முதல் வாசகம்

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 22: 21-27

ஆண்டவர் கூறியது: அன்னியனுக்கு நீ தொல்லை கொடுக்காதே! அவனைக் கொடுமைப் படுத்தாதே. ஏனெனில் எகிப்து நாட்டில் நீங்களும் அன்னியராய் இருந்தீர்கள். விதவை, அனாதை யாருக்கும் நீ தீங்கிழைக்காதே. நீ அவர்களுக்குக் கடுமையாகத் தீங்கிழைத்து அவர்கள் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் அவர்கள் அழுகுரலுக்குச் செவிசாய்ப்பேன். மேலும் என் சினம் பற்றியெரியும். நான் உங்களை என் வாளுக்கு இரையாக்குவேன். இதனால் உங்கள் மனைவியர் விதவைகளாவர். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றோர் ஆவர். உங்களோடிருக்கும் என் மக்களில் ஏழை ஒருவருக்கு நீ பணம் கடன் கொடுப்பாயானால், நீ அவர்மேல் ஈட்டிக்காரன் ஆகாதே. அவரிடம் வட்டி வாங்காதே. பிறருடைய மேலாடையை அடகாக நீ வாங்கினால், கதிரவன் மறையுமுன் அதை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடு. ஏனெனில், அது ஒன்றே அவருக்குப் போர்வை. உடலை மூடும் அவரது மேலாடையும் அதுவே. வேறு எதில்தான் அவர் படுத்துறங்குவார்? அவர் என்னை நோக்கி அழுது முறையிட்டால், நான் செவிசாய்ப்பேன். ஏனெனில் நான் இரக்கமுடையவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 18: 1-2. 2-3. 46,50
பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.

1 என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூர்கின்றேன்.
2ய ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். -பல்லவி

2 என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே;
என் கேடயம், எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்.
3 போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்;
என் எதிரிகளிடமிருந்து நான் மீட்கப்பட்டேன். -பல்லவி

46 ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்!
என் கற்பாறையாம் அவர் போற்றப் பெறுவாராக!
என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!
50 தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர் அவர்;
தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும்
அவர்தம் மரபினருக்கும் என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. -பல்லவி

இரண்டாம் வாசகம்

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 5-10

சகோதரர் சகோதரிகளே, உங்கள் பொருட்டு நாங்கள் உங்களிடையே எவ்வாறு நடந்து கொண்டோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். மிகுந்த வேதனை நடுவிலும் நீங்கள் தூய ஆவி அருளும் மகிழ்வோடு இறைவார்த்தையை ஏற்றுக்கொண்டீர்கள். இவ்வாறு எங்களைப் போலவும் ஆண்டவரைப் போலவும் நடப்பவரானீர்கள். மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் உள்ள, நம்பிக்கை கொண்டோர் அனைவருக்கும் முன்மாதிரியானீர்கள். எப்படியெனில், ஆண்டவருடைய வார்த்தை உங்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது நீங்கள் நம்பிக்கை கொண்டிருப்பது மாசிதோனியாவிலும் அக்காயாவிலும் மட்டும் அல்ல, எல்லா இடங்களிலும் தெரிய வந்துள்ளது. எனவே இதைப் பற்றி நாங்கள் எடுத்துச் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. நாங்கள் உங்களிடம் வந்தபோது எவ்வாறு நீங்கள் எங்களை வரவேற்றீர்கள் என்று அவர்களே கூறுகிறார்கள். நீங்கள் எவ்வாறு சிலைகளை விட்டுவிட்டு, உண்மையான, வாழும் கடவுளுக்கு ஊழியம்புரியக் கடவுளிடம் திரும்பி வந்தீர்கள் என்றும் கூறிவருகிறார்கள். இவ்வாறு நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப்போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

kj;NjA 22:34-40

ஆண்டின் பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 22: 34-40

அக்காலத்தில் இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தனர். அவர்களிடையே இருந்த திருச்சட்ட அறிஞர் ஒருவர் அவரைச் சோதிக்கும் நோக்கத்துடன், ``போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்று கேட்டார். அவர், `` `உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு செலுத்து.' இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. `உன்மீது நீ அன்பு கூர்வதுபோல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்பது இதற்கு இணையான இரண்டாவது கட்டளை. திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்கு நூல்களுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' என்று பதிலளித்தார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி..

 

------------------------

திருப்பாடல் 18: 1 – 2அ, 2ஆ – 3, 46, 50
”ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூறுகின்றேன்”

கடவுளிடம் திருப்பாடல் ஆசிரியர் சிறப்பான விதத்தில் அன்பு கூர்வதாக சொல்கிறார். கடவுளிடம் அன்பு கொள்வதன் காரணம் என்ன? ஒரு மனிதரிடத்தில் அன்பு கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த மனிதரிடத்தில் இருக்கிற ஏதாவது ஒரு பண்பு நமக்கு பிடித்திருக்கலாம். அந்த மனிதரின் அழகு நமக்கு பிடித்திருக்கலாம். அந்த மனிதர் நம்மீது காட்டுகிற தனிப்பட்ட அன்பு நம்மை கவர்ந்திருக்கலாம். திருப்பாடல் ஆசிரியரின் அன்புக்கு காரணம் என்ன?

ஆண்டவர் தன் மீது காட்டக்கூடிய அன்பை பலவிதமான உருவகங்களால் அவர் உணர்த்துகிறார். கடவுளை மலையாக, கோட்டையாக, மீட்பராக, கேடயமாக பார்க்கிறார். இவை அனைத்துமே பாதுகாப்பிற்கு பெயர் போனவை. மலை பாதுகாப்பானதாக இருக்கிறது. கேடயம் நம்மைப் பாதுகாக்கிறது. கோட்டை எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறது. கற்பாறை உறுதியானதாக, பாதுகாப்பானதாக இருக்கிறது. ஆக, கடவுள் அவரை பாதுகாக்கிறவராக இருப்பதால், கடவுளை அன்பு செய்வதாக சொல்கிறார். கடவுள் அவரைப் பாதுகாக்கிறார் என்றால், கடவுள் அவரை அன்பு செய்கிறார் என்பது அர்த்தம். அந்த அன்பை இங்கே பாடலாக வெளிப்படுத்துகிறார்.

நம்முடைய வாழ்வில் நமக்கு கேடயமாக, பாதுகாப்பாக இருக்கும் கடவுளிடம் நாம் எப்போதும் அன்பு நிறைந்தவர்களாக வாழ்வோம். கடவுளின் அன்பை நாமும் உணர்ந்து, அந்த அன்பை கடவுளோடு பகிர்ந்து கொள்ளக்கூடியவர்களாக வாழ்வோம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

தலைசிறந்த கட்டளை எது?

மத்தேயு நற்செய்தியில் ”போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?” என்ற கேள்வி, இயேசு சதுசேயரை வாயடைக்கச்செய்தார் என்பதைக்கேள்விப்பட்டவுடன் கேட்கப்பட்ட கேள்வி. அது இயேசுவை தாக்குவதற்காக, அவரில் குற்றம் காண்பதற்காகக்கேட்கப்பட்ட கேள்வி. ஆனால், மாற்கு நற்செய்தியில் இதனுடைய பிண்ணனி வேறு. இயேசுவை பாராட்டும்படியாகச்சொல்லப்பட்ட கேள்வி.

இயேசு மதம் என்பதற்கான வரைவிலக்கணத்தை இங்கு தருகிறார். மதம் என்பது அன்பை அடிப்படையாகக்கொண்டது. அன்பில்லையென்றால் அது மதமல்ல. இந்த மதம் இரண்டு அடித்தளங்களைக்கொண்டு கட்டியெழுப்பப்படுகிறது. 1. இறையன்பு 2. பிறரன்பு. இந்த இரண்டில் முதன்மையான இறையன்பு. இறையன்பு இல்லாத இடத்தில் பிறரன்பு இருக்க முடியாது என்பது இயேசுவின் போதனை. கடவுளுக்கான அன்பு நம்மிடத்தில் பல வழிகளில் வெளிப்பட வேண்டும். நம்முடைய உறவில், உணர்வில், வாழ்வில், எண்ணத்தில் கடவுளன்பு வெளிப்பட வேண்டும். இந்த அன்பு இருக்கிறபோதுதான் பிறரன்பு நம்மில் உருவாகும். ஏனென்றால் மனிதன் என்பவன் வேதியியல் பொருளின் கலவையில்ல, படைப்பின் வெறும் பகுதி அல்ல, மாறாக, கடவுளன்பின் வெளிப்பாடு. கடவுளன்பில் பிறந்தவன் தான் மனிதன். எனவேதான், கடவுளின் சாயலைப் பெற்றிருக்கிறோம்.

நமது வாழ்வில் இறைவனை அன்பு செய்ய பழகிக்கொள்வோம். இறைவனை அன்பு செய்கிறபோதுதான் நம்மால், மற்றவர்களை அன்பு செய்ய முடியும். மற்றவர்கள் தவறு செய்கிறபோது, அவர்களை மன்னிக்க முடியாமல் இருப்பது கடவுளை அன்பு செய்யாததன் வெளிப்பாடுதான். கடவுளன்பில் நாம் உறுதியாக இருந்தால், மற்றவர்களை நம்மால் மன்னிக்க முடியும். அன்பு செய்ய முடியும். நிறைகுறைகளோடு ஏற்றுக்கொள்ள முடியும்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

சோதிக்கும் நோக்கத்துடன் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் திருச்சட்ட அறிஞர் ஒருவர் திருச்சட்ட நூலில் தலை சிறந்த கட்டளை எது என்று கேட்கிறார். கேள்வி நல்ல கேள்விதான். ஆனால், கேட்கிற மனிதரும், அவரது உள்நோக்கமும்தான் சரியில்லை. இருப்பினும், அவரது வாயை அடைக்கவும், இதயத்தைத் திறக்கவும் இயேசு அருமையான பதிலை வழங்குகிறார். இறைவனையும், மனிதரையும் அன்பு செய்ய வேண்டும் என்பதே தலை சிறந்த கட்டளை.

நாம் ஒருவரோடொருவர் உரையாடும்போது நமது கேள்விகளும், மனநிலையும் எப்படி இருக்கின்றன என்று கொஞ்சம் ஆய்வு செய்வோமா? சில வேளைகளில் நலம் விசாரிக்கும் தோற்றத்தில்; பிறரை இகழ, குத்திக்காட்ட நாம் முயல்வதில்லையா? ஆறுதல் சொல்லும் தோற்றத்தில் புண்படுத்துவதில்லையா? ஆலோசனை சொல்லும் சாக்கில் அவதூறு செய்வதில்லையா?

எனவே, நமது கேள்விகளுக்குப் பின் ஒளிந்திருக்கும் மனநிலையை, நோக்கத்தை ஆய்வு செய்வோம். நேர்மையாக சிந்தி;க்கவும், பேசவும் செய்வோம்.

மன்றாடுவோம்; உண்மையின் உறைவிடமே இயேசுவே, என் மனதிலும், நாவிலும் தூய்மையைத் தாரும். உமது தூய ஆவியினால் என்னை நிரப்பும். உள் நோக்கமின்றிப் பிறருடன் உரையாட, உறவாட எனக்கு ஆற்றல் தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

-- அருட்தந்தை குமார்ராஜா

-------------------------

''இயேசு சதுசேயரை வாயடைக்கச் செய்தார் என்பதைக் கேள்விப்பட்ட பரிசேயர்
ஒன்றுகூடி அவரிடம் வந்தனர்'' (மத்தேயு 22:34)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- மத்தேயு நற்செய்தியில் இயேசுவின் எதிரிகளாகக் காட்டப்படுவோர் ''பரிசேயர்'', ''சதுசேயர்'' என்னும் இரு குழுக்களைச் சார்ந்தவர்கள். இவர்களுள் சதுசேயர் என்போர் பெரும்பாலும் எருசலேம் நகரில் வாழ்ந்தனர். அவர்கள் ஆளும் வர்க்கத்தினர். விவிலியத்தின் முதல் ஐந்து நூற்களை மட்டுமே அதிகாரப்பூர்வமான ஏடுகளாக இவர்கள் ஏற்றார்கள். அந்நூல்களில் கூறப்பட்டவற்றை அப்படியே கடைப்பிடிக்க வேண்டும் என்றும், வாய்மொழி மரபாகவோ எழுத்து மரபாகவோ வழங்கப்பட்ட சட்ட விளக்கங்கள் விவிலியத்தின்; முதல் ஐந்து நூல் போதனையிலிருந்து மாறுபட்டால், அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் இவர்கள் கருதினார்கள்.எனவே, இறந்தோர் உயிர்த்தெழுவர் என்னும் கருத்து விவிலியத்தின் முதல் ஐந்து நூல்களில் காணப்படவில்லை என்பதால் அதை ஏற்க முடியாது என்பது இவர்களுடைய கருத்து. ஆனால் இயேசு விவிலியத்தின் முதல் நூலாகிய ''தொடக்கநூல்'' என்பதில் ''கடவுள் இறந்தோரின் கடவுளல்ல, மாறாக, ''உயிர்வாழ்வோரின் கடவுள்'' எனக் காணப்படும் உண்மையைச் சுட்டிக்காட்டி, ''சதுசேயரின் வாயை அடைத்துவிட்டார்'' (மத் 22:23). தங்களோடு கருத்து வேறுபட்ட சதுசேயரை இயேசு முறியடித்தார் என்பதைப் பரிசேயர்கள் கேள்விப்படுகின்றனர். அவர்களுக்கு ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஆனால் பரிசேயரும் இயேசுவைச் சோதிக்கும் நோக்கத்துடன் அவரை அணுகி வருகின்றனர். ''பரிசேயர் ஒன்றுகூடினர்'' (மத் 22:34) என மத்தேயு குறிப்பிடுவது கருதத்தக்கது. இயேசுவுக்கு எதிராகத் திட்டம் வகுத்து அவரை ஒழிக்கத் தேடிய பரிசேயரோ பிறரோ ''ஒன்றுகூடி'' சதித்திட்டம் போடுவதை மத்தேயு பல இடங்களில் குறிப்பிடுகிறார் (காண்க: மத் 22:41; 26:3; 27:17,27; 28:12).

-- இயேசுவைச் சோதிக்க வந்த பரிசேயருள் ஒருவர் திருச்சட்ட அறிஞர். அவர் இயேசுவிடம் ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்னும் கேள்வியைக் கேட்கிறார் (மத் 22:36). பல நூற்றுக்கணக்கான கட்டளைகளை உள்ளடக்கிய திருநூலில் காணப்படுகின்ற முதன்மையான கட்டளை எது என்னும் கேள்விக்கு யூத அறிஞர் அக்காலத்தில் பதில் தேடியது உண்டு. எடுத்தக்காட்டாக, ஹில்லல் என்னும் அறிஞரைக் குறிப்பிடலாம். அவரைத் தேடி ஒரு பிற இனத்தவர் வருகிறார். ''நான் ஒற்றைக் காலில் நிற்கும் நேரத்தில் எனக்குத் திருச்சட்டம் முழுவதையும் கற்றுத் தர முடியும் என்றால் நான் யூத சமயத்தைத் தழுவுகிறேன்'' என்கிறார் அவர். இதைக் கேட்ட ஹில்லல் அப்பிற இன மனிதரைப் பார்த்து, ''உனக்குத் தீங்கு இழைக்க நீ விரும்பாததுபோல பிறருக்கும் தீங்கு இழைக்க விரும்பாதே. இதில் திருச்சட்டம் முழுவதும் அடங்கும். எஞ்சியது விளக்கவுரையே'' எனப் பதிலளித்தார். இயேவிடம் சென்று ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது'' என்று கேட்டவருக்கு இயேசு அளித்த பதில் ''கடவுளை அன்புசெய்க; பிறரை அன்புசெய்க'' என்பதே. ''திருச்சட்ட நூல் முழுமைக்கும் இறைவாக்குகளுக்கும் இவ்விரு கட்டளைகளே அடிப்படையாக அமைகின்றன'' (மத் 22:40) என்று இயேசு அளித்த பதிலுக்கு ஆதாரம் பழைய ஏற்பாட்டில் உள்ளது (காண்க: இச 6:5; லேவி 19:18). அன்புக் கட்டளையை இயேசு தம் வாழ்வில் முழுமையாகக் கடைப்பிடித்தார். கடவுளை முழுமையாக அன்புசெய்த அவர் நமக்காகச் சிலுவையில் உயிர் துறந்து நம்மை இறுதிவரை அன்புசெய்ததைச் செயல்முறையில் காட்டினார். அதே அன்பு நம்மில் துலங்கிட வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, எங்கள் சிந்தனை சொல் செயல் அனைத்தும் அன்பிலிருந்து பிறந்திட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------|

''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' (மத்தேயு 22:36)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் திருச்சட்டத்தை நன்கு தெரிந்துவைத்திருந்தார்கள். சட்டத்தின் நுணுக்கங்களையும் அறிந்திருந்தார்கள். திருச்சட்டத்தில் அடங்கிய 613 கட்டளைகளையும், அவை பற்றி யூத சமய அறிஞர்கள் வழங்கிய விளக்கங்களையும் பரிசேயர் கற்றிருந்தார்கள். தங்களைப் போன்று இயேசுவும் சமய அறிவில் சிறந்தவர்தானா என்று சோதிக்கும் வகையில் அவர்கள் இயேசுவிடம் கேட்ட கேள்வி: ''திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது?'' என்பதாகும். இயேசு அவர்களுக்கு அளித்த பதிலில் பெரிய விளக்கங்கள் இல்லை. மிகவும் எளிய முறையில், கடவுள் தந்த கட்டளைகளின் உள் ஆழம் எதில் அடங்கியிருக்கிறது என்பதை இயேசு எடுத்துரைக்கிறார். ''அன்பு செய்க!'' என்பதே திருச்சட்டத்தின் சுருக்கம் என இயேசு போதிக்கிறார். இந்த அன்புக் கட்டளைக்கு இரு பக்கங்கள் உண்டு: ஒன்று கடவுளை அன்பு செய்வது, மற்றது பிறரை அன்பு செய்வது. பழைய ஏற்பாட்டுத் திருச்சட்டத்தில் காணப்பட்ட அன்புக் கட்டளையின் இரு பக்கங்களையும் இணைக்கிறார் இயேசு. இணைச்சட்ட நூலில் ''உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக!'' (6:5) என்னும் சட்டமும், லேவியர் நூலில் ''உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக!'' (19:18) என்னும் சட்டமும் தனித்தனியாகக் காணப்பட்டாலும் இயேசுவின் போதனையில் அவை இரண்டும் பின்னிப் பிணைந்த விதத்தில் உள்ளன.

-- எனவே, திருச்சட்டத்தில் மட்டுமன்று, இயேசுவின் போதனையிலும் அன்புக் கட்டளையே மைய இடம் பெறுவதில் வியப்பில்லை. கடவுளையும் மனிதரையும் அன்பு செய்வோர் உண்மையிலேயே தலைசிறந்த கட்டளையைக் கடைப்பிடிக்கின்றனர். கடவுள் முதன்முதலில் நம்மை அன்புசெய்தார். எனவே, நாமும் அவரை, அவரால் அன்புசெய்யப்படுகின்ற மனிதரை அன்புசெய்ய அழைக்கப்படுகிறோம். கடவுளின் அன்பில் நாம் ஆழ வேரூயஅp;ன்ற வேண்டும் என்றால் முதலில் நாம் அவரை நம்ப வேண்டும்; அவருடைய வாக்குறுதி நிறைவேறும் என ஏற்க வேண்டும். எனவே, நம்பிக்கையும் எதிர்நோக்கும் நம்மில் வளரும்போது அன்பும் வளரும். அன்பு நம்மில் சிறக்கும்போது கடவுள் மட்டில் நாம் கொள்கின்ற நம்பிக்கையும் உறுதிப்படும், அவர் வாக்களிக்கின்ற நன்மைகளை நாம் பெறுவோம் என்னும் எதிர்நோக்கும் திண்ணமாகும்.

மன்றாட்டு
இறைவா, உம்மையே நாங்கள் நம்பியிருக்கவும், உம் அன்பில் வளர்ந்து, எங்கள் வாழ்வு நிறைவுபெறும் என நாங்கள் எதிர்நோக்கவும் அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

-------------------------