பாஸ்கா எண்கிழமையில் திங்கள்

முதல் வாசகம்

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:14, 22-33

பெந்தக்கோஸ்து நாளில் பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: ``யூத மக்களே, எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்; எனது சொற்களைக் கவனித்துக் கேளுங்கள். இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள். கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில் வல்ல செயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை இன்னாரென்று உறுதியாகக் காண்பித்தார். இது நீங்கள் அறிந்ததே. கடவுள் தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீங்கள் திருச்சட்டம் அறியாதார் மூலம் அவரைச் சிலுவையில் அறைந்து கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை மரண வேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச் செய்தார். ஏனென்றால் மரணம் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக் குறித்துக் கூறியது: `நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார். எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம் பேருவகை கொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும் எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு.' சகோதரர் சகோதரிகளே, நமது குலமுதல்வராகிய தாவீதைக் குறித்து நான் சொல்வதை மறுக்க மாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம் செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர் இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில் வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, `அவரைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக் காணவிடமாட்டீர்' என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர் கடவுளின் வலப்பக்கத்துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள் காண்பதும் கேட்பதும் இதுதான்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 16:1-2, 5 மற்றும் 7-8, 9-10, 11

பல்லவி: இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.

1 இறைவா, என்னைக் காத்தருளும்;
உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்.
2 நான் ஆண்டவரிடம் `நீரே என் தலைவர்' என்று சொன்னேன். -பல்லவி

5 ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து;
அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே;
7 எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்;
இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது.
8 ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்;
அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன். -பல்லவி

9 என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது;
என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்.
10 ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்;
உம் அன்பனைப் படுகுழியைக் காணவிடமாட்டீர். -பல்லவி

11 வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்;
உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு;
உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு. -பல்லவி


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா.

மத்தேயு 28:8-15

பாஸ்கா எண்கிழமையில் திங்கள்

 

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 28: 8-15

அக்காலத்தில் கல்லறையில் இயேசுவைக் காணவந்த பெண்கள் கல்லறையை விட்டு விரைவாகப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய், அவருடைய சீடருக்கு அறிவிக்க ஓடினார்கள். திடீரென்று இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்தினார். அவர்கள் அவரைஅணுகி, அவர் காலடிகளைப் பற்றிக்கொண்டு, பணிந்து நின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், ``அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று, அவர்களைக் கலிலேயாவுக்குப் போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்'' என்றார். அவர்கள் போய்க்கொண்டிருந்தபோது காவல் வீரருள் சிலர் நகரத்திற்குள் சென்று, நிகழ்ந்தவை யாவற்றையும் தலைமைக் குருக்களுக்கு அறிவித்தனர். அவர்கள் மூப்பர்களுடன் கூடிக் கலந்து ஆலோசித்து, அப்படைவீரருக்கு மிகுதியாகப் பணம் கொடுத்து, `` `நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது இயேசுவின் சீடர் இரவில் வந்து அவரது உட லைத் திருடிச் சென்றுவிட்டனர்' எனச் சொல்லுங்கள். ஆளுநர் இதைக் கேள்வியுற்றால் நாங்கள் அவரை நம்பச் செய்து நீங்கள் தொல்லைக்கு உள்ளாகாதபடி பார்த்துக்கொள்வோம்'' என்று அவர்களிடம் கூறினார்கள். அவர்களும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களுக்கு அவர்கள் சொல்லிக் கொடுத்தவாறே செய்தார்கள். இந்நாள்வரை இந்த வதந்தி யூதரிடையே பரவியிருக்கிறது.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

-------------------------

மத்தேயு 28: 8 - 15
ஆர்வமுள்ளவர்களாய்…

மத்திய அரசுக்கு பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்த மண்ணை பேரம் பேசுவதில் ஆர்வம் காட்டிக் கொண்டேயிருக்கிறது. அரசு பேருந்தில் ஊழியர்கள் முக்கியமான திருவிழா காலங்களில் போனஸ் (ஊக்க ஊதியம்) பெற போராட்டம் நடத்துவதில் ஆர்வம் காட்டுகின்றார்கள். ஏழை தன் குழந்தைகளை எப்படியாவது சமூகத்தில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அலைகிறான். இப்படி இந்த சமுதாயத்தில் ஒவ்வொருவரின் ஆர்வமும் சற்று வித்தியாசமானதாகவே இருந்து வருகிறது.

இதே ஆர்வம் இன்றைய நற்செய்தி வாசகத்திலும் தொடர்கிறது. என்ன ஆர்வமென்றால் இயேசுவை காண ஆர்வம். யூத மரபுப்படி உடல் அடக்கத்தையெடுத்து மூன்று நாட்கள் உறவினர்கள் கல்லறைக்குச் செல்வது வழக்கம். ஆனால் இயேசுவைப் பொறுத்தவரையில் அவருக்குப் பணிவிடை செய்து அவருடைய அன்புக்குப் பாத்திரமாயிருந்த பெண்கள் அவருக்கு வெறுமனே அஞ்சலி செலுத்த மட்டும் கல்லறைக்குச் செல்லவில்லை. மாறாக அவரது உடலில் தைலம் பூசுவதற்காக ஓய்வுநாள் முடியும் வரை காத்திருந்து அது முடிந்ததும் கல்லறைக்கு விரைந்ததாக விவிலிய ஆசிரியர்கள் கூறுவார்கள். பெண்கள் ஆற்ற வேண்டிய முக்கிய பணி இங்கே எடுத்துரைக்கபடுகின்றது. பெண்கள் இயேசு உயிர்த்த செய்தியை சீடர்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். குறிப்பாக பேதுருவுக்கு இச்செய்தியை சொல்ல வேண்டும் என இயேசு விரும்பினார். சீடர்களில் இயேசுவின் இறுதி நாட்களில் பிரமாணிக்கம் தவறிவிட்டாலும் உயிர்பு செய்தி அவர்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் தரும் என்பதே இயேசுவின் கணிப்பு. தம்மிடம் பயிற்சி பெற்ற சீடர்கள் தம் பணியை தொடர வேண்டும் என்பதே இயேசுவின் நோக்கம். பேதுருவின் தலைமையில் திருச்சபை தொடர வேண்டும் என்கிற தம் ஆவலை இயேசு பெண்களிடம் எடுத்துரைக்கின்றார்.

நம்முடைய ஆர்வம் எதில் இருக்கிறது? சொத்துக்கள், பட்டங்கள் சோ்ப்பதிலா? அல்லது தனக்கே உரிய பாணியை இறைவார்த்தையை எடுத்துரைப்பதிலா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

================================

(மத்தேயு 28: 6-15)
தேடலின் விடை

திகிலுற்றுக் கிடந்த அனைவருக்கும் இயேசுவின் உயிர்ப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது. முடங்கிக் கிடந்தவர்கள் அனைவரும் முடுக்கி விடப்பட்டனர். இயேசு உயிர்த்து விட்டார் என்ற செய்தியைப் பரப்ப ஒருபுறம் சமுதாயத்தால் மதிக்கப்படாத பெண்கள் ஓடுகின்றனர். மறுபுறம் அவர் உயிர்ப்பின் செய்தியை சோற்றுக்குள் மறைக்கப்பட்ட பூசணிக்காயைப் போன்று மறைத்துவிட அதிகார வர்க்கத்தினர் ஆட்களை அனுப்புகின்றார்கள். பலவீனமான பெண்கள் ஒருபுறம், படைக்கவசங்களுடன் பலம் வாய்ந்த படைவீரர்கள் மறுபுறம். உண்மையைக் கையில் எடுத்துக் கொண்டு அன்பினால் இயக்கப்படும் பெண்கள் ஒருபுறம். கையூட்டுக் காசினைப் பெற்றுக் கொண்டு உண்மையினை மூடி மறைக்க எண்ணும் கூட்டம் மறுபுறம்.

அவர்களுக்குத் தெரியவில்லை இருளை விரட்டியடிக்க சிறு தீக்குச்சியே போதுமென்று. உண்மை மலையின் மீது ஏற்றி வைக்கப்பட்ட விளக்கினைப் போன்றது. விளக்கினைத் தேடும் விண்மினிப் பூச்சிகள் ஒவ்வொன்றும் ஒளியினால் ஈர்க்கப்படும். தேடலின் விடை ஒளியில் மட்டுமே கிடைக்கும். உலகின் ஒளியை நாமும் வேட்கையோடு தேடினால் ஒளியை அடைந்து விடுவோம்.
திருத்தொண்டர் வளன் அரசு

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 16: 1 – 2a, 5, 7 – 8, 9 – 10, 11
”இரவில் கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது”

கடவுள் எங்கே இருக்கிறார்? என்பது ஒவ்வொரு மனிதருக்குள்ளாக எழுகிற இயல்பான கேள்வி. தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று பொதுவாகச் சொல்வார்கள். உண்மையில் கடவுள் ஒவ்வொருவரின் இதயத்திலும் குடிகொண்டிருக்கிறார். அதைத்தான் நாம் மனச்சான்று என்று சொல்கிறோம். நாம் நல்லது செய்கிறபோது, நம்மையறியாமல் நம்மை நினைத்து பெருமைப்படுகின்றோம். நாம் தவறு செய்கிறபோது, அதனை விரும்பிச்செய்தாலும், நமக்குள்ளாக ஏதோ ஒரு நெருடல் ஏற்படுகிறது. அதுதான், உண்மையில் கடவுளின் குரல். அதுதான் உண்மையில் இறைவனின் ஒலி. அதைத்தான் இன்றைய திருப்பாடலின் வரிகளும் நமக்கு எடுத்தியம்புகின்றன.

தாவீது அரசர் பத்சேபாவுக்கு எதிராக தவறு செய்தார். அதை நிச்சயம் தெரிந்துதான் செய்தார். ஆனால், கடவுளுக்கு தெரியாது என்று நினைத்து செய்தார். அவரது உள்ளம் எச்சரித்திருக்க வேண்டும். அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாது, தவறு செய்தார். அவருக்குள்ளாக ஓர் உறுத்தல் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அந்த உறுத்தலின் வெளிப்பாடு தான், நயவஞ்சகமாக பத்சேபாவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக்கொண்டது. செய்த பிரச்சனைக்கு பிராயச்சித்தம் செய்தாகிவிட்டது. இனிமேல் நம்மை யார் என்ன செய்ய முடியும்? என்ற மமதை அவருக்கு ஏற்படுகிறது. இதுவரை உள்ளிருந்த பேசிய இறைவன், மனச்சான்றின் வடிவில் பேசிய இறைவன், இறைவாக்கினர் வாயிலாகப் பேசுகிறார். இவ்வளவுக்கு தவறு செய்தாலும், இறைவனின் இரக்கத்தை எண்ணி மனம் உடைகிறார். அதையே பாடலாகவும் வடிக்கிறார்.

நமது வாழ்வில், கடவுள் நமக்குள்ளாக இருந்து எச்சரிக்கிறபோது, அந்த எச்சரிக்கை குரலுக்கு நாம் செவிமடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப நமது வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும். நமது வழிகளைத்திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அதற்கான பலனை, நாம் தான் அனுபவிப்போம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

-----------------------------------------------------

உயிர்ப்பு அனுபவம்

இறப்பு என்பது நமக்கெல்லாம் அச்சத்தை வருவிக்கக்கூடிய ஒரு நிகழ்வு. இறந்தவர்களைப் பார்ப்பதும், இறந்த உடல்களைப் பார்ப்பதும், இறப்பு தொடர்பான நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், மனித உள்ளங்களில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரோடு இருக்கிறவரை ஒருவரைப்பார்த்து பயப்படாத நாம், அவர் இறந்த பிறகு பயம் நம்மை ஆட்கொள்கிறது. உதாரணமாக, இறந்த ஒருவரின் அடக்கத்திற்காகச் சென்றிருக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அடக்கம் செய்கிறபோது, திடீரென இறந்தவர் எழுந்தால், நமக்கு எப்படி இருக்கும்? யாராவது அங்கே நிற்பார்களா? இழப்பினால் அழுதுகொண்டிருக்கிறவர்களின் மூச்சும், பேச்சும் கூட ஒரு நிமிடம் நின்றுவிடும். பயந்து ஓடிவிடுவார்கள். கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஓர் அனுபவத்தைப்பற்றித்தான் நற்செய்தியாளர் யோவான் எழுதுகிறார்.

இயேசு இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்தாயிற்று. அழுது, அழுது கண்கள் வீங்கிய, இயேசுவுக்கு நெருக்கமானவர்கள் நிச்சயம் மரியாவின் வீட்டில் மனக்கஷ்டத்தோடு இருந்திருப்பார்கள். இயேசுவின் வீடே வெறுமையாக இருக்கக்கூடிய சூழ்நிலை. மரியாவின் நிலைமை அந்தோ பரிதாபம். கணவனை இழந்த கைம்பெண். ஒரே மகன், அன்பு மகன். அவனும் இறந்துவிட்டான். இனி தனக்கென்று யார் இருக்கிறார்கள்? தனது கடைசி காலத்தில் யார் தனக்கு அடைக்கலம் கொடுப்பார்கள்? அவளது உள்ளத்தில் ஆயிரமாயிரம் கேள்விக்கணைகள் அவளைத் துளைத்திருக்கும். அந்த வீடு முழுவதும் இறுக்கமான மனநிலையோடு பல உள்ளங்கள். அதில் இருவர் விடியற்காலையில் கல்லறைக்குச் செல்கிறார்கள். பயம் இருந்தாலும், இயேசுவின் மீது வைத்திருந்த தீராத பாசம், அவர்களை உந்தித்தள்ளி, அவர்களை அங்கே வைத்திருக்கிறது. அந்த நேரத்தில் தான், அவர்கள் தூதர்கள் வாயிலாக இயேசுவின் உயிர்ப்புச் செய்தியை அறியவருகிறார்கள். அவர்கள் சிந்திக்கவில்லை. இது நடக்குமா? என்ற கேள்விக்குள்ளாக செல்லவில்லை. தூதரின் வார்த்தைகளை அப்படியே நம்புகிறார்கள். எவ்வாற அன்னை மரியாள், ”இதோ, உமது அடிமை, அப்படியே ஆகட்டும்” என்றாரோ, அதேபோல, தூதரின் செய்தியை, முழுவதுமாக நம்பினார்கள். அச்சத்தோடு வந்த அவர்கள் மகிழ்ச்சியோடு திரும்பினார்கள். விசுவாசம் பயத்தைப்போக்கி மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஆயுதம்.

நமது வாழ்வில் இயேசுவின் உயிர்ப்பு அனுபவம், துன்பங்களை, துணிவோடு எதிர்கொள்வதற்கு தேவையான ஆற்றலைத் தரக்கூடிய அனுபவம். அந்த ஆற்றல் நமது வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் செய்ய, வல்லமை பெற்ற அனுபவம். அந்த அனுபவத்தைப்பெற, இயேசுவின் உயிர்பை நாம் நம்புவோம். அந்த நம்பிக்கையில் நமது வாழ்வை அர்ப்பணிப்போம்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
--------------------------------------------------------

உண்மைக்குச் சான்று பகர்வோம்

இயேசுவின் உடலை அடக்கம் செய்திருந்த கல்லறை வெறுமையாக இருந்தது என்று படைவீரர்கள் அறிவித்தபோது, தலைமைச்சங்க உறுப்பினர்கள் முகத்தில் கவலை ரேகை படர்ந்திருந்தது. இவ்வளவுக்கு நாம் முயற்சி எடுத்து இயேசுவை ஒழித்தாலும், சிலுவையோடு முடி்ந்து விட்டது என்று எகத்தாளம் செய்தவர்களுக்கு, என்ன செய்வதென்றே இப்போது தெரியவில்லை. இருந்தாலும் கயவர்களுக்குத் தெரியாத வழிகளா? அவர்கள் மீண்டும் ஒரு சதித்திட்டத்தை அரங்கேற்றுகிறார்கள். இயேசுவின் உடலை, சீடர்கள் தூக்கிச்சென்று விட்டதாக, பொய் மூட்டையை அவிழ்த்து விடுகிறார்கள்.

இயேசுவை ஒழித்துக்கட்ட யூத சமய அதிகாரவர்க்கத்தினர் செய்த காரியங்கள் கொஞ்சம் அல்ல. சதிகள் மூலமாக, சட்டத்திற்கு விரோதமாக, தவறான குற்றச்சாட்டுக்கள் மூலமாக அவர்கள் நினைத்ததை சாதித்ததாக நினைத்தார்கள். இப்போது, தவறான முறையில் பணம் கொடுத்து, மீண்டும் அநீதி செய்கிறார்கள். ஆனால், உண்மையை என்றுமே மறைக்க முடியாது என்பது அவர்கள் அறிந்திருக்கவில்லை. இவ்வளவு படித்திருந்தும், சட்டங்களைக் கரைத்துக்குடித்திருந்தும், அவர்களுக்கு எளிதான இந்த உண்மை புலப்படவில்லை. உண்மையை மூடி மறைக்க முடியாது.

உண்மைக்கு சான்று பகரவே வந்தேன், என்று நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து மொழிந்தார். தனது இறப்பு மூலமாக உண்மைக்குச் சான்றும் பகர்ந்தார். அதேபோல, நாமும் உண்மைக்குச் சான்று பகர்கிறவர்களாக வாழ்வோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

உண்மை வெல்லும்

இயேசுவை ஒழித்துக்கட்டுவதற்கு அதிகாரவர்க்கம் எத்தனையோ முயற்சிகளை எடுத்தது. இயேசுவை சதிவலையில் சிக்கவைப்பதற்கு சதித்திட்டங்களைத் தீட்டினர். சட்டத்திற்கு எதிராகப்பேசுகிறான் என்ற பொய்க்குற்றச்சாட்டுக்களைக் கூறினர். கடவுளை நிந்திக்கிறான் என்ற பழிபோடப்பட்டது. இவ்வளவு முயற்சிகள் செய்து, இயேசு என்ற ஒரு மனிதரை ஒழிப்பதற்கு அவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு ஓரளவு பலனும் கிடைத்தது. அவர்கள் நினைத்தது போலவே அவரை சிலுவையில் அறைந்து கொன்றாயிற்று.

அவ்வளவுதான் ஒழிந்தான் என்று அவர்களால் நிம்மதியாகவும் இருக்கமுடியவில்லை. உயிரோடு மற்றவர்களை எழுப்பியவன், உயிரோடு வந்துவிடுவானோ? என்ற படபடப்பு, பதைபதைப்பு அவர்கள் மத்தியில் மீண்டும் எழுந்தது. அவர்கள் பயப்பட்டது போலவே நடந்தும் விட்டது. இருந்தாலும், இவ்வளவு செய்தவர்கள் இதை மட்டும் அப்படியே விட்டுவிடுவார்களா என்ன? மீண்டும் ஒரு பொய்யைக்கூறி, இயேசுவின் வாழ்வை கல்லறையோடு மூடிவிட முனைகிறார்கள். ஆனால், எவ்வளவுதான் பொய்களை அவிழ்த்துவிட்டு, உண்மையை மூடிமறைத்தாலும், இறுதிவெற்றி உண்மைக்குத்தான் என்பதை இன்றைய வாசகம் நமக்கு தெளிவாக்குகிறது. தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மீண்டும் வெல்லும் என்பது இயேசுவின் வாழ்வில் உண்மையாகிறது. உண்மை ஒருநாள் வென்றே தீரும் என்பதற்கு இயேசுவின் உயிர்ப்பு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. உண்மையை பலகாலம் மூடிவைக்க முடியாது.

வாழ்வில் நேர்மையோடு, நீதியோடு, உண்மையோடு வாழ்கிற மக்களுக்கு இயேசுவின் உயிர்ப்பு மிகப்பெரிய ஆறுதல் செய்தி. இந்த உலகத்தில் ஏன் அநியாயம் செய்கிறவர்கள் மட்டும் நன்றாக வாழ்கிறார்கள், உண்மைக்காக உழைக்கிறவர்கள் அநியாயமாகச் சாகிறார்கள்? என்ற கேள்வி வரலாறு தொடங்கியதில் இருந்தே மனித சமூகத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது. இயேசுவின் இறப்பு தோல்வி போலத்தோன்றினாலும், அந்த இறப்புதான் பலபேருக்கு வாழ்வைப்பெற்றுத்தந்தது. அந்த இறப்புதான் மனிதகுலத்திற்கு மீட்பைப்பெற்றுத்தந்து. உண்மைக்காக உறுதியாகப்போராடுகிறவர்களுக்கு மகிழ்வையும் தரப்போகிறது. உண்மைக்காக உறுதியாகப் போராடுவோம். அது நிச்சயம் நமக்கு வெற்றியைத்தேடித்தரும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

இயேசுவின் உயிர்ப்பு அச்சத்தைப் போக்குகிறது !

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசுவின் உயிர்ப்பு சீடர்களின் உணர்வளவில் ஏற்படுத்திய மிகப் பெரும் மாற்றங்களுள் ஒன்றைப் பார்க்கிறோம். இயேசுவின் இறப்பினால் பெரிதும் அச்சமுற்றிருந்த அவர்களின் அச்சத்தை இயேசுவின் உயிர்ப்பின் அனுபவம் மாற்றி, அவர்களைத் துணிவுள்ளவர்களாக ஆக்குகிறது.

இயேசுவைக் காண வந்த பெண்கள் வெற்றுக் கல்லறையைக் கண்டார்கள். உயிர்ப்பின் செய்தியைப் பெற்றார்கள். "அவர்கள் அச்சமுற்றாலும், அதே வேளையில் பெருமகிழ்ச்சி" அடைந்தனர் என்று வாசிக்கிறோம். அப்போது உயிர்த்த இயேசு அவர்களை எதிர்கொண்டு வந்து வாழ்த்துகிறார். "அஞ்சாதீர்கள்!" என்பதுதான் உயிர்த்த இயேசுவின் முதல் வார்த்தை, முதல் வாழ்த்து.

நமது வாழ்வின் அச்சங்களையும் உயிர்த்த இயேசு போக்குகிறார். "சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்" (திருப்பாடல் 23) என்னும் தாவீதின் அச்சமின்மையை அவர் நமக்குத் தருகிறார்.

உயிர்த்த "ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும்?" (திபா 118:6) என்னும் துணிவை உயிர்ப்பின் அனுபவம் நமக்குத் தருகின்றது. நன்றி சொல்வோம், அச்சத்தை அகற்றி, துணிவுகொள்வோம்.

மன்றாடுவோம்: சாவை வென்று உயிர்த்த மாட்சி மிகுந்த இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். சாவு, நோய்கள், எதிர்காலம், மனிதர்கள் பற்றிய எங்களது அச்சங்கள் அனைத்தையும் உமது உயிர்ப்பினால் வென்றதற்காக நன்றி கூறுகிறோம். நாங்கள் உயிர்ப்பின் மக்களாக, துணிவு நிறைந்த சீடர்களாக வாழ உமது ஆவியினால் எங்களை நிரப்பியருளும்! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

பெண்கள் உயிர்ப்பின் சாட்சிகள் !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

பெண்களைப் பெருமைப்படுத்தும் இயேசுவின் பண்பை அவரது உயிர்ப்பின் நிகழ்விலும் பார்க்கிறோம். இயேசுவின் பாடுகள் மற்றும் இறப்பின் வேளையில், ஆண் சீடர்கள் அனைவரும் ஓடிவிட, பெண்கள் மட்டுமே இறுதிவரையில் அவருடன் இருந்தனர். இறந்தபின்னும் அவரது உடலை நல்லடக்கம் செய்யும் பணியில் அவர்களே ஈடுபட்டனர். அன்பு சாவையும் வெல்லும் என்பதை எண்பித்த அவர்களது பேரன்புக்குப் பரிசாக, உயிர்த்த இயேசு முதன்முதலில் பெண்களுக்கே காட்சி தருகிறார். மகதலா மரியாவும் அப்பெண்களில் ஒருவர். தனது சீடர்களுக்கு உயிர்ப்பின் செய்தியை அறிவிக்கும் நற்செய்தியாளர்களாக இயேசு அவர்களை அனுப்புகிறார்.

பெண்கள் நற்செய்தியாளர்களா, மறைபரப்புப் பணியாளர்களாகச் சிறப்புடன் பணியாற்ற முடியும் என்பதை திருச்சபை அனுபவத்தில் உணர்ந்துள்ளது. எனவேதான், கடல் கடந்து நற்செய்திப் பணியாற்றிய புனித சவேரியாருக்கு இணையாக, தனது கன்னியர் இல்லத்தின் நான்கு சுவர்களைத் தாண்டாத புனித குழந்தை தெரசாளை மறைபரப்புப் பணியின் பாதுகாவலியாக அறிவித்துள்ளது. பெண்களின் இறைப்பற்றையும், நற்செய்தி அறிவிப்பு ஆர்வத்தையும், அவர்களின் அன்பின் ஆழத்தையும் இன்று பாராட்ட முன்வருவோம்.

மன்றாடுவோம்: பெண்மையைப்; போற்றிய நாயகனே இறைவா, உமது உயிர்ப்பின் முதல் சாட்சிகளாகப் பெண்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களைப் பெருமைப்படுத்தினீரே, உமக்கு நன்றி கூறுகிறோம். உம்மைப் போல நாங்களும், பெண்களை மாண்புடன் நடத்த அருள்தாரும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

-----------------------

 

''இயேசு, 'அஞ்சாதீர்கள்! என் சகோதரர்களிடம் சென்று அவர்களைக் கலிலேயாவுக்குப்
போகுமாறு சொல்லுங்கள். அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்' என்றார் (மத்தேயு 28:10)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- சாவை வென்று புத்துயிர் பெற்று எழுந்த இயேசு தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சியை நான்கு நற்செய்தி நூல்களும் விவரிக்கின்றன. என்றாலும் அவை தருகின்ற தகவல்களில் ஆங்காங்கே முரண்பாடு காணப்படுகிறது. இயேசு அனுபவித்த துன்பங்கள், அவருடைய சிலுவைச் சாவு போன்றவற்றை விவரிப்பதில் நான்கு நற்செய்தி நூல்களும் பெரும்பாலும் ஒத்திருந்தாலும், இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றி விவரிக்கும்போது ஏன் வேறுபடுகின்றன என்னும் கேள்விக்கு விவிலிய அறிஞர்கள் தரும் பதில் இது: வெவ்வேறு நற்செய்தி ஆசிரியர்களும் தமக்குக் கிடைத்த வெவ்வேறு மரபுகளைத் தம் நூல்களில் பதிவுசெய்துள்ளனர். மேலும் ஒவ்வொரு நற்செய்தி நூல் ஆசிரியரும் தம் இறையியல் பார்வைக்கு ஏற்ப இயேசுவின் உயிர்த்தெழுதல் நிகழ்ச்சியை விவரிக்கின்றனர். இது உண்மையென்றாலும், இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய அடிப்படைத் தகவல்கள் நான்கு நற்செய்தி நூல்களிலும் ஒரே விதத்தில் அமைந்துள்ளன. முதலில், நமக்குத் தென்படும் உண்மை: ''இயேசு எவ்விதத்தில் உயிர்த்தெழுந்தார்'' என்பது குறித்து நற்செய்தி நூல்கள் தகவல் தரவில்லை. இயேசு உயிர்த்தெழுந்த நிகழ்ச்சி வரலாற்றைக் கடந்த ஒரு நிகழ்ச்சி, ஒரு மறைபொருள்; அதாவது, இயேசுவின் உயிர்த்தெழுதல் என்பது ''இறந்த உடல் மீண்டும் உயிர்பெற்றது'' என்னும் விதத்தில் அமைந்ததல்ல. மாறாக, நாசரேத்து இயேசு இவ்வுலகில் நம்மைப் போல் வாழ்ந்தார்; சிலுவையில் அறையப்பட்டு இறந்தார்; ஆனால் சாவுக்குப் பின் அவர் புதிய உருவில், கடவுளின் மாட்சியில் நுழைந்து உயிர்வாழ்கின்றார்.

-- இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய் இருந்தது என்பது மட்டுமே இயேசு உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை நிரூயஅp;பிக்கப் போதுமானதன்று. ஏன், கல்லறை வெறுமையானது பற்றி ஒரு சர்ச்சையே எழுந்தது என்பதை மத்தேயு குறிப்பிடுகிறார் (காண்க: மத் 28:11-15). வெறுமையான கல்லறையோடு இணைந்து இன்னொரு செய்தியும் தேவைப்பட்டது. அதாவது, இறைவனிடமிருந்து சீடர்களுக்கு அறிவிக்கப்பட்ட செய்தி: ''இயேசு உயிர்பெற்றெழுந்துவிட்டார்'' என்பது. இச்செய்தியின் ஒளியிலும் வெறுமையான கல்லறை பற்றிய தகவலின் அடிப்படையிலும் சீடர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டார்கள். ஆனால் இந்த நம்பிக்கை சீடர்களிடம் முதலில் இருக்கவில்லை. இயேசு தாம் துன்பங்கள் அனுபவிக்க வேண்டும் என்று கூறியதை அவர்கள் புரிந்திருக்கவில்லை. இயேசு உயிர்பெற்றெழுந்துவிட்டார் என இறைவெளிப்பாடு அவர்களுக்குக் கிடைத்தபிறகே சீடர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலில் நம்பிக்கை கொண்டனர். நாம் இயேசுவை நம்புவதும் இதன் அடிப்படையில்தான். இயேசுவைக் கண்டு, அவரோடு பழகி வாழ்ந்த சீடர்கள் இயேசுவின் இறப்பிற்குப் பிறகு இயேசு புதிய முறையில் உயிர்வாழ்கின்றார் என்பதைத் தங்கள் அனுபவ வாயிலாக உணர்ந்தனர். அந்த அனுபவத்தை நற்செய்தி நூல்களில் பதிவுசெய்துள்ளனர். நாமும் அச்செய்தியை ஏற்று கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை நம்பிக்கையோடு ஏற்கின்றோம். நம் வாழ்விலும் கிறிஸ்துவின் புத்துயிர் துலங்கி மிளிர வேண்டும்.

மன்றாட்டு
இறைவா, உம் திருமகனின் புதுவாழ்வில் நாங்கள் பங்கேற்கிறோம் என உணர்ந்து செயல்பட அருள்தாரும்.

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

"அச்சமுற்றாலும் அதே வேளையில் பெருமகிழ்ச்சியுற்றவர்களாய்"

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நம்முடைய வாழ்க்கை பலவித உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் பல சமயங்களில் பலியாகிவிடுகிறது. அச்சமும் பெருமகிழ்ச்சி இரு வேறு துருவங்களாக இருந்து நம்மை ஆட்டிப்படைக்கின்றன. அதிலும் அச்சம் நம் வாழ்வின் பெரும் பகுதியைத் தன்னகத்தே ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அச்சம் என்னும் இந்த அநியாய ஆக்கிரமிப்பு நம்மில் பலருடைய வாழ்வைச் சீரழிப்பதையும் பார்க்கிறோம்.

உயிர்த்த இயேசுவைக் கண்டவர்களும் விசுவசிப்பவர்களும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. எல்லா எதிரிகளையும் எதிர்ப்புகளையும் வென்றவரில் அரவணைப்பில், ஆதரவில் வாழும் நாம், யாருக்கு எங்கே எதற்கு அஞ்சவேண்டும். "நற்செயல் செய்வோர் ஆள்வோருக்கு அஞ்ச வேண்டியதில்லை"( உரோ 13 :3) நன்மை செய்து, எவ்வகை அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் வாழ வலியுறுத்துகிறார் பேதுரு.(1 பேதுரு 3 :6) "யாருக்கும் நீங்கள் அஞ்சி நடுங்கவோ மனங்கலங்கவோ வேண்டாம்".(1 பேதுரு 3 :14) அடுக்கி வரும் துன்பத்தைக்கண்டு சிலருக்குப் பயம். "துன்பத்தைப்பற்றி அஞ்சாதே".(திருவெளி 2 :10) உடலில் ஒரு நோய் வந்தால் ஒப்பாரி வைப்போரும் உண்டு. "உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம்" (மத் 10 :28) நம்மில் இன்னும் சிலர் இவ்வாறு எண்ணுவதுண்டு, ' ஐயோ நான் மட்டும்தானே இப்படி வேதனைப்படுகிறேன் என்று. "சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்"(லூ}க் 12 :32)

உயிர்த்த இயேசு நம் அச்சத்தையெல்லாம் பெருமகிழ்ச்சியாக மாற்ற வல்லவர்.தன்வாழ்நாளெல்லாம் மனித வாழ்விலிருந்து அச்சத்தைப் போக்குவதையே முழுமூச்சாகக்கொண்டு போதித்தவர், அதற்காகவே இறந்து உயிர்த்துள்ளார். ஆகவே அச்சம் அகற்றி பேருவகை கொள்வோம். பெருமகிழ்வோடு துணிந்து வாழ்வோம். இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்