுமே கடவுளுக்கு உரியவர்கள் என்ற எண்ணம் நமக்கு வேண்டும். கடவுள் நம் ஒவ்வொருவரையும் தனது அன்புப்பிள்ளைகளாக தேர்ந்தெடுத்து இருக்கிறார். நம் ஒவ்வொருவரையும் கண்ணின் மணி போல காத்து வருகிறார். நம்மை தந்தையாக இருந்து காத்துவரும் நம் ஆண்டவர்க்கு பிரமாணிக்கமாய் இருக்கும் அருள் வேண்டுவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

''சீசருக்கு உரியவற்றை சீசருக்கும்
கடவுளுக்கு உரியவற்றைக் கடவுளுக்கும் கொடுங்கள்'' (மத்தேயு 22:21)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- சீசர் என்றும் கடவுள் என்றும் இயேசு வேறுபடுத்திக் கூறுகிறார் எனப் பொருள்கொண்டு அரசியலுக்கும் சமயத்திற்கும் இடையே உறவு இருக்கக் கூடாது என்று இயேசுவின் சொற்களுக்குச் சிலர் தவறாகப் பொருள்விளக்கம் தருவதுண்டு. அரசியலில் சமயக் கருத்துக்கள் நுழையும்போது சமயச் சார்பற்ற தன்மை ஆபத்துக்கு உள்ளாகக் கூடும் என்பது தெளிவு. அதே நேரத்தில், கடவுள் மனிதரிடம் எதிர்பார்க்கின்ற நற்பண்புகள் அரசியலில் துலங்கவேண்டும் என்பதையும் நாம் மறத்தலாகாது. எனவேதான் காந்தியடிகள் சமயத்தில் ஊன்றியிராத அரசியல் மக்களைச் சுறண்டுகின்ற அரசியலாகும் என்றார். உரோமைப் பேரரசர்களுக்கு ''சீசர்'' என்னும் சிறப்புப் பெயர் உண்டு. அதற்கு ''அரசர்'' என்று பொருள். இயேசுவின் காலத்தில் பாலஸ்தீனப் பகுதி உரோமையரின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. எனவே, உரோமைக்கு வரிசெலுத்தப் பயன்படுத்தப்பட்ட நாணயத்தில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது, சீசரின் நாணயத்தை சீசருக்குக் கொடுப்பது சரியே என்றாலும் கடவுளின் சாயலை (''உருவை'') மனிதர் தாங்கியிருப்பதால் (காண்க: தொநூ 1:27) மனிதர் கடவுளுக்கே சொந்தமானவர்கள் என்னும் ஆழ்ந்த உண்மையை இயேசு உணர்த்தினார்.

-- கடவுளுக்கு நாம் காணிக்கையாகக் கொடுப்பது வெறும் நாணயத்தை அல்ல, மாறாக நம்மையே நாம் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றோம். ஏனென்றால் நாம் கடவுளின் உருவிலும் சாயலிலும் உண்டாக்கப்பட்டிருக்கின்றோம். கடவுளின் சாயலாக மனிதர் இருப்பதால் மனிதருக்கு இயல்பாகவே மாண்பு உண்டு. அந்த மாண்பினை நமக்கு அளிப்பது இந்த உலகில் ஆதிக்கம் செலுத்துகின்ற யாரும் அல்ல, மாறாக கடவுளே மனித மாண்புக்கு அடிப்படையாக உள்ளார். எனவே, நாம் கடவுளின் சாயலைத் தாங்கியிருப்பதுபோலப் பிறரும் கடவுளின் அன்புக்கு உரியவர்கள் என்பதை உணர்ந்து நாம் ஒருவரை ஒருவர் மனித மாண்போடு நடத்திட அழைக்கப்படுகிறோம்.

மன்றாட்டு
இறைவா, உமது படைப்பாக விளங்குகின்ற நாங்கள் எங்களை முழுதும் உம்மிடம் கையளிக்க அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்