
நூல் - 4 திருச்சபையின் புனிதப்படுத்தும் பணி தி.ச. 834. திருச்சபை தனது புனிதப்படுத்தும் பணியைத் திருவழிபாட்டின் வழியாக சிறப்பான முறையில் நிறைவேற்றுகிறது. திருவழிபாடு உண்மையில் இயேசு கிறிஸ்துவின் குருத்துவப் பணியைச் செயற்படுத்துவதாகும். அதில் புலன்களால் உணரக்கூடிய அடையாளங்களால் மனிதரின் புனிதப்படுத்துதல் குறித்துக் காட்டப்பட்டு, ஒவ்வோர் அருளடையாளத்திற்கும் உரிய முறையில் விளைவிக்கப்படுகிறது. மேலும், கிறிஸ்துவின் மறையுடலால், அதாவது, தலையாலும் உறுப்புகளாலும் முழுமையான, வெளிப்படையான இறைவழிபாடு நிறைவேற்றப்படுகிறது. 2) இத்தகைய வழிபாடு, திருச்சபையின் பெயரால், சட்டமுறைப்படி நியமிக்கப்பட்ட ஆள்களால், திருச்சபையின் அதிகாரத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களால் நிறைவேற்றப்படும் போது செயலாக்கம் பெறுகிறது.
|
தி.ச. 835 முதன் முதலாக ஆயர்கள் புனிதப்படுத்தும் பணியை நிறைவேற்றுகின்றனர். அவர்கள் தலைமைக்குருக்கள்; இறைவனின் மறைபொருள்களை முதன்மையாகப் பகிர்ந்தளிப்பவர்கள். தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட திருச்சபையின் முழு வழிபாட்டு வாழ்வையும் நெறிப்படுத்துபவர்கள், மேம்படுத்துபவர்கள் மற்றும் பாதுகாப்பவர்கள்.
2) குருக்களும் இப்பணியை நிறைவேற்றுகின்றனர், அவர்களும் அதே கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்கு பெறுகின்றனர். அவரின் பணியாளர்களாக ஆயரின் அதிகாரத்தின் கீழ், இறைவழிபாட்டைக் கொண்டாடவும் மக்களைப் புனிதப்படுத்தவும் திருநிலைப்படுத்தப்படுகின்றனர்.
3) சட்ட விதியமைப்புகளுக்கேற்ப, திருத்தொண்டர்கள் இறைவழிபாட்டுக் கொண்டாட்டத்தில் பங்கு பெறுகின்றனர்.
4) மற்ற கிறிஸ்தவ விசுவாசிகளும் திருவழிபாட்டுக் கொண்டாட்டத்தில், சிறப்பாக நற்கருணைக் கொண்டாட்டத்தில் தங்களுக்குரிய விதத்தில் ஈடுபாட்டுடன் பங்கேற்பதால் புனிதப்படுத்தும் பணியில் தங்களுக்குரிய விதத்தில் பங்கு பெறுகின்றனர். பெற்றோர்கள் திருமண வாழ்வைக் கிறிஸ்தவ மனநிலையில் வாழ்வதாலும், தங்கள் பிள்ளைகளின் கிறிஸ்தவக் கல்விக்கு ஏற்பாடு செய்வதாலும் இப்பணியில் தனிப்பட்ட விதத்தில் பங்குபெறுகின்றனர்.
தி.ச. 836. கிறிஸ்தவ விசுவாசிகளின் பொதுக்குருத்துவம் செயற்படுத்தப்படும் கிறிஸ்தவ வழிபாடு விசுவாசத்திலிருந்து புறப்பட்டு அதில் ஊன்றியுள்ள செயல் எனடபதால், திருப்பணியாளர்கள் அவ்விசுவாசத்தைச் சிறப்பாக இறைவார்த்தைப் பணியால் தூண்டவும் ஒளியூட்டவும் முனைப்பார்வததுடன் முயற்சி எடுக்க வேண்டும். இறைவார்த்தையால் விசுவாசம் பிறக்கிறது; பேணிவளர்க்கப்படுகிறது.
தி.ச. 837. திருவழிபாட்டுச் செயல்கள் தனிப்பட்ட செயல்கள் அல்ல. மாறாக ஒன்றிப்பின் அருளடையாளம் எனப்படும். திருச்சபையின், அதாவது, ஆயர்களின் கீழ் ஒன்றுகூடி ஒழுங்குபடுத்தப்பட்ட புனித மக்களினத்தின் கொண்டாட்டங்களாகும். எனவே, அவை திருச்சபையின் முழு உடலைச் சார்ந்தவை, அதை வெளிப்படுத்துபவை, மேலும் பாதிப்பவை. ஆனால், அவை திருச்சபையின் தனிப்பட்ட உறுப்பினர்களை, வெவ்வேறு விதத்தில், அவர்களின் பட்டங்கள், பணிகள், செயல்முறைப் பங்கேற்பு ஆகியவற்றின் வேறுபாட்டிற்கேற்பப் பாதிக்கின்றன.
2) திருவழிபாட்டுச் செயல்கள் தம்மியல்பிலே ஒரு சமூகக் கொண்டாட்டமாயிருப்பதால், இயன்றவரை, கிறிஸ்தவ விசுவாசிகளின் உடனிருப்புடனும் ஈடுபாடுமிக்க பங்கேற்புடனும் கொண்டாடப்படவேண்டும்.
தி.ச. 838. திருவழிபாட்டை ஒழுங்குபடுத்துவது திருச்சபையின் அதிகாரத்தை மட்டுமே சார்ந்தது, இவ்வதிகாரம் திருத்தூதரக ஆட்சிப்பீடத்திடமும், சட்டவிதிமுறைகளுக்கேற்ப, மறைமாவட்ட ஆயரிடமும் உள்ளது.
2) அனைத்துலகத் திருச்சபையின் திருவழிபாட்டை ஒழுங்குபடுத்துவதும், திருவழிபாட்டு நூல்களை வெளியிடுவதும், இடத்து மொழிகளில் செய்யப்படும் மொழி பெயர்ப்புகளை மறு ஆய்வு செய்வதும், திருவழிபாட்டு ஒழுங்குமுறைகள் எல்லா இடங்களிலும் உண்மையுடன் கடைப்பிடிக்கப்படுவதை விழிப்புடன் கவனிப்பதும், திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்கு உரியது.
3) திருவழிபாட்டு நூல்களாலேயே வரையறுக்கப்பட்டுள்ள வரம்பிற்குட்பட்டு, பொருத்தமான தழுவல்களுடன் இடத்து மொழிகளில் செய்யப்படும் திருவழிபாட்டு நூல்களின் மொழிபெயர்ப்புகளைத் தயார் செய்வதும், திரு ஆட்சிப்பீடத்தின் முன் மறு ஆய்வுடன் அவற்றை வெளியிடுவதும் ஆயர் பேரவையைச் சார்ந்தது;
4) தமது தகுதி வரம்பிற்குட்பட்டு, தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட திருச்சபையில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய திருவழிபாட்டு விதிமுறைகளை வழங்குவது மறைமாவட்ட ஆயரைச் சார்ந்தது.
தி.ச. 839. திருச்சபை தனது புனிதப்படுத்தும் பணியை மற்ற வழிகளிலும் அதாவது, கிறிஸ்தவ விசுவாசிகள் உண்மையினால் புனிதமாக்கப்படும்படி இறைவனிடம் செய்யும் வேண்டுதலாலும் அல்லது உள்ளங்களில் கிறிஸ்துவின் ஆட்சி வேரூன்றவும், வலுப்பெறவும் பெருமளவில் உதவுகின்ற, உலக மீட்புக்குத் துணைபுரிகின்ற தவம் மற்றும் பிறரன்புப் பணிகளாலும் நிறைவேற்றுகின்றது.
2) கிறிஸ்தவ மக்களின் இறைவேண்டல், மற்றப் பக்தி மற்றும் புனித முயற்சிகளும் திருச்சபையின் விதிமுறைகளோடு முழுமையாக இசைந்திருக்கும் வண்ணம் தலத்திருச்சபை ஆளுநர்கள் கவனிக்க வேண்டும்.
பகுதி 1.
அருளடையாளங்கள்
தி.ச. 840. புதிய உடன்படிக்கையின் அருளடையாளங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவால் நிறுவப்பட்டுத் திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன; அவை கிறிஸ்து மற்றும் திருச்சபையினுடைய செயல்கள் என்ற முறையில் அடையாளங்களாகவும் கருவிகளாகவும் உள்ளன; அவற்றினால் விசுவாசம் வெளிப்படுத்தப்படுகிறது; உறுதிப்படுத்தப்படுகிறது; இறைவனுக்கு வழிபாடு செலுத்தப்படுகிறது; மக்களின் புனிதப்படுத்துதல் விளைவிக்கப்படுகிறது. இவ்வாறு அவை உயரிய அளவில் திருச்சபையின் உறவு ஒனிறிப்பை உருவாக்கவும், உறுதிப்படுத்தவும், வெளிப்படுத்தவும் உதவுகின்றன. எனவே, திருப்பணியாளர்களும் மற்றக் கிறிஸ்தவ விசுவாசிகளும் அவற்றின் கொண்டாட்டத்தில் மிகுந்த வணக்கத்தையும் தக்க கவனத்தையும் செலுத்தவேண்டும்.
தி.ச. 841. அருளடையாளங்கள் திருச்சபை முழுவதற்கும் ஒரே வகையானவை என்பதாலும், அவை இறைவனின் விசுவாசக் கருவூலத்தைச் சார்ந்திருப்பதாலும், திருச்சபையின் உச்ச அதிகாரம் மட்டுமே அவற்றின் செல்லத்தக்கநிலைக்குத் தேவையானவற்றை அங்கீகரிக்கவோ வரையறுக்கவோ முடியும். அவற்றின் சட்டமுறையான கொண்டாட்டம், வழங்குதல், பெறுதல், அவற்றின் கொண்டாட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சடங்குமுறை சார்ந்தவற்றைத் தீர்மானிப்பது அதே அதிகாரத்திற்கு அல்லது தி.ச. 838, 3 மற்றும் 4 ல் உள்ள விதிமுறைகளுக்கேற்ப மற்றோர் அதிகாரத்திற்கு உரியன.
தி.ச. 842. திருமுழுக்குப் பெறாத ஒருவரை மற்ற அருளடையாளங்கள் பெறச் செல்லத்தக்க விதத்தில் அனுமதிக்க முடியாது.
2) திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், புனிதமிகு நற்கருணை ஆகிய அருளடையாளங்கள் தமக்குள் எவ்வளவு தொடர்புடையவை என்றால், முழுமையான கிறிஸ்தவப் புகுமுகநிலைக்கு அவை தேவைப்படுகின்றன.
தி.ச. 843. திருப்பணியாளர்கள் அருளடையாளங்களைத் தக்க வேளையில், சரியான ஏற்புடைய நிலையில், அவற்றைப் பெறுவதிலிருந்து சட்டத்தால் தடை செய்யப்படாதவர்கள் கேட்கும்போது அவற்றை மறுக்க முடியாது.
2) ஆன்ம மேய்ப்பர்களும் மற்றக் கிறிஸ்தவ விசுவாசிகளும், அவர்களின் திருச்சபைப் பணிக்கேற்ப, அருளடையாளங்களைக் கேட்பவர்கள் அவற்றைப் பெறுவதற்கு, தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கருத்திற்கொண்டு, தேவையான நற்செய்தி அறிவிப்பாலும் மறைக்கல்விப் பயிற்சியாலும் தயாரிக்கப்பட்டுள்ளனரா என்பதைக் கவனித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.
தி.ச. 844. கத்தோலிக்கப்பணியாளர்கள் அருளடையாளங்களைக் கத்தோலிக்கக் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு மடடுமே சட்டமுறைப்படி வழங்கலாம்; அவ்வாறே கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசிகளும் அவற்றை, இச்சட்டத்தின் 2, 3 மற்றும் 4 லும், தி.ச. 861, 2-லும் உள்ள விதியமைப்புகளைக் கருத்திற்கொண்டு, கத்தோலிக்கப் பணியாளர்களிடமிருந்து மட்டுமே சட்டமுறைப்படி பெறலாம்.
2) தேவை எழும்போதெல்லாம் அல்லது உண்மையான ஆன்மநலன் பரிந்துரைக்கும் போதெல்லாம், தவறு அல்லது அசட்டை மனப்பான்மை ஆகிய ஆபத்து தவிர்க்கப்பட்டால் மடடுமே, உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ ஒரு கத்தோலிக்கப் பணியாளரை அணுக முடியாத விசுவாசிகள் ஒப்புரவு, நற்கருணை, நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களைக் கத்தோலிக்கரல்லாத பணியாளர்களிடமிருந்து, அவை அவர்களின் திருச்சபைகளில் செல்லத்தக்க விதத்தில் இருந்தால், சட்டமுறைப்படி பெறலாம்.
3) கத்தோலிக்கப் பணியாளர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் முழுமையான உறவு ஒன்றிப்பில் இல்லாத கீழைத்திருச்சபையின் உறுப்பினர்களுக்கு ஒப்புரவு, நற்கருணை, நோயில்பூசுதல் ஆகிய அருளடையாளங்களை, அவர்கள் அவற்றைத் தாங்களாகவே கேட்டால் மற்றும் அவற்றைப் பெறுவதற்கு ஏற்புடைய நிலையில் இருந்தால், சட்டமுறைப்படி வழங்கலாம். திருத்தூதரக ஆட்சிப்பீடத்தின் கணிப்பில் இந்த அருளடையாளங்களைப் பொறுத்தவரை கீழைத்திருச்சபைக்கு இணையான நிலையில் இருக்கின்ற மற்றத் திருச்சபையின் உறுப்பினர்களுக்கும் இது பொருந்தும்.
4) இறக்கும் ஆபத்து இருந்தால் அல்லது மறைமாவட்ட ஆயர் அல்லது ஆயர்பேரவையின் கணிப்பில் வேறொரு கனமான தேவை தூண்டினால், கத்தோலிக்கப் பணியாளர்கள் இதே அருளடையாளங்களைக் கத்தோலிக்கத் திருச்சபையுடன் முழுமையான உறவு ஒனிறிப்பில் இல்லாத மற்றக் கிறிஸ்தவர்களுக்கு, அவர்கள் கேட்டால், சட்டமுறைப்படி வழங்கலாம். இவ்வருளடையாளங்களைப் பொறுத்தவரை அவர்கள் கத்தோலிக்க விசுவாசத்தை வெளிப்படுத்தி, அவற்றைப் பெறுவதற்கு ஏற்புடைய நிலையில் இருந்தால் மட்டுமே அவ்வாறு செய்யலாம்.
5) 2, 3 மற்றும் 4-ல் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களுக்கு, தொடர்புடைய கத்தோலிக்கரல்லாத திருச்சபை அல்லது சமூகத்தின் தகுதி வாய்ந்த அதிகாரியுடன், குறைந்த அளவு தல அதிகாரியுடன் கலந்தாலோசித்தாலன்றி, மறைமாவட்ட ஆயரோ ஆயர் பேரவையோ பொதுவான விதிமுறைகளை வழங்கக்கூடாது.
தி.ச. 845. திருமுழுக்கு, உறுதிப்பூசுதல், திருப்பட்டம் ஆகிய அருளடையாளங்கள் ஒரு முத்திரையைப் பதிப்பதால் அவற்றை மீண்டும் வழங்க முடியாது.
2) மிகக் கவனமான ஆய்வுக்குப் பிறகு, 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள அருளடையாளங்கள் உண்மையில் செல்லத்தக்க விதத்தில் வழங்கப்பட்டனவா என்பது பற்றி விவேகமுள்ள ஐயம் தொடர்ந்து நீடித்தால், நிபந்தனைக்குட்பட்டு அவற்றை வழங்கவேண்டும்.
தி.ச. 846. அருளடையாளக் கொண்டாட்டத்தில் தகுதிவாய்ந்த அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட திருவழிபாட்டு நூல்களை உண்மையுடன் கடைப்பிடிக்க வேண்டும்; எனவே, எவரும் தமது சொந்த அதிகாரத்தால் அவற்றில் எதையும் சேர்க்கவோ, நீக்கவோ அல்லது மாற்றவோ கூடாது.
2) பணியாளர் அருளடையாளங்களை அவர்களுக்குரிய வழிபாட்டு முறைக்கேற்ப கொண்டாட வேண்டும்.
தி.ச. 847 திரு எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டிய .அருள் அடையாளக்ககொண்டாட்டத்தில், தி.ச. 999, 2-ல் உள்ள விதியமைப்பைக் கருத்திற்கொண்டு, ஆயரால் அண்மையில் திருநிலைப்படுத்தப்பட்ட அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட ஒலிவ மரத்திலிருந்து அல்லது மற்றத் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்களைப் பணியாளர் பயன்படுத்த வேண்டும்; ஏதாவது ஓர் அவசரத் தேவை இருந்தாலன்றிப் பழைய எண்ணெய்களைப் பயன்படுத்தக்கூடாது.
2) பங்குக்குரு தம் சொந்த ஆயரிடமிருந்து திருஎண்ணெய்களைப் பெறவேண்டும்; அவற்றைத் தக்கப் பாதுகாப்பில் வைக்கவேண்டும்.
தி.ச. 848. பணியாளர் அருளடையாளங்களை வழங்குவதற்கு, தகுதி வாய்ந்த அதிகாரியால் வரையறுக்கப்பட்ட காணிக்கைகளுக்கு அதிகமாக எதுவும் கேட்கக்கூடாது. வறுமையுற்றோர் தங்கள் ஏழ்மையின் காரணத்தினால் அருளடையாளங்களின் உதவியை இழக்காதிருக்க எப்பொழுதும் கவனமுடன் இருக்கவேண்டும்.
தலைப்பு 1
திருமுழுக்கு
தி.ச. 849 அருளடையாளங்களின் நுழைவு வாயிலாகிய திருமுழுக்கு மீட்பிற்கு இன்றியமையாதது; இதை உண்மையாகவோ, குறைந்த அளவு விருப்பத்தின் மூலமாகவோ பெறவேண்டும். இதனால் மனிதர் பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்; இறைவனின் பிள்ளைகளாக மீண்டும் பிறக்கின்றனர்; அழியா முத்திரையால் கிறிஸ்துவின் சாயலைப் பெற்றுத் திருச்சபையில் ஓருடலாக இணைக்கப்படுகின்றனர். இத்திருமுழுக்கு உரிய வார்த்தைகளின் வாய்ப்பாட்டைப் பயன்படுத்தி உண்மையான தண்ணீரில் கழுவப்படுவதால் மட்டுமே செல்லத்தக்க விதத்தில் அளிக்கப்படுகிறது.
இயல் 1
திருமுழுக்குக் கொண்டாட்டம்
தி.ச. 850 திருமுழுக்கு அவசரத் தேவை நீங்கலாக, அங்கீகரிக்கப்பட்ட திருவழிபாட்டு நூல்களில் விதிக்கப்பட்டுள்ள சடங்குமுறைக்கேற்ப அளிக்கப்படவேண்டும். ஓர் அவசரத் தேவையில் அருளடையாளத்தின் செல்லத்தக்க நிலைக்குத் தேவையானவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்;
தி.ச. 851. திருமுழுக்குக் கொண்டாட்டத்தை தக்க விதத்தில் தயாரிக்கவேண்டும். எனவே,
1. திருமுழுக்கு பெற விரும்பும் வயது வந்தோரைக் கிறிஸ்தவப் புகுமுகநிலையில் சேர்க்கவேண்டும். அவர் ஆயர் பேரவையால் தழுவி அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்தவப் புகுமுகச் சடங்குமுறைக்கும் மற்றும் அதே பேரவை வெளியிட்டுள்ள சிறப்பு விதிமுறைகளுக்கும் ஏற்ப, இயன்றவரை, பல்வேறு படிநிலைகள் வழியாக அருளடையாளப்புகுமுக நிலைக்கு இட்டுச் செல்லப் படவேண்டும்.
2. திருமுழுக்குப் பெறவேண்டிய குழந்தையின் பெற்றோருக்கும், அவ்வாறே ஞானப் பெற்றோரின் பணியை மேற்கொள்ள வேண்டியவர்களுக்கும் இந்த அருளடையாளத்தின் பொருள், அத்துடன் இணைக்கப்பட்டுள்ள கடமைகள் பற்றித் தக்க முறையில் பயிற்றுவிக்கவேண்டும். பங்குக்குரு, தாமாகவோ மற்றவர்கள் வழியாகவோ, மேய்ப்புப்பணி சார்ந்த அறிவுரைகளாலும் பொது இறைவேண்டலாலும் பெற்றோர்கள் தக்க முறையில் தயாரிக்கப்படும்படி கவனித்துக் கொள்ளவேண்டும். இந்நோக்கத்திற்காகப் பலகுடும்பங்களை ஒன்று சேர்க்கவேண்டும்; எங்கு இயலுமோ அங்கு அக்குடும்பங்களைச் சந்திக்கவேண்டும்.
தி.ச. 852 வயதுவந்தோர் திருமுழுக்குப்பற்றிய திருச்சபைச் சட்ட விதியமைப்புகள் குழந்தைப் பருவத்தைக் கடந்து, அறிவுப் பயன்பாட்டை அடைந்துள்ள அனைவருக்கும் பொருந்தும்.
2) திருமுழுக்கைப் பொறுத்தவரை தற்பொறுப்பு ஏற்க இயலாத ஒருவர் ஒரு குழந்தையாகக் கருதப்படுவார்.
தி.ச. 853. திருமுழுக்கு அளிக்கப் பயன்படுத்த வேண்டிய தண்ணீரை, ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, திருவழிபாட்டு நூல்களின் விதியமைப்புகளுக்கேற்ப ஆசீர்வதிக்க வேண்டும்.
தி.ச. 854 ஆயர் பேரவையின் விதியமைப்புகளைக் கடைபிடித்து, திருமுழுக்கை முழுக்கு முறையிலோ ஊற்றுதல் முறையிலோ அளிக்கவேண்டும்.
தி.ச. 855.. கிறிஸ்தவ மனநிலைக்குப் புறம்பான ஒருபெயரைச் சூட்டாதவாறு பெற்றோர், ஞானப்பெற்றோர் மற்றும் பங்குக்குரு கவனித்துக் கொள்ள வேண்டும்.
தி.ச. 856. திருமுழுக்கு எந்தவொரு நாளிலும் கொண்டாடலாம் என்றாலும், சாதாரணமாக ஒரு ஞாயிற்றுக்கிழமையில், அல்லது இயன்றவரை, பாஸ்காத் திருவிழிப்பின்போது கொண்டாடுமாறு பரிந்துரைக்கப்படுகின்றது.
தி.ச. 857. ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, திருமுழுக்கிற்குரிய இடம் ஓர் ஆலயம் அல்லது செபக்கூடமாகும்.
2) நியாயமான ஒரு காரணம் வேறுவிதமாகத் தூண்டினாலன்றி, வழக்கமாக, வயதுவந்த ஒருவர் அவரின் சொந்தப்பங்கு ஆலயத்திலும், ஒரு குழந்தை அதன் பெற்றோர்க்குரிய பங்கு ஆலயத்திலும் திமுழுக்குப் பெறவேண்டும்.
தி.ச. 858. ஒவ்வொரு பங்கு ஆலயமும் ஒரு திருமுழுக்குத் தொட்டியைக் கொண்டிருக்கவேண்டும். இக்காரியத்தில் மற்ற ஆலயங்கள் ஏற்கெனவே முயன்று பெற்றிருக்கும் அதே உரிமையைக் கருத்தில் கொள்ளவேண்டும்
2) தலத்திருச்சபை ஆளுநர், தலப் பங்குக்குருவைக் கேட்டறிந்தபின், விசுவாசிகளின் வசதிக்காகப் பங்கின் எல்லைக்குள் மற்றோர் ஆலயம் அல்லது செபக்கூடத்திலும் ஒரு திருமுழுக்குத் தொட்டி வைக்கப்படும்படி அனுமதிக்கலாம் அல்லது கட்டளையிடலாம்.
தி.ச. 859. திருமுழுக்குப் பெறவேண்டியவர், தூரம் அல்லது மற்றச் சூழ்நிலைகளின் காரணமாக, பங்கு ஆலயத்திற்கோ, அல்லது தி.ச. 858, 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள செபக்கூடத்திற்கோ மிகவும் சிரமமின்றிச் செல்லவோ கொண்டுவரப்படவோ முடியாதெனில், மிக அருகில் உள்ள மற்றோர் ஆலயம் அல்லது செபக்கூடம் அல்லது மற்றொரு பொருத்தமான இடத்தில்கூடத் திருமுழுக்கு அளிக்கலாம், அளிக்கவும் வேண்டும்.
தி.ச. 860. திருமுழுக்கு, ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, தலத்திருச்சபை ஆளுநர் கனமான காரணத்திற்காக அனுமதித்திருந்தாலன்றி, தனியார் வீடுகளில் அளிக்கக்கூடாது.
2) மறைமாவட்ட ஆயர் வேறுவிதமாக விதித்திருந்தாலன்றி, ஓர் அவசரத் தேவை அல்லது மேய்ப்புப் பணி சார்ந்த வேறு சில தவிர்க்க முடியாத காரணம் நீங்கலாக, திருமுழுக்கை மருத்துவமனைகளில் கொண்டாடக்கூடாது.
இயல் 2
திருமுழுக்குப் பணியாளர்
தி.ச. 861. திருமுழுக்கின் சாதாரணப் பணியாளர் ஆயர், குரு மற்றும் திருத்தொண்டர் ஆவர். இக்காரியத்தில் தி.ச. 530, 1ல் குறிப்பிடப்பட்டுள்ள விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
2) சாதாரணப் பணியாளர் உடனில்லை அல்லது அவர் செயல்பட இயலவில்லை என்றால், வேதியர் அல்லது தலத்திருச்சபை ஆளுநரால் இப்பணிக்கென நியமிக்கப்பட்டுள்ள மற்றொருவர் சட்டமுறைப்படி திருமுழுக்கு அளிக்கலாம். உண்மையில் ஓர் அவசரத்தேவை எழும்போது எவரும் சரியான எண்ணத்துடன் திருமுழுக்கு அளிக்கலாம். ஆன்ம மேய்ப்பர்கள், சிறப்பாகப் பங்குக்குருக்கள், திருமுழுக்கு அளிக்கும் சரியான முறைபற்றிக் கிறிஸ்தவ விசுவாசிகளைப் பயிற்றுவிக்க அக்கறை செலுத்தவேண்டும்.
தி.ச. 862. ஓர் அவசரத் தேவைக்குத் தவிர, உரிய அனுமதியின்றி, மற்றொருவரின் எல்லைக்குள் தமது ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்குக்கூட திருமுழுக்கு அளிப்பதற்கு எவருக்கும் அனுமதியில்லை.
தி.ச. 863. குறைந்த அளவு பதினான்கு வயது நிரம்பிய, வயது வந்நவர்களின் திருமுழுக்கு மறைமாவட்ட ஆயரிடம் தெரிவிக்கப்படவேண்டும், பொருத்தமென்று அவர் கருதினால் அவரே திருமுழுக்கு அளிக்கலாம்.
இயல் 3
திருமுழுக்குப் பெறவேண்டியவர்கள்
தி.ச. 864. இன்னும் திருமுழுக்குப் பெறாதவர்கள் மட்டுமே திருமுழுக்குப் பெறத் தகுதியுடையவர்.
தி.ச. 865. வயதுவந்தவர் திருமுழுக்குப் பெறவேண்டுமென்றால், திருமுழுக்குப் பெறுவதற்கான விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியிருக்கவேண்டும்; விசுவாச உண்மைகளிலும் கிறிஸ்தவ கடமைகளிலும் போதுமான அளவு பயிற்றுவிக்கப்பட்டிருக்கவேண்டும்; கிறிஸ்தவ புகுமுகநிலை வழியாகக் கிறிஸ்தவ வாழ்வைச் சோதித்து அறியவேண்டும்; மேலும் தம்முடைய பாவங்களுக்காக வருந்த அவரை அறிவுறுத்த வேண்டும்.
2) இறக்கும் ஆபத்திலுள்ள வயதுவந்தவர் விசுவாசத்தின் முக்கிய உண்மைகளைப் பற்றி ஓரளவு அறிவு பெற்று, திருமுழுக்குப் பெறுவதற்கான விருப்பத்தை ஏதாவது ஒரு விதத்திpல் வெளிப்படுத்தி, கிறிஸ்தவ சமயக் கட்டளைகளைக் கடைப்பிடிக்கப் போவதாக வாக்குறுதி அளித்தருந்தால், அவருக்குத் திருமுழுக்கு அளிக்கலாம்.
தி.ச. 866. கனமான காரணம் தடுத்தாலன்றி, வயதுவந்த ஒருவர் திருமுழுக்குப் பெறும்போது, திருமுழுக்கிற்குப் பின் உடனே அவருக்கு உறுதிப்பூசுதல அளிக்கவேண்டும். அவர் நற்கருணைக் கொண்டாட்டத்தில் பங்கேற்றுத் திருவிருந்தும் உட்கொள்ளவேண்டும்.
தி.ச. 867. குழந்தைகளுக்கு முதல்சில வாரங்களுக்குள் திருமுழுக்கு அளிக்கப்படுவதைக் கவனித்துக்கொள்ளப் பெற்றோர் கடமைப்பட்டுள்ளனர்; பிறப்பிற்குப்பின், கூடிய விரைவில், ஏன், அதற்கு முன்பே கூட, குழந்தைக்கு அருளடையாளத்தைக் கேட்கவும் அதற்காகத் தக்கமுறையில் தயாரிக்கவும் பெற்றோர் பங்குக்குருவை அணுகவேண்டும்.
2) குழந்தை இறக்கும் ஆபத்தில் இருந்தால், எவ்வித கால தாமதமுமின்றி, அதற்குத் திருமுழுக்கு அளிக்கவேண்டும்.
தி.ச. 868. குழந்தைக்குச் சட்ட முறைப்படி திருமுழுக்கு அளிக்கத் தேவையானவை:
1) பெற்றோர், குறைந்த அளவு அவர்களில் ஒருவர் அல்லது சட்ட முறைப்படி அவர்கள் இடத்தில் இருப்பவர் ஒப்புதல் அளிக்கவேண்டும்.
2) குழந்தை கத்தோலிக்கச் சமயத்தில் வளர்க்கப்படும் என்பதற்குப் போதுமான நம்பிக்கை இருக்கவேண்டும்; அத்தகைய நம்பிக்கை முற்றிலுமாக இல்லையெனில், தனிச்சட்டத்தின் விதியமைப்புகளுக்கு ஏற்பத் திருமுழுக்கைத் தள்ளி வைக்கவேண்டும்; அதற்கான காரணத்தைப் பெற்றோருக்குத் தெரிவிக்கவேண்டும்.
3) கத்தோலிக்கப் பெற்றோரின் குழந்தைக்கு, உண்மையிலே கத்தோலிக்கரல்லாத பெற்றோரின் குழந்தைக்குக்கூட, இறக்கும் ஆபத்தில், பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகக்கூட, சட்டமுறைப்படி திருமுழுக்கு அளிக்கலாம்.
தி.ச. 869. ஒருவர் திருமுழுக்கு பெற்றுள்ளளாரா அல்லது திருமுழுக்கு செல்லத்தக்க விதத்தில் அளிக்கப்பட்டதா என்ற ஐயம் எழுந்து, கவனமான ஆய்வுக்குப்பின் ஐயம் நீடித்தால், அவருக்கு நிபந்தனைகளுக்குட்பட்டுத் திருமுழுக்கு அளிக்கவேண்டும்.
2) திருமுழுக்கு அளிக்க பயன்படுத்திய பொருள் மற்றும் வாய்ப்பாட்டை ஆய்வுசெய்து, மேலும் திருமுழுக்குப் பெற்ற வயது வந்த ஆள் மற்றும் திருமுழுக்குப் பணியாளரின் எண்ணத்தைக் கருத்திற்கொண்டு, திருமுழுக்கின் செல்லத்தக்கநிலை பற்றி ஐயப்படுவதற்குக் கனமான காரணம் இருந்தாலன்றி, கத்தோலிக்கமல்லாத ஒரு திருச்சபைச் சமூகத்தில் திருமுழுக்குப் பெற்றவர்களுக்கு நிபந்தனைகளுக்குட்பட்டுத் திருமுழுக்கு அளிக்கக்கூடாது.
3) 1 மற்றும் 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள காரியங்களில், திருமுழுக்கு அளித்தமை அல்லது அதன் செல்லத்தக்கநிலைபற்றி ஐயம் நீடித்தால், திருமுழுக்கு அளிக்கப்பெற வேண்டியவா வயது வந்தவரெனில், அவருக்குத் திருமுழுக்கு அருளடையாளத்தின் கோட்பாட்டை விளக்கும் வரை திருமுழுக்கு அளிக்கக்கூடாது. மேலும், முந்திய திருமுழுக்கின் செல்லத்தக்கநிலை பற்றி ஐயப்படுவதற்கான காரணங்களை அந்த ஆளுக்கும், ஒரு குழந்தையாக இருந்தால், அதன் பெற்றோர்களுக்கும் விளக்கவேண்டும்.
தி.ச. 870. கைவிடப்பட்ட அல்லது கண்டெடுக்கப்பட்ட குழந்தைக்கு, கவனமான ஆய்வின் மூலம் அது திருமுழுக்குப் பெற்றமை நிலைநாட்டப்பட்டாலன்றி, திருமுழுக்கு அளிக்கவேண்டும்.
தி.ச. 871. சிதைவுற்ற கருக்கள் உயிரோடிருப்பின், இயன்றவரை திருமுழுக்கு அளிக்கவேண்டும்.
இயல் 4
ஞானப்பெற்றோர்.
தி.ச. 872. திருமுழுக்கு அளிக்க வேண்டியவருக்கு, இயன்றவரை, ஒரு ஞானப்பெற்றோரைக் கொடுக்கவேண்டும். இவர் வயது வந்தவரின் திருமுழுக்கில் கிறிஸ்தவப் புகுமுக நிலையில் அவருக்குத் துணைபுரிவார், குழந்தையை அதன் பெற்றோருடன் திருமுழுக்கிற்குக் கையளிப்பார், திருமுழுக்குப் பெற்றவர் திருமுழுக்கிற்கேற்பக் கிறிஸ்தவ வாழ்வு நடத்தவும், திருமுழுக்கில் ஊன்றியுள்ள கடமைகளை உண்மையுடன் நிறைவேற்றவும் உதவி செய்வார்.
தி.ச. 873. ஞானப்பெற்றோர் ஒருவர் மட்டும், ஆண் அல்லது பெண் இருக்கலாம், அல்லது ஒவ்வொரு பாலினத்திலும் ஒருவர் இருக்கலாம்.
தி.ச. 874. 1) ஞானப்பெற்றோர் பணியை மேற்கொள்வதற்கு ஒருவர்:
1) திருமுழுக்குப் பெறவேண்டியவா அல்லது அவரின் பெற்றோர் அல்லது அவர்களின் இடத்தில் இருப்பவர், அல்லது, அவர்கள் இல்லாதிருப்பின், பங்குக்குரு அல்லது பணியாளரால் நியமிக்கப்பட்டிருக்கவேண்டும், இப்பணிக்குத் தகுதியுடையவராகவும் அதை நிறைவேற்றும் எண்ணம் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.
2) மறைமாவட்ட ஆயர் வேறொரு வயதை நிர்ணயித்திருந்தாலோ அல்லது பங்குக்குருவுக்கோ அல்லது பணியாளருக்கோ நியாயமான ஒரு காரணத்திற்காக விதிவிலக்கு அளிக்கவேண்டுமென்று தோன்றினாலோ அன்றி பதினாறு வயது நிரம்பியவராக இருக்கவேண்டும்.
3) கத்தோலிக்கராகவும், உறுதிப்பூசுதல் பெற்று ஏற்கெனவே புனிதமிகு நற்கருணை அருளடையாளத்தைப் பெற்றவராகவும், விசுவாசத்திற்கும் தாம் மேற்கொள்ளவிருக்கும் பணிக்கும் ஏற்ற வாழ்வு நடத்துபவராகவும் இருக்கவேண்டும்.
4) சட்டமுறைப்படி விதிக்கப்பட்ட அல்லது அறிக்கையிடப்பட்ட எவ்விதத் திருச்சபைத் தண்டனைக்கும் உட்பட்டவராக இருக்கக்கூடாது.
5) திருமுழுக்குப் பெறவேண்டியவரின் தந்தையாகவோ தாயாகவோ இருக்கக்கூடாது.
2) கத்தோலிக்கமல்லாத ஒரு திருச்சபைச் சமூகத்தில் திருமுழுக்குப் பெற்ற ஒருவர், ஒரு கத்தோலிக்க ஞனப் பெற்றோருடன் சேர்ந்து மட்டுமே, அதுவும் ஒரு சாட்சியாக மட்டுமே அனுமதிக்கப்படலாம்.
இயல் 5
அளிக்கப்பட்ட திருமுழுக்கின் சான்றும் பதிவும்.
தி.ச.875. திருமுழுக்கு அளிப்பவர், ஞானப்பெற்றோர் ஒருவர் இருந்தாலன்றி, திருமுழுக்கு அளித்ததை எண்பிக்கக்கூடிய குறைந்த அளவு ஒரு சாட்சியாவது இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
தி.ச.876. திருமுழுக்கு அளித்ததை எண்பிக்க, வேறு எவருக்கும் பாதிப்பு இல்லையெனில், ஐயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சாட்சியின் அறிக்கை அல்லது வயதுவந்த ஒருவர் திருமுழுக்குப் பெற்றிருந்தால், அவரின் சத்திய வாக்குமூலம் போதுமானது.
தி.ச.877. திருமுழுக்கைக் கொண்டாடிய இடத்தின் பங்குக்குரு, திருமுழுக்குப் பெற்றவர்களின் பெயர்கள், பணியாளர், பெற்றோர், ஞானப்பெற்றோர், சாட்சிகள் இருப்பின் அவர்கள், திருமுழுக்கு அளித்த இடம், நாள் ஆகியவற்றை, பிறந்தநாள் மற்றும் இடத்தைக் குறிப்பிட்டுத் திருமுழுக்குப் பதிவேட்டில் கவனத்துடனும் காலதாமதமின்றியும் பதிவு செய்யவேண்டும்.
2) திருமணமாத ஒரு தாயின் குழந்தையாக இருந்தால், தாயின் பெயரை, அவரின் தாய்மை வெளிப்படையாகத் தெரிந்திருந்தால் அல்லது அவர் தாமாகவோ, எழுத்து மூலமாகவோ இரண்டு சாட்சிகளின் முன்னிலையிலோ அதைக் கேட்டுக் கொண்டால், பதிவு செய்யவேண்டும், அவ்வாறே தந்தையின் பெயரை, அவரது தந்தைமை ஏதாவதொரு பொது ஆவணத்தின் மூலம் அல்லது பங்குக்குரு மற்றும் இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் அவரின் சொந்த அறிக்கை மூலம் எண்பிக்கப்பட்டிருந்தால், பதிவு செய்யவேண்டும், மற்ற சூழ்நிலைகளில், திருமுழுக்குப் பெற்றவரின் பெயரை, தந்தை அல்லது பெற்றோரின் பெயரைப் பற்றிய எவ்விதக் குறிப்புமின்றிப் பதிவு செய்யவேண்டும்.
3) தத்தெடுக்கப்பட்ட ஒரு குழந்தையாக இருந்தால், தத்தெடுக்கும் பெற்றோரின் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும், மேலும், இயல்பான பெற்றோரின் பெயர்களை, குறைந்த அளவு அப்பகுதிக் குடியுரிமைப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டால், ஆயர் பேரவையின் விதியமைப்புகளைக் கருத்திற்கொண்டு, 1 மற்றும் 2 ன் விதிமுறைக்கேற்ப, பதிவு செய்யவேண்டும்.
தி.ச.878. பங்குக்குருவோ அவரது முன்னிலையிலோ திருமுழுக்கு அளிக்கப்படவில்லையென்றால், திருமுழுக்குப் பணியாளர்- அவர் யாராக இருந்தாலும்- திருமுழுக்கு அளிக்கப்பட்ட பங்கின் பங்குக்குருவுக்கு அளிக்கப்பட்ட திருமுழுக்கைப் பற்றித் தெரிவிக்கவேண்டும். அவர் தி.ச. 877, 1 ன் விதிமுறைக்கேற்பத் திருமுழுக்கைப் பதிவு செய்யவேண்டும்.
தலைப்பு 2
உறுதிப்பூசுதல் அருளடையாளம்
தி.ச.879. உறுதிப்பூசுதல் அருளடையாளம் ஒரு முத்திரையைப் பதிக்கின்றது. இதனால் திருமுழுக்குப் பெற்றவர்கள் தங்கள் கிறிஸ்தவப் புகுநிலைப் பயணத்தைத் தொடர்கின்றனர், தூய ஆவியின் கொடையால் வளமையடைகின்றனர், திருச்சபையுடன் மிகவும் நிறைவாகப் பிணக்கப்படுகின்றனர், இவ்வருளடையாளம் அவர்களை உறுதிப்படுத்துகின்றது, சொல்லாலும் செயலாலும் கிறிஸ்துவின் சாட்சிகளாக இருக்கவும், விசுவாசத்தைப் பரப்பவும் பாதுகாக்கவும் மிகவும் உறுதியுடன் கடமைப்பட்டுள்ளனர்.
இயல் 1
உறுதிப்பூசுதல் கொண்டாட்டம்
தி.ச.880. உறுதிப்பூசுதல் அருளடையாளம் முன்னெற்றியில் கிறிஸ்மா தைலம் பூசுதல் வழியாக அளிக்கப்படுகிறது. இது கைகளை வைப்பதாலும், அங்கீகரிக்கப்பட்ட திருவழிபாட்டு நூல்களில் விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் வழியாகவும் அளிக்கப்படுகிறது.
2) உறுதிப்பூசுதல் அருளடையாளத்தில் பயன்படுத்தவேண்டிய கிறிஸ்மா தைலம், அருளடையாளம் குருவால் அளிக்கப்பட்டாலும்கூட, ஆயரால் திருநிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.
தி.ச.881. உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை ஆலயத்தில், அதுவும் திருப்பலியின்போது கொண்டாடுவது விரும்பத்தக்கது, இருப்பினும், நியாயமான மற்றும் அறிவுக்கொத்த ஒரு காரணத்திற்காக, திருப்பலிக்குப் புறம்பே தகுதியான இடத்தில் கொண்டாடலாம்.
இயல் 2
உறுதிப்பூசுதல் பணியாளர்;
தி.ச.882. உறுதிப்பூசுதலின் சாதாரணப்; பணியாளர் ஆயர், பொதுச்சட்டம் அல்லது தகுதி வாய்ந்த அதிகாரியின் சிறப்புச் சலுகை மூலம் இச்செயலுரிமை பெற்றுள்ள குருவும் இவ்வருளடையாளத்தைச் செல்லத்தக்கவிதத்தில் அளிக்கிறார்.
தி.ச.883. கீழ்க்கண்டவர்கள் சட்டத்தினாலேயே உறுதிப்பூசுதல் அளிக்கும் செயலுரிமையைக் கொண்டுள்ளனர்:-
1) தங்களுடைய எல்லை வரம்பிற்குள், சட்டப்படி மறைமாவட்ட ஆயருக்கு இணையானவர்கள்
2) உறுதிப்பூசுதல் பெறும் ஆளைப் பொறுத்தவரை, தமது பதவி அல்லது மறைமாவட்ட ஆயரின் ஆணையின் காரணமாக, குழந்தைப் பருவத்தைக் கடந்த ஒருவருக்குத் திருமுழுக்கு அளிக்கும் அல்லது ஏற்கெனவே திருமுழுக்குப் பெற்ற ஒருவரைக் கத்தோலிக்கத் திருச்சபையின் முழு உறவு ஒனிறிப்பில் ஏற்கும் குரு,
3) இறக்கும் ஆபத்தில் இருப்பவரைப் பொறுத்தவரை, பங்குக்குரு அல்லது உண்மையில் யாராவது ஒரு குரு,
தி.ச.884. மறைமாவட்ட ஆயர் தாமே இவ்வருளடையாளத்தை அளிக்கவேண்டும், அல்லது மற்றோர் ஆயரால் அது அளிக்கப்படுவதைக் கவனித்துக்கொள்ளவேண்டும். ஓர் அவசரத் தேவை அதைத் தூண்டினால், அவர் இவ்வருளடையாளத்தை அளிக்கும் செயலுரிமையை ஒரு குருவுக்கோ குறிப்பிட்ட பல குருக்களுக்கோ வழங்கலாம்.
2) கனமான காரணத்திற்காக, ஆயர், அவ்வாறே சட்டம் அல்லது தகுதிவாய்ந்த அதிகாரியின் சிறப்புச் சலுகையால் உறுதிப்பூசுதல் அளிக்கும் செயலுரிமை பெற்றுள்ள குரு, குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இவ்வருளடையாளத்தை அளிக்குமாறு குருக்களைத் தங்களுடன் இணைத்துக் கொள்ளலாம்.
தி.ச.885. தக்க முறையிலும் அறிவுக்கொத்த விதத்திலும் உறுதிப்பூசுதல் அருளடையாளத்தைக் கேட்கின்ற தமது ஆளுகைக்குட்பட்டவர்களுக்கு அதனை அளிப்பதைக் கவனித்துக்கொள்ள மறைமாவட்ட ஆயர் கடமைப்பட்டுள்ளார்.
2) இச்செயலுரிமை கொண்டுள்ள குரு, யாருடைய நலனுக்காகச் செயலுரிமை வழங்கப்பட்டதோ அவர்களுக்காக அதைப் பயன்படுத்தவேண்டும்.
தி.ச.886. ஆயர் தம் சொந்த மறைமாவட்டத்தில், தமது ஆளுகைக்குட்படாத விசுவாசிகளுக்கும், அவர்களின் சொந்தத் திருச்சபை ஆளுநரின் தெளிவான தடையீருந்தாலன்றி, சட்டமுறைப்படி உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை அளிக்கலாம்.
2) தமது ஆளுகை;கு உட்பட்டவர்களாக இருந்தாலன்றி, மற்றொரு மறைமாவட்டத்தில் சட்டமுறைப்படி உறுதிப்பூசுதல் அளிப்பதற்கு அம்மறைமாவட்ட ஆயரின் குறைந்த அளவு அறிவுக்கொத்த விதத்தில் ஊகிக்கப்பட்ட அனுமதி ஆயருக்குத் தேவை.
தி.ச.887. உறுதிப்பூசுதல் அளிக்கும் செயலுரிமை கொண்டுள்ள குரு, தமக்குக் குறிக்கப்பட்டுள்ள எல்லைக்குள் அவ் எல்லைக்கு வெளியே உள்ளவர்களுக்கும் கூட. அவர்களின் சொந்தத் திருச்சபை ஆளுநர் தடை செய்திருந்தாலன்றி, இவ்வருளடையாளத்தைச் சட்டமுறைப்படி அளிக்கலாம். ஆனால், அவர் வேறோர் எல்லையில் இவ்வருளடையாளத்தைச் செல்லத்தக்க விதத்தில் எவருக்கும் அளிக்க முடியாது. இக்காரியத்தில் தி.ச. 883, 3 ல் உள்ள விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச.888. பணியாளர்கள் தாங்கள் உறுதிப்பூசுதல் அளிக்கக்கூடிய எல்லைக்குள், விலக்குரிமை பெற்ற இடங்களிலும்கூட, அதை அளிக்கலாம்.
இயல் 3
உறுதிப்பூசுதல் பெறவேண்டியவர்கள்
தி.ச.889. திருமுழுக்கு பெற்று இன்னும் உறுதிப்பூசுதல் பெறாதவர்கள் மட்டுமே உறுதிப்பூதல் பெறத் தகுதியுடையவர்கள்.
2) இறக்கும் ஆபத்திற்குப் புறம்பே, சட்டமுறைப்படி உறுதிப்பூசுதல் பெறுவதற்கு. ஒருவர் அறிவுப் பயன்பாடு உடையவராக இருந்தால், அவர் உரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்டிருக்கவேண்டும், ஏற்புடைய நிலையில் இருக்கவேண்டும், திருமுழுக்கு வார்த்தைப்பாடுகளைப் புதுப்பிக்கக் கூடியவராக இருக்கவேண்டும்.
தி.ச.890. விசுவாசிகள் இவ்வருளடையாளத்தைச் சரியான நேரத்தில் பெறக் கடமைப்பட்டுள்ளனர், பெற்றோர்கள், ஆன்ம மேய்ப்பர்கள், சிறப்பாகப் பங்குக்குருக்கள், விசுவாசிகள் இவ்வருளடையாளத்தைப் பெறுவதற்கு உரிய முறையில் பயிற்றுவிக்கப்படுவதையும், சரியான நேரத்தில் அதைப் பெறுவதையும் கவனித்துக்கொள்ளவேண்டும்.
தி.ச.891. ஆயர் பேபரவை வேறொரு வாதை நிர்ணயித்திருந்தாலோ, இறக்கும் ஆபத்திலிருந்தாலோ, அல்லது பணியாளரின் கணிப்பில் கனமான ஒரு காரணம் வேறுவிதமாகத் தூண்டினாலோ அன்றி, உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை விசுவாசிகளுக்கு ஏறத்தாழ தன்னறிவு அடைந்த வயதில் அளிக்கவேண்டும்.
இயல் 4.
ஞானப்பெற்றோர்.
தி.ச.892. உறுதிப்பூசுதல் பெறுபவர், இயன்றவரை, ஒரு ஞானப்பெற்றோரைக் கொண்டிருக்கவேண்டும். உறுதிப் பூசுதல் பெற்றவர் கிறிஸ்துவின் உண்மையான சாட்சியாய் செயல்படுவதையும், இவ்வருளடையாளத்தில் ஊன்றியுள்ள கடமைகளை உண்டையுடன் நிறைவேற்றுவதையும் கவனித்துக் கொள்வது ஞானப் பெற்றோரின் கடமை.
தி.ச.893. ஞானப்பெற்றோரின் பணியை மேற்கொள்பவர் ச 874-ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை நிறைவு செய்யவேண்டும்.
2) திருமுழுக்கில் ஞானப்பெற்றோர் பணியை மேற்கொண்டவர் உறுதிப்பூசுதலுக்கு ஞானப்பெற்றோராயிருப்பது விரும்பத்தக்கது.
இயல் 5.
உறுதிப்பூசுதல் சான்றும் பதிவும்
தி.ச. 894. உறுதிப்பூசுதல் அளித்ததை எண்பிக்க ச. 876-ன் விதியமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 895. உறுதிப்பூசுதல் பெற்றவர்கள், பணியாளர், பெற்றோர்கள், ஞானப்பெற்றோர்களின் பெயர்களும், உறுதிப்பூசுதல் அளித்த இடமும் நாளும் மறைமாவட்டச் செயலகத்தின் உறுதிப்பூசுதல் பதிவேட்டில், அல்லது, ஆயர் பேரவை அல்லது மறைமாவட்ட ஆயர் அதை விதித்திருந்தால், பங்கு ஆவணக்காப்பகத்தில் வைக்க வேண்டிய பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். தி.ச. 535, 2-ன் விதிமுறைக்கேற்ப திருமுழுக்குப் பதிவேட்டில் பதிவு செய்யுமாறு, அளித்த உறுதிப்பூசுதலைப் பற்ற, பங்குக்குரு, திருமுழுக்கு அளித்த இடத்தின் பங்குக்குருவுக்கு அறிவிக்கவேண்டும்.
தி.ச. 896. இடத்தின் பங்குக்குரு உடனில்லாதிருந்தால், பணியாளர், தாமாகவோ மற்றவர் மூலமாகவோ, அளித்த உறுதிப்பூசுதலைப் பற்றக் கூடிய விரைவில் அவருக்கு அறிவிக்கவேண்டும்.
தலைப்பு 3
புனிதமிகு நற்கருணை
தி.ச. 897. புனிதமிகு நற்கருணை மாண்புமிக்க அருளடையாளம். இதில் ஆண்டவராகிய கிறிஸ்துவே உடனிருக்கிறார், ஒப்புக்கொடக்கப்படுகிறார், உட்கொள்ளப்படுகிறார். இதனால் திருச்சபை இடைவிடாமல் வாழ்ந்து, வளர்கிறது. நுற்கருணைப்பலி ஆண்டவரின் இறப்பு மற்றும் உயிர்ப்பின் நினைவுச் சின்னம். இதில் சிலுவைப்பலி என்றென்றும் நீடிக்கிறது. இது கிறிஸ்தவ வழிபாடு மற்றும் வாழ்வு முழுவதின் உச்சியும் ஊற்றுமாகும். இதனால் இறைமக்களின் ஒற்றுமை குறிக்கப்பட்டு விளைவிக்கப்படுகிறது, கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்புதல் நிறைவடைகிறது. ஏனைய அருளடையாளங்களும் திருத்தூதுப்பணி சார்ந்த எல்லாவிதத் திருச்சபை அலுவல்களும் புனிதமிகு நற்கருணையுடன் இணைக்கப்பட்டு, அதை நோக்கியுள்ளன.
தி.ச. 898. கிறிஸ்தவ விசுவாசிகள் நற்கருணை மீது மாபெரும் மதிப்புக் கொண்டிருக்கவேண்டும். அவர்கள் புனிதமிகு திருப்பலிக் கொண்டாட்டத்தில் ஈடுபாட்டுடன் பங்கேற்கவேண்டும். இவ்வருளடையாளத்தை மிகுந்த பக்தியுடனும் அடிக்கடியும் பெறவேண்டும். மேலும் மேன்மைமிகு ஆராதனையுடன் அதை வழிபடவேண்டும். ஆன்ம ஆமய்ப்பர்கள் இவ்வருளடையாளத்தைப் பற்றிய கோட்பாட்டை விளக்கி, இக்கடமைபற்றி விசுவாசிகளுக்கு ஆர்வமுடன் கற்பிக்கவேண்டும்.
இயல் 1
நற்கருணைக் கொண்டாட்டம்
தி.ச. 899. நற்கருணைக் கொண்டாட்டம் கிறிஸ்துவினுடையவும் திருச்சபையினுடையவும் செயல். இதில் ஆண்டவராகிய கிறிஸ்து, குருவின் பணிவழியாக, அப்ப இரச வடிவில் பொருட்தன்மையில் உடனிருந்து, தம்மையே தந்தையாகிய இறைவனு;கு ஒப்புக்கொடுக்கிறார், தமது ஒப்புக் கொடுத்தலில் இணைக்கப்பட்டுள்ள விசுவாசிகளுக்குத் தம்மையே ஆன்ம உணவாக அளிக்கிறார்.
2) நற்கருணை விருந்தில் இறைமக்கள், கிறிஸ்துவின் பெயரால் செயல்படும் ஆயர் அல்லது அவரின் அதிகாரத்தின் கீழுள்ள குருவின் தலைமையில், ஒன்றாக அழைக்கப்படுகின்றனர். உடனிருக்கும் அனைத்து விசுவாசிகளும், திருப்பணியாளராயினும் அல்லது பொதுநிலையினராயினும், பட்டங்கள் மற்றும் திருவழிபாட்டுப் பணிகளின் வேறுபாட்டிற்கேற்ப, தத்தமக்குரிய விதத்தில் பங்கேற்று ஒன்றுகூடுகின்றனர்.
3) கிறிஸ்து நற்கருணைப்பலியைப் பல்வேறு பலன்களுக்காக ஏற்படுத்தினார், நற்கருணைக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் அவற்றைப் பெறும் வண்ணம் இக்கொண்டாட்டத்தை ஒழுங்கு செய்யவேண்டும்..
உட்பிரிவு 1
புனிதமிகு நற்கருணைப் பணியாளர்
தி.ச. 900. கிறிஸ்துவின் பெயரால் நற்கருணை அருளடையாளத்தை உருவாக்கக் கூடிய பணியாளர், செல்லத்தக்கவிதத்தில் பட்டம் பெற்ற குரு மட்டுமே ஆவார்.
2) திருச்சபைச் சட்டத்தால் தடைசெய்யப்படாத குரு, கீழ்க்கண்ட திருச்சபைச் சட்டத்தின் விதியமைப்புகளைக் கடைப்பிடித்து, சட்டமுறைப்படி நற்கருணையைக் கொண்டாடலாம்.
தி.ச. 901. வாழ்வோர் அல்லது இறந்தோர் எவருக்காகவும் திருப்பலியை ஒப்புக்கொடுக்க குருவுக்கு உரிமையுண்டு.
தி.ச. 902. கிறிஸ்தவ விசுவாசிகளின் நலன் வேறுவிதமாகக் கோரினாலோ தூண்டினாலோ அன்றி, குருக்கள் கூட்டுத்திருப்பலி நிறைவேற்றலாம், ஆயினும், ஒவ்வொரு குருவுக்கும் தனிப்பட்ட விதத்தில் திருப்பலி நிறைவேற்றத் தன்னுரிமை உண்டு. ஆனால், அதே ஆலயத்தில் அல்லது செபக்கூடத்தில் கூட்டுத்திருப்பலி நடைபெறும்போது அவ்வாறு செய்யலாகாது.
தி.ச. 903. ஒரு குரு, தமது சொந்தத் திருச்சபை ஆளுநர் அல்லது தலைவரின் குறைந்த அளவு ஓராண்டிற்குள் வழங்கப்பட்ட பரிந்துரைக் கடிதத்தை அளித்தால், அல்லது அவர் திருப்பலி நிறைவேற்றுவதிலிருந்து தடைசெய்யப்படவில்லை என்று விவேகத்துடன் தீர்மானிக்க முடியும் என்றால், அவர் ஆலய அதிபருக்கு அறிமுகமற்றவர் என்றாலும்கூட, திருப்பலி நிறைவேற்ற அனுமதிக்கப்படவேண்டும்.
தி.ச. 904. குருக்கள், நற்கருணைப்பலியாகிய மறைபொருளில் மீட்பின் அலுவல் இடைவிடாது நிறைவேற்றப்படுகிறது என்பதை என்றும் நினைவுகூர்ந்து, அடிக்கடி திருப்பலி நிறைவேற்றவேண்டும்: உண்மையில் ஒவ்வொருநாளும் திருப்பலி நிறைவேற்ற அவர்கள் உளமாரப் பரிந்துரைக்கப்படுகின்றனர்: ஏனெனில், விசுவாசிகள் உடனிருக்க இயலாது என்றாலும்கூட, திருப்பலி கிறிஸ்துவினுடையவும் திருச்சபையினுடையவும் செயல். இதில் குருக்கள் தங்கள் முதன்மையான பணியை நிறைவேற்றுகின்றனர்.
தி.ச. 905. ஒரே நாளில் தனியாகவோ கூட்டாகவோ பலமுறைத் திருப்பலி நிறைவேற்றச் சட்டம் அனுமதிக்கும் காரியங்களுக்குப் புறம்பே, ஒரு குரு ஒரு நாளில் ஒன்றுக்கும் அதிகமாகத் திருப்பலி நிறைவேற்ற அனுமதிக்கப்படுவதில்லை.
2) குருக்கள் பற்றாக்குறை இருந்தால், நியாயமான ஒரு காரணத்திற்காக ஒரே நாளில் இருமுறையும், மேய்ப்புப் பணித் தேவை கோரும்போது ஞாயிறு மற்றும் கடன் திருநாள்களில் மூன்று முறை கூடத் திருப்பலி நிறைவேற்ற குருக்களுக்குத் தலத்திருச்சபை ஆளுநர் அனுமதி வழங்கலாம்.
தி.ச. 906. நியாயமானதும் அறிவுக்கு ஒத்ததுமான ஒரு காரணம் இருந்தாலன்றி, குறைந்த அளவு ஒரு விசுவாசியின் பங்கேற்பின்றிக் குரு நற்கருணைப்பலி நிறைவேற்றக்கூடாது.
தி.ச. 907. திருத்தொண்டர்களும் பொதுநிலையினரும் நற்கருணைக் கொண்டாட்டத்தில் திருப்பலி நிறைவேற்றும் குருவுக்குரிய இறைவேண்டலை, குறிப்பாக நற்கருணை மன்றாட்டைச் சொல்லவோ செயல்களைச் செய்யவோ கூடாது.
தி.ச. 908. கத்தோலிக்க குருக்கள், கத்தோலிக்கத் திருச்சபையுடன் முழுமையான உறவுஒன்றிப்புக் கொண்டிராத திருச்சபைகள் அல்லது திருச்சபைச் சமூகங்களின் குருக்கள் அல்லது பணியாளர்களுடன் இணைந்து நற்கருணையைக் கொண்டாடத் தடைசெய்யப்பட்டுள்ளனர்.
தி.ச. 909. குரு நற்கருணைப் பலிக் கொண்டாட்டத்திற்கு இறைவேண்டலினால் தக்கவிதத்தில் தம்மைத் தயார் செய்வதையும், அதை நிறைவேற்றியபின் இறைவனுக்கு நன்றி செலுத்துவதையும் விட்டுவிடக்கூடாது.
தி.ச. 910. திருவிருந்தின் சாதாரணப் பணியாளர், ஆயர், குரு அல்லது திருத்தொண்டர் ஆவார்.
2) திருவிருந்தின் அசாதாரணப் பணியாளர், பீடத்துணைவர் அல்லது தி.ச.230, 3 ன் விதிமுறைக்கேற்ப நியமிக்கப்பட்ட மற்றொரு கிறிஸ்தவ விசுவாசி ஆவார்.
தி.ச. 911. பங்குக்குரு, துணைப் பங்குக்குருக்கள் மற்றும் சிறப்புப் பணிக்குருக்கள் புனிதமிகு நற்கருணையை இறுதி வழி உணவாக நோயாளிகளுக்குக் கொண்டு செல்லும் உரிமையையும் கடமையையும் கொண்டுள்ளனர்: இதே கடமையையும் உரிமையையும், திருப்பணியாளர் துறவற சபைகள் அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் தலைவர்கள் தங்கள் இல்லத்தில் வாழும் அனைவரையும் பொறுத்தவரையில் கொண்டுள்ளனர்.
2) ஓர் அவசரத் தேவை எழும்போது அல்லது பங்குக்குரு, சிறப்பு பணிக்குரு அல்லது தலைவரின் குறைந்த அளவு ஊகிக்கப்பட்ட அனுமதியுடன் எந்தவொரு குருவும் அல்லது மற்றொரு திருவிருந்து பணியாளரும் இதைச் செய்யவேண்டும்: அதன்பின் அதைப் பற்றி அவர்களிடம் தெரிவிக்கவேண்டும்.
உட்பிரிவு 2
புனிதமிகு நற்கருணையில் பங்கேற்பு
தி.ச. 912. சட்டத்தால் தடைசெய்யப்படாத, திருமுழுக்குப் பெற்ற எவரையும் திருவிருந்திற்கு அனுமதிக்கலாம்: அனுமதிக்கவேண்டும்.
தி.ச. 913. சிறுவர்களுக்கு புனிதமிகு நற்கருணை வழங்க வேண்டுமென்றால், அவர்கள் போதுமான அறிவையும் நுட்பமான தயாரிப்பையும் பெற்றிருக்கவேண்டும். இவ்வாறு அவர்கள் தங்களது திறமைக்கேற்பக் கிறிஸ்துவின் மறைபொருளைப் புரிந்துகொள்ளவும், ஆண்டவரின் உடலை விசுவாசத்துடனும் பக்தியுடனும் பெற்றுக்கொள்ளவும் இயலும்.
2) ஆயினும் இறக்கும் ஆபத்திலுள்ள சிறுவர்கள் கிறிஸ்துவின் உடலைச் சாதாரண உணவிலிருந்து வேறுபடுத்திக் காணக்கூடியவர்களாகவும் இருந்தால், அவர்களுக்குப் புனிதமிகு நற்கருணை வழங்கலாம்.
தி.ச. 914. அறிவுப் பயன்பாடு அடைந்துள்ள சிறுவர்கள் சரியான விதத்தில் தயாரிக்கப்பட்டு, முன்னதாக அருளடையாளப் பாவஅறிக்கை செய்து, கூடிய விரைவில் இந்த இறை உணவால் ஊட்டம் பெறுமாறு பார்த்துக்கொள்வது முதன் முதலில் பெற்றோர்கள், பெற்றோர்களின் இடத்தில் இருப்பவர்கள் மற்றும் பங்குக்குரு ஆகியோரின் கடமையாகும். அறிவுப் பயன்பாடு அடையாதவர்கள் அல்லது போதுமான ஏற்புடையநிலையில் இல்லாதவர்கள் என்று பங்குக்குரு கருதும் சிறுவர்கள் திருவிருந்தை அணுகாதபடி விழிப்புடன் கவனிப்பதும் பங்குக்குருவின் கடமை.
தி.ச. 915. திருச்சபை உறவு ஒனிறிப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் அல்லது இறைவழிபாடுவிலக்கிற்கு உள்ளானவர்கள், அத்தகைய தண்டனை விதிக்கப்பட்டபின் அல்லது அறிக்கையிடப்பட்டபின் மற்றும் வெளிப்படையான, கனமான பாவத்தில் பிடிவாதமாய் நிலைத்திருக்கும் மற்றவர்களைத் திருவிருந்திற்கு அனுமதிக்கக்கூடாது.
தி.ச. 916. கனமான ஒரு காரணம் இருந்து மற்றும் பாவ அறிக்கையிடும் வாய்ப்பு இல்லாதிருந்தாலன்றி, கனமான பாவம் இருப்பதாக உணரும் ஒருவர், முன்னதாக அருளடையாளப்பாவ அறிக்கை செய்யாமல், திருப்பலி நிறைவேற்றவோ ஆண்டவரின் உடலைப் பெறவோ கூடாது. இத்தகைய சூழ்நிலையில் அவர், கூடிய விரைவில் பாவ அறிக்கை செய்யும் எண்ணத்தை உள்ளடக்கிய நிறைவான மனத்துயரை வெளியிடக் கடமைப்பட்டுள்ளார் என்பதை நினைவுகூர வேண்டும்.
தி.ச. 917. புனிதமிகு நற்கருணையை ஏற்கெனவே பெற்றுக்கொண்ட ஒருவர், அதே நாளில் அவர் பங்கேற்கும் நற்கருணைக்கொண்டாட்டத்தில் மட்டுமே அதை மீண்டும் ஒருமுறை பெறலாம். இக்காரியத்தில் தி.ச. 921, 2 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 918. விசுவாசிகள் நற்கருணைக் கொண்டாட்டத்திலேயே திருவிருந்தைப் பெற்றுக் கொள்ள மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றனர். இருப்பினும், நியாயமான ஒரு காரணத்திற்காக, திருப்பலிக்குப் புறம்பே அதைக் கேட்பவர்களுக்கு அதனை வழங்கவேண்டும். இக்காரியத்தில் திருவழிபாட்டுச் சடங்குமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 919. புனிதமிகு நற்கருணையைப். பெறவிருக்கும் ஒருவர், திருவிருந்துக்கு முன் குறைந்த அளவு ஒருமணி நேரம், தண்ணீரும் மருந்தும் மட்டும் நீங்கலாக, எவ்வித உணவையும் பானத்தையும் தவிர்க்கவேண்டும்.
2) அதே நாளில் இரண்டு அல்லது மூன்று முறை புனிதமிகு நற்கருணையைக் கொண்டாடும் குரு, இரண்டாவது அல்லது மூன்றாவது கொண்டாட்டத்துக்குமுன், ஒருமணி நேர இடைவேளை இல்லையென்றாலுங்கூட, ஏதாவது உட்கொள்ளலாம்.
3) வயது முதிர்ந்தவர்களும் ஏதாவது ஓர் உடல்நலக் குறைவால் துன்புறுபவர்களும் மற்றும் அவர்களைக் கவனிப்பவர்களும், கடந்த ஒரு மணி நேரத்திற்குள் ஏதாவது உட்கொண்டிருந்தாலும்கூட, புனிதமிகு நற்கருணையைப் பெற்றுக்கொள்ளலாம்.
தி.ச. 920. ஒருமுறை நற்கருணை உட்கொள்ளத் தொடங்கியபின், அனைத்து விசுவாசிகளும் குறைந்த அளவு ஆண்டுக்கொருமுறையாவது திருவிருந்து உட்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர்.
2) நியாயமான காரணத்திற்காக ஆண்டின் மற்றொரு காலத்தில் இக்கட்டளை நிறைவேற்றப்பட்டாலன்றி, பாஸ்கா காலத்தில் அதை நிறைவேற்றவேண்டும்.
தி.ச. 921. எக்காரணத்தினாலாவது இறக்கும் ஆபத்திலிருக்கும் கிறிஸ்தவ விசுவாசிகளை இறுதி வழி உணவு என்ற முறையில் திருவிருந்தால் ஊட்டமளிக்கவேண்டும்.
2) அதே நாளில் நற்கருணை உட்கொண்டிருந்தாலும்கூட, இறக்கும் ஆபத்திலிருப்பவர்கள் மறுபடியும் நற்கருணை உட்கொள்ள மிகவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
3) இறக்கும் ஆபத்து நீடிக்கும்போது, திருவிருந்து பலமுறை, ஆனால் வெவ்வேறு நாள்களில் வழங்கப்பட பரிந்துரைக்கப்படுகிறது.
தி.ச. 922. நோயாளிகளுக்கான இறுதி வழி உணணவை மிகவும் காலம் தாழ்த்தக்கூடாது: நோயாளிகள் முற்றிலும் தன்னுர்வுடன் இருக்கும்போது இறுதி வழி உணவால் ஊட்டம் பெறுவதை ஆன்ம அக்கறை கொண்டவர்கள் ஆர்வமுடனும் விழிப்புடனும் கவனிக்கவேண்டும்.
தி.ச. 923. கிறிஸ்தவ விசுவாசிகள் எந்தவொரு கத்தோலிக்க வழிபாட்டு முறையிலும் நற்கருணைப்பலியில் பங்கேற்கலாம், திரு உணவு உட்கொள்ளலாம். இக்காரியத்தில் தி.ச. 844 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்..
உட்பிரிவு 3
நற்கருணைக் கொண்டாட்டத்தின் வழிபாட்டுமுறைகளும் சடங்குமுறைகளும்
தி.ச. 924 புனிதமிகு நற்கருணைப்பலியை அப்பத்திலும் திராட்சை இரசத்திலும் கொண்டாடவேண்டும்.
2) அப்பம் கோதுமையில் மட்டும் செய்யப்பட்டதாகவும், கெட்டுப்போகும் ஆபத்தை விலக்க, அண்மையில் செய்யப்பட்டதாகவும் இருக்கவேண்டும்.
3) திராட்சை இரசம் இயற்கையானதாக இருக்கவேண்டும், திராட்சைப் பழத்திலிருந்து செய்ததாகவும் கெட்டுப்போகாமலும் இருக்கவேண்டும்.
தி.ச. 925. திருவுணவு அப்ப வடிவத்தில் மட்டும் அல்லது திருவழிபாட்டுச் சட்டங்களின் விதிமுறைகளுக்கேற்ப இரண்டு வடிவங்களில் அல்லது தேவையின் போது திராட்சை இரச வடிவத்தில் மட்டும் வழங்கவேண்டும்.
தி.ச. 926. இலத்தீன் திருச்சiயின் தொன்மைவாய்ந்த மரபிற்கேற்ப, நற்கருணைக் கொண்டாட்டத்தில், குரு அதை ஒப்புக்கொடுக்கும் இடமெல்லாம் புளியாத அப்பத்தைப் பயன்படுத்தவேண்டும்.
தி.ச. 927. இன்றியமையாத ஓர் அவசரத் தேவையில்கூட, மற்றொரு பொருளின்றி ஒரு பொருளை மட்டும் அர்ச்சிப்பதோ அல்லது இரண்டு பொருள்களையும்கூட நற்கருணைக் கொண்டாட்டத்திற்குப் புறம்பே அர்ச்சிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தி.ச. 928. நற்கருணைக் கொண்டாட்டம் இலத்தீன் மொழியில், அல்லது திருவழிபாட்டு மூலப்பாடங்கள் சட்டமுறைப்படி அங்கீகரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மற்றொரு மொழியில் நிறைவேற்றப்படவேண்டும்.
தி.ச. 929. குருக்களும் திருத்தொண்டர்களும், நற்கருணையைக் கொண்டாடுவதிலும் வழங்குவதிலும் வழிபாட்டு விதிமுறைகளின்படி திரு உடைகளை அணியவேண்டும்.
தி.ச. 930. நோயுற்றுள்ள அல்லது வயதான குரு, நிற்கமுடியவில்லையென்றால், உட்கார்ந்து கொண்டு திருவழிபாட்டுச் சட்டங்களைக் கடைப்பிடித்து, நற்கருணைப் பலியைக் கொண்டாடலாம். ஆயினும், தலத்திருச்சபை ஆளுநரின் அனுமதியின்றி, மக்கள் முன்னிலையில் அவ்வாறு செய்யக்கூடாது.
2) பார்வையிழந்த அல்லது வேறு ஏதாவது ஓர் உடல் நலக்குறைவால் துன்புறும் குரு, அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது ஒரு திருப்பலியின் மூலப்பாடத்தைப் பயன்படுத்தி, தேவைப்பட்டால் மற்றொரு குரு அல்லது திருத்தொண்டர் அல்லது உரியமுறையில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பொதுநிலையினரின் உதவியுடன்கூட, சட்ட முறையாக நற்கருணைப் பலியைக் கொண்டாடலாம்.
உட்பிரிவு 4
நற்கருணைக் கொண்டாட்டத்தின் நேரமும் இடமும்
தி.ச. 931. திருவழிபாட்டு விதிமுறைகளால் விலக்க.ப்பட்டுள்ள நாளும் நேரமும் நீங்கலாக, நற்கருணைக் கொண்டாட்டமும் அதன் பகிர்ந்தளித்தலும் எந்தவொரு நாளிலும் நேரத்திலும் நடைபெறலாம்.
தி.ச. 932. நற்கருணைக் கொண்டாட்டத்தை ஒரு புனிதமான இடத்தில் நிறைவேற்றவேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழ்நழலையில் ஓர் அவசரத் தேவை வேறுவிதமாகக் கோரினால், கொண்டாட்டம் தகுதியான ஓர் இடத்தில் நடைபெறவேண்டும்.
2) நற்கருணைப் பலியை, நேர்ந்தளிக்கப்பட்ட அல்லது ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பீடத்தின் மேல் நிறைவேற்றவேண்டும். புனித இடத்திற்குப் புறம்பே, பீடத்துணியையும் திருவிருந்துத் தணியையும் வைத்துப் பொருத்தமான ஒருமேசையைப் பயனபடுத்தலாம்.
தி.ச. 933. நியாயமான ஒருகாரணத்திற்காகவும், தலத்திருச்சபை ஆளுநரின் தெளிவான அனுமதியுடனும், ஒரு குரு, கத்தோலிக்கத் திருச்சபையுடன் முழுமையான உறவுஒன்றிப்புக் கொண்டிராத மற்றொரு திருச்சபை அல்லது திருச்சபைச் சமூகத்தின் வழிபாட்டு இ.டத்தில் நற்கருணைப் பலியைக் கொண்டாடலாம். இக்காரியத்தில் இடறலைத் தவிர்க்கவேண்டும்.
இயல் 2
புனிதமிகு நற்கருணையைப் பாதுகாத்து வைத்தலும் அதன் வணக்கமும்
தி.ச. 934. புனிதமிகு நற்கருணையை மறைமாவட்டப் பேராலயம் அல்லது அதற்கு இணையானவை, ஒவ்வொரு பங்கு ஆலயம், துறவற சபை அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகத்தின் இல்லத்துடன் இணைக்கப்பட்ட ஆரயம் அல்லது செபக்கூடம் ஆகியவற்றில் பாதுகாத்து வைக்கவேண்டும். ஆயரின் சிற்றாலயத்திலும், தலத்திருச்சபை ஆளுநரின் அனுமதியுடன்,மற்ற ஆலயங்கள், செபக்கூடங்கள் அல்லது சிற்றாலயங்களிலும் பாதுகாத்து வைக்கலாம்.
2) புனிதமிகு நற்கருணை பாதுகாத்து வைக்கப்படும் புனித இடங்களில், அதன் பாதுகாப்புக்காக யாராவது ஒருவர் எப்பொழுதும் இருக்கவேண்டும்.: மேலும், இயன்றவரை, அங்கு ஒவ்வொரு மாதமும் குறைந்த அளவு இருமுறை திருப்பலி கொண்டாடப்படவேண்டும்.
தி.ச. 935. மேய்ப்புப் பணி சார்ந்த ஓர் அவசரத் தேவை இருந்து, மறைமாவட்ட ஆயரின் விதியமைப்புகளைக் கடைப்பிடித்தாலன்றி, புனிதமிகு நற்கருணையைத் தம்முடன் வைத்திருப்பதோ பயணத்தின்போது அதை எடுத்துச் செல்வதோ எவருக்கும் அனுமதிக்கப்படுவதில்லை.
தி.ச. 936. துறவறச்சபை இல்லத்தில் அல்லது மற்றப் பக்திநெறி இல்லத்தில் புனிதமிகு நற்கருணை அந்த இல்லத்துடன் இணைக்கப்பட்ட ஆலயம் அல்லது செபக்கூடத்தில் மட்டுமே பாதுகாத்துவைக்கப்பட வேண்டும். ஆயினும், நியாயமான ஒரு காரணத்திற்காக, திருச்சபை ஆளுநர் அதே இல்லத்தின் மற்றொரு செபக்கூடத்திலும் அதைப் பாதுகாத்துவைக்க அனுமதிக்கலாம்.
தி.ச. 937. கனமான ஒரு காரணம் தடுத்தாலன்றி, புனிதமிகு நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ஆலயத்தை, ஒவ்வொரு நாளும் குறைந்த அளவு சிலமணி நேரங்கள் விசுவாசிகளுக்குத் திறந்து விட வேண்டும். இவ்வாறு அவர்கள் புனிதமிகு அருளடையாளத்திறகு முன்பாகச் சிறிது நேரம் இறைவேண்டலில் செலவிட முடியும்.
தி.ச. 938. புனிதமிகு நற்கருணையை வழக்கமாக ஓர் ஆலயம் அல்லது செபக்கூடத்தின் ஒரு திருப்பேழையில் மட்டும் பாதுகாத்து வைக்கவேண்டும்.
2) நற்கருணை பாதுகாத்துவைக்கப்பட்டுள்ள திருப்பேழையை, ஆலயம் அல்லது செபக்கூடத்தின் சிறப்புமிக்க, தெளிவாகத் தெரிகின்ற, அழகுடன் அணிசெய்யப்பட்டுள்ள, இறைவேண்டல் செய்வதற்குப் பொருத்தமான ஒரு பகுதியில் வைக்கவேண்டும்.
3) வழக்கமாக நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருப்பேழை அசைக்க முடியாததாகவும், உறுதியானதாகவும் ஒளி ஊடுருவாத பொருளால் செய்யப்பட்டதாகவும் இருக்கவேண்டும். இறைநிந்தனை ஆபத்து முற்றிலும் தவிர்க்கப்படும் வண்ணம் பூட்டிவைக்கவேண்டும்.
4) கனமான ஒரு காரணத்திற்காக, புனிதமிகு நற்கருணை குறிப்பாக இரவு நேரத்தில், அதிக பாதுகாப்பும் தகுதியுமுள்ள மற்றோர் இடத்தில் பாதுகாத்து வைக்க அனுமதிக்கப்படலாம.;
5) ஆலயம் அல்லது செபக்கூடத்தின் பொறுப்பைக் கொண்டவர் நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருப்பேழையின் திறவுகோல் மிகுந்த கவனமுடன் பாதுகாக்கப்படுவதைக் கவனித்துக்கொள்ளவேண்டும்.
தி.ச. 939. அர்ச்சிக்கப்பட்ட திருவுணவை நற்கருணைப் பாத்திரம் அல்லது கலத்தில் விசுவாசிகளின் தேவைகளுக்குப் போதுமான அளவில் பாதுகாத்து வைக்கவேண்டும். அவற்றை அடிக்கடி புதுப்பிக்கவேண்டும், பழைய திருவுணவை உரிய முறையில் உட்கொள்ளவேண்டும்.
தி.ச. 940. புனிதமிகு நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள திருப்பேழைக்குமுன் கிறிஸ்துவின் உடனிருப்பைக் குறித்துக்காட்டவும் மகிமைப்படுத்தவும் ஒரு சிறப்பு விளக்கு எப்பொழுதும் எரியவேண்டும்.
தி.ச. 941. புனிதமிகு நற்கருணை பாதுகாத்து வைக்கப்பட அனுமதிக்கப்பட்டுள்ள ஆலயங்கள் அல்லது செபக்கூடங்களில், நற்கருணைப் பாத்திரத்தைக் கொண்டோ அல்லது கதிர்ப்பாத்திரத்தைக் கொண்டோ நற்கருணையை ஆராதனைக்கு வைக்கலாம். இக்காரியத்தில் திருவழிபாட்டுப் புத்தகங்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும.;
2) திருப்பலிக் கொண்டாட்டத்தின் போது, அதே ஆலயம் அல்லது செபக்கூடத்தின் ஒரு பகுதியில் புனிதமிகு நற்கருணை ஆராதனைக்கு வைக்கப்படக்கூடாது.
தி.ச. 942. இவ்வாலயங்களிலும் செபக்கூடங்களிலும் புனிதமிகு நற்கருணை, ஆண்டுதோறும் உரிய காலத்திற்கு நீடிக்கக்கூடிய, அது தொடர்ச்சியாக இல்லை என்றாலும்கூட, ஆடம்பரமாக ஆராதனைக்கு வைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. இவ்வாறு தலச் சமூகமானது நற்கருணை மறைபொருளை மிக ஆழமாகத் தியானிக்கலாம், மற்றும் ஆராதிக்கலாம். ஆயினும், தக்க அளவில் விசுவாசிகள் கூட்டம் இருக்கும் என்று முன்னறியப்பட்டால் மட்டுமே இத்தகைய ஆராதனைக்கு வைத்தல் நடைபெறவேண்டும், மேலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 943. புனிதமிகு அருளடையாளத்தை ஆராதனைக்கு வைத்தல் மற்றும் நற்கருணை ஆசீர் வழங்குதலின் பணியாளர், குரு அல்லது திருத்தொண்டர் ஆவார். குறிப்பிட்ட சூழ்நிலைகளில், நற்கருணை ஆசீர் வழங்காமல், நற்கருணையை ஆராதனைக்கு வைத்து, அதைத் திருப்பேழையில் மீண்டும் வைக்கும் பணியாளர், பீடத்துணைவர், திருவிருந்தின் அசாதாரணப் பணியாளர் அல்லது தலத்திருச்சபை ஆளுநரால் நியமிக்கப்பட்ட வேறொருவர் ஆவார். இக்காரியத்தில் மறைமாவட்ட ஆயரின் விதியமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 944. மறைமாவட்ட ஆயரின் கணிப்பின்படி எங்கு இயலுமோ அங்கு புனிதமிகு நற்கருணை மீதுள்ள வணக்கத்திற்குப் பகிரங்க சான்று பகரும் விதத்தில், சிறப்பாகக் கிறிஸ்துவின் திருவுடல் திரு இரத்தப் பெருவிழாவில், பொது வீதிகள் வழியாகப் பவனி நடத்தவேண்டும்.
2) பவனிகளில் பங்கேற்பது மற்றும் அவற்றைத் தகுந்த மரியாதையுடன் நடத்துவது பற்றிய ஒழுங்குமுறைகளை நிர்ணயிப்பது மறைமாவட்ட ஆயரைச் சார்ந்தது.
இயல் 3
திருப்பலிக் கொண்டாட்டத்திற்கு அளிக்கப்படும் காணிக்கை
தி.ச. 945. திருச்சபையின் அங்கீகரிக்கப்பட்ட வழக்கத்திற்கேற்ப, திருப்பலி அல்லது கூட்டுத்திருப்பலி நிறைவேற்றும் எந்தக் குருவும், திருப்பலியைக் குறிப்பிட்ட ஒரு கருத்திற்காக ஒப்புக் கொடுக்கக் காணிக்கைப் பெறலாம்.
2) காணிக்கை எதையும் பெறாமலும், கிறிஸ்தவ விசுவாசிகளின் கருத்துக்களுக்காக, சிறப்பாக வறியவர்களுக்காகத் திருப்பலி நிறைவேற்றுமாறு குருக்களுக்கு மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
தி.ச. 946. தங்களுடைய கருத்துக்களுக்காகத் திருப்பலி ஒப்புக்கொடுக்கக் காணிக்கை அளிக்கும் கிறிஸ்தவ விசுவாசிகள் திருச்சபையின் நலனுக்காக உதவுகின்றனர், மேலும், அக்காணிக்கை மூலம் தன் பணியாளர்களையும் அலுவல்களையும் பராமரிப்பதில் திருச்சபைக்குள்ள அக்கறையில் பங்கு பெறுகின்றனர்.
தி.ச. 947. வாணிபம் அல்லது வியாபாரத்தின் எவ்விதத் தோற்றத்தையும் திருப்பலிக் காணிக்கையிலிருந்து முற்றிலுமாக விலக்கவேண்டும்.
தி.ச. 948. எத்தனைக் கருத்துக்களுக்காகத் தனிப்பட்ட காணிக்கை, அது சிறியதாக இருந்தாலும் கூட, அளிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டதோ, அத்தனைக் கருத்துக்களுக்காகத் தனிப்பட்ட திருப்பலிகளை ஒப்புக் கொடுக்கவேண்டும்.
தி.ச. 949. காணிக்கை அளித்தவர்களின் கருத்துக்;காகத் திருப்பலி நிறைவேற்றி, அதை ஒப்புக் கொடுக்க வேண்டிய கடமையுள்ளவர், ஏற்றுக்கொள்ளப்பட்ட காணிக்கைகள் அவரது சொந்தக் குற்றமின்றி இழக்கப்பட்டிருந்தாலும்கூட, அதே கடமையைக் கொண்டுள்ளார்.
தி.ச. 950. காணிக்கைக் கொடுத்தவர்களின் எண்ணம் வேறானது என்று முறையாக ஊகிக்கவேண்டும் என்றிருந்தாலன்றி, நிறைவேற்றவேண்டிய திருப்பலிகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படாமல் திருப்பலி ஒப்புக் கொடுப்பதற்குப் பணத்தொகை கொடுக்கப்பட்டால், காணிக்கைக் கொடுத்தவர் வாழும் இடத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள காணிக்கையைக் கருத்திற்கொண்டு திருப்பலிகளின் எண்ணிக்கையைக் கணக்கிடவேண்டும்.
தி.ச. 951. ஒரே நாளில் பல திருப்பலிகள் நிறைவேற்றும் குரு, ஒவ்வொரு திருப்பலியையும் எந்தக் கருத்துக்காகக் காணிக்கை அளிக்கப்பட்டதோ அதற்காக ஒப்புக்கொடுக்கலாம். இருப்பினும், கிறிஸ்து பிறப்பு நாள் நீஙிகலாக, ஒரு திருப்பலிக் காணிக்கையை மட்டும் அவர் வைத்துக்கொண்டு, மற்றவற்றைத் திருச்சபை ஆளுநரால் குறிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்காக அனுப்பிவிடவேண்டும் என்ற சட்டத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். திருப்பலிக்குப் புறம்பான உரிமைத்தகுதியின் அடிப்படையில் ஏதாவது கைமாறு பெற்றுக் கொள்ளலாம்.
2) ஒரே நாளில் இரண்டாவது திருப்பலியைக் கூட்டுத்திருப்பலியாக நிறைவேற்றும் குரு அதற்காக எவ்வித உரிமைத்தகுதி அடிப்படையிலும் காணிக்கைப் பெற முடியாது.
தி.ச. 952. மறைமாநிலப் பேரவை அல்லது மறைமாநில ஆயர்கள் கூட்டம், திருப்பலி நிறைவேற்றுவதற்கும் ஒப்புக் கொடுப்பதற்கும் அளிக்க வேண்டிய காணிக்கையை, மறைமாநிலம் முழுவதற்கும் ஓர் ஆணை மூலம் வரையறுக்கவேண்டும்.. அதற்கு அதிகமானத் தொகையைப் பெறுவதற்குக் குருவுக்கு அனுமதியில்லை. இருப்பினும், அதிகமாகவோ அல்லது குறைவாகவோகூட விரும்பிக் கொடுக்கப்படும் காணிக்கையைப் பெறலாம்.
2) அத்தகைய ஆணை இல்லாத இடத்தில், மறைமாவட்டத்தில் நடைமுறையில் இருக்கும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 953. ஓராண்டுக்குள் தம்மால் ஒப்புக் கொடுக்க முடியாத திருப்பலிக் காணிக்கைகளை எவரும் பெறக்கூடாது.
தி.ச. 954. ஒரு சில ஆலயங்களில் அல்லது செபக்கூடங்களில், அங்கு நிறைவேற்றக்கூடிய திருப்பலிகளைவிட அதிகமான எண்ணிக்கையில் திருப்பலி நிறைவேற்றும்படி கேட்கப்பட்டிருந்தால், காணிக்கை அளித்தவர்கள் நேர்மாறான விருப்பத்தைத் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தாலன்றி, அத்திருப்பலிகளை வேறு இடங்களிலும் நிறைவேற்றலாம்..
தி.ச. 955. ஒப்புக்கொடுக்கவேண்டிய திருப்பலிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க விரும்பும் ஒருவர், கூடிய விரைவில், அவற்றின் கொண்டாட்டத்தைத் தமக்கு ஏற்புடைய குருக்களிடம், அவர்கள் எவ்வித ஐயத்திற்கும் அப்பாற்பட்டவர்கள் என்பது அவருக்குத் தெளிவாகத் இருந்தால் மட்டுமே, ஒப்படைக்கலாம்.. மறைமாவட்டக் காணிக்கைக்கு மிகுதியான தொகை சொந்தக் காரணங்களுக்காகக் கொடுக்கப்பட்டது என்பது தெளிவாக இருந்தாலன்றி, அவர் தாம் பெற்றுக்கொண்ட முழுக் காணிக்கையைக் கைமாற்றிக் கொடுத்துவிடவேண்டும். திருப்பலி நிறைவேற்ற வேண்டிய கடமை ஏற்றுக் கொள்ளப்பட்டதென்றும், காணிக்கை பெறப்பட்டதென்றும் சான்றுறுதி பெறும்வரை, திருப்பலிகள் கொண்டாட்டத்தைக் கவனித்துக் கொள்ளும் கடமையையும் அவர் கொண்டுள்ளார்.
2) வேறுவிதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தாலன்றி, திருப்பலிகளை நிறைவேற்ற வேண்டிய நேரம், அவற்றை நிறைவேற்ற வேண்டிய குரு அவற்றைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து ஆரம்பமாகிறது.
3) நிறைவேற்ற வேண்டிய திருப்பலிகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பவர்கள், பெறப்பட்ட திருப்பலிகள், மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டவை, அவற்றின் காணிக்கை ஆகியவற்றைத் தாமதமின்றி ஒரு குறிப்பேட்டில் பதிவு செய்யவேண்டும்.
4) ஒவ்வொரு குருவும், தான் பெற்றுக் கொண்டதும் நிறைவேற்றியதுமான திருப்பலிகளைத் துல்லியமாகக் குறிக்கவேண்டும்.
தி.ச. 956. பக்தி நெறிக்காரியங்களின் நிர்வாகிகள் அல்லது திருப்பலிக் கொண்டாட்டத்தை ஏதாவது ஒரு விதத்தில், கவனித்துக் கொள்ள வேண்டிய கடமையைக் கொண்ட ஒவ்வொருவரும், அவர்கள் திருப்பணியாளர்களாக இருந்தாலும் அல்லது பொதுநிலையினராக இருந்தாலும், தங்களுடைய திருச்சபை ஆளுநர்களிடம், இவர்களால் நிர்ணயிக்க வேண்டிய விதத்தில், ஓராண்டுக்ககுள் நிறைவேற்றப்படாத திருப்பலிக் கடமைகளை ஒப்படைத்துவிடவேண்டும்.
தி.ச. 957. திருப்பலிக் கடமைகளை நிறைவேற்றுவதைக் கவனித்துக்கொள்ளும் கடமையும் உரிமையும், மறைமாவட்ட ஆயரையும், துறவறசபைகள் மற்றும் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் ஆலயங்களைப் பொறுத்தவரையில் அவற்றின் தலைவர்களையும் சார்ந்தது.
தி.ச. 958. பங்குக்குரு மற்றும் திருப்பலிக் காணிக்கைகள் வழக்கமாகப் பெறப்படும் ஆலயம் அல்லது மற்றப் புனித இடத்தின் அதிபர் ஒரு சிறப்புக் குறிப்பேடு வைத்திருக்கவேண்டும். அதில் நிறைவேற்ற வேண்டிய திருப்பலிகளின் எண்ணிக்கை, கருத்து, அளிக்கப்பட்ட காணிக்கை மற்றும் நிறைவேற்றிய திருப்பலிகள் ஆகியவற்றை அவர்கள் துல்லியமாகப் பதிவு செய்யவேண்டும்.
2) திருச்சபை ஆளுநர், தாமாகவோ மற்றவர்கள் மூலமாகவோ இக்குறிப்பேடுகளை ஆண்டுதோறும் ஆய்வு செய்யக் கடமைப்பட்டுள்ளார்.
தலைப்பு 4
ஒப்புரவு அருளடையாளம்.
தி.ச. 959. ஒப்புரவு அருளடையாளத்தில் விசுவாசிகள் சட்டமுறையான பணியாளரிடம் தங்களுடைய பாவங்களை அறிக்கையிட்டு, அவற்றுக்காக மனம்வருந்தி, தங்களை மாற்றி அமைக்கும் நோக்கம் கொண்டுள்ளனர். இவர்கள் அதே பணியாளரால் அளிக்கப்படும் பாவமன்னிப்பால், திருமுழுக்கிற்குப்பின் செய்த பாவங்களுக்குக் கடவுளிடமிருந்து மன்னிப்புப் பெறுகின்றனர், அதேநேரத்தல் தங்கள் பாவத்தால் புண்படுத்தப்பட்ட திருச்சபையுடன் ஒப்புரவாகின்றனர்.
இயல் 1
அருளடையாளக் கொண்டாட்டம்.
தி.ச. 960. தங்களிடம் கனமானபாவம் இருப்பதாக உணரும் விசுவாசிகள், கடவுளோடும் திருச்சபையோடும் ஒப்புரவு ஆவதற்கான ஒரே சாதாரண வழி தனிப்பட்ட, முழுமையான பாவ அறிக்கையும் பாவமன்னிப்பும் ஆகும். உடல்ரீதியான அல்லது மனரீதியான இயலாமை மட்டுமே இத்தகைய பாவஅறிக்கைக் கடமையிலிருந்து விடுவிக்கிறது. இச்சூழ்நிலையில் வேறு வழிகள் மூலமாகவும் ஒப்புரவைப் பெற்றுக் கொள்ள முடியும்.
தி.ச. 961. கீழ்க்கண்ட சூழ்நிலைகள் இருந்தாலன்றி, தனிப்பட்ட முன்பாவ அறிக்கையின்றி, மனம் வருந்துவோர் பலருக்கு ஒரே நேரத்தில் பொதுவான முறையில் பாவமன்னிப்பு அளிக்கக்கூடாது.
2) இறக்கும் ஆபத்து நெருங்கியுள்ளது மற்றும் தனிப்பட்ட மனம் வருந்துNhரின் பாவஅறிக்கையைக் கேட்கக் குருவுக்கோ, குருக்களுக்கோ போதுமான நேரமில்லை.
3) முக்கியமான தேவை உள்ளது, அதாவது, மனம் வருந்துவோரின் எண்ணிக்கையைக் கருத்திற்கொள்ளும்போது, தனிப்பட்ட மனம் வருந்துவோரின் பாவஅறிக்கையைக் உரியகாலத்தில், சரியான முறையில் கேட்பதற்குப் பாவமன்னிப்பாளர்கள் போதுமான அளவில் இல்லை, இதனால் மனம் வருந்துவோர், தங்களின் சொந்தக் குற்றமின்றி, நீண்டகாலத்திற்கு அருளடையாளத்தின் அருளை அல்லது திருவிருந்தைப் பெறமுடியாத நிலைக்குத் தள்ளப்படுவர். மனம்வருந்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்ற காரணத்திற்காக மட்டும் பாவமன்னிப்பாளர்கள் எளிதில் கிடைக்கமாட்டார்கள் என்றால், அது போதுமான தேவையாகக் கருதப்படுவதில்லை. இத்தகைய சூழ்நிலை ஒரு சில பெரிய திருவிழா அல்லது திருப்பயணத்தின்போது ஏற்படக்கூடும்.
4) 1, 2-ன் விதிமுறைக்கேற்ப, தேவையான நிபந்தனைகள் உள்ளனவா என்பதைத் தீர்மானிப்பது மறைமாவட்ட ஆயரைச் சார்ந்தது. அவர், ஆயர் பேரவையின் ஏனைய உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்ட வரையறைகளைக் கருத்திற்கொண்டு, அத்தகைய தேவையுள்ள காரியங்களை நிர்ணயிக்கலாம்.
தி.ச. 962. கிறிஸ்தவ விசுவாசி, ஒரே நேரத்தில் பலருக்கு அளிக்கப்படும் பாவமன்னிப்பைச் செல்லத்தக்க விதத்தில் அடைவதற்கு, அவர் சரியான ஏற்புடைய நிலையில் உள்ளவராக இருப்பதோடு மட்டுமின்றி, அதே வேளையில் தற்போது தனிப்பட்ட முறையில் பாவஅறிக்கை செய்யமுடியாத கனமான பாவங்களை, உரிய காலத்தில் பாவஅறிக்கை செய்யும் எண்ணம் கொண்டவராகவும் இருக்கவேண்டும்.
2) கிறிஸ்தவ விசுவர்சிகள், இயன்றவரை, பொது மன்னிப்புப் பெறும் வேளையிலும், 1-ல் குறிப்பிடப்பட்டுள்ள தேவைகளைப் பற்றி அறிவுறுத்தவேண்டும். இறக்கும் ஆபத்திலும்கூட, நேரம் இருந்தால், ஒவ்வொருவரும் மனத்துயர் வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு ஓர் அறிவுரை முன்னதாக வழங்கவேண்டும்.
தி.ச. 963. நியாயமான ஒரு காரணம் தடுத்தாலன்றி, பொது பாவமன்னிப்பின் மூலம் கனமான பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒருவர், வாய்ப்புக் கிடைக்கும்போது கூடிய விரைவில், மற்றொரு பொதுப் பாவமன்னிப்புப் பெறுவதற்கு முன் தனிப்பட்ட பாவஅறிக்கை செய்யவேண்டும். இக்காரியத்தில் தி.;ச. 989 –ல் குறிப்பிடப்பட்டுள்ள கடமையைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 964. அருளடையாளப் பாவஅறிக்கைகளைக் கேட்பதற்கு உரிய இடம் ஆலயம் அல்லது செபக்கூடமாகும்.
2) ஓப்புரவு அருளடையாள இருக்கையைப் பொறுத்தவரையில், ஆயர் பேரவை விதிமுறைகளை நிர்ணயிக்கவேண்டு;ம். இக்காரியத்தில், மனம்வருந்துவோருக்கும் பாவமன்னிப்பாளருக்குமிடையே, வலைத்தொட்டி பொருத்தப்பட்ட ஒப்புரவு இருக்கைகள் எப்பொழுதும் திறந்த வெளியில் வைக்கவேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும், இவ்வாறு, விரும்புகின்றவர்கள் அவற்றைத் தன்னுரிமையுடன் பயன்படுத்த முடியும்.
3) நியாயமான ஒரு காரணமின்றி, ஒப்புரவு அருளடையாள இருக்கைக்குப் புறம்பே பாவஅறிக்கைகளைக் கேட்கக்கூடாது.
இயல் 2
ஒப்புரவு அருளடையாளப் பணியாளர்
தி.ச. 965. குரு ஒருவரே ஒப்புரவு அருளடையாளப் பணியாளர் ஆவார்.
தி.ச. 966. திருப்பணியாளர் செல்லத்த்கவிதத்தில் பாவமன்னிப்பு அளிப்பதற்கு, திருப்பட்ட அதிகாரத்தைத்தவிர, தாம் பாவமன்னிப்பு அளிக்கும் விசுவாசிகளின்மேல் அவ்வதிகாரத்தைச் செயற்படுத்துவதற்கான செயலுரிமை கொண்டிருப்பது அவசியமாகும்.
2) குரு, இச்செயலுரிமையைச் சட்டத்தின் மூலமாகவோ, தி.ச. 969 –ன் விதிமுறைக்கேற்ப, தகுதி வாய்ந்த அதிகாரியால் அளிக்கப்படும் சலுகை மூலமாகவோ பெறமுடியும்.
தி.ச. 967. உரோமைத் தலைமைக் குருவைத் தவிர, உலகெங்கும் கிறிஸ்துவின்; விசுவாசிகளின் பாவ அளிக்கையைக் கேட்கும் செயலுரிமையைக் கர்தினால்மார்கள் சட்டத்தின் மூலமாகவே கொண்டுள்ளனர், அவ்வாறே ஆயர்களும் இச்செயலுரிமையைக் கொண்டுள்ளனர். ஒரு மறைமாவட்ட ஆயர் இச்செயலுரிமையை ஒரு குறிப்பிட்ட காரியத்தில் மறுத்தாலன்றி அவர்கள் அதைச் சட்ட முறைப்படி எங்கும் பயன்படுத்தலாம்.
2) பதவியின் மூலமாகவோ, தாங்கள் இணைக்கப்பட்டுள்ள மறைமாவட்டத்தின் அல்லது தஙகளுடைய உறைவிடத்தின் தலத்திருச்சபை ஆளுநரிடமிருந்து பெற்ற சலுகையின் மூலமாகவோ பாவ அறிக்கைகளை வழக்கமாகக் கேட்பதற்குச் செயலுரிமை கொணடவர்கள், அச் செயலுரிமையை, தலத்திருச்சபை ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காரியத்தில் மறுத்தாலன்றி, எங்கும் பயன்படுத்தமுடியும். இக்காரியத்தில் தி.ச. 974, 2 மற்றும் 3 –ன் விதியமைப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
3) பதவியின் மூலமாகவோ, தி.சச .968, 2 மற்றும் 969, 2 ன் விதிமுறைகளுக்கேற்பத் தகுதி வாய்ந்த தலைவரின் சலுகைமூலமாகவோ, பாவஅறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமை அளிக்கப்பெற்றவர்கள், துறவற சபை அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகம் இவற்றின் இல்லத்திலுள்ள உறுப்பினர்கள் மற்றும் அங்கு இரவும் பகலும் தங்கிவாழும் மற்றவர்களைப் பொறுத்தவரை, இச்செயலுரிமையைச் சட்டத்தாலேயே எங்கும் கொண்டுள்ளனர். இவர்கள் இச்சலுகையை, ஒரு குறிப்பிட்ட காரியத்தில் ஏதாவது ஓர் உயர்தலைவர் தமது ஆளுகைக்கு உட்பட்டவர்களைப் பொறுத்தவரை, மறுத்தாலன்றி, சட்ட முறைப்படிப் பயன்படுத்தலாம்.
தி.ச. 968. பதவியின் மூலமாக தலத்திருச்சபை ஆளுநர், பாவமன்னிப்புக்கான அகநிலைத் தலைவர், பங்குக்குரு மற்றும் பங்குக்குருவின் இடத்தில் இருப்போர் ஒவ்வொருவரும், தங்களது ஆட்சி உரிமைக்குள் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமை கொண்டுள்ளனர்.
3) சபை அமைப்புச்சட்டங்களின் விதிமுறைக்கேற்பச் செயற்படுத்தும் ஆட்சி உரிமை கொண்டுள்ள, திருஆட்சிப்பீட அதிகாரத்திற்கு உட்பட்ட திருப்பணியாளர் துறவற சபையின் அல்லது மறைத்தூதுப் பணி வாழ்வுச் சமூகத்தின் தலைவர்கள், தங்கள் பதவியின் மூலமாக, தங்கள் ஆளுகை;குட்பட்டவர்கள் மற்றும் தங்கள் இல்லத்தில் இரவும் பகலும் தங்கியிருப்பவர்களின் பாவஅறிக்கைளைக் கேட்கும் செயலுரிமை கொண்டுள்ளனர். இக்காரியத்தில் தி;.ச. 630, 4 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 969. தலத்திருச்சபை ஆளுநர் மட்டுமே, எந்தவொரு குருவுக்கும் எந்தவொரு விசுவாசியின் பாவஅறிக்கையைக் கேட்கும் செயலுரிமையை வழங்கத் தகுதி வாய்ந்தவர் ஆவார், ஆயினும், துறவற சபைகளின் உறுப்பினர்களாக இருக்கும் குருக்கள் இச்செயலுரிமையை, தங்களுடைய தலைவர்களின் குறைந்தஅளவு ஊகிக்கப்பட்ட அனுமதியின்றி, பயன்படுத்தக்கூடாது.
2) தி.ச. 968, 2-ல் குறிப்பிடப்பட்டுள்ள துறவற சபை அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகத்தின் தலைவர், தமது ஆளுகைக்கு உட்பட்டவர்கள் மற்றும் தமது இல்லத்தில் இரவும் பகலும் தங்கியிருப்பவர்களின் பாவஅறிக்கையைக் கேட்கும் செயலுரிமை எந்தவொரு குருவுக்கும் வழங்கத் தகுதி வாய்ந்தவர் ஆவார்.
தி.ச. 970. தேர்வு மூலம் குருக்கள் தகுதியுடையவர்கள் என்று கண்டறியப்பட்டாலன்றி அல்லது வேறொரு வழியில் அவர்களது தகுதியுடைமை தெளிவாகத் தோன்றினாலன்றி, அவர்களுக்குப் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை வழங்கக்கூடாது.
தி.ச. 971. தலத்திருச்சபை ஆளுநர் ஒரு குருவுக்கு, அவர் தமது ஆளுகை எல்லைக்குள் உறைவிடமோ தற்காலிக உறைவிடமோ கொண்டிருந்தாலும் கூட கூடியமட்டும் அவருடைய திருச்சபை ஆளுநரை முதலில் கலந்தாலோசிக்காமல் வழக்கமாகப் பாவஅறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை வழங்கக்கூடாது.
தி.ச. 972. பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை, தி.ச. 969 –ல் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிவாய்ந்த அதிகாரியால், வரையறுக்கப்படாத அல்லது வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டும் வழங்கமுடியும்.
தி.ச. 973. வழக்கமாகப் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை எழுத்து வடிவில் வழங்கவேண்டும்.
தி.ச. 974. தலத் திருச்சபை ஆளுநரும், அவ்வாறே தகுதிவாய்ந்த தலைவரும் கனமான காரணத்திற்காக அன்றி, வழக்கமாகப் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையைத் திரும்பப் பெறக்கூடாது.
2) தி.ச. 967. ல் குறிப்பிடப்பட்டுள்ள தலத் திருச்சபை ஆளுநரால் வழங்;கப்பட்ட பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமை, அவரால் திரும்பப்பெறப்படும்;போது, குரு அச்செயலுரிமையை எங்கும் இழந்துவிடுகிறார். மற்றொரு ஆளுநரால் திரும்பப்பெறப்படும்;போது திரும்பப்பெறும் ஆளுநரின் எல்லையில் மட்டும் குரு அதை இழந்துவிடுகிறார்
3) பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை, குருவிடமிருந்து திரும்பப்பெறும் எந்தவொரு தலத் திருச்சபை ஆளுநரும், அந்தக் குரு இணைக்கப்பட்டுள்ள சொந்தத் திருச்சபை ஆளுநரிடம் அல்லது அக்குரு துறவற சபையின் உறுப்பினராக இருந்தால், அவரின் தகுதிவாய்ந்த தலைவரிடம் தெரிவிக்கவேண்டும்.
4) தமது சொந்த உயர் தலைவரால் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமை, திரும்பப்பெறப்படும்;போது, சபை உறுப்பினர்களின் பாவ அறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமையை குரு எங்கும் இழந்துவிடுகிறார். ஆனால் தகுதிவாய்ந்த வேறொரு தலைவரால் அச்செயலுரிமைத் திரும்பப்பெறப்படும்போது, அத்தலைவரின் ஆட்சி உரிமைக்கு உட்பட்ட உறுப்பினர்களைப் பொறுத்தவரையில் மட்டுமே அதை இழந்துவிடுகிறார்.
தி.ச. 975. தி.ச. 967. 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள செயலுரிமை, திரும்பப்பெறப்படுவதால் மட்டுமன்றி, பணி இழப்பு, அல்லது மறைமாவட்டத்துடன் கொண்டுள்ள இணைப்பு நீக்கம் அல்லது உறைவிடம் இழப்பு ஆகியவற்றாலும் முடிவடைகிறது.
தி.ச. 976. எந்தவொரு குருவும், அவருக்கு பாவஅறிக்கைகளைக் கேட்கும் செயலுரிமை இல்லை என்றாலும், அங்கீகாரம் பெற்ற ஒரு குரு உடனிருந்தாலும் கூட, இறக்கும் ஆபத்திலிருக்கும் எந்தவொரு மனம் வருந்துவோரையும் எவ்விதப் பாவங்களிலிருந்தும் கண்டனங்களிலிருந்தும் செல்லத்தக்கவிதமாகவும் சட்டமுறையாகவும் விடுவிக்கலாம்.
தி.ச. 977. பத்துக் கட்டளைகளின் ஆறாம் கட்டளைக்கு எதிரான பாவத்தில் குற்ற உடந்தையாளரின் பாவமன்னிப்பு, இறக்கும் ஆபத்திற்குப் புறம்பே, செல்லத்தக்கது அல்ல.
தி.ச. 978. குரு பாவஅறிக்கைகளைக் கேட்பதில், ஒரே நேரத்தில் தாம் நடுவராகவும் குணமளிப்பவராகவும் செயல்படுகிறார் என்பதையும், இறைவனுடைய நீதி மற்றும் இரக்கத்தின் பணியாளராக இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ளார் என்பதையும் நினைவில் நிறுத்தவேண்டும். இவ்வாறு அவர் இறைவனுடைய மகிமைக்கும் ஆன்ம மீட்புக்கும் உதவமுடியும்.
2) திருச்சபையின் பணியாளர் என்ற முறையில், பாவமன்னிப்பாளர், அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் திருஆசிரியத்தின் கோட்பாடுகளையும் தகுதிவாய்ந்த அதிகாரியால் இயற்றப்பட்ட விதிமுறைகளையும் உண்மையுடன் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 979. குரு, கேள்விகளைக் கேட்பதில் மனம் வருந்துவோரின் நிலை மற்றும் வயதைக் கருத்திற்கொண்டு, விவேகத்துடனும் நுண்மதியுடனும் செயல்படவேண்டும்: பாவ உடந்தையாளரின் பெயரைக் கேட்பதைத் தவிர்க்கவேண்டும்.
தி.ச. 980. பாவமன்னிப்புக் கேட்கும் மனம் வருந்துவோரின் ஏற்புடைய நிலையைப் பற்றிப் பாவமன்னிப்பாளருக்கு எவ்வித ஐயமும் இல்லையென்றால், பாவமன்னிப்பை மறுக்கவோ தாமதப்படுத்தவோ கூடாது.
தி.ச. 981. மனம் வருந்துவோரின் நிலையைக் கருத்திற்கொண்டு, பாவமன்னிப்பாளர், பாவங்களின் தன்மைக்கும் எண்ணிக்கைக்கும் ஏற்ப, நலம் பயக்கும் மற்றும் பொருத்தமான பரிகாரங்களை விதிக்கவேண்டும். மனம் வருந்துவோர் தாமாகவே இப்பரிகாரங்களை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளார்.
தி.ச. 982. பத்துக் கட்டளைகளின் ஆறாம் கட்டளைக்கு எதிராகத் தன்னுடன் பாவச்செயலுக்குத் தூண்டுதல் என்னும் குற்றத்தை, குற்றமற்ற பாவமன்னிப்பாளரின் மேல் திருச்சபை அதிகாரியிடம் பொய்யாகத் பலரறியக் குற்றஞ் சாட்டியதாக ஒருவர் பாவஅறிக்கை செய்தால், அவர் முதலில் தமது பொய்க்குற்றச்சாட்டை முறையாகத் திரும்பப்பெற்று, மேலும் தீங்கு விளைவித்திருந்தால், அதற்குப் பரிகாரம் செய்யத் தயாராக இருந்தாலன்றி, அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கக்கூடாது.
தி.ச. 983. அருளடையாள முத்திரை உடைக்கமுடியாதது, எனவே பாவமன்னிப்பாளர் சொல்லாலோ வேறு எவ்விதத்திலோ மனம் வருந்துவோரை எக்காரணத்தை முன்னிட்டும் காட்டிக் கொடுப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது
2) மொழிபெயர்ப்பாளர் இருந்தால் அவரும், பாவஅறிக்கையிலிருந்து எவ்விதத்திலாவது பாவங்களைப் பற்றித் தெரியவந்த அனைவரும் இரகசியம் காக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
தி.ச. 984. பாவமன்னிப்பாளர் மனம்வருந்துவோருக்குத் தீமை பயக்கும் விதத்தில் பாவஅறிக்கையிலிருந்து பெற்ற தகவல்களைப் பயன்படுத்த, இரகசியம் வெளியிடும் எவ்வித ஆபத்தும் தவிர்க்கப்பட்டாலும்கூட, தடைசெய்யப்பட்டுள்ளார்.
2) அதிகாரத்திலுள்ள ஒருவர், பாவங்களைப்பற்றி ஒப்புரவு அறிக்கையில் எந்த ஒரு காலத்திலும் தாம் பெற்ற தகவலை, வெளியரங்க ஆளுகைக்காக எவ்விதத்திலும் பயன்படுத்தக்கூடாது.
தி.ச. 985. துறவறப் புகுநிலையாளர்களின் இயக்குநரும் அவருடைய துணையாளரும், குருத்துவக் கல்லூரி அல்லது மற்றக் கல்வி நிறுவனத்;தின் அதிபரும், அதே இல்லத்தில் தங்கிவாழும் மாணவர்களின் அருளடையாளப் பாவஅறிக்கைகளைத் தனிப்பட்ட சூழ்நிலைகளில் மாணவர்கள் தாங்களாகவே கோரினாலன்றி, கேட்கக் கூடாது.
தி.ச. 986. பணியின் காரணமாக ஆன்ம அக்கறை ஒப்படைக்கப்பட்டவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள விசுவாசிகள் தங்கள் பாவஅறிக்கைகளைக் கேட்கும்படி நியாயமான முறையில் கோரும்போது, அதற்கு ஏற்பாடு செய்யக் கடமைப்பட்டுள்ளனர். அவர்களின் வசதிக்கேற்ற நாள்கள் மற்றும் நேரங்களில் தனிப்பாவ அறிக்கையிடுவதற்கு வாய்ப்பு அளிக்கவேண்டும்.
2) ஓர் அவசரத் தேவையில் எந்தப்பாவமன்னிப்பாளரும், இறக்கும் ஆபத்தில் எந்தக் குருவும் கிறிஸ்தவ விசுவாசிகளின் பாவஅறிக்கையைக் கேட்கக் கடமைப்பட்டுள்ளனர்.
இயல் 3
மனம் வருந்துவோர்.
தி.ச. 987. கிறிஸ்தவ விசுவாசிகள் ஒப்புரவு அருளடையாளத்தின் மீட்பளிக்கும் மருந்தைப் பெற வேண்டுமென்றால், அதற்கு ஏற்புடைய நிலையைக் கொண்டிருப்பது அவசியம். அதன் விளைவாக, அவர்கள் தாங்கள் கட்டிக்கொண்ட பாவங்களை உதறித்தள்ளுவர், தங்களையே மாற்றி அமைக்கும் மனவுறுதி கொண்டிருப்பர், இறைவனிடம் திரும்பி வருவர்.
தி.ச. 988. கிறிஸ்தவ விசுவாசி, கனமான ஆய்வுக்குப் பின் தான் உணாகிற, திருமுழுக்கிற்குப் பின் கட்டிக்கொண்டதும், இதுவரை திருச்சபையின் அதிகாரத்தால் நேரடியாக மன்னிக்கப்படாததும், தனிப்பாவ அறிக்கையில் வெளிப்படாததுமான அனைத்துக் கனமான பாவங்களையும், அவற்றின் தன்மை மற்றும் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு, பாவஅறிக்கை செய்யவேண்டும்.
2) அற்பப் பாவங்களையும் அறிக்கையிடக் கிறிஸ்தவ விசுவாசிகளுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
தி.ச. 989. அனைத்து விசுவாசிகளும், தன்னறிவு வந்த வயதை அடைந்தபின் குறைந்த அளவு ஆண்டுக்கு ஒருமுறை தங்களின் கனமான பாவங்களை உண்மையுடன் அறிக்கையிடக் கடமைப்பட்டுள்ளனர்.
தி.ச. 990. மெழிபெயர்ப்பாளர் மூலம் பாவஅறிக்கையிட எவருக்கும் தடையில்லை. இக்காரியத்தில் தவறாகப் பயன்படுத்துதலையும் இடறலையும் அகற்றவேண்டும், தி;ச் 983இ 2 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டு;ம்.
தி.ச. 991. எந்தக் கிறிஸ்தவ விசுவாசிக்கும், அவர் விரும்புகின்ற, சட்ட முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட பாவமன்னிப்பாளரிடம், வேறொரு வழிபாட்டு முறையைச் சார்ந்தவரிடங்கூட, பாவஅறிக்கையிடத் தன்னுரிமை உண்டு.
இயல் 4.
பாவத்தண்டனைக் குறைப்பு
தி.ச. 992. பாவத்தண்டனைக் குறைப்பு என்பது இறைவன் முன்னிலையில் ஏற்கெனவே குற்றப்பொறுப்பு மன்னிக்கப்பட்ட பாவத்துக்குரிய இம்மைத் தண்டனையின் பொறுத்தலாகும். ஆதைக் கிறிஸ்தவ விசுவாசி தக்க ஏற்புடைய நிலையிலும், குறிப்பிட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டும், திருச்சபையின் உதவியுடன் அடைகின்றார். மீட்பின் பணியாளர் என்ற முறையில், திருச்சபையானது கிறிஸ்து மற்றும் தூயவர்களுடைய நற்பேறுபலன்கள் கருவூலத்தை அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்தளித்துப் பயன்படுத்துகிறது.
தி.ச. 993. பாவங்களுக்குரிய இம்மைத் தண்டனைகளிலிருந்து, பகுதியளவாகவோ முழுமையாகவோ விடுவிப்பதைப் பொறுத்து, பாவத்தண்டனைக் குறைப்பு, பகுதி அளவானது அல்லது முழுமையானது எனப்படும்.
தி.ச. 994. எந்த விசுவாசியும், பகுதி அளவான அல்லது முழுமையான பாவத்தண்டனைக் குறைப்புகளைத் தமக்காகப் பெறலாம், அல்லது ஒப்புதலாதரவு முறையில் இறந்தவர்களுக்காகப் பயன்படுத்தலாம்.
தி.ச. 995. திருச்சபையின் உச்ச அதிகாரத்தைத் தவிர, யாருக்குச் சட்டத்தாலோ உரோமைத் தலைமைக் குருவினாலோ பாவத் தண்டனைக் குறைப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே அதை வழங்கமுடியும்.
2) உரோமைத் தலைமைக் குருவுக்குக் கீழ்நிலையிலுள்ள எந்த ஓர் அதிகாரியும், பாவத் தண்டனைக் குறைப்பை வழங்கும் அதிகாரத்தை மற்றவர்களிடம், திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் அது தெளிவாக வழங்கப்பட்டிருந்தாலன்றி, ஒப்படைக்க முடியாது.
தி.ச. 996. ஒருவர் பாவத்தண்டனைக் குறைப்புகளைப் பெறத் தகுதி உள்ளவராக இருப்பதற்கு, அவர் திமுழுக்குப் பெற்றவராகவும், திருச்சபையின் உறவுஒன்றிப்பிலிருந்து நீக்கப்படாதவராகவும், விதிக்கப்பட்ட செயல்களைச் செய்து முடிக்கும் வேளையிலாவது அருள் நிலையில் உள்ளவராகவும் இருத்தல்வேண்டும்.
2) ஆயினும், பாவத்தண்டனைக் குறைப்புகளைப் பெறத் தகுதியுள்ளவர் அவற்றைப் பெறுவதற்கு, குறைந்த அளவு அவற்றைப் பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருக்கவேண்டும். சலுகையின் நிபந்தனைகளுக்கேற்ப, விதிக்கப்பட்டுள்ள செயல்களை உரிய நேரத்திலும் உரிய முறையிலும் செய்து முடிக்கவேண்டும்.
தி.ச. 997. பாவத்தண்டனைக் குறைப்புகளை வழங்குதல் மற்றும் அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்தவரையில், திருச்சபையின் சிறப்புச் சட்டங்களில் அடங்கியுள்ள மற்ற விதியமைப்புகளையும் கடைப்பிடிக்கவேண்டும்..
தலைப்பு 5
நோயில்பூசுதல் அருளடையாளம்
தி.ச..998. நோயில்பூசுதலால், ஆபத்தான நிலையில் நோயுற்றிருக்கும் விசுவாசிகளை, பாடுபட்டு, மாட்சிமை பெற்ற ஆண்டவரிடம் திருச்சபை ஒப்படைக்கிறது. இவ்வாறு அவர் அவர்களின் துன்பத்தைத் தணித்து அவர்களை மீட்க முடியும். இவ்வருளடையாளம், எண்ணெயால் பூசுவதாலும் திருவழிபாட்டு நூல்களில் விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்துவதாலும் அளிக்கப்படுகிறது.
இயல். 1
அருளடையாளக் கொண்டாட்டம்.
தி.ச. 999. ஆயரைத் தவிர, நோயில் பூசுதலில் பயன்படுத்தவேண்டிய எண்ணையை மந்திரிக்கக் கூடியவர்கள்:
1) சட்டத்தில் மறைமாவட்ட ஆயருக்கு இணையானவர்கள்.
2) ஓர் அவசரத் தேவை எழும்போது, எந்த ஒரு குருவும் அருளடையாளக் கொண்டாட்டத்தின் போது மட்டும்.
தி.ச. 1000. திருவழிபாட்டு நூல்களில் விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகளையும் சடங்குமுறையையும் மற்றும் செயல்முறையையும் கடைப்பிடித்து, பூசுதல்களைத் துல்லியமாக நிறைவேற்றவேண்டும். இருப்பினும் ஓர் அவசரத் தேவை எழும் போது முழுவாய்ப்பாட்டைப் பயன்படுத்தி, நெற்றியில் அல்லது உடலின் மற்றொரு பகுதியில்கூட, ஒரே பூசுதல் போதுமானது.
2) பணியாளர், ஒரு கருவியைப் பயன்படுத்துவதைக் கனமான ஒரு காரணம் தூண்டினாலன்றி, தம் சொந்தக் கையால் பூசவேண்டும்.
தி.ச. 1001. ஆன்ம மேய்ப்பர்களும், நோயாளிகளுக்கு நெருக்கமானவர்களும், நோயாளிகள் உரிய நேரத்தில் இவ்வருளடையாளத்தால் ஆதரவு பெறும் வண்ணம் கவனித்துக்கொள்ளவேண்டும்.
தி.ச. 1002. மறைமாவட்ட ஆயரின் விதியமைப்புகளுக்கு ஏற்ப, உரிய விதத்தில் தயாரிக்கப்பட்டு, சரியான ஏற்புடைய நிலையில் இருக்கும் பல நோயாளிகளுக்கு, ஒரே நேரத்தில் நோயில் பூசுதல் பொதுக்கொண்டாட்டம் நிறைவேற்றலாம்.
இயல் 2.
நோயில் பூசுதலின் பணியாளர்.
தி.ச. 1003. ஒவ்வொரு குருவும் மற்றும் ஒரு குரு மட்டுமே, நோயில் பூசுதல் அருளடையாளத்தைச் செல்லத்தக்கவிதத்தில் வழங்கமுடியும்.
2) ஆன்ம அக்கறை ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து குருக்களும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து விசுவாசிகளுக்கும் நோயில்பூசுதல் வழங்கும் கடமையும் உரிமையும் கொண்டுள்ளனர்.நியாயமான ஒரு காரணத்திற்காக, வேறெந்த ஒரு குருவும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள குருவின் குறைந்த அளவு ஊகிக்கப்பட்ட ஒப்புதலுடன் இவ்வருளடையாளத்தை வழங்கலாம்.
3) எந்த ஒரு குருவும், ஓர் அவசரத் தேவை எழும்போது, நோயில்பூசுதல் அருளடையாளத்தை வழங்குவாற்காக, ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெயைத் தம்முடன் எடுத்துச்செல்லலாம்.
இயல் 3
நோயில்பூசுதல் அளிக்கப்பெற வேண்டியவர்கள்.
தி.ச. 1004. அறிவுப்பயன்பாடு அடைந்த, நோய் அல்லது முதுமையின் காரணமாக இறக்கும் ஆபத்துத் தொடங்கும் நிலையில் இருக்கும் எந்த விசுவாசிக்கும் நோயில்பூசுதல் அளிக்கலாம்.
2) நோயாளி குணமடைந்தபின் மீண்டும் கவலைக்குரிய விதத்தில் நோய்வாய்ப்பட்டால், அல்லது அதே நோயில் ஆபத்து மிகவும் கவலைக்குரியதாகிவிட்டால், இவ்வருளடையாளத்தை மீண்டும் அளிக்கலாம்.
தி.ச. 1005. நோயாளி அறிவுப் பயன்பாடு அடைந்துவிட்டாரா அல்லது அவர் ஆபத்தான நிலையில் நோயுற்றிருக்கினறாரா அல்லது அவர் இறந்து விட்டாரா என்ற ஐயம் இருந்தால் இவ்வருளடையாளத்தை அளிக்ககவேண்டும்.
தி.ச. 1006. தன்னுணர்வோடு இருந்தபோது, குறைந்தஅளவு மறைமுகமாக இவ்வருளடையாளத்தைக் கேட்டுக்கொண்ட நோயாளிகளுக்கு அதனை அளிக்கவேண்டும்.
தி.ச. 1007. வெளிப்படையான, கனமான பாவத்தில் பிடிவாதமாக நிலைத்திருப்பவர்களுக்கு நோயில்பூசுதல் அளிக்கக்கூடாது.
தலைப்பு 6
திருப்பட்டங்கள்.
தி.ச. 1008. இறை ஏற்பாட்டின்படி கிறிஸ்தவ விசுவாசிகளில் ஒரு சிலர் திருப்பட்ட அருளடையாளத்தால் அழியா முத்திரையுடன் திருப்பணியாளராக ஏற்படுத்தப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும், தத்தம் படிநிலைக்கேற்ப, தலையாகிய கிறிஸ்துவின் பெயரால், போதித்தல், புனிதப்படுத்துதல், ஆளுதல் எனும் பணிகளை நிறைவேற்றத் திருநிலைப்படுத்தப்பட்டு, பிரதிநிதிகளாக அனுப்பப்படுகின்றனர். இவ்வாறு இவர்கள் இறைமக்களைப் பேணிக்காக்கின்றனர்.
தி.ச.1009. ஆயர்நிலை, குருத்துவநிலை, திருத்தொண்டர்நிலை ஆகியவை திருப்பட்டங்களாகும்.
2) இவை ஒவ்வொரு படிநிலைக்கும் திருவழிபாட்டு நூலில் விதித்துள்ளபடி, தலைமீது கைகளை வைப்பதாலும் திருநிலைப்பாட்டு வேண்டுதலாலும் வழங்கப்படுகின்றன.
இயல் 1.
திருப்பட்டகொண்டாட்டமும் பணியாளரும்.
தி.ச. 1010. திருப்பட்டத்தை ஞாயிற்றுக்கிழமையிலோ கடன் திருநாளிலோ, ஆடம்பரத் திருப்பலியின்போது கொண்டாடவேண்டும். ஆனால், மேய்ப்புப்பணிக் காரணங்களுக்காக மற்ற நாள்களிலும், சாதாரண வாரநாள்களிலும்கூட அது நடைபெறலாம்.
தி.ச. 1011. திருப்பட்டம் பொதுவாக மறைமாவட்டப் பேராலயத்தில் கொண்டாடப்படவேண்டும். ஆயினும் மேய்ப்புப்பணி காரணங்களுக்காக வேறு ஓர் ஆலயத்திலோ செபக்கூடத்திலோ அதனைக் கொண்டாடலாம்.
2) திருப்பட்டக் கொண்டாட்டத்தில் இயன்ற அளவு பெருந்திரளான மக்கள் இருக்கும் பொருட்டு, திருப்பட்டத்தினரையும் மற்றக் கிறிஸ்தவ விசுவாசிகளையும் அழைக்கவேண்டும்.
தி.ச. 1012. திருப்பட்டத்தின் பணியாளர் திருநிலைப்படுத்தப்பட்ட ஆயராவார்.
தி.ச. 1013. திருத்தந்தையின் ஆணை முன்னதாகத. தேளிவாக இருந்தாலன்றி, எந்தவேர் ஆயரும் எவரையும் ஆயராகத் திருநிலைப்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.
தி.ச. 1014. திருத்தூதரக ஆட்சிப்பீடத்தினால் விலக்கீடு வழங்கப்பட்டிருந்தாலன்றி, ஆயர் திருநிலைப்பாட்டின் போது, திருநிலைப்படுத்தும் முதன்மை ஆயர், தம்முடன் குறைந்த அளவு திருநிலைப்படுத்தும் ஆயர்கள் இருவரை இணைத்துக் கொள்ளவேண்டும். ஆயினும், ஆயர் நியமனம் பெற்றவரைத் திருநிலைப்படுத்தும்போது, அங்கு இருக்கும் அனைத்து ஆயர்களும் இவர்களுடன் ஒன்றிணைந்து திருநிலைப்படுத்துவது மிகவும் பொருத்தமாகும்.
தி.ச. 1015. திருப்பட்டம் அல்லது திருத்தொண்டர் பட்டம் பெறவிருக்கும் ஒவ்வொருவரும், தமது சொந்த ஆயரால் அல்லது அந்த ஆயரிடமிருந்து சட்ட முறையான இசைவாணைக் கடிதங்களுடன் திருநிலைப்படுத்தப்படவேண்டும்.
2) சொந்த ஆயர், நியாயமான ஒரு காரணத்தால் தடைசெய்யப்பட்டிருந்தாலன்றி, தமது ஆளுகைக்கு உட்பட்டவருக்குத் தாமே திருப்பட்டம் அளிக்கவேண்டும். ஆயினும் திருத்தூதரகச் சலுகை இல்லாமல், கீழைத் திருச்சபையின் வழிபாட்டுமுறைக்கு உட்பட்ட ஒருவருக்குச் சட்டமுறையாகத் குருப்பட்டம் அளிக்க முடியாது.
3) திருப்பட்டங்களைப் பெற இசைவாணைக் கடிதங்களை வழங்கக்கூடியவர் ஆயராக இருந்தால் அவர் தாமே அத் திருப்பட்டங்களை வழங்கலாம்.
தி.ச. 1016. மறைமாவட்டத் திருப்பட்டத்தினர் குழாமில் தங்களை இணைத்துக்கொள்ள விருப்பமுள்ளவர்களின் திருத்தொண்டர் திருப்பட்டத்தைப் பொறுத்தவரையில், வேட்பாளருக்கு எந்த மறைமாவட்டத்தில் நிலையான உறைவிடம் உள்ளதோ, அந்த மறைமாவட்ட ஆயர், அல்லது எந்த மறைமாவட்டத்திறகுத் தம்மை அர்ப்பணிக்க விரும்புகிறாரோ, அந்த மறைமாவட்ட ஆயர் உரிய ஆயராவார். மறைமாவட்டத் திருப்பட்டத்தினர் குழாமின் குருத்துவத் திருப்பட்டத்தைப் பொறுத்தவரையில், வேட்பாளர் திருத்தொண்டர் திருப்பட்டத்தினால் எந்த மறைமாவட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளாரோ, அந்த மறைமாவட்டத்தின் ஆயர் உரிய ஆயராவார்.
தி.ச. 1017. ஓர் ஆயர் தமது ஆட்சி உரிமைக்கு வெளியே, அந்த மறைமாவட்ட ஆயரின் அனுமதி பெற்றிருந்தாலன்றித் திருப்பட்டங்கள் அளிக்க முடியாது.
தி.ச. 1018. மறைமாவட்டத் திருப்பணியாளருக்கு இசைவாணைக் கடிதங்கள் கொடுப்பவர்கள்:
1) தி.ச. 1016 –ல் குறிப்பிட்டுள்ள உரிய ஆயர்.
2) திருத்தூதரக நிர்வாகி, ஆலோசனைக் குழாமின் ஒப்புதலுடன் மறைமாவட்ட நிர்வாகி, தி.ச. 495, 2 –ல் குறிப்பிடப்பட்டுள்ள குழுவின் ஒப்புதலுடன் திருத்தூதரக மறை ஆட்சிவட்டத்தின் பதில்- பதில் குரு, திருத்தூதரக மறை ஆட்சி ஆளுகையின் பதில் ஆளுநர்.
2) மறைமாவட்ட ஆயராலோ, திருத்தூதரக மறைஆட்சி வட்டத்தின் பதில்குரு அல்லது திருத்தூதரக மறைஆட்சிவட்டத்தின் ஆளுநராலோ திருப்பட்டங்கள் பெற அனுமதி மறுக்கப்பட்டவர்களுக்கு, மறைமாவட்ட நிர்வாகியோ, திருத்தூதரக மன்ற ஆட்சி வட்டத்தின் பதில்- குருவோ, திருத்தூதரக மறை ஆட்சிவட்டத்தின் பதில் ஆளுநரோ இசைவாணைக் கடிதங்கள் கொடுக்கக்கூடாது.
தி.ச. 1019. திரு ஆட்சிப் பீட அதிகாரத்திற்கு உட்பட்டத் திருப்பணியாளர் துறவற சபை அல்லது திருப்பணியாளர் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் உயர் தலைவர்கள், தங்கள் சபை அமைப்புச்சட்டங்களின்படி நிரந்தரமாக அல்லது உறுதியாக இணைக்கப்பட்ட உறுப்பினர்களுக்குத் திருத்தொண்டர் திருப்பட்டம் அளிப்பதற்கான இசைவாணைக் கடிதங்களைக் கொடுக்கலாம்.
2) வேறு எந்த சபையையோ சமூகத்தையோ சார்ந்த உறுப்பினர்களின் திருப்பட்டம், மறைமாவட்டத் திருப்பணியாளர்களுக்குரிய சட்டத்தால் நெறிப்படுத்தப்படுகிறது. தலைவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகையும் திரும்பப் பெறப்படுகிறது.
தி.ச. 1020. தி.சச, 1050 மற்றும் 1051 ன் விதிமுறைக்கேற்ப, தேவையான சான்றிதழ்களும் ஆவணங்களும் முன்னதாகப் பெற்றிருந்தாலன்றி, இசைவாணைக் கடிதங்கள் வழங்கப்படலாகாது.
தி.ச. 1021. திருத்தூதரக ஆட்சிப்பீடத்துடன் உறவு ஒன்றிப்பில் இருக்கும் எந்த ஓர் ஆயருக்கும் இசைவாணைக் கடிதங்கள் அனுப்பலாம். ஆனால், திருப்பட்டம் பெறுபவரின் திருவழிபாட்டுச் சடங்குமுறையைச் சாராத ஆயருக்கு, திருத்தூதரகச் சலுகை இருந்தாலன்றி, இசைவாணைக் கடிதங்களை அனுப்பலாகாது.
தி.ச. 1022. திருப்பட்டம் பெறுவதற்கான சட்டமுறையான இசைவாணைக் கடிதங்களைத் திருப்பட்டம் அளிக்கும் ஆயர் பெற்றபின், அவை நம்பத்தக்கவை எனத் தெளிவான சான்று இருந்தாலன்றித் திருப்பட்டம் அளிக்க முற்படலாகாது.
தி.ச. 1023. திருப்பட்டம் வழங்குவதற்கான இசைவாணைக் கடிதங்கள், அவற்றைக் கொடுப்பவராலும் அல்லது அவரது வழிவருபவராலும் அரையறுக்கப்படவோ திரும்பப்பெறப்படவோ முடியும். ஆனால், ஒருமுறை வழங்கப்பட்டுவிட்டால், வழங்கியவரின் அதிகார முடிவினால் அவை முடிவுறுவதில்லை.
இயல் 2
திருப்பட்ட வேட்பாளர்கள்
தி.ச. 1024. திருமுழுக்குப் பெற்ற ஓர் ஆண் மட்டுமே செல்லத்தக்கவிதத்தில் திருப்பட்டம் பெறுகிறார்.
தி.ச. 1025. சட்டமுறைப்படி குருத்துவ அல்லது திருத்தொண்டர் திருப்பட்டங்களை வழங்குவதற்குத் தேவையானவை: வேட்பாளர், உரிய ஆயர் அல்லது தகுதிவாய்ந்த உயர் தலைவரின் கணிப்பின்படி, சட்டவிதிமுறைக்கேற்பத் தகுதிகாண் பருவகாலத்தை முடித்து, தேவையான குணநலன்களைக் கொண்டிருக்கவேண்டும், எவ்விதச் சட்டமுரணானநிலை அல்லது தடைக்கு உட்படாதிருக்கவேண்டும், தி.சச 1033- 1039 –ன் விதிமுறைக்கேற்ப முன்தேவைகளை நிறைவுசெய்திருத்தல்வேண்டும், மேலும் தி.ச. 1050-ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களைப் பெற்று, தி.ச. 1050 ல் குறிப்பிட்டுள்ள ஆய்வு செய்திருக்கவேண்டும்.
2) மேலும், அதே சட்டமுறையான தலைவரின் கணிப்பில், திருச்சபையின் பணிக்கு அவர் பயனள்ளவர் எனக் கருதப்படல் வேண்டும்.
3) மற்றொரு மறைமாவட்டத்தின் பணிக்காகக் குறிக்கப்பட்ட, தமது ஆளுகைக்கு உட்பட்ட ஒருவருக்குத் திருப்பட்டம் அளிக்கும் ஆயர், அந்த ஆள் அந்த மறைமாவட்டத்துடன் இணைக்கப்படுவார் என்பதை உறுதி செய்யவேண்டும்.
உட்பிரிவு 1
திருப்பட்ட வேட்பாளர்களின் தகுதிகள்
தி.ச. 1026. ஒருவர் திருப்பட்டம் பெறுவதற்குத் தேவையான தன்னுரிமை கொண்டவராக இருக்கவேண்டும். எவரையும் எவ்விதத்திலும் எக்காரணத்திற்காகவும் திருப்பட்டங்களைப் பெறுமாறு கட்டாயப்படுத்துவது அல்லது திருச்சபைச் சட்டப்படி தகுதிவாய்ந்த ஒருவரை அவற்றைப் பெற விடாமல் தடுப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
தி.ச. 1027. திருத்தொண்டர் திருப்பட்டமும் குருத்துவத் திருப்பட்டமும் பெற விரும்புவோர், சட்டவிதிமுறைக்கேற்ப, துல்லியமான உருவாக்கம் பெற வேண்டும்.
தி.ச. 1028. வேட்பாளர்கள் எந்தவொரு திருப்பட்டத்திற்கும் உயர்த்தப்படுமுன், அந்தத் திருப்பட்டம் பற்றியும் அதன் கடமைகள் பற்றியும் உரியமுறையில் அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை மறைமாவட்ட ஆயரோ தகுதிவாய்ந்த தலைவரோ உறுதி செய்யவேண்டும்..
தி.ச. 1029. அனைத்தையும் கவனத்தில்கொண்டு, உரிய ஆயரின் அல்லது உயர் தலைவரின் விவேகமிக்க கணிப்பில், பின்வரும் தகுதியுடையவர்களை மட்டுமே திருப்பட்டங்களுக்கு உயர்த்தவேண்டும். முழுமையான விசுவாசம் உடையவர்கள், நேர்மையான நோக்கத்தால் உந்தப்பட்டவர்கள், தேவையான அறிவு உடையவர்கள், நன்மதிப்புக் கொண்டவர்கள், நல்லொழுக்கம், எண்பிக்கப்பட்ட நற்பண்புகள் உடையவர்கள் மற்றும் பெறவேண்டிய திருப்பட்டத்திற்குரிய ஏனைய உடல், உள குணநலன்கள் கொண்டவர்கள்.
தி.ச. 1030. குருத்துவத் திருப்பட்டம் பெறுவதற்காகக் குறிப்பிடப்பட்டு, தமது ஆளுகைக்கு உட்பட்ட திருத்தொண்டர்கள் குருத்துவத் திருப்பட்டம் பெறுவதை, திருச்சபைச்சட்ட காரணத்திற்காக மட்டுமே, அது மறைவாக இருப்பினுங்கூட, உரிய ஆயரோ தகுதிவாய்ந்த உயர் தலைவரோ தடை செய்யலாம். இக்காரியத்தில் சட்டவிதிமுறைக்கேற்ப, மேல்முறையீடு செய்யும் உரிமையைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1031. இருபத்து ஐந்து வயதை நிறைவு செய்து, போதுமான உளமுதிர்ச்சி பெற்றிருப்பவர்களுக்கன்றிக் குருத்துவத் திருப்பட்டம் அளிக்கப்படலாகாது. மேலும், திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கும் குருத்துவ திருப்பட்டத்திற்கும் இடையே, குறைந்த அளவு ஆறுமாத இடைவெளியாவது இருந்திருக்கவேண்டும். குருத்துவ திருப்பட்டம் பெறக் குறிக்கப்பட்டவர்கள் இருபத்து மூன்று வயது நிறைவான பிறகே திருத்தொண்டர் திருப்பட்டத்திறகு அனுமதிக்கப்படுவார்கள்.
2) திருமணமாகாத நிரந்தரத் திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கான வேட்பாளர், குறைந்த அளவு இருபத்து ஐந்து வயது நிறைவு செய்தாலன்றித் திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கு அனுமதிக்கப்படலாகாது. திருமணமானவராக இருந்தால், குறைந்த அளவு முப்பத்து ஐந்து வயது நிறைவு செய்து, மனைவியின் ஒப்புதலைப் பெற்றிருந்தாலன்றி, அப்பட்டத்திற்கு அனுமதிக்கப்படலாகாது.
3) ஆயர் பேரவை குருத்துவத் திருப்பட்டத்திறகும் நிரந்தரத் திருத்தொண்டர் பட்டத்திற்கும் தேவையான வேறொரு முதிpர் வயதை நிர்ணயித்து விதிமுறை வழங்கலாம்.
4) 1 மற்றும் 2 ன் விதிமுறைக்கேற்பத் தேவைப்படும் வயதிலிருந்து ஓராண்டுக்கு மேற்பட்ட விலக்கீடு, திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.ச. 1032. குருத்துவத் திருப்பட்டம் பெறவிரும்புவோர் ஐந்து ஆண்டு மெய்யியல்- இறையியல் பாடத்திட்டங்களை முடித்த பின்னரே திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கு உயர்த்தப்படலாம்.
2) திருத்தொண்டர் தமக்குரிய பாடத்திட்டங்களை முடித்தபின், குருத்துவத் திருப்பட்டத்திற்கு உயர்த்தப்படுமுன், ஆயராலோ தகுதிவாய்ந்த உயர் தலைவராலோ நிர்ணயிக்கப்பட்ட உரிய காலத்தை மேய்ப்புப் பணியில், திருத்தொண்டர் திருப்பட்டத்தை செயற்படுத்தி, பங்கேற்கவேண்டும்.
3) நிரந்தரத் திருத்தொண்டர் திருப்பட்டம் பெற விரும்புபவர் பயிற்சிக்காலத்தை முடித்திருந்தாலன்றி, அவரை அத்திருப்பட்டத்திற்கு உயர்த்தக்கூடாது.
உட்பிரிவு 2
திருப்பட்டத்திற்கான முன்தேவைகள்.
தி.ச. 1033. புனித உறுதிப்பூசுதல் அருளடையாளத்தைப் பெற்றிருப்பவர் மட்டுமே சட்டமுறைப்படி திருப்பட்டங்களுக்கு உயர்த்தப்படுவர்.
தி.ச. 1034. குருத்துவ அல்லது திருத்தொண்டர் திருப்பட்டத்தைப் பெறவிரும்புபவர் முதலில் தி.சச.1016 மற்றும் 1019 ல் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரியால் திருவழிபாட்டுச் சேர்க்கைச் சடங்கு முறையில் வேட்பாளராகப் பதிவு செய்யப்பட்டிருந்தாலன்றி, அவருக்குத் திருப்பட்டம் அளிக்கமுடியாது. அவர் முன்னதாகவே தாமே எழுதிக் கையொப்பமிட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருக்கவேண்டும், அது அதே அதிகாரியால் எழுத்து வடிவத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கவேண்டும்.
2) வார்த்தைப்பாடுகளால் திருப்பணியாளர் சபையில் இணைக்கப்பட்டுள்ள ஒருவர், இந்தச் சேர்க்கையைப் பெற வேண்டிய கடமை இல்லை.
தி.ச. 1035. நிரந்தர அல்லது தற்காலிகத் திருத்தொண்டர் பட்டத்திற்கு ஒருவர் உயர்த்தப்பெறுமுன், அவர், வாசகர், பீடத்துணைவர் பணிகளைப் பெற்றிருக்கவேண்டும், அவற்றைப் பொருத்தமான காலத்திற்கு செயல்படுத்தியிருக்கவேண்டும்.
2) பீடத்துணைவர் பணியையும் திருத்தொண்டர் திருப்பட்டத்தையும் வழங்குவதற்கு இடையில், குறைந்த அளவு ஆறு மாதங்கள் இடைவெளி இருத்தல்வேண்டும்.
தி.ச. 1036. வேட்பாளர், திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கோ குருத்துவத் திருப்பட்டத்திற்கோ உயர்த்தப்பட, அவருடைய சொந்த ஆயரிடமோ, தகுதிவாய்ந்த உயர் தலைவரிடமோ, தாமே எழுதிக் கையொப்பமிட்ட விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருக்கவேண்டும். அதில், தாமாகவே தன்னுரிமையோடு திருப்பட்டங்கள் பெறவிருக்கிறார் என்றும், திருச்சபைப் பணிக்குத் தம்மையே நிரந்தரமாக அர்ப்பணிப்பார் என்றும் சான்றுறுதி அளிக்கவேண்டும். அதே நேரத்தில் திருப்பட்டம் பெறத் தம்மை அனுமதிக்கவேண்டும் என்றும் விண்ணப்பிக்கவேண்டும்.
தி.ச. 1037. நிரந்தரத் திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கான திருமணமாகாத வேட்பாளர், அவ்வாறே, குருத்துவத் திருப்பட்டத்திற்கான வேட்பாளர், விதிக்கப்பட்டுள்ள வழிபாட்டுச் சடங்குமுறையில் பகிரங்கமாக, இறைவனுக்கும் திருச்சபைக்கும் முன்பாக மணத்துறவுக் கடமையை ஏற்றிருந்தால் (அல்லது ஒரு துறவறச்சபையில் நிரந்தர வார்த்தைப்பாடு எடுத்திருந்தால்) அன்றித் திருத்தொண்டர் திருப்பட்டம் பெற அனுமதிக்கப்படமாட்டார்.
தி.ச. 1038. குருத்துவத் திருப்பட்டத்திற்கு உயர்த்தப்பட மறுக்கும் ஒரு திருத்தொண்டர், திருச்சபைச் சட்டத் தடையினாலோ, மறைமாவட்ட ஆயர் அல்லது தகுதிவாய்ந்த உயர் தலைவரால், மதிப்பீடு செய்யவேண்டிய வேறு கனமான காரணத்தினாலோ தடை செய்யப்பட்டிருந்தாலன்றி, அவர் பெற்ற திருப்பட்டத்தைச் செயற்படுத்தத் தடை செய்யக்கூடாது.
தி.ச. 1039. எந்தவொரு திருப்பட்டத்திற்கும் உயர்த்தப்படவேண்டிய அனைவரும், திருச்சபை ஆளுநரால் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மற்றும் முறையில் குறைந்த அளவு ஐந்து நாள் தியானம் செய்யவேண்டும். குருத்துவத் திருப்பட்ட வேட்பாளர்கள் தக்க முறையில் தியானம் செய்தார்கள் என்பதைத் திருப்பட்டம் கொடுப்பதற்குமுன் ஆயர் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
உட்பிரிவு 3
சட்டமுறையான நிலையும் மற்றத் தடைகளும்
தி.ச. 1040. எந்தவொரு தடையாலும் கட்டுண்டவர்கள், அது சட்டமுரணான நிலை எனப்படு;ம் நிரந்தரமான தடையாயினும் சரி, அல்லது சாதாரணத் தடையாயினும் சரி, திருப்பட்டங்கள்; பெறத் தடை செய்யப்பட்டுள்ளனர். ஆயினும், கீழ்க்கண்ட சட்டங்களில் இல்லாத எந்தவொரு தடைக்கும் உட்படுத்தப்படுவதில்லை.
தி.ச. 1041. திருப்பட்டங்களைப் பெறுவதற்குக் கீழ்கண்டவர்கள் சட்ட முரணான நிலையில் உள்ளனர்:
2) ஏதாவது ஒருவகை மனநோயால் அல்லது மற்ற உளநலக்குறைவால் துன்புறும் ஒருவர், அதனால் தக்கமுறையில் பணிகளை நிறைவேற்றத் தகுதியற்றவர் என, வல்லுநர்களைக் கலந்தாலோசித்தபின், கணிக்கப்பட்ட ஒருவர்,
3) விசுவாச மறுதலிப்பு, திரிபுக்கொள்கை, அல்லது சமயப்பிளவு என்ற குற்றம் புரிந்த ஒருவர்,
4) ஏற்கெனவே உள்ள திருமணக் கட்டினாலோ, திருப்பட்டத்தினாலோ, பகிரங்க, நிரந்தர கற்பு வார்த்தைப்பாட்டினாலோ கட்டுண்ட நிலையில் உள்ளவர் அல்லது செல்லுநிலைத் திருமணத்தால் அல்லது அதே வார்த்தைப்பாட்டால் கட்டுண்ட ஒரு பெண்ணுடன் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர், திருமணம் செய்ய, அது நாட்டுச் சட்டத் திருமணமாக இருப்பினும், முயற்சி செய்த ஒருவர்,
5) வேண்டுமென்றே கொலை செய்தவர் அல்லது உண்மையாகவே கருச்சிதைவு விளைவித்தவர் மற்றும் நேர்மறையாக அதற்கு ஒத்துழைத்தவர்கள்,
6) கொடூரமாகவும் தீய நோக்கோடும் தம்மையோ மற்றவரையோ உடல் ஊனம் செய்தவர் அல்லது தற்கொலை செய்ய முயற்சி செய்த ஒருவர்.
7) ஆயர் அல்லது குருத்துவத் திருப்பட்டத்தைக் கொண்டிராமல், அல்லது பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட ஏதாவதொரு திருச்சபைச் சட்டத் தண்டனையால் அத்திருப்பட்டத்தைச் செயற்படுத்துவதிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அத்திருப்பட்டத்தில் உள்ளவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள திருப்பட்டச் செயல்களை நிறைவேற்றிய ஒருவர்.
தி.ச. 1042. திருப்பட்டங்களைப் பெறுவதிலிருந்து கீழ்க்கண்டவர்கள் சாதாரண முறையில் தடை செய்யப்பட்டுள்ளனர்:
2) சட்டமுறையாக நிரந்தரத் திருத்தொண்டர் நிலைக்குக் குறிக்கப்பட்டிருந்தாலன்றி, மனைவியைக் கொண்டிருக்கும் ஓர் ஆண்.
3) தி.சச 285, மற்றும் 286 ன் விதிமுறைக்கேற்ப, திருப்பணியாளருக்குத் தடை செய்யப்பட்டுள்ள, கணக்கு கொடுக்கவேண்டிய அலுவலை அல்லது நிர்வாகத்தைக் கொண்டிருக்கும் ஒருவர், இந்த அலுவலையும் நிர்வாகத்தையும் துறந்து, கணக்கு கொடுத்து விடுபடுகின்ற வரைக்கும் இத்தடை அவரைக் கட்டுப்படுத்தும்.
தி.ச. 1043. கிறிஸ்தவ விசுவாசிகள், திருப்பட்டங்களுக்குரிய தடைகள் ஏதேனும் அறிந்திருந்தால் திருப்பட்டத்திற்குமுன் அவற்றைத் திருச்சபை ஆளுநருக்கோ பங்குக்குருவுக்கோ தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
தி.ச. 1044. 1) ஏற்கெனவே பெற்ற திருப்பட்டங்களைச் செயல்படுத்தக் கீழ்கண்டவர்கள் சட்டமுரணான நிலையில் உள்ளனர்:
1) திருப்பட்டங்களைப் பெறுவதற்குச் சட்டமுரணான நிலையால் கட்டுண்டிருந்தபோது, சட்டத்திற்கு முரணாகத் திருப்பட்டங்களைப் பெற்ற ஒருவர்,
2)தி.ச. 1041, 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள குற்றத்தைப் புரிந்த ஒருவர், அக்குற்றம் பகிரங்கமாக இருந்தால்,
3) தி.ச. 1040, 3இ 4, 5 மற்றும் 6 ல் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குற்றத்தைப் புரிந்த ஒருவர்,
2) திருப்பட்டங்களைச் செயல்படுத்தக் கீழ்கண்டவர்கள் சட்டமுரணான நிலையில் உள்ளனர்:
1) திருப்பட்டங்களைப் பெறுவதற்குச் சட்டமுரணான நிலையால் கட்டுண்டிருந்தபோது, சட்டத்திற்கு முரணாகத் திருப்பட்டங்களைப் பெற்ற ஒருவர்,
2) தி.ச. 1041, 1 ல் குறிப்பிடப்பட்டுள்ள மனநோயால் அல்லது ஏதாவதொரு உளநலக் குறைவால் துன்புறும் ஒருவர், வல்லுநர் ஒருவரைக் கலந்தாலோசித்தபின், திருச்சபை ஆளுநர் குறிப்பிட்ட திருப்பட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கும் வரை, இத்தடை நீடிக்கும்.
தி.ச. 1045. சட்டமுரணான நிலை மற்றும் தடைகள் பற்றிய அறியாமை இவற்றிலிருந்து விடுவிப்பதில்லை.
தி.ச. 1046. சட்டமுரணான நிலைகளும் தடைகளும், வெவ்வேறு காரணங்களால் எழுகின்றபோது, பன்மடங்காகினறன. இருப்பினும், வேண்டுமென்றே செய்த கொலை, அல்லது உண்மையான கருச்சிதைவு விளைவு ஆகியவற்றிலிருந்து எழும் சட்டமுரணான நிலையாக இருந்தாலன்றி, அதே காரணத்தை மீண்டும் நிகழச்செய்தால், அவை பன்மடங்காவதில்லை.
தி.ச. 1047. 1) சட்டமுரணான நிலைக்குக் காரணமான காரியம், நீதிமன்ற அரங்கத்திற்குக் கொண்டுவரப்பட்டிருப்பின், எல்லா சட்டமுரணான நிலைகளிலிருந்தும் விலக்கீடு அளித்தல், திருத்தூதுரக ஆட்சிப்பீடத்திற்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
2) திருப்பட்டஙகள் பெறுவதற்கான கீழ்க்கண்ட சட்டமுரணான நிலைகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விலக்கீடு அளிப்பதும் திருத்தூதரக ஆட்சிப்பீடத்திற்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
1) தி.ச. 1041, 2 மற்றும் 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள பகிரங்கமான குற்றங்களிலிருந்து எழும் சட்டமுரணான நிலை,
2) தி.ச. 1041, 4 ல் குறிப்பிடப்பட்டுள்ள பகிரங்கமான அல்லது மறைவான குற்றங்களிலிருந்து எழும் சட்டமுரணான நிலை,
3) தி.ச. 1042, 1 ல் குறிப்பிடப்பட்டுள்ள தடை,
3) தி.ச. 1041, 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள திருப்பட்டங்களைச் செயல்படுத்தத் தடையாக உள்ள பகிரங்கமான சட்டமுரணான நிலைகளிலிருந்து மட்டும், 5, 4 ல் குறிப்பிடப்பட்டுள்ள மறைவான சட்டமுரணான நிலைகளிலிருந்தும்கூட விலக்கீடு அளித்தலும் திருத்தூதுரக ஆட்சிப்பீடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
4) திருஆட்சிப்பீடத்திற்கு ஒதுக்கப்படாத, சட்டமுரணான நிலைகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் திருச்சபை ஆளுநர் விலக்கீடு அளிக்கலாம்.
தி.ச. 1048. மிக அவசர, மறைவான காரியங்களில், திருச்சபை ஆளுநரையோ, தி.ச. 1041, 3 மற்றும் 4 ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமுரணான நிலைகளுக்கு, பாவமன்னிப்புக்கான அகநிலைப் பிரிவையோ அணுகமுடியாதபோது, மேலும் உடனடியான ஆபத்துக்குரிய பெருந்தீங்கோ நற்பெயர் இழப்போ இருந்தால், திருப்பட்டத்தைச் செயல்படுத்தச் சட்டமுரணான நிலையில் உள்ள ஒருவர் அதைச் செயல்படுத்தலாம். இருப்பினும், அவர் கூடியவிரைவில் திருச்சபை ஆளுநரையோ, பாவமன்னிப்புக்கான அகநிலைப் பிரிவையோ, தமது பெரைக் குறிப்பிடாமல், பாவமன்னிப்பாளர் வழியாக, அணுக வேண்டிய கடமையைக் கொண்டுள்ளார் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1049. சட்டமுரணான நிலைகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் விலக்கீடு கேட்கும் விண்ணப்பத்தில், எல்லாச் சட்டமுரணான நிலைகளையும் தடைகளையும் குறிப்பிடவேண்டும். இருப்பினும், பொதுவான விலக்கீடு, தி.ச. 1041, 4 ல் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது நீதிமன்ற அரங்கிற்குக கொண்டுவரப்பட்டுள்ள மற்றச் சட்டமுரணான நிலைகள் தவிர, நல்லெண்ணத்துடன் விடப்பட்டவைகளுக்குச் செல்லும். ஆனால் தீய எண்ணத்துடன் விடப்பட்டவைகளுக்கு அது செல்லாது.
2) வேண்டுமென்றே செய்த கொலை, அல்லது உண்மையான கருச்சிதைவு ஆகியவற்றிலிருந்து எழும் சட்டமுரணான நிலையாக இருப்பின், விலக்கீட்டின் செல்லத்தக்க நிலைக்குக் குற்றங்களின் எண்ணிக்கையும் குறிப்பிடப்படவேண்டும்.
3) திருப்பட்டங்கள் பெறுவதற்காகச் சட்டமுரணான நிலைகளிலிருந்தும் தடைகளிலிருந்தும் அளிக்கப்படும் பொதுவான விலக்கீடு எல்லாத் திருப்பட்டங்களுக்கும் செல்லத்தக்கதாகும்.
உட்பிரிவு 4
தேவையான ஆவணங்களும் ஆய்வும்.
தி.ச. 1050. ஒருவரைத் திருப்பட்டங்களுக்கு உயர்த்துவதற்குக் கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன:
1) தி.ச. 1032 ன் விதிமுறைக்கேற்ப படிப்புகளை முறையாக முடித்ததற்கான சான்றிதழ்,
2) குருத்துவ திருப்பட்டம் பெறுவோருக்குத் திருத்தொண்டர் பட்டம் பெற்றதற்கான சான்றிதழ்,
3) திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கு உயர்த்தப்பட, திருமுழுக்கு, உறுதிப்பூசுதல் பெற்றதற்கான சான்றிதழ்கள், மேலும், தி.ச. 1035 ல் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளைப் பெற்றதற்கான சான்றிதழ், அவ்வாறே, தி.ச. 1036 ல் குறிப்பிடப்பட்டு;ள்ள உறுதிமொழி அறிக்கை அளித்ததற்கான சான்றிதழ், நிரந்தரத் திருத்தொண்டர் திருப்பட்டத்திற்கு உயர்த்தப்படவேண்டியவா திருமணமானவராக இருந்தால், அவருடைய திருமணச் சான்றிதழும், அவருடைய மனைவியின் ஒப்புதல் சான்றிதழும்
தி.ச. 1051. திருப்பட்டம் பெறுவோருக்குத் தேவையான குணநலன்களை ஆய்வு செய்வதைப் பொறுத்தவரையில், கீழ்க்கண்ட விதியமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும்,
1) குருத்துவக் கல்லூரியின் அல்லது பயிற்சி இல்லத்தின் அதிபரிடமிருந்து பெற வேண்டிய திருப்பட்டங்களுக்குத் தேவையான குணநலன்களைப் பற்றிய ஒரு சான்றிதழ். அது, வேட்பாளரின் சரியான கோட்பாடு, உண்மையான பக்தி, நல்லொழுக்கம், பணியாற்றுவதற்கான தகுதி பற்றியதாக இருக்கவேண்டும். அவ்வாறே உரிய ஆய்வுக்குப்பின், அவரின் உடல், உள நலன் பபற்றிய சான்றிதழ் இருக்கவேண்டும்.
2) மறைமாவட்ட ஆயர் அல்லது உயர் தலைவர், தகுந்த முறையில் ஆய்வை நடத்த, கால, இட சூழ்நிலைகளுக்கேற்ப, தமக்குப் பயனுள்ளதெனத் தோன்றுகிற மற்ற வழிமுறைகள், அதாவது, சான்றிதழ்க் கடிதங்கள், பொது அறிவிப்புகள், அல்லது மற்றத் தகவல்களையும் பயன்படுத்தலாம்.
தி.ச. 1052. 1) தமக்கே உரிய உரிமையுடன் திருப்பட்டம் அளிக்கும் ஆயர், அதற்கு முற்படுவதற்கு, தி.ச. 1050 ல் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் தம்மிடம் உள்ளன என்பதையும், மேலும் சட்டவிதிமுறைக்கேற்ப ஆய்வு செய்யப்பட்டு, வேட்பாளரின் தகுதி நேர்மையான ஆதாரங்களால் எண்பிக்கப்பட்டுள்ளது என்பதையும் உறுதி செய்து கொள்ளவேண்டும்.
2) தம் ஆளுகை;கு உட்படாத ஒருவருக்குத் திருப்பட்டம் அளிக்கும் ஓர் ஆயர், அதற்கு முற்படுவதற்கு, அத்தகைய ஆவணங்கள் தம்மிடம் அளிக்கப்பட்டுள்ளன என்றும், சட்டவிதிமுறைகளுக்கேற்ப ஆய்வு செய்யப்பட்டுள்ளதென்றும், மேலும் வேட்பாளரின் தகுதி எண்பிக்கப்பட்டுள்ளதென்றும் இசைவாணைக் கடிதங்கள் குறிப்பிட்டால் போதுமானது. வேட்பாளர் ஒரு துறவற சபை அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகத்தின் உறுப்பினராக இருந்தால், அவர் சபையில் அல்லது சமூகத்தில் உறுதியாக இணைக்கப்பட்டுள்ளார் என்றும், கடிதம் வழங்கும் தலைவரின் ஆளுகைக்கு உட்பட்டவர் என்றும் இசைவாணைக் கடிதங்கள் சான்றளிக்கவேண்டும்.
3) மேலேக் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் இருந்தபோதிலும்கூட, பெற வேண்டிய திருப்பட்டங்களுக்கு வேட்பாளர் தகுதியுள்ளவரா என்று குறிப்பிட்ட ஒருசில காரணங்களுக்காக ஆயருக்கு ஐயப்பாடு எழுந்தால், அவர், அவரைத் திருப்பட்டத்திற்கு உயர்த்தக்கூடாது.
இயல் 3
அளிக்கப்பட்ட திருப்பட்டத்தின் பதிவும் சான்றிதழும்.
தி.ச. 1053. 1) திருப்பட்டம் அளிக்கப்பட்டபின், திருப்பட்டம் பெற்ற தனிநபர்களின் பெயர்கள், திருப்பட்டப் பணியாளரின் பெயர், இடம் திருப்பட்ட நாள் ஆகியவற்றைச் சிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து, திருப்பட்டம் பெற்ற இடத்தின் செயலகத்தில் கவனமுடன் வைக்கவேண்டும், ஒவ்வொரு திருப்பட்டத்தின் அனைத்து ஆவணங்களையும் கவனமுடன் பாதுகாக்கவேண்டும்.
2) திருப்பட்டம் அளிக்கும் ஆயர், திருப்பட்டம் பெற்ற ஒவ்வொருவருக்கும், அவர் பெற்ற திருப்பட்டத்தின் நம்பகமான சான்றிதழை வழங்கவேண்டும். இசைவாணைக் கடிதங்களுடன் தமது சொந்த ஆயரல்லாத வேறோர் ஆயரால் திருப்பட்டம் பெற்றவர்கள், சிறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து, ஆவணக் காப்பகத்தில் வைப்பதற்காக இச்சான்றிதழைத் தங்களின் சொந்தத் திருச்சபை ஆளுநரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
தி.ச. 1054. திருப்பட்டம் பெற்றவர் மறைமாவட்டக் குருவாக இருந்தால், தலத்திருச்சபை ஆளுநரும், துறவற சபையைச் சார்ந்தவராக இருந்தால், அச்சபையின் தகுதிவாய்ந்த உயர் தலைவரும், திருப்பட்டம் பெற்றவர் திருமுழுக்குப் பெற்ற இடத்தின் பங்குக்குருவுக்கு, அளிக்கப்பட்ட ஒவ்வொரு திருப்பட்டத்தைப் பற்றிய அறிவிப்பையும் அனுப்பவேண்டும். அதைப் பங்குக்குரு, தி.ச. 535, 2 ன் விதிமுறைக்கேற்ப, திருமுழுக்குப் பதிவேட்டில் குறிக்கவேண்டும்.
தலைப்பு 7.
திருமணம்.
தி.ச. 1055. திருமண உடன்படிக்கையால் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தங்கள் வாழ்வு முழுவதற்குமான ஓர் உறவுசமூகத்தைத் தங்களிடையே ஏற்படுத்துகின்றனர், இவ்வுடன்படிக்கை, தன் இயல்பிலே மணமக்களின் நலனுக்காகவும் மகப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்புக்காகவும் அமைந்துள்ளது, இது திருமுழுக்குப் பெற்றறவர்களிடையே ஓர் அருளடையாள மாண்பிற்கு ஆண்டவராகிய கிறிஸ்துவால் உயர்த்தப்பட்டுள்ளது.
2) எனவே, திருமுழுக்குப் பெற்ற ஆள்களிடையே நிகழும் செல்லத்தக்க ஒரு திருமண ஒப்பந்தம், தன் இயல்பிலே அருளடையாளமற்றதாக இருத்தல் இயலாது.
தி.ச. 1056. திருமணத்தின் இன்றியமையாத பண்புக் ஒருமைத்தன்மையும் முறிவுபடாத்தன்மையுமாகும், இவை, கிறிஸ்தவத் திருமணங்களில் அருளடையாளத்தின் காரணமாகத் தனிப்பட்ட உறுதித்தன்மையைப் பெற்றுள்ளன.
தி.ச. 1057. சட்டத்திறகேற்பத் தகுதியுள்ள ஆள்களின், சட்டமுறையாக வெளிப்படுத்தப்பட்ட சம்மதம் திருமணத்தை உருவாக்குகின்றது. இச்சம்மதம் வேறு எந்த அதிகாரத்தாலும் வழங்கப்படமுடியாது.
2) திருமண சம்மதம் என்பது மனத்தின் ஒரு செயல். இதனால், ஓர் ஆணும் ஒரு பெண்ணும், திருமணத்தை உருவாக்கும் பொருட்டு, திருப்பிப் பெற முடியாத உடன்படிக்கையால் தங்களையே ஒருவருக்கொருவர் கையளித்து, ஏற்றுக் கொள்கின்றனர்.
தி.ச. 1058. சட்டத்தால் தடை செய்யப்பட்டிராத அனைவரும் திருமண ஒப்பந்தம் செய்யலாம்.
தி.ச. 1059. தம்பதியரில் ஒருவர் மட்டுமே திருமுழுக்குப் பெற்றிருந்தாலும் கூட, கத்தோலிக்கர்களின் திருமணம் இறைச் சட்டத்தால் மட்டுமல்ல, திருச்சபைச் சட்டத்தாலும் நெறிப்படுத்தப்படுகிறது. இத்தகைய திருமணத்தின் நாட்டுச்சட்ட விளைவுகளை மட்டும் பொறுத்தவரை, நாட்டுச்சட்ட அதிகாரத்தின் தகுதியுடமையைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
தி.ச. 1060. திருமணம் சட்டத்தின் ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே, ஐயம் இருக்கும்போது, நேர்மாறானது எண்பிக்கப்படும்வரை, திருமணத்தின் செல்லத்தக்கநிலையை நிலைநாட்டவேண்டும்.
தி.ச. 1061. திருமுழுக்குப் பெற்றவர்களிடையே நிகழும் செல்லத்தக்க ஒரு திருமணம், அது தாம்பத்திய உறவால் முழுமையடையாது இருந்தால், உறுதிப்படுத்தப்பட்டத் திருமணம் மட்டுமே எனப்படுகிறது, தன் இயல்பிலே மகப்பேறுக்குத் தகுதியுள்ள தாம்பத்திய செயலைத் தம்பதியர் தங்களிடையே மனித முறையில் செய்திருந்தால், அத்திருமணம் "உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் முழுமை பெற்றத் திருமணம்" எனப்படுகிறது. இச்செயலுக்கெனத் திருமணம் தன்னியல்பிலே அமைந்துள்ளது, இதனால் தம்பதியர் ஓருடலாகின்றனர்.
2) திருமணக்கொண்டாட்டத்திற்குப்பின் தம்பதியர் கூடிவாழ்ந்திருந்தால், நேர்மாறானது எண்பிக்கப்படும்வரை, தாம்பத்திய உறவால் முழுமை அடைதல் ஊகிக்கப்படுகிறது.
3) ஒரு செல்லாநிலைத் திருமணமானது, குறைந்த அளவு தம்பதியரில் ஒருவரால் நல்லெண்ணத்துடன் கொண்டாடப்பட்டிருந்தால், அத்திருமணத்தின் செல்லாநிலையைத் தம்பதியர் இருவரும் நிச்சயமாக அறியும் வரை, அது செல்லத்தக்கத் திருமணம் என ஊகிக்கப்படுகிறது.
தி.ச. 1062. திருமணம் செய்வதற்கான வாக்குறுதி, அது ஒரு தரப்பாயினும் அல்லது இரு தரப்பாயினும், நிச்சயதார்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இது நடைமுறையில் இருக்கக்கூடிய வழக்கம், நாட்டுச்சட்டங்களைக் கருத்திற்கொண்டு ஆயர் பேரவை இயற்றியுள்ள தனிச்சட்டத்தால் நெறிப்படுத்தப்படுகிறது.
2) திருமணம் செய்வதற்கான வாக்குறுதியிலிருந்து, திருமணக்கொண்டாட்டத்தைக் கோருகின்ற வழக்கு நடவடிக்கை எழுவதில்லை. ஆயினும், இழப்பீடு தேவைப்பட்டால் அதை ஈடுசெய்வதற்கான வழக்கு நடவடிக்கை எழுகிறது.
இயல் 1
மேய்ப்புப்பணி சார்ந்த அக்கறையும் திருமணக் கொண்டாட்டத்திற்கான முன்னேற்பாடுகளும்.
தி.ச. 1063. ஆன்ம மேய்ப்பர்கள், தங்களுடைய திருச்சபைச் சமூகம் கிறிஸ்தவ விசுவாசிகளு;கு அளிக்கும் உதவியினால், திருமண நிலை, அதன் கிறிஸ்தவ மனநிலையில் காக்கப்பட்டு, நிறைவை நோக்கி முன்னேறுவதைக் கவனித்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளனர். இவ்வுதவியை முக்கியமாகக் கொடுக்க வேண்டிய வழிகளாவன:
1) போதனை, சிறுவர், இளைஞர் மற்றும் வயதுவந்தோருக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்ட மறைக்கல்வி, மேலும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்துவது: இவற்றின் மூலம் கிறிஸ்தவ விசுவாசிகள் கிறிஸ்தவத் திருமணத்தின் கொருள், கிறிஸ்தவத் தம்பதியர் மற்றும் பெற்றோர்pன் கடமைகள் ஆகியவற்றில் பயிற்றுவிக்க முடியும்.
2) திருமணத்தில் நுழைவதற்கான தனிப்பட்டத் தயாரிப்பு, இதன்மூலம் தமபதியர் தங்களுடைய புதிய நிலையின் புனிதத்தன்மைக்கும் கடமைகளுக்கும் ஏற்ற நிலையைப் பெறுவர்,
3) பயனுள்ள திருவழிபாட்டுத் திருமணக் கொண்டாட்டம், இக்கொண்டாட்டம் கிறிஸ்துவுக்கும் திருச்சபைக்கும் இடையே நிலவும் ஒற்றுமை மற்றும் வளமான அன்பின் மறைபொருளைத் தம்பதியர் குறித்தக்காட்டி, அதில் பங்கு பெறுவதைத் தெளிவாக வெளிப்படுத்தும்.
4) திருமணமானவர்களுக்கு அளிக்கப்படும் உதவி, இதன் மூலம் அவர்கள் தாம்பத்திய உடன்படிக்கையில் உண்மையுடன் நிலைத்திருந்து, அதைப் பாதுகாத்து, குடும்பத்தில் நாளுக்கு நாள் இன்னும் புனிதமான, நிறைவான வாழ்வு நடத்த இயலும்.
தி.ச. 1064. இந்த உதவி தக்கமுறையில் ஒழுங்கு செய்யப்படுவதைக் கவனித்துக்கொள்வது தலத்திருச்சபை ஆளுநரின் கடமையாகும். பொருத்தமென்று தேன்றினால், அவர் தேர்ச்சிமிக்க அனுபவமும் திறமையும் வாய்ந்த ஆண்களையும் பெண்களையுங்கூட கலந்தாலோசிக்கவேண்டும்.
தி.ச. 1065. உறுதிப்பூசுதல் அருளடையாளத்தை இன்னும் பெறாத கத்தோலிக்கர்கள், கடினமான இடைஞ்சலின்றிப் பெற இயலுமென்றால், திருமணத்திற்கு அனுமதிக்கப்படுமுன் அதைப் பெறவேண்டும்.
2) திருமண அருளடையாளத்தைப் பயனுள்ள விதத்தில் பெறும்பொருட்டு, தம்பதியர்கள் ஒப்புரவு, புனிதமிகு நற்கருணை அருளடையாளங்களை அணுகும்வண்ணம் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
தி.ச. 1066. திருமணம் கொண்டாடுவதற்குமுன், அதனுடைய செல்லத்தக்க, சட்டமுறையான கொண்டாட்டத்திற்கு எவ்விதத் தடையும் இல்லை என்பது தெளிவாக இருக்கவேண்டும்.
தி.ச. 1067. திருமணத்திற்கு முந்திய, தேவையான விசாரணைகளை நடத்துவதற்காக மணமக்களின் ஆய்வு, திருமண அறிக்கை மற்றும் பொருத்தமான மற்ற வழிமுறைகள் ஆகியவைபற்றி ஆயர் பேரவை விதிமுறைகளை அளிக்கவேண்டும். இவ்விதிமுறைகளைக் கவனமாகக் கடைப்பிடித்துப் பங்குக்குரு திருமணத்தை நடத்தலாம்.
தி.ச. 1068. மரண ஆபத்தில், மற்ற சான்றுறுதிகள் கிடைக்கவில்லை என்றால், நேர் மாறான அறிகுறிகள் இருந்தாலன்றி, மண ஒப்பந்தம் செய்பவர்கள், தேவைப்பட்டால் பிரமாண வாக்குமூலம் செய்து, அவர்கள் திருமுழுக்குப் பெற்றவர்கள் என்றும், எவ்விதத் தடையாலும் கட்டுண்டவர்கள் அல்ல என்றும் உறுதிசெய்தல் போதுமானது.
தி.ச. 1069. விசுவாசிகள் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த தடைகளைத் திருமணக் கொண்டாட்டத்திற்குமுன் பங்குக்குருவிடமோ தலத்திருச்சபை ஆளுநரிடமோ தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
தி.ச. 1070. திருமணத்தை நடத்தவேண்டிய பங்குக்குருவைத் தவிர வேறொருவர் ஆய்வு செய்திருந்தால், அவர் அதன் முடிவுகளை, கூடிய விரைவில், நம்பத்தக்க ஆவணத்தின் மூலம் அந்தப் பங்குக்குருவுக்குத் தெரிவிக்கவேண்டும்.
தி.ச. 1071. தேவை நீங்கலாக, தலத்திருச்சபை ஆளுநரின் அனுமதியின்றி எவரும் பின்வரும் திருமணங்களை நடத்தக்கூடாது:-
1) நாடோடிகளின் திருமணம்,
2) நாட்டுச்சட்ட விதிமுறைக்கேற்ப அங்கீகரிக்கமுடியாத அல்லது அதன் விதிமுறைகளுக்கேற்ப பொண்டாடமுடியாத திருமணம்,
3) முந்திய பிணைப்பால், மற்றொரு தரப்பிகர் அல்லது குழந்தைகள் குறித்து எழும் இயலபான கடமைகளால் கட்டுண்டவரின் திருமணம்,
4) கத்தோலிக்க விசுவாசத்தைப் பகிரங்கமாகப் புறக்கணித்துவிட்ட ஒருவரின் திருமணம்,
5) திருச்சபைக் கண்டனத்திற்கு உட்பட்ட ஒருவரின் திருமணம்,
6) கொறுப்பேற்கும் வயதை அடையாதவரின் திருமணம், அவரின் பெற்றோர் அதைப்பற்றி அறியாதபோது அல்லது காரணத்தோடு அதை எதிர்க்கும்போது,
7) தி.ச. 1105 ல் குறிப்பிடப்பட்டுள்ள பதில் ஆள் மூலம் செய்யவேண்டிய திருமணம்,
2) தி.ச. 1125 ன் விதிமுறைகள், பொருத்தமான தழுவல்களுடன் கடைப்பிடிக்கப்பட்டாலன்றி, தலத்திருச்சபை ஆளுநர் கத்தோலிக்க விசுவாசத்தைப் பகிரங்கமாகப் புறக்கணித்துவிட்ட ஒருவரின் திருமணத்தை நடத்த அனுமதி வழங்கக்கூடாது.
தி.ச. 1072. ஆன்ம மேய்ப்பர்கள், ஒரு மண்டலத்தின் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கப்படி, வழக்கமாகத் திருமணம்புரியும் வயதுக்கு முன்பே, இளம் வயதினர் திருமணம்புரிவதைத் தடுக்கக் கவனம் செலுத்தவேண்டும்.
இயல் 2
திருமண முறியல்தடைகள் பொதுவாக
தி.ச. 1073. ஒருமுறியல்தடை, ஓர் ஆளைச் செல்லத்தக்க விதத்தில் திருமண ஒப்பந்தம் செய்ய இயலாதவராக ஆக்குகிறது.
தி.ச. 1074. ஒரு தடையை வெளியரங்கில் எண்பிக்கமுடியும் என்றால், அது பகிரங்கமானது என்றும், அவ்விதம் இல்லையென்றால், அது மறைவானது என்றும் சொல்லப்படும்.
தி.ச. 1075. திருச்சபையின் உச்ச அதிகாரம் மட்டுமே எப்போது இறைச்சட்டம் ஒரு திருமணத்தைத் தடை செய்கிறது அல்லது செல்லாததாக்குகிறது என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கையிடமுடியும்.
2) அதே உச்ச அதிகாரம் மட்டுமே, திருமுழுக்குப் பெற்றவர்களுக்காக வேறு தடைகளை ஏற்படுத்தும் உரிமை கொண்டுள்ளது.
தி.ச. 1076. புதிய தடைகளை அறிமுகப்படுத்தும் அல்லது தற்போதுள்ள தடைகளுக்கு நேர்மாறாக உள்ள வழக்கம் புறக்கணிக்கப்படுகிறது.
தி.ச. 1077. தலத்திருச்சபை ஆளுநர் ஒரு குறிப்பிட்ட காரியத்தில், தம் ஆளுகைக்கு உட்பட்டவர்களின், அவர்கள் எங்கு தங்கியிருப்பினும் சரி தமது எல்லைக்குள் தற்போது தங்கியிருக்கும் அனைவரின் திருமணத்தைத் தடைசெய்யமுடியும். ஒரு குறிப்பிட்டக் காலத்திறகு, மிகக் கனமான காரணத்திற்காகவும் அக்காரணம் நீடிக்கும் வரையிலும் மட்டுமே அவர் இதைச் செய்யமுடியும்.
2) திருச்சபையின் உச்ச அதிகாரம் மட்டுமே ஒரு தடைக்குச் செல்லாநிலைத் தன்மைக்கான நிபந்தனை விதிக்கூற்றை இணைக்கமுடியும்.
தி.ச. 1078. 1) தலத்திருச்சபை ஆளுநர், தமது ஆளுகைக்கு உட்பட்டவர்களுக்கும், அவர்கள் எங்கு தங்கியிருப்பினும் சரி மற்றும் தமது எல்லைக்குள் தற்போது இருக்கும் அனைவருக்கும், திருத்தூதரக ஆட்சிப்பபீடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள திருமணத்தடை விலக்கீடகள் நீங்கலாக, அனைத்துத் திருச்சபைச் சட்டத் தடைகளிலிருந்தும் விலக்கீடு வழங்க முடியும்.
2) திருத்தூதரக ஆட்சிப்பீடத்திறகு ஒதுக்கப்பட்டுள்ள திருமணத்தi விலக்கீடகளாவன:
1) திருப்பட்டங்களிலிருந்து அல்லது திருஆட்சிப்பீடத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட துறவற சபைகளில் கொடுக்கப்படும் பகிரங்க, நிரந்தரக் கற்பு வார்த்தைப்பாட்டிலிருந்து எழுகின்ற தடை,
2) தி.ச. 1090 ல் குறிப்பிடப்பட்டுள்ள பாதகம் எனும் தடை,
3) நேர்வழி இரத்த உறவினால் அல்லது கிளைவழி இரண்டாம் கால் இரத்த உறவினால் எழும் தடைகளுக்கு விலக்கீடு ஒருபோதும் கொடுக்கப்படுவதில்லை.
தி.ச. 1079. 1) மரண ஆபத்தில், தலத்திருச்சபை ஆளுநர், தமது அதிகாரத்திற்கு உட்பட்டவர்களுக்கும், அவர்கள் எங்கு தங்கியிருப்பினும் சரி மற்றும் தமது எல்லைக்குள் தற்போது இருக்கும் அனைவருக்கும் திருமணக் கொண்டாட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முறையிலிருந்தும், திருச்சபைச் சட்ட ஒவ்வொரு மற்றும் அனைத்துத் தடைகளிலிருந்தும், அவை பகிரங்கமாக இருப்பினும் அல்லது மறைவாக இருப்பினும் சரி விலக்கீடு அளிக்கலாம். குருப்பட்டத்தினால் எழும் தடையிலிருந்து அவர் விலக்கீடு அளிக்க முடியாது.
2) 1 ல் குறிப்பிடப்பட்டுள்ள அதே சூழ்நிலைகளில், தலத்திருச்சபை ஆளுநரை அணுக முடியாத காரியங்களில் மட்டுமே, பங்குக்குரு, முறையான கட்டளைப் பேராண்மை பெற்றுள்ள திருப்பணியாளர் மற்றும் தி.ச. 1116, 2 ன் விதிமுறைக்கேற்ப, திருமணத்தை நடத்தும் குரு அல்லது திருத்தொண்டர் ஆகியோர் அதே தடைகளிலிருந்து விலக்கீடு அளிக்கும் செயலுரிமை கொண்டுள்ளனர்.
3) மரண ஆபத்தில், ஒரு பாவமன்னிப்பாளர் அக அரங்கில், ஒப்புரவு அருளடையாளத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ, மறைவானத் தடைகளிலிருந்து விலக்கீடு அளிக்கும் செயலுரிமை கொண்டுள்ளார்.
4) 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள காரியத்தில், தலத்திருச்சபை ஆளுநரைத் தந்தி அல்லது தொலைபேசி வழியாக மட்டுமே அணுக முடியுமென்றால், அவர் அணுக முடியாத நிலையில் உள்ளார் எனக் கருதப்படும்.
தி.ச. 1080. 1) திருமணத்திறகு எல்லா ஏற்பாடுகளும் ஏற்கெனவே செய்யப்பெற்ற பிறகு தடை கண்டுபிடிக்கப்பட்டு மற்றும் தகுதி வாய்ந்த அதிகாரியிடமிருந்து விலக்கீடு பெறும்வரை திருமணத்தை ஒருவேளைப் பெருந்தீங்கு விளைவிக்கும் ஆபத்தின்றி ஒத்தி வைக்கமுடியாதபோதெல்லாம், தி.ச.ச1078, 2, 1 ல் குறிப்பிடப்பட்டுள்ள தடைகளைத் தவிர, மற்ற அனைத்துத் தடைகளிலிருந்தும் விலக்கீடு அளிக்கும் செயலுரிமையைக் கீழ்க்கண்டவர்கள் கொண்டுள்ளனர், தலத் திருச்சபை ஆளுநர் மற்றும் காரியம் மறைவாக இருந்தால் மட்டும் தி.ச. 1079, 2 மற்றும் 3 ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும், அச்சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
2) தாமதத்தின் காரணமாக இதே ஆபத்து இருக்கும் போது மற்றும் திருத்தூதரக ஆட்சிப்பீடத்தையோ அல்லது தலத்திருச்சபை ஆளுநர் விலக்கீடு அளிக்கக்கூடிய தடைகளில் அவரையோ அணுகுவதற்குப் போதுமான காலம் இல்லாதபோது, இந்ந அதிகாரம் திருமணத்தை முறைப்படுத்துவதற்குப் பொருந்தும்..
தி.ச. 1081. தி.ச. 1079, 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள பங்குக்குரு அல்லது குரு அல்லது திருத்தொண்டர், புற அரங்கிற்காகக் கொடுக்கப்பட்ட விலக்கீட்டை உடனடியாகத் தலத்திருச்சபை ஆளுநருக்குத் தெரிவிக்கவேண்டும். மேலும் அதனைத் திருமணப் பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.
தி.ச. 1082. பாவமன்னிப்புக்கான அகநிலைப்பரிவின் மேல்நிலைச் சலுகை வேறுவிதமாகக் குறிப்பிட்டாலன்றி, அருளடையாளத்திற்கு வெளியே அக அரங்கில் மறைவானத் தடைக்குக் கொடுக்கப்பட்ட விலக்கீடு, செயலகத்தின் இரகசிய ஆவணக் காப்பகத்தில் வைக்கவேண்டிய புத்தகத்தில் பதிவுசெய்யவேண்டும், இந்த மறைவான தடையானது பின்னர் பகிரங்கமாகிவிட்டால், வேறெந்த விலக்கீடும் வெளி அரங்கிற்குத் தேவை இல்லை.
இயல் 3.
திருமண முறியல் தடைகள் குறிப்பாக
தி.ச. 1083. 1) பதினாறு வயதை நிறைவுசெய்வதற்குமுன் ஓர் ஆணும், அவ்வாறே பதினான்கு வயதை நிறைவுசெய்வதற்குமுன் ஒரு பெண்ணும் செல்லத்தக்க ஒரு திருமணத்தைச் செய்யமுடியாது.
2) சட்டமுறையான திருமணக் கொண்டாட்டத்திற்கு ஓர் உயர் வயதை நிர்ணயிப்பது ஆயர் பேரவையின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும்.
தி.ச. 1084. 1) திருமணத்திற்கு முந்தைய மற்றும் நிரந்தரமான பாலுறவு கொள்ளும் ஆற்றலின்மை, அது ஆண் தரப்பில் இருப்பினும் அல்லது பெண் தரப்பில் இருப்பினும் அல்லது சார்பு நிலையாக இருப்பினும், தன் இயல்பிலேயே திருமணத்தைச் செல்லாததாக்கிவிடுகிறது.
2) பாலுறவு கொள்ளும் ஆற்றலின்மை என்னும் தடை ஐயத்துக்குரியதாக இருந்தால், அது சட்டமாக ஐயமாக இருப்பினும் அல்லது நிகழ்வு ஐயமாக இருப்பினும் திருமணத்தைத் தடைசெய்யக் கூடாது, ஐயம் நீடிக்கும் வரை, திருமணம் செல்லாது என்று அறிக்கையிடக்கூடாது.
3) மலட்டுத்தன்மை திருமணத்தைத் தடை செய்வதுமில்லை, செல்லாததாக்குவதும் இல்லை, இக்காரியத்தில் தி.ச. 1098 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1085. 1) முந்தைய திருமணப் பிணைப்பால் கட்டுண்ட ஒருவர், அத்திருமணம் தாம்பத்திய உறவால் முழுமையடையவில்லை என்றாலும்கூட, செல்லாநிலைத் திருமணம் செய்யமுயற்சி செய்கிறார்.
2) எந்தவொரு காரணத்தைமு;னிட்டும் முந்தைய திருமணம் செல்லாநிலைத் திருமணமாகவோ அல்லது பிணைப்பு அவிழ்க்கப்பட்ட திருமணமாகவோ அருப்பினும்கூட, அதன் பொருட்டு முந்தைய திருமணத்தின் செல்லாநிலை அல்லது பிணைப்பு அவிழ்ப்பு சட்டமுறையாகவும் நிச்சயமாகவும் எண்பிக்கப்படுவதற்குமுன், மற்றொரு திருமண ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கப்படுவரில்லை.
தி.ச. 1086. 1) கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற அல்லது அதில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மேலும் அதிலிருந்து வெளிப்படையான செயல் மூலம் விலகாத ஒருவருக்கும் திருமுஐக்குப் பெறாத மற்றொருவருக்கும் இடையே நிகழும் திருமணம் செல்லத்தக்கதல்ல.
2) தி.சச.1125 மற்றும் 1126 ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலன்றி, இத்தடையிலிருந்து விலக்கீடு அளிக்கக் கூடாது.
3) திருமணம் செய்யப்பட்டபோதுஒரு தரப்பினர் பொதுவாகத் திருமுழுக்குப் பெற்றவர்என்று கருதப்பட்டால் அல்லது அவரின் திருமுழுக்கு ஐயத்திற்கு உரியதாக இருந்தால், ஒரு தரப்பினர் திருமுழுக்குப் பெற்றவரென்றும் மறு தரப்பினர் திருமுழுக்குப் பெறாதவரென்றும் நிச்சயமாக எண்பிக்கப்படும் வரை தி.ச.1060 ன் விதிமுறைக்கேற்ப அத்திருமணத்தின் செல்லுநிலையை ஊகிக்கவேண்டும்.
தி.ச. 1087. திருப்பட்டத்தினர் செல்லாத நிலையில் திருமணம் செய்ய முயற்சி செய்கின்றனர்.
தி.ச. 1088. துறவற சபையில் பகிரங்க, நிரந்தரக் கற்பு வார்த்தைப்பாட்டினால் கட்டுண்டவர்கள் செல்லாநிலையில் திருமணம் செய்யமுயற்சி செய்கின்றனர்.
தி.ச. 1089. ஓர் ஆணுக்கும், திருமணம் செய்யும் நோக்கத்துடன் கடத்தப்பட்ட அல்லது குறைந்த அளவு காவலில் வைக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கும் இடையே, அவள் கடத்தல்காரரிடமிருந்து பிரிக்கப்பட்டு, பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான இடத்தில் வைக்கப்பட்டு, தானாகவே திருமணத்தைத் தேர்ந்தெடுத்தாலன்றி, எவ்விதத் திருமணமும் நடக்க முடியாது.
தி.ச. 1090. 1) ஒரு குறிப்பிட்ட ஆளுடன் திருமணம் செய்யும் நோக்கத்துடன் அக்குறிப்பிட்ட ஆளின் வாழ்க்கைத் துணைவரின் சாவை அல்லது தனது சொந்த வாழ்க்கைத் துணைவரின் சாவை விளைவித்திருக்கும் ஒருவர் செல்லாநிலையில் திருமணம் செய்ய முயற்சி செய்கிறார்.
2) உடல் ரீதியான அல்லது மனரீதியான பரஸபர ஒத்துழைப்புடன் தங்களுடைய வாழ்க்கைத் துணைவர் ஒருவரின் சாவை விளைவித்தவர்களும் தங்களிடையே செல்லாநிலையில் திருமணம் செய்ய முயற்சி செய்கின்றனர்.
தி.ச. 1091. 1) நேர்வழி இரத்த உறவில், எல்லா ஏறுமுக மற்றும் இறங்குமுக இரத்த உறவினரிடையே, அவர்கள் சட்டமுறையானவர்களாக இருப்பினும் அல்லது இயல்பானவர்களாக இருப்பினும், திருமணம் செல்லாது.
2) இரத்த உறவுத் தடையானது பன்மடங்கு ஆக்கப்படுவது இல்லை.
3) மணமக்கள் இரத்த உறவில் எந்தக் காலிலாவது அல்லது கிளைவழி இரத்த உறவில் இரண்டாம் காலில் உறவினர்களாக உள்ளனரா என்னும் ஐயம் இருப்பின், திருமணம் ஒருபோதும் அனுமதிக்கப்படுவதில்லை.
தி.ச. 1092. திருமணவழி உறவு, நேர்வழியில் எல்லாக் கால்களிலும் திருமணத்தை செல்லாததாக்குகிறது.
தி.ச. 1093. வெளிப்படை மதிப்பு என்னும் தடை, ஒரு செல்லாநிலைத் திருமணத்திற்குப்பின் தம்பதியர் கூடி வாழ்ந்தாலும் அல்லது வசைப்பெயர் எடுத்த அல்லது பகிரங்கமான காமக் கூட்டுறவினாலும் எழுகிறது. இத்தடையானது, அந்த ஆணுக்கும் அந்தப் பெண்ணின் இரத்த உறவினர்களுக்கும் இடையே, நேர்வழி முதலாம் காலில் திருமணத்தைச் செல்லாததாக்குகிறது, அவ்வாறே, அந்தப் பெண்ணுக்கும் அந்த ஆணின் இரத்த உறவினர்களுக்குமிடையே நேர்வழி முதலாம் காலில் திருமணத்தைச் செல்லாததாக்குகிறது.
தி.ச. 1094. தத்தெடுத்தலிலிருந்து வரும் சட்டவழி உறவின் மூலம் நேர்வழியில் எல்லாக் கால்களிலும் அல்லது கிளை வழியில் இரண்டாம் காலிலும் உள்ளவர்கள் தங்களிடையே செல்லத்தக்கவிதத்தில் திருமணம் செய்யமுடியாது.
இயல் 4
திருமணச் சம்மதம்.
தி.ச. 1095. கீழ்கண்டவர்கள் திருமணம் செய்வதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர்:
1) போதுமான அளவு பகுத்தறிவு பயன்பாடு அற்றவர்கள்,
2) இரு தரப்பினராலும் பரஸ்பரமாக வழங்கப்பட்டு, ஏற்றுக்கொள்ள வேண்டிய திருமணத்தின் இன்றியமையாக் கடமைகளையும் உரிமைகளையும் பற்றிச் சீர்தூக்கிப்பார்க்கும் திறனாய்வுப் பண்பு மிகக்குறைவாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள்,
3) உளவியல் காரணங்களால் திருமணத்தின் இன்றியமையாக் கடமைகளை ஏற்க இயலாதவர்கள்.
தி.ச. 1096. 1) திருமணச் சம்மதம் இருக்கவேண்டுமென்றால், திருமணம் என்பது ஓர் ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையேயுள்ள நிரந்தர ஓர் உறவுச் சமூகம் என்பதையும், அது பாலியல்பு சார்ந்த ஓரளவு ஒத்துழைப்பால் மகப்பேற்றுக்காக அமைந்துள்ளது என்பதையும், திருமண ஒப்பந்தம் செய்யும் இரு தரப்பினரும் குறைந்த அளவு அறியாதவர்கள் அல்ல என்பது அவசியமாகும்.
2) இந்த அறியாமை பூப்பெய்தியபிறகு உள்ளதென்று ஊகிக்கப்படுவதில்லை.
தி.ச. 1097. 1) ஓர் ஆளைப் பற்றிய தவறு திருமணத்தைச் செல்லாததாக்குகிறது.
2) ஓர் ஆளின் குணத்தைப் பற்றிய தவறு, அந்த தவறு ஒப்பந்தம் செய்வதற்குக் காரணமாக இருந்தாலும்கூட, அந்தக் குணம் நேரடியாகவும் முதன்மையாகவும் விரும்பப்பட்டிருந்தாலன்றி, திருமணத்தைச் செல்லாததாக்குவதில்லை.
தி.ச. 1098. சம்மதம் பெறுவதற்காக இழைக்கப்பட்ட மோசடியால் வஞ்சிக்கப்பட்டு, திருமணம் செய்யும் ஓர் ஆள் செல்லத்தகாத விதத்தில் திருமண ஒப்பந்தம் செய்கிறார், இம்மோசடியானது தன்னியல்பிலேயே திருமண வாழ்வு உறவுச் சமூகத்தைக் கடுமையாகச் சீர்குலைக்கக் கூடிய மற்றத் தரப்பினரின் ஏதாவதொரு குணத்தைப் பற்றியதாகும்.
தி.ச. 1099. திருமணத்தின் ஒருமைத் தன்மை, முறிவுபடாத் தன்மை அல்லது திருமண அருளடையாள மாண்பு பற்றிய தவறு, மனத்தைத் தீர்மானிக்காதவரை, திருமணச் சம்மதத்தைக் கெடுப்பதில்லை.
தி.ச. 1100. திருமணத்தின் செல்லாநிலை பற்றிய அறிவு அல்லது கருத்து திருமணச் சம்மதத்தைக் கட்டாயமாக விலக்குவதில்லை.
தி.ச. 1101. 1) மனத்தின் அக ஒப்புதல், திருமணக் கொண்டாட்டத்தின்போது பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அல்லது அடையாளங்களுடன் ஒத்துள்ளது என ஊகிக்கப்படுகிறது.
2) ஆனால், ஒருதரப்பினரோ அல்லது இரு தரப்பினரோ, மனத்தின் நேர்மறையான செயலால், திருமணத்தையோ அல்லது திருமணத்தின் இன்றியமையாத ஏதாவதொரு கூறினையோ அல்லது இன்றியமையாத ஏதாவதொரு பண்பையோ விலக்கிவிட்டால், அத்தரப்பினர் செல்லத்தகாதவிதத்தில் ஒப்பந்தம் செய்கிறார்.
தி.ச. 1102. 1) எதிர்கால நிபந்தனைக்கு உட்பட்டுச் செல்லத்தக்க விதத்தில் திருமண ஒப்பந்தம் செய்ய முடியாது.
2) இறந்தகால அல்லது நிகழ்கால நிபந்தனைக்கு உட்பட்டுச் செய்யப்பெற்ற திருமணம், நிபந்தனையின் அடிப்படை உள்ளது அல்லது இல்லை என்பதைப் பொறுத்து செல்லத்தக்கது அல்லது செல்லத்தக்கதல்ல.
3) ஆயினும் 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனையை, தலத்திருச்சபை ஆளுநரின் எழுத்துவடிவ அனுமதியின்றி, சட்டமுறையாக இணைக்க முடியாது.
தி.ச. 1103. வெளியிலிருந்து திணிக்கப்பட்ட வலுவந்தத்தாலோ பயத்தாலோ, அது வேண்டுமென்றே திணிக்கப்படவில்லை எனினும், அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் பொருட்டு, திருமணத்தைத் தெரிவு செய்ய ஒருவர் கட்டாயப்படுத்தப்பட்டுச் செய்த திருமணம்; செல்லத்தக்கதல்ல.
தி.ச. 1104. 1) செல்லத்தக்கவிதத்தில் திருமண ஒப்பந்தம் செய்ய வேண்டுமென்றால், ஒப்பந்தம் செய்யும் தரப்பினர் இருவரும் சேர்ந்து தாமாகவோ பதில் ஆள் மூலமாகவோ உடனிருப்பது அவசியமாகும்.
2) மணமக்கள் திருமணச் சம்மதத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தவேண்டும், இருப்பினும், அவர்களால் பேச இயலாது எனில், நிகரான அடையாளங்களால் அதை வெளிப்படுத்த வேண்டும்.
தி.ச. 1105. 1) பதில் ஆள் மூலமாகச் செல்லத்தக்கவிதத்தில் திருமணம் செய்யத் தேவையானவை:
1) குறிப்பிட்ட ஓர் ஆளுடன் ஒப்பந்தம் செய்யச் சிறப்பு ஆணை இருத்தல் வேண்டும்,
2) பதில்-ஆள் ஆணைக் கட்டளை கொடுப்பவரால் நியமிக்கப்பட வேண்டும், அவர் தாமே இப்பணியை ஆற்றவேண்டும்,
2) ஆணை செல்லத்தக்கதாக இருக்கவேண்டுமென்றால், அது ஆணை வழங்கியவராலும், அத்துடன் ஆணை வழங்கப்பட்ட இடத்தின் பங்குக்குரு அல்லது தலத்திருச்சபை ஆளுநர், அல்லது அவர்களில் யாராவது ஒருவரால் ஆணை பெற்ற ஒரு குரு அல்லது குறைந்த அளவு இரண்டு சாட்சிகளாலும் கையொப்பமிடப்பட வேண்டும், அல்லது நாட்டுச் சட்ட விதிமுறைக்கேற்ப, நம்பத்தக்க ஆவணம் மூலம் அதைச் செய்யவேண்டும்.
3) ஆணை வழங்குபவர் எழுத முடியாதவராக இருந்தால், ஆணையிலேயே அதைக் குறிப்பிடவேண்டும், மேலும், வேறொரு சாட்சி சேர்க்கப்பட்டு, அவரும் ஆவணத்தில் கையொப்பமிடவேண்டும் .இல்லையெனில் ஆணை செல்லத்தக்கதல்ல.
4) ஆணை வழங்கியவர், பதில்- ஆள் அவர் பெயரால் ஒப்பந்தம் செய்யும் முன், ஆணையைத் திரும்பப்பெற்றாலோ மனநிலை பாதிக்கப்பட்டவரானாலோ, பதில்- ஆள் அல்லது ஒப்பந்தம் செய்யும் மறுதரப்பினர் இதை அறியாதிருந்தாலும் கூட, திருமணம் செல்லத்தக்கதல்ல.
தி.ச. 1106. திருமண ஒப்பந்தம் ஒரு மெழிபெயர்ப்பாளர் மூலல் செய்யமுடியும், ஆயினும் பங்குக்குரு, மொழிபெயர்ப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி உறுதியாக இருந்தாலன்றி, அத்தகைய திருமணத்தை நடத்தக்கூடாது.
தி.ச. 1107. தடை அல்லது திருமண முறை குறைபாடு காரணமாக ஒரு திருமணம் செல்லத்தகாத விதத்தில் செய்யப்பட்டிருந்தாலும், கொடுக்கப்பட்ட சம்மதம், அது திரும்பப் பெற்ப்பபட்டது என்று எண்பிக்கப்படும்வரை, தொடர்வதாக ஊகிக்கப்படுகிறது.
இயல் 5.
திருமணக் கொண்டாட்டமுறை.
தி.ச. 1108. தலத்திருச்சபை ஆளுநர் அல்லது பங்குக்குரு அல்லது அவர்களில் யாராவது ஒருவரிடமிருந்து கட்டளைப் பேராண்மை பெற்ற குரு அல்லது திருத்தொண்டர் முன்னிலையிலும் மற்றும் இரண்டு சாட்சிகள் முன்னிலையிலும், கீழ்கண்ட திருச்சபைச் சட்டங்களில் உள்ள விதிகளுக்கேற்பச் செய்யப்படும் திருமண ஒப்பந்தங்கள் மட்டுமே செல்லத்தக்கதாகும். இக்காரியத்தில் தி.சச.144, 1112, 1, 1116 மற்றும் தி.ச. 1127, 1-2 ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்குகளைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
2) உடனிருந்து, ஒப்பந்தம் செய்துகொள்ளும் இரு தரப்பினரின் சம்மத வெளிப்பாட்டைத் திருச்சபையின் பெயரால் கேட்டு, அதைப் பெறுபவர் மட்டுமே திருமணத்தை நடத்திவைப்பவராகக் கருதப்படுவார்.
தி.ச. 1109. பணி அடிப்படையில், தலத்திருச்சபை ஆளுநரும் பங்குக்குருவும், அவர்கள் தீர்ப்பு அல்லது ஆணை மூலம் திருச்சபையின் உறவுஒன்றிப்பிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலோ, இறைப்பணியிலிருந்து விலக்கப்பட்டிருந்தாலோ, பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது அவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தாலோ அன்றி, தங்களது எல்லைக்குள், தங்களுடைய ஆளுகைக்கு உட்பட்டவர்களுடைய திருமணத்திற்கு மட்டுமல்ல, உட்படாதவர்களுடைய திருமணத்தையும் செல்லத்தக்க விதத்தில் நடத்திவைக்கின்றனர். ஓப்பந்தம் செய்பவர்களில் ஒருவர் இலத்தீன் வழிபாட்டுமுறையைச் சார்ந்தவராக இருத்தல் அவசியம்.
தி.ச. 1110. ஆள்சார்ந்த ஒரு திருச்சபை ஆளுநரும் ஒரு பங்குக்குருவும், தங்கள் பணியின் அடிப்படையில், தங்கள் ஆளுகை வரம்பிற்குள், குறைந்த அளவு ஒரு தரப்பினர் தங்களது ஆளுகைக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே, அவர்களின் திருமணத்தைச் செல்லத்தக்க விதத்தில் நடத்தி வைக்கின்றனர்.
தி.ச. 1111. 1) தலத்திருச்சபை ஆளுநரும் பங்குக்குருவும், செல்லத்தக்க விதத்தில் பணியில் இருக்கும் வரை, குருக்களுக்கும் திருத்தொண்டர்களுக்கும், தங்களுடைய எல்லை வரம்பிற்குள் திருமணங்களை நடத்திவைக்கும் செயலுரிமையை, பொதுவான ஒன்றைக்கூட, கட்டளைப் பேராண்மையாக வழங்க முடியும்.
2) திருமணங்களை நடத்திவைக்கும் செயலுரிமைக் கட்டளைப் பேராண்மை செல்லத்தக்கதாக இருக்கவேண்டுமென்றால், குறிப்பிட்ட ஆள்களுக்குத் தெளிவாக வழங்கவேண்டும், தனிப்பட்டக் கட்டளைப் பேராண்மையாக இருந்தால், குறிப்பிட்டத் திருமணத்திற்கு வழங்கவேண்டும், ஆயினும், பொதுவான கட்டளைப் பேராண்மையாக இருந்தால், எழுத்து வடிவில் வழங்கவேண்டும்.
தி.ச. 1112. 1) குருக்களும் திருத்தொண்டர்களும் இல்லாத இடங்களில், மறைமாவட்ட ஆயர், ஆயர் பேரவையின் முந்திய சாதகமான கருத்துடன் மற்றும் திருஆட்சிப்பீடத்தின் அனுமதி பெற்று, திருமணங்களை நடத்திவைக்கப் பொதுநிலையினருக்குக் கட்டளைப் பேராண்மை வழங்கலாம்.
2) திருமணம் செய்ய இருப்பவர்களுக்கு அறிவுரை வழங்கக்கூடிய, திருமணத் திருவழிபாட்டை முறையாக நடத்துவதற்குத் தகுதியுடைய, பொருத்தமான ஒரு பொதுநிலையினரைத் தேர்ந்தெடுக்கவேண்டும்
தி.ச. 1113. தனிப்பட்டக் கட்டளைப் பேராண்மை வழங்கப்படுமுன், திருமணம் செய்வதற்கான தன்னுரிமை நிலையை நிலைநாட்டுவதற்காகச் சட்டம் விதிக்கும் எல்லாக் காரியங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவேண்டும்.
தி.ச. 1114. திருமணத்தை நடத்திவைப்பவர், ஒப்பந்தம் செய்யும் இரு தரப்பினருடைய திருமணம் செய்யும் தன்னுரிமைநிலை சட்ட விதிமுறைக்கேற்ப நிலைநாட்டப்பட்டுள்ளது என்பது அவருக்குத் தெளிவாக இருந்து, மேலும் பொதுவான கட்டளைப் பேராண்மையால் நடத்தி வைப்பவர், இயன்றவரை, பங்குக்குருவின் அனுமதிபெற்றிருந்தாலன்றி, சட்டத்திற்கு முரணாகச் செயல்படுகிறார்
தி.ச. 1115. திருமண ஒப்பந்தம் செய்யும் இருதரப்பினரில் யாராவது ஒருவர் எந்தப் பங்கில் நிரந்தர உறைவிடம் அல்லது தற்காலிக உறைவிடம் அல்லது ஒருமாத கால உறைவிடம் கொண்டுள்ளாரோ, அங்குத் திருமணங்களைக் கொண்டாடவேண்டும், நாடோடிகளின் திருமணங்களை அவர்கள் எந்தப் பங்கில் தற்போது தங்கி இருக்கிறர்ர்களோ, அங்கு கொண்டாடவேண்டும், சொந்தத் திருச்சபை ஆளுநர் அல்லது பங்குக்குருவின் அனுமதியுடன் திருமணத்தை வேறோரிடத்தில் கொண்டாடலாம்.
தி.ச. 1116. 1) சட்டவிதிமுறைக்கேற்ப, திருமணத்தை நடத்திவைக்கும் தகுதிவாய்ந்த ஒருவர், மிக்க சிரமமின்றி, உடனிருக்கமாட்டார் அல்லது அவரை அணுக முடியாது என்றிருந்தால், உண்மையான ஒரு திருமணத்தைச் செய்ய விரும்புவோர், அதை இரண்டு சாட்சிகள் முன்னிலையில் மட்டுமே செல்லத்தக்க விதத்திலும் சட்டமுறைப்படியும் செய்ய முடியும்:
1) மரண ஆபத்தில்,
2) மரண ஆபத்திற்குப் புறம்பே, இத்தகை சூழ்நிலைக் ஒருமாதத்திறக நீடிக்கும் என விவேகத்துடன் முன்னறியும்போது,
2) இவ்விரு சூழ்நிலைகளிலும், எளிதில் கிடைக்கக்கூடிய குரு அல்லது திருத்தொண்டர் உடனிருக்க முடியும் என்றால், அவர் திருமணக் கொண்டாட்டத்தின் போது, மற்ற சாட்சிகளுடன் உடனிருக்க அழைக்கப்படவேண்டும், இக்காரியத்தில் சாட்சிகளுக்கு முன்னிலையில் மட்டுமே கொண்டாடப்படும் திருமணம் செல்லத்தக்கதாகும் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1117. திருமண ஒப்பந்தம் செய்யும் இருதரப்பினரில் குறைந்த அளவு யாராவது ஒருவர் கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றவராகவோ அல்லது அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டவராகவோ இருந்து, அதிலிருந்து வெளிப்படையான செயலால் விலகாமலிருந்தால், மேலே கூறப்பட்டுள்ள முறையைக் கடைப்பிடிக்கவேண்டும், இக்காரியத்தில் தி.ச. 1127, 2 ன் விதியமைப்புகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1118. 1) கத்தோலிக்கரிடையே அல்லது ஒரு கத்தோலிக்கத் தரப்பினருக்கும் திருமுழுக்குப் பெற்ற கத்தோலிக்கரல்லாத ஒரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் திருமணத்தைப் பங்கு ஆலயத்தில் கொண்டாடவேண்டும், தலத்திருச்சபை ஆளுநர் அல்லது பங்குக்குருவின் அனுமதியுடன் அதை வேறோர் ஆலயத்திலோ செபக்கூடத்திலோ கொண்டாடலாம்.
2) தலத்திருச்சபை ஆளுநர் வேறொரு தகுந்த இடத்pல் திருமணத்தைக் கொண்டாட அனுமதிக்கலாம்.
3) ஒரு கத்தோலிக்கத் தரப்பினருக்கும் திருமுழுக்குப் பெறாத ஒரு தரப்பினருக்கும் இடையிலான திருமணத்தை, ஓர் ஆலயத்திலோ வேறொரு தகுந்த இடத்திலோ கொண்டாடலாம்.
தி.ச. 1119. ஓர் அவசரத் தேவைக்குப் புறம்பே, திருமணக் கொண்டாட்டத்தில், திருச்சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள அல்லது சட்டமுறையான வழக்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள சடங்குமுறைகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 1120. ஆயர் பேரவை தனது செ.ந்தத் திருமணச் சடங்குமுறையை உருவாக்கலாம். அத்தகைய சடங்குமுறை, அந்த இடத்தினுடையவும் மக்களுடையவும் வழக்கங்களு;ககு இயைந்ததாகவும் கிறிஸ்தவ மனநிலைக்கு ஏற்றதாகவும் இருக்கவேண்டும். அதை திருஆட்சிப்பீடம் மறுஆய்வு செய்யவேண்டும், இக்காரியத்தில், திருமணத்தை நடத்திவைக்கும் ஒருவர் உடனிருந்து, ஒப்பந்தம் செய்யும் தரப்பினரின் சம்மத வெளிப்பாட்டைக் கேட்டுப் பெறவேண்டும் என்ற சட்டத்தைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1121. 1) ஒரு திருமணக் கொண்டாட்டத்திற்குப்பின், அது கொண்டாடப்பட்ட இடத்தின் பங்குக்குரு அல்லது அவரது இடத்தை வகிப்பவர், அவர்கள் இருவரில் எவருமே திருமணத்தை நடத்தி வைக்கவில்லை என்றாலும் கூட, கூடியவிரைவில், ஆயர்பேரவை அல்லது மறைமாவட்ட ஆயராவல் விதிக்கப்பட்டுள்ள முறைக்கு ஏற்ப, கீழ்க்கண்டவைகளைத் திருமணப் பதிவேட்டிலி குறிக்கவேண்டும், மணமக்கள், திருமணத்தை நடத்திவைத்தவர் மற்றும் சாட்சிகளின பெயர்கள், திருமணக் கொண்டாட்டத்தின இடம் மற்றும் நாள்.
2) தி.ச. 1116 ன் விதிமுறைக்கேற்ப ஒரு திருமண ஒப்பந்தம் செய்யப்படும் போதெல்லாம், ஒரு குருவோ திருத்தொண்டரோ கொண்டாட்டத்தின்போது உடன் இருந்திருந்தால் அவர் இல்லையெனில், சாட்சிகள் மணஒப்பந்தம் செய்யும் தரப்பினருடன் இணைந்து, செய்யப்பெற்ற திருமணத்தைப் பற்றி, கூடிய விரைவில், பங்குக்குருவுக்கோ தலத்திருச்சபை ஆளுநருக்கோ தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
3) திருச்சபை சட்டமுறையிலிருந்து விலக்கீடு பெற்றுச் செய்யப்பெற்ற திருமணத்தைப் பொறுத்தவரையில், விலக்கீடு கொடுத்த தலத்திருச்சபை ஆளுநர், விலக்கீடும் திருமணக் கொண்டாட்டமும் செயலகத்திலுள்ள திருமணப் பதிவேட்டிலும், எந்த கத்தோலிக்கத் தரப்பினரின் தன்னுரிமை நிலை பற்றிப் பங்குக்குரு ஆய்வுசெய்தாரோ, அத்தரப்பினரின் சொந்தப் பங்கிலுள்ள திருமணப் பதிவேட்டிலும் பதிவு செய்யப்படுவதைக் கவனித்துக் கொள்ளவேண்டும். கொண்டாடப்பட்ட திருமணம், இடம் மற்றும் கடைப்பிடிக்கப்பட்ட பகிரங்கமுறை ஆகியவற்றைக் கத்தோலிக்கத் தரப்பினர், கூடிய விரைவில், அதே திருச்சபை ஆளுநருக்கும் பங்குக்குருவுக்கும் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளார்.
தி.ச. 1122. 1) செய்யப்பெற்ற திருமணம் பற்றி மணமக்களின் திருமுழுக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள திருமுழுக்குப் பதிவேடுகளிலும் குறிக்கவேண்டும்.
2) மணமக்களில் ஒருவர், அவர் திருமுழுககுப் பெறாத ஒரு பங்கில் திருமணம் செய்திருந்தால், திருமணம் கொண்டாடப்பட்ட இடத்தின் பங்குக்குரு செய்யப்பெற்ற திருமணத்தைப் பற்றிய அறிவிப்பைத் திருமுழுக்கு வழங்கப்பட்ட இடத்தின் பங்குக்குருவுக்கு, கூடிய விரைவில், அனுப்பவேண்டும்.
தி.ச. 1123. எப்போதெல்லாம் புற அரங்கில் ஒரு திருமணம் செல்லத்தக்கதாக்கப்படுகிறதோ அல்லது செல்லாதது என அறிவிக்கப்படுகிறதோ அல்லது இறப்பைத் தவிர வேறுவிதத்தில் முறையாக அதன் கட்டு அவிழ்க்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் திருமணத்தைக் கொண்டாடிய இடத்தின் பங்குக் குருவுக்கு அதைத் தெரிவிக்கவேண்டும். இவ்வாறு அக்குறிப்பு திருமணம் மற்றும் திருமுழுக்குப் பதிவேட்டில் முறையாகக் குறிக்கப்படவேண்டும்.
இயல் 6
மதக்கலப்புத் திருமணம்.
தி.ச. 1124. கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்ற, அல்லது திருமுழுக்குப் பெற்ற பிறகு ஏற்றுக்கொள்ளப் பட்டு அதிலிருந்து வெளிப்படையான செயலால் விலகாதிருக்கும் ஒருவருக்கும், கத்தோலிக்கத் திருச்சபையோடு முழு உறவு ஒன்றிப்பில் இல்லாத திருச்சபை அல்லது திருச்சபை சமூகத்தின் உறுப்பினராக உள்ள ஒருவருக்கும் இடையே, தகுதிவாய்ந்த அதிகாரியின் தெளிவான அனுமதியின்றித் திருமணம் தடைசெய்யப்பட்டுள்ளது.
தி.ச. 1125. இத்தகைய அனுமதியைத் தலத்திருச்சபை ஆளுநர், நியாயமான, அறிவுக்கொத்த காரணம் இருந்தால் கொடுக்கலாம்: கீழ்க்கண்ட நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டாலன்றி, அவர் அதைக் கொடுக்கக் கூடாது.
1) கத்தோலிக்கத் தரப்பினர், விசுவாசத்திலிருந்து வழுவக்கூடிய ஆபத்துக்களை அகற்றத் தாம் தயாராக இருப்பதாக அறிக்கையிடவேண்டும், எல்லாக் குழந்தைகளுக்கும் கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்கு அளித்து, அதில் அவர்களை வளர்க்கத் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்ய அவர் உண்மையான வாக்குறுதி அளிக்கவேண்டும்.
2) கத்தோலிக்கத் தரப்பினர் அளிக்கக்கூடிய இந்த வாக்குறுதிகளை உரிய காலத்தில் மற்றத் தரப்பினருக்கு அறிவிக்கவேண்டும், இவ்வாறு கத்தோலிக்கத் தரப்பினரின் வாக்குறுதியையும் கடமையையும் பற்றி மற்றத் தரப்பினர் உண்மையிலேயே தெரிந்துள்ளார் என்பது தெளிவாகும்,
3) திருமணத்தின் இன்றியமையாத நோக்கங்களையும் பண்புகளையும் பற்றி இரு தரப்பினருக்கும் பயிற்றுவிக்கவேண்டும், இவற்றை இருதரப்பினரில் எவராலும் ஒதுக்கிவிட முடியாது.
தி.ச. 1126. எப்போதும் தேவைப்படுகிற இந்த அறிக்கைகளையும் வாக்குறுதிகளையும் எவ்விதத்தில் கொடுக்கவேண்டும் என்பது பற்றி ஆயர் பேரவை நிர்ணயிக்கவேண்டும். மேலும், இவற்றைப் புற அரங்கில் எவ்வாறு நிலைநாட்டவேண்டும் என்றும், இவற்றைக் கத்தோலிக்கரல்லாத தரப்பினருக்கு எவ்வாறு தெரியப்படுத்தவேண்டும் என்றும் ஆயர் பேரவை வரையறுக்கவேண்டும்.
தி.ச. 1127. 1) மதக்கலப்புத் திருமணத்தில் பயன்படுத்தவேண்டிய முறையைப் பொறுத்தவரையில், தி.ச 1108, ன் விதியமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும். ஆயினும், ஒரு கத்தோலிக்கத் தரப்பினர், கீழைத் திருச்சபை வழிபாட்டுமுறையைச் சார்ந்த கத்தோலிக்கர் அல்லாத தரப்பினருடன் திருமண ஒப்பந்தம் செய்யும்போது, திருச்சபைச் சட்டமுறைக் கொண்டாட்டம் சட்டமுறைக்காக மட்டுமே தேவைப்படுகிறது. ஆயினும், திருமணத்தின் செல்லத்தக்கநிலைக்கு ஒரு திருப்பணியாளரின் உடனிருப்பு தேவைப்படுகிறது. இக்காரியத்தில் சட்டப்படி கடைப்பிடிக்கவேண்டியவற்றைக் கடைப்பிடிக்கவேண்டும்.
2) திருச்சபைச் சட்டமுறையைக் கடைப்பிடிப்பதில் கடினமான இடையூறுகள் குறுக்கிட்டால், கத்தோலிக்கத் தரப்பினரின் தலத்திருச்சபை ஆளுநர், திருமணம் கொண்டாடப்படும் இ.டத்தின் தலத்திருச்சபை ஆளுநரைக் கலந்தாலோசித்து, குறிப்பிட்டக் காரியங்களில் அதிலிருந்து விலக்கீடு அளிக்கும் உரிமை கொண்டுள்ளார். இக்காரியத்தில் திருமணத்தின் செல்லத்தக்கநிலைக்கு ஏதாவதொரு பகிரங்கமுறைக் கொண்டாட்டம் தேவைப்படுகிறது என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய விலக்கீட்டை ஒரே விதத்தில் அளிப்பதற்கான விதிமுறைகளை நிர்ணயிப்பது ஆயர் பேரவைக்கு உரியது.
3) 1 ன் விதிமுறைக்கேற்ப, திருச்சபைச் சட்டமுறையான திருமணக் கொண்டாட்டத்திற்கு முன்போ பின்போ, சம்மதத்தைக் கொடுக்கும் அல்லது புதுப்பிக்கும் எண்ணத்துடன் அதே திருமணத்தை நடத்தும் கத்தோலிக்க மற்றும் கத்தோலிக்கரல்லாத பணியாளர் ஒன்றிணைந்து, ஒவ்வொருவரும் தத்தம் சடங்கு முறையை நிறைவேற்ற, இரு தரப்பினரின் சம்மதத்தைக் கேட்கும் சமயக் கொண்டாட்டம் இருக்கக்கூடாது.
தி.ச. 1128. தலத்திருச்சபை ஆளுநர்களும் ஆன்ம மேய்ப்பர்களும், கத்தோலிக்க மணமக்களும் மதக்கலப்புத் திருமணத்தில் பிறந்த குழந்தைகளும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில், அருள்வாழ்வு சார்ந்த உதவிகள் அவர்களுக்குக் குறைவுபடாமல் இருக்கும் வண்ணம் கவனித்துக்கொள்ளவேண்டும், மேலும், மணவாழ்வு மற்றும் குடும்பு வாழ்வின் ஒற்றுமையைப் பேணிவளர்க்க மணமக்களுக்கு உதவி புரியவேண்டும்.
தி.ச. 1129. தி.ச. 1127 மற்றும் 1128 ன் விதியமைப்புகள், தி.ச. 1086, 1 ல் குறிப்பிடப்பட்டுள்ள மதவேறுபாட்டுத் தடையைக் கொண்டுள்ள திருமணங்களுக்கும் பொருந்தும்.
இயல் 7
இரகசியமாகக் கொண்டாடப்படும் திருமணம்.
தி.ச. 1130. கனமான அவசரக் காரணத்திற்காக, தலத்திருச்சபை ஆளுநர் ஒரு திருமணம் இரகசியமாகக் கொண்டாடப்படுவதற்கு அனுமதிக்கலாம்.
தி.ச. 1131. ஒரு திருமணத்தை இரகசியமாகக் கொண்டாடுவதற்கு அளிக்கப்படும் அனுமதி உள்ளடக்கியவை:
1) திருமணத்திற்கு முன் செய்ய வேண்டிய ஆய்வை இரகசியமாகச் செய்யவேண்டும்.
2) திருமணக் கொண்டாட்டம் பற்றிய இரகசியத்தைத் தலத்திருச்சபை ஆளுநர், திருமணத்தை நடத்திவைப்பவர், சாட்சிகள் மற்றும் மணமக்கள் காப்பாற்றவேண்டும்.
தி.ச. 1132. இரகசியத்தைக் காப்பாற்றுவதால் மாபெரும் இடறல் அல்லது திருமணத்தின் புனிதத்தன்மைக்குப் பெரும் தீங்கு ஏற்படும் என்ற அச்சுறுத்தல் இருந்தால், தி.ச. 1131, 2 ல் குறிப்பிடப்பட்டுள்ள இரகசியக் காப்புக் கடமை, தலத்திருச்சபை ஆளுநருக்கு முடிவடைகிறது, இது திருமணக் கொண்டாட்டத்திற்குமுன் இருதரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும்.
தி.ச. 1133. இரகசியமாகக் கொண்டாடப்பட்ட ஒரு திருமணத்தைச் சிறப்புப் பதிவேட்டில் மட்டுமே பதிவு செய்யவேண்டும், இப்பதிவேட்டைச் செயலகத்தின் இரகசிய ஆவணக்காப்பகத்தில் வைக்கவேண்டும்.
இயல் 8
திருமணத்தின் விளைவுகள்.
தி.ச. 1134. செல்லத்தக்க ஒரு திருமணத்திலிருந்து மணமக்களிடையே ஒரு பிணைப்பு எழுகிறது, இப்பிணைப்பானது தன்னியல்பிலேயே நிரந்தரமானது, தனி உரிமை கொண்டது. மேலும், கிறிஸ்தவத் திருமணத்தில், மணமக்கள் தங்கள் நிலைக்குரிய கடமைகளுக்காகவும் மாண்புக்காகவும் ஒரு தனிப்பட்ட அருளடையாளத்;தால் வலுப்பெற்று, ஒருவிதத்தில், திருநிலைப்படுத்தப்படுகின்றனர்.
தி.ச. 1135. மணமக்கள் ஒவ்வொருவரும் திருமண வாழ்வு உறவுச் சமூகத்தைச் சார்ந்த காரியங்களைப் பொறுத்தவரையில் சரிநிகர் கடமையும் உரிமையையும் கொண்டுள்ளனர்.
தி.ச. 1136. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல், சமூக, கலாச்சார மற்றும் அறநெறி, சமயம் சார்ந்த வளர்ப்பில் தங்களால் இயன்ற அனைத்தையும் செய்ய வேண்டிய சீர்மிகு கடமையையும் முதன்மையான உரிமையையும் கொண்டுள்ளனர்.
தி.ச. 1137. செல்லத்தக்க ஒரு திருமணத்தில் அல்லது செல்லத்தக்க திருமணம் என ஊகிக்கப்படும் ஒரு திருமணத்தில் கருவுற்ற அல்லது பிறந்த குழந்தைகள் சட்டமுறையான குழந்தைகள் ஆவர்.
தி.ச. 1138. 1) தெளிவான நேர்மாறான வாதங்களால் எண்பிக்கப்பட்டாலன்றி, சட்டமுறையான திருமணத்தால் குறித்துக்காட்டப்படுபவரே தந்தை ஆவார்.
2) திருமணக்கொண்டாட்ட நாளிலிருந்து குறைந்த அளவு 180 நாள்களுக்குப் பின்னும், திருமண வாழ்வு முறிவடைந்த நாளிலிருந்து 300 நாள்களுக்குள்ளும் பிறந்த குழந்தைகள் சட்டமுறையான குழந்தைகள் என ஊகிக்கப்படுவர்.
தி.ச. 1139. பெற்றோர்களின் அடுத்துவரும் திருமணங்கள் வழியாக, அவை செல்லத்தக்கவையாயினும் அல்லது செல்லத்தக்க திருமணம் என ஊகிக்கப்பட்டவையாயினும், அல்லது திருஆட்சிப்பீடத்தின் மேல்நிலைச் சலுகை வழியாகச் சட்டமுறையற்ற குழந்தைகள் சட்டமுறையானவராக்கப்படுவர்.
தி.ச. 1140. திருச்சபைச் சட்ட விளைவுகளைப் பொறுத்தவரையில், சட்ட முறையாக்கப்பட்ட குழந்தைகள், சட்டம் வேறுவிதமாகத் தெளிவகக் குறிப்பிட்டாலன்றி, சட்டமுறையான குழந்தைகளுக்கு எல்லாவற்றிலும் இணையாக உள்ளனர்.
இயல் .9.
மணமக்களின் பிரிவு
உட்பிரிவு 1
பிணைப்பு அவிழ்ப்பு.
தி.ச. 1141. உறுதிப்படுத்தப்பட்டதும் தாம்பத்திய உறவால் முழுமை பெற்றதுமான ஒரு திருமணம் சாவைத் தவிர, எந்தவொரு மனித சக்தியாலும் அல்லது எந்தவொரு காரணத்தாலும் அவிழ்க்கப்பட முடியாதது.
தி.ச. 1142. திருமுழுக்குப் பெற்றவர் இடையே அல்லது திருமுழுக்குப் பெற்ற ஒரு தரப்பினருக்கும் திருமுழுக்குப் பெறாத ஒரு தரப்பினருக்கும் இடையே நடந்த, தாம்பத்திய உறவால் முழுமை பெறாத ஒரு திருமணம், இரு தரப்பினரோ ஒரு தரப்பினரோ விண்ணப்பித்தால், மற்றத் தரப்பினர் விரும்பவில்லை என்றாலும் கூட, நியாயமான ஒரு காரணத்திற்காக, உரோமைத் தலைமைக்குருவால் அவிழ்க்கப்படலாம்.
தி.ச. 1143. 1) திருமுழுக்குப் பெறாத இருவர் செய்து கொண்ட திருமணம், திருமுழுக்குப் பெற்ற தரப்பினரின் விசுவாச நலனுக்காக, திருமுழுக்குப் பெறாத தரப்பினர் விலகிச்சென்றால் மட்டுமே, திருமுழுக்குப் பெற்ற தரப்பினர் புதிய திருமண ஒப்பந்தம் செய்வதாலேயே பவுல் சலுகையால் அவிழ்க்கப்படுகிறது.
2) திருமுழுக்குப் பெற்றவர், திருமுழுக்குப் பெற்றபின், மற்றத் தரப்பினர் விலகிச் செல்வதற்கு நியாயமான காரணம் கொடுத்திருந்தாலன்றி, திருமுழுக்குப் பெறாத தரப்பினர் திருமுழுக்குப் பெற்றத் தரப்பினருடன் கூடிவாழ, அல்லது படைத்தவரைத் தூற்றாமல் அமைதியாகக் கூடிவாழ விரும்பாவிட்டால், அவர் விலகிச் சென்று விட்டதாகக் கருதப்படுவர்.
தி.ச. 1144. 1) திருமுழுக்குப் பெற்றத் தரப்பினர் புதிய திருமண ஒப்பந்தத்தைச் செல்லத்தக்க விதத்தில் செய்யவேண்டுமென்றால், திருமுழுக்குப் பெறாத தரப்பினரிடம் எப்பொழுதும் இடைவினா கேட்கவேண்டும்.:
1) அவரும் திருமுழுக்குப் பெற விரும்புகிறாரா?
2) அவர் படைத்தவரைத் தூற்றாமல் திருமுழுக்குப் பெற்றத் தரப்பினருடன் ஆறைந்த அளவு அமைதியாகக் கூடிவாழ விரும்புகின்றாரா?
2) இந்த இடைவினாவைத் திருமுழுக்குப் பெற்றபின் கேட்கவேண்டும், ஆயினும், கனமான காரணத்திற்காக, தலத்திருச்சபை ஆளுநர் திருமுழுக்கிற்கு முன்பே இடைவினாவைக் கேட்க அனுமதிக்கலாம், இடைவினாவைக் கேட்கமுடியாது அல்லது அது பயனற்றது என்று குறைந்த அளவு சுருக்கமான, வழக்கு விசாரணைக்குப் புறம்பான நடவடிக்கை வாயிலாகத் தெளிவாக இருந்தால், திருமுழுக்குpற்கு முன்போ பின்போ, இந்த இடைவினாவிலிருந்துகூட விலக்கீடு அளிக்கலாம்.
தி.ச. 1145. 1) இடைவினாவை, வழக்கமாக மதம் மாறிய தரப்பினரின் தலத்திருச்சபை ஆளுநரின் அதிகாரத்தால் கேட்கவேண்டும். திமுழுக்குப் பெறாத தரப்பினர் பதிலளிக்கக் கால அவகாசம் கேட்டால், தலத்திருச்சபை ஆளுநர் அதை அளிக்கவேண்டும், இருப்பினும், இக்கால அவகாசம் எவ்விதப் பதிலுமின்றி முடிவடைந்திருந்தால், அவரின் மௌனம் எதிர்மறைப் பத்லாகக் கருதப்படும் என எச்சரிக்கவேண்டும்.
2) மதம் மாறிய தரப்பினரால் தனிப்பட்ட முறையில் கேட்கப்பட்ட இடைவினாவும் செல்லத்தக்கதாகும், மேலே விதிக்கப்பட்ட முறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றால், அது உண்மையில் சட்டமுறையானதும் ஆகும்.
3) இவ்விரு காரியங்களிலும் இடைவினா கேட்கப்பட்டது என்பதும் அதன் விளைவும் புற அரங்கில் சட்டமுறையாகத் தெளிவாக இருக்கவேண்டும்.
தி.ச. 1146. திருமுழுக்குப் பெற்றத் தரப்பினர் ஒரு கத்தோலிக்கத் தரப்பினருடன் புதிய திருமண ஒப்பந்தம் செய்ய உரிமை கொண்டுள்ளார்:
1) மற்றத் தரப்பினர் இடைவினாவுக்கு எதிர்மறையில் பதில் அளித்திருந்தால் அல்லது இடைவினா சட்டமுறைப்படி விடப்பட்டிருந்தால்,
2) திருமுழுக்குப் பெறாத தரப்பினர், ஏற்கெனவே இடைவினா கேட்கப்பட்டோ கேட்கப்படாமலோ, முதலில் படைத்தவரைத் தூற்றாமல் அமைதியாகக் கூடிவாழ்ந்து, அதன்பின் நியாயமான காரணமின்றி விலகிச்சென்றால், இக்காரியத்தில் சச, 1144 மற்றும் 1145 ன் விதியமைப்புகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
தி.ச. 1147. ஆயினும், தலத்திருச்சபை ஆளுநர், கனமான ஒரு காரணத்திற்காக, திருமுழுக்குப் பெற்றத் தரப்பினர் பவுல் சலுகையைப் பயனபடுத்தி கத்தோலிக்கரல்லாத தரப்பினருடன், அவர் திருமுழுக்குப் பெற்றவராயினும் பெறாதவராயினும், திருமண ஒப்பந்தம் செய்ய அனுமதிக்கலாம். இக்காரியத்தில் மதக்கலப்பபுத் திருமணங்களைப் பற்றிய திருச்சபைச்சட்ட விதிமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 1148. 1) திருமுழுக்குப் பெறாத பல மனைவியரை ஒரே நேரத்தில் கொண்டிருக்கும் திருமுழுக்குப் பெறாத ஓர் ஆண், கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றபின், முதல் மனைவியுடன் இருப்பது அவருக்குக் கடினமாக இருந்தால், மற்றவர்களை விலக்கிவிட்டு, அவர்களில் ஒருவரை மனைவியாக வைத்துக் கொள்ளலாம். திருமுழுக்குப் பெறாத பல கணவர்களை ஒரே நேரத்தில் கொண்டிருக்கும் திருமுழுக்குப் பெறாத ஒரு பெண்ணுக்கும் இது பெருந்தும்.
2) 1 ல் குறிப்பிடப்பட்ட காரியங்களில், திருமுழுக்குப் பெற்றபின் சட்ட முறையான முறையில் திருமண ஒப்பந்தம் செய்யவேண்டும், இக்காரியத்தில், தேவைப்பட்டால், மதக்கலப்புத் திருமணங்களைப்பற்றிய விதியமைப்புகளையும் மற்றச் சட்ட ஏற்பாடுகளையும் கடைப்பிடிக்கவேண்டும்.
3) இடம் மற்றும் ஆள்களின் அறநெறி, சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, முதல் மனைவி மற்றும் விலக்கப்பட்ட மற்ற மனைவியரின் தேவைகளுக்கு, நீதி, கிறிஸ்தவ அன்பு மற்றும் இயல்பான இரக்கம் தழுவிய நீதியின் விதிமுறைகளுக்கேற்பப் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதைத் தலத் திருச்சபை ஆளுநர் கவனித்துக் கொள்ளவேண்டும்.
தி.ச. 1149. திருமுழுக்குப் பெறாத ஒருவர், கத்தோலிக்கத் திருச்சபையில் திருமுழுக்குப் பெற்றபின், திருமுழுக்குப் பெறாத வாழ்க்கைத் துணைவருடன், சிறைப்பட்டநிலை அல்லது வேதகலாபனையின் காரணமாக, மீண்டும் கூடிவாழ முடியவில்லை என்றால், இடைப்பட்ட காலத்தில் மற்றத் தரப்பினர் திருமுழுக்குப் பெற்றிருந்தாலும்கூட, வேறொரு திருமண ஒப்பந்தம் செய்யமுடியும், இக்காரியத்தில் ச.1141 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
த.pச. 1150. ஐயப்பாட்டிற்குரிய ஒரு காரியத்தில், விசுவாசச் சலுகை, சட்டத்தின் தயவைப் பெற்றுள்ளது.
உட்பிரிவு 2
திருமணப்பிணைப்பு நீடிக்கையில் பிரிந்து வாழ்தல்
த.pச. 1151. வாழ்க்கைத் துணைவர்கள், சட்டமுறையான காரணம் அவர்களை விடுவித்தாலன்றி, மணவாழ்வைப் பாதுகாக்கக் கடமையும் உரிமையும் கொண்டுள்ளனர்.
த.pச. 1152. 1) கிறிஸ்தவ அன்பால் உந்தப்பட்டு, குடும்ப நலனில் அக்கறை கொண்டு, ஒரு வாழ்க்கைத் துணைவர், விபசார வாழ்க்கைத் துணைவருக்கு மன்னிப்பை மறுக்காமலும் மணவாழ்வை முறிக்காமலும் இருக்க மிகவும் பரிந்துரைக்கப்படுகின்றது, ஆயினும், அவர், வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ மற்றவரின் குற்றத்தை மன்னியாது இருந்திருந்தால், மணவாழ்வைத் துண்டித்துக் கொள்ள உரிமை கொண்டுள்ளார். ஆனால், அவர் விபசாரத்திறகு உடன்பட்டிருக்கக்கூடாது, அதற்குக் காரணமாக இருந்திருக்கக்கூடாது, அல்லது அவரே விபசாரம் செய்திருக்கக்கூடாது.
2) குற்றமற்ற வாழ்க்கைத் துணைவர், விபசாரத்தைப் பற்றி அறிந்தபின், மற்ற வாழ்க்கைத் துணைவருடன் விருப்பமுடன் திருமணம் சார்ந்த பாசத்தில் தொடர்ந்து வாழ்ந்திருந்தால், மறைமுகமான மன்னிப்பு உள்ளது. குற்றமற்ற வாழ்க்கைத் துணைவர் ஆறு மாதங்களுக்கு மணவாழ்வைத் தொடர்ந்து, நாட்டு அதிகாரியிடமோ திருச்சபை அதிகாரியிடமோ துணைநாடல் செய்யவில்லை என்றால் மறைமுகமான மன்னிப்பபு ஊகிக்கப்படுகிறது.
3) குற்றமற்ற வாழ்க்கைத் துணைவர் தாமாகவே மணவாழ்வைத் துண்டித்துக் கொண்டிருந்தால், ஆறுமாதங்களுக்குள் தமது பிரிவுக்கான வழக்கைத் தகுதிவாய்ந்த திருச்சபை அதிகாரியிடம் கொண்டு வர வேண்டும், இவ்வதிகாரி, எல்லாச் சூழ்நிலைகளையும் ஆய்வு செய்த பின், குற்றமற்ற வாழ்க்கைத் துணைவர் குற்றத்தை மன்னிக்கவும், பிரிவை நிரந்தரமாக நீடிக்காதிருக்கவும் தூண்ட முடியுமா என்பதைச் சீர்தூக்கிப் பார்க்கவேண்டும்.
த.pச. 1153. வாழ்க்கைத் துணைவரில் யாராவது ஒருவர் மற்றவரின் அல்லது குழந்தைகளின் ஆன்மாவுக்கு அல்லது உடலுக்குப் பேராபத்தை விளைவித்தாலோ, குடும்ப வாழ்வை மிகவும் கடினமாக்கினாலோ, அவர், மற்றத் தரப்பினர், தலத்திருச்சபை ஆளுநரின் ஓர் ஆணை மூலமாகவோ தாமதத்தின் காரணமாக ஆபத்து ஏற்படும் என்றால் தமது சொந்த அதிகாரத்தாலேயே பிரிந்து போவதற்குச் சட்டமுறையான காரணத்தைத் தருகிறார்.
2) எல்லாக் காரியங்களிலும், பிரிவுக்கான காரணம் முடிவடையும்போது, திருச்சபை அதிகாரி வேறுவிதமாக ஏற்பாடு செய்திருந்தால் அன்றி, மணவாழ்வை மீண்டும் தொடரவேண்டும்.
த.pச. 1154. வாழ்க்கைத் துணைவர்களின் பிரிவுக்குப்பின், குழந்தைகளின் உரிய வாழ்வாதாரத்திற்கும் கல்விக்கும் எப்போதும் தக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
த.pச. 1155. குற்றமற்ற வாழ்க்கைத் துணைவர் பாராட்டுதற்குரிய விதத்தில் மற்ற வாழ்க்கைத் துணைவரை மணவாழ்வுக்கு மீண்டும் அனுமதிக்கமுடியும், இத்தகைய சூழ்நிலையில், அவர் பிரிவுக்கான உரிமையைத் துறந்துவிடுகின்றார்.
இயல் 10;
திருமணத்தின் சட்டமுறைப்படுத்தல்
உட்பிரிவு 1
சாதாரண சட்டமுறைப்படுத்தல்
த.pச. 1156. ஒரு முறியல்தடையின் பொருட்டுச் செல்லாத ஒரு திருமணத்தைச் சட்டமுறைப்படுத்த, தடை முடிவுக்கு வரவேண்டும் அல்லது அதற்கு விலக்கீடு அளிக்கவேண்டும், மேலும் குறைந்த அளவு தடையைப் பற்றி அறிந்துள்ள தரப்பினர் சம்மதத்தைப் புதுப்பிக்கவேண்டும்
2) தொடக்கத்தில் இரு தரப்பினரும் சம்மதத்தைக் கொடுத்து, பின்பு அதை மீண்டும் திரும்பப் பெறவில்லை என்றாலும்கூட, சட்டமுறைப்படுத்தலின் செல்லத்தக்கநிலைக்கு, இச்சம்மதப் புதுப்பித்தல் திருச்சபைச் சட்டத்தால் தேவைப்படுகிறது.
த.pச. 1157. சம்மதப்புதுப்பித்தல், திருமணத்திற்கான மனத்தின் புதியதொரு செயலாகும், சம்மதத்தைப் புதுப்பிக்கும் தரப்பினர் தொடக்கத்திலிருந்தே இத்திருமணம் செல்லாது என்று அறிவார் அல்லது கருதுகிறார்.
த.pச. 1158. தடை பகிரங்கமாக இருந்தால், சம்மதத்தை இருதரப்பினரும் திருச்சபைச்சட்ட முறையில் புதுப்பிக்கவேண்டும், இக்காரியத்தில் தி.ச. 1127, 2 ன் விதியமைப்பைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
2) தடையை எண்பிக்க முடியாது எனில், தடையைப் பற்றி அறிந்திருக்கும் தரப்பினரால் தனிப்பட்ட முறையிலும் இரகசியமாகவும் சம்மதத்தைப் புதுப்பித்தல் போதுமானது, ஆனால், மற்றத் தரப்பினர் தாம் அளித்த சம்மதத்தில் தொடர்ந்து நிலைத்திருக்கவேண்டும், அல்லது இரு தரப்பினரும் தடை பற்றி அறிந்திருந்தால், இரு தரப்பினரும் சம்மதத்தைப் புதுப்பிக்கவேண்டும்.
த.pச. 1159. சம்மதக் குறைபாட்டினால் செல்லாத ஒரு திருமணம், சம்மதம் கொடுக்காமலிருந்த தரப்பினர் தற்போது சம்மதம் கொடுத்தால், சட்ட முறையாக்கப்படுகிறது, ஆனால் மற்றத் தரப்பினரால் கொடுக்கப்பட்ட சம்மதம் தொடர்ந்து நிலைத்திருக்கவேண்டும்.
2) சம்மதக் குறைபாட்டை எண்பிக்கமுடியாது எனில், சம்மதம் கொடுத்திராத தரப்பினர், தனிப்பட்ட முறையிலும் இரகசியமாகவும் சம்மதம் கொடுத்தால் போதுமானது.
3) சம்மதக் குறைபாட்டை எண்பிக்கமுடியும் என்றால், சம்மதத்தைத் திருச்சபைச் சட்டமுறையில் கொடுப்பது அவசியமாகும்.
த.pச. 1160. திருச்சபைச் சட்டமுறைக் குறைபாட்டினால் செல்லாத ஒரு திருமணத்தைச் சட்டமுறையாக்குவதற்கு, திருமண ஒப்பந்தத்தைத் திருச்சபைச்சட்ட முறையில் புதிதாகச் செய்யவேண்டும், இக்காரியத்தில் தி.ச. 1127, 2 ன் விதியமைப்பைக் கருத்தில்கொள்ளவேண்டும்.
உட்பிரிவு 2
மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தல்
த.pச. 1161. செல்லாத ஒரு திருமணத்தின் மூலத்தன்மை சட்ட முறைப்படுத்தல் என்பது, சம்மதம் புதுப்பித்தலின்றி அதைச் செல்லத்தக்கதாக்குவதாகும். இது தகுதிவாய்ந்த அதிகாரியால் வழங்கப்படுகிறது. ஏதாவது தடையிருந்தால் அதிலிருந்தும், திருச்சபைச் சட்டமுறையைக் கடைப்பிடியாதிருந்தால் அதிலிருந்தும் விலக்கீடு அளித்தலையும், திருச்சபைச் சட்டமுறையான கடந்தகால விளைவுகளைப் பின்னோக்கிப் பார்க்கும் தன்மையையும் உள்ளடக்கியது.
2) சலுகை வழங்கப்பட்ட கணத்திலிருந்து சட்டமுறைப்படுத்துதல் நிகழ்கிறது. ஆயினும், வேறுவிதமாகத் தெளிவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலன்றி, திருமணக் கொண்டாட்டக் கணத்திலிருந்து பின்னோக்கிப் பார்க்கும் தன்மை இருப்பதாகக் கருதப்படுகிறது.
3) இரு தரப்பினரும் மணவாழ்வில் தொடர்ந்து நிலைத்திருக்க விரும்புவது நிகழக் கூடியதாக இருந்தாலன்றி, மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தலை வழங்கக் கூடாது.
த.pச. 1162. இரு தரப்பினரிடமோ ஏதாவதொரு தரப்பினரிடமோ சம்மதம் இல்லை என்றால், சம்மதம் தொடக்கத்திலருந்து இல்லை என்றாலும் அல்லது தொடக்கத்தில கொடுக்கப்பட்டுப் பிறகு திரும்பப்பெறப்பட்டிருந்தாலும் திருமணத்தை மூலத்தன்மை சட்டமுறையில் முறைப்படுத்த முடியாது.
2) ஆயினும், தொடக்கத்திலிருந்து உண்மையில் சம்மதம் இல்லாமலிருந்து ஆனால், பிறகு சம்மதம் கொடுக்கப்பட்டிருந்தால், சம்மதம் கொடுக்கப்பட்ட கணத்திலிருந்து மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தலைக் கொடுக்கலாம்.
தி.ச.1163. இருதரப்பினரின் சம்மதம் நிலைத்திருந்தால் மட்டுமே, தடையின் பொருட்டோ சட்டமுறையான முறையின் குறைபாட்டின் பொருட்டோ செல்லாத ஒரு திருமணம் மூலத்தன்மையில் சட்டமுறையாக்கப்படும்.
2) தடை முடிவுக்கு வந்திருந்தால் மட்டுமே, இயற்கைச் சட்ட அல்லது ஆக்கப்பட்ட இறைச்சட்டத் தடையின் பொருட்டு செல்லாத ஒரு திருமணத்தை மூலத்தன்மை முறையில் சட்டமுறையாக்க முடியும்.
தி.ச. 1164. மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தல், அதைப்பற்றி ஒரு தரப்பினரோ இரு தரப்பினரோ அறியாமல் இருப்பினும்கூட, வழங்கலாம், ஆயினும் கனமான ஒரு காரணத்திற்காக அன்றி அதனை வழங்கக்கூடாது.
தி.ச. 1165. மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தல் திருத்தூதரக ஆட்சிப்பீடத்தால் வழங்க முடியும்.
2) அதே திருமணத்தில் செல்லாநிலைக்குப் பல காரணங்கள் இருந்தாலும் கூட, மதக்கலப்புத் திருமணத்திற்கான மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தலுக்கு, தி.ச. 1125 ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டு, குறிப்பிட்ட காரியங்களில் மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தல், மறைமாவட்ட ஆயரால் வழங்கப்படலாம், ஆயினும் ச. 1078, 2 ன் விதிமுறைக்கேற்ப, எந்தத் தடையின் விலக்கீடு திருத்தூதரக ஆட்சிபீடத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்தத் தடை இருந்தால் அல்லது ஏற்கெனவே முடிவுக்கு வந்துவிட்ட இயற்கைச்சட்ட அல்லது ஆக்கப்பட்ட இறைச்சட்டத் தடையைப் பற்றியதாக இருந்தால், மூலத்தன்மை சட்டமுறைப்படுத்தலை மறை ஆயர் வழங்க முடியாது.
பகுதி 2.
திருவழிபாட்டின் மற்றச் செயல்கள்.
தலைப்பு 1.
அருள்வேண்டல் குறிகள்.
தி.ச. 1166. அருளடையாளங்களை ஒருவாறு ஒத்திருக்கும் அருள்வேண்டல் குறிகள் புனிதச் சின்னங்களாகும், இவை முக்கியமாக அருள்சார்ந்த விளைவுகளைக் குறித்துக்காட்டித் திருச்சபையின் வேண்டுதலால் அவற்றைப் பெற்றுத் தருகின்றன.
தி.ச. 1167. திருத்தூதரக ஆட்சிபீடம் மட்டுமே புதிய அருள்வேண்டல் குறிகளை ஏற்படுத்த முடியும், ஏற்கெனவே ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றை அதிகாரபூர்வமாக விளக்க முடியும், அவற்றில் ஏதாவது ஒன்றை நீக்கவோ மாற்றவோ முடியும்.
2) அருள்வேண்டல் குறிகளைக் கொண்டாடும்போது அல்லது வழங்கும் போது, திருச்சபை அதிகாரத்தால் அங்கீகரிக்கப்பட்ட சடங்குமுறைகளையும் வாய்ப்பாடுகளையும் துல்லியமாகக் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 1168. அருள்வேண்டல் குறிகளின் பணியாளர் தேவையான அதிகாரம் கொண்ட திருப்பட்டத்தினர் ஆவார், ஒரு சில அருள்வேண்டல் குறிகள், திருவழிபாட்டு நூல்களின் விதிமுறைக்கேற்ப, தலத்திருச்சபை ஆளுநரின் கணிப்பின்படி பொருத்தமான பண்புகளைக் கொண்ட பொதுநிலையினரும் நிறைவேற்றப்படலாம்.
தி.ச. 1169. ஆயர்களும், சட்டத்தால் அல்லது சட்டமுறையான சலுகையால் அனுமதிக்கப்பட்ட குருக்களும், திருநிலைப்படுத்துதல் மற்றும் நேர்ந்தளித்தலைச் செல்லத்தக்கவிதத்தில் நிறைவேற்றலாம்.
2) ஆசிகளை, உரோமைத் தலைமைக்குருவுக்கோ ஆயர்களுக்கோ ஒதுக்கப்பட்டவை தவிர, எந்த ஒரு குருவும் அளிக்க முடியும்.
3) ஒரு திருத்தொண்டர் சட்டத்தால் தெளிவாக அவருக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிகளை மட்டும் அளிக்க முடியும்.
தி.ச. 1170. முதன் முதலில் கத்தோலிக்கர்களுக்கு அளிக்கவேண்டிய ஆசிகளை, கிறிஸ்தவ புகுமுகநிலையினருக்கும், திருச்சபைத் தடை குறுக்கிட்டாலன்றி, கத்தோலிக்கரல்லாதவருக்கும்கூட அளிக்கலாம்.
தி.ச. 1171. நேர்ந்தளிப்பு அல்லது ஆசிமூலம் இறைவழிபாட்டுக்காகக் குறிக்கப்பட்டுள்ள புனிதப் பொருட்களை மரியாதையுடன் கையாளவேண்டும், அவை தனிநபர்களின் உரிமையில் இருப்பினும்கூட, பொருத்தமற்ற அல்லது சமய சார்பற்ற பயன்பாட்டுக்காகப் பயன்படுத்தக்கூடாது.
தி.ச. 1172. தலத்திருச்சபை ஆளுநரிடமிருந்து தனிப்பட்ட, தெளிவான அனுமதி பெறப்பட்டிருந்தாலன்றி, எவரும் பேய்பிடித்தவர்களிடமிருந்து சட்டமுறையாகப் பேயோட்டக்கூடாது.
2) பக்தி, அறிவு, விவேகம், நேர்மையான வாழ்வு கொண்ட குருவுக்கு மட்டுமே இத்தகைய அனுமதியைத் தலத்திருச்சபை ஆளுநர் அளிக்கலாம்.
தலைப்பு 2.
திருப்புகழ்மாலை
தி.ச. 1173. திருச்சபை, கிறிஸ்துவின் குருத்துவப் பணியை நிறைவேற்ற, திருப்புகழ்மாலையைக் கொண்டாடுகிறது, இதன்மூலம் தம் மக்களுடன் பேசும் கடவுளுக்குச் செவிமடுத்து, மீட்பின் மறைபொருளை நினைவுகூர்ந்து, திருச்சபை பாடல்களாலும் இறை வேண்டுதல்களாலும் இடைவிடாமல் கடவுளைப் புகழ்கிறது, உலகம் முழுவதின் மீட்புக்காக அவரிடம் பரிந்து பேசுகிறது.
தி.ச. 1174. தி.ச. 276, 2 ன் விதிமுறைக்கேற்ப, திருப்பட்டத்தினர் திருப்புகழ்மாலையை வேண்டக் கடமைப்பட்டுள்ளனர், அர்ப்பண வாழ்வுச் சபை மற்றும் மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்கள், அவர்களின் அமைப்புச்சட்டங்களின் விதிமுறைக்கேற்பக் கடமைப்பட்டுள்ளனர்.
2) மற்றக் கிறிஸ்தவ விசுவாசிகளும், சூழ்நிலைக்கேற்ப, திருப்புகழ்மாலையில், அது திருச்சபையின் செயல் என்றளவில், பங்கேற்க ஆர்வத்துடன் அழைக்கப்படுகின்றனர்.
தி.ச. 1175. திருப்புகழ்மாலையை வேண்டுவதில், குறிப்பிட்ட மணிக்கு உரிய உண்மையான நேரத்தை, இயன்றவரைக் கடைப்பிடிக்கவேண்டும்.
தலைப்பு 3.
திருச்சபை அடக்கச்சடங்குகள்.
தி.ச. 1176. இறந்த கிறிஸ்தவ விசுவாசிகளுக்குச் சட்ட விதிமுறைக்கேற்ப, திருச்சபை அடக்கச்சடங்குகளை அளிக்கவேண்டும்.
2) திருவழிபாட்டுச் சட்ட விதிமுறைக்கேற்ப, திருச்சபை அடக்கச் சடங்குகளைக் கொண்டாடவேண்டும். இவற்றின்மூலம், திருச்சபை இறந்தோருக்காக அருள்வாழ்வு சார்ந்த உதவியை மன்றாடுகிறது, அவர்களுடைய உடலை மகிமைப்படுத்துகிறது, அதே நேரத்தில் வாழ்வோருக்கு ஆறுதலைத்தரும் நம்பிக்கையை அளிக்கிறது.
3) இறந்தோரின் உடலை அடக்கம் செய்யும் பக்தியுள்ள வழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று திருச்சபை ஆர்வத்துடன் பரிந்துரைக்கின்றது, இருப்பினும் உடல் எரித்தலை, அது கிறிஸ்தவக் கோட்பாட்டுக்கு எதிரான காரணங்களுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலன்றி, திருச்சபை தடை செய்வதில்லை.
இயல் 1.
அடக்கச்சடங்குகள் கொண்டாட்டம்.
தி.ச. 1177. இறந்த எந்தவொரு விசுவாசிக்கும் அடக்கச்சடங்குகளைப் பொதுவாக, அவருடைய சொந்தப்பங்கு ஆலயத்தில் கொண்டாடவேண்டும்.
2) இருப்பினும், எந்தவொரு கிறிஸ்தவ விசுவாசியும் அல்லது இறந்த விசுவாசியின் அடக்கச்சடங்கிற்குப் பொறுப்பாக உள்ளவர்களும் அடக்கச்சடங்கிற்காக வேறோர் ஆலயத்தைத் தெரிவு செய்யலாம், இக்காரியத்தில் அந்த ஆலய பொறுப்பாளரின் ஒப்புதலைப் பெறவேண்டும். இறந்தவரின் பங்குக்குருவுக்குத் தெரிவித்திருக்கவேண்டும்.
3) இறப்பானது சொந்தப் பங்குக்கு வெளியே நிகழ்ந்திருந்து, இறந்தவரின் உடல் அப்பங்கிற்குக் கொண்டுவரப்படாமலிருந்து மற்றும் மற்றோர் ஆலயம் அடக்கத்திற்காகச் சட்டமுறைப்படி தெரிவு செய்யப்பட்டிராமலிருந்திருந்தால், வேறோர் ஆலயம் தனிச்சட்டப்படி குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி, அடக்கச்சடங்குகளை இறப்பு நிகழ்ந்த இடத்தின் பங்கு ஆலயத்தில் கொண்டாடவேண்டும்.
தி.ச. 1178. ஒரு மறைமாவட்ட ஆயரின் அடக்கச்சடங்கை, அவர் தாமே வேறோர் ஆலயத்தை தெரிவுசெய்திருந்தாலன்றி, அவருடைய சொந்த மறைமாவட்டப் பேராலயத்தில் கொண்டாடவேண்டும்.
தி.ச. 1179. பொதுவாக, துறவிகள் அல்லது மறைத்தூதுப்பணிவாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்களின் அடக்கச்சடங்குகள், அவர்களுடைய சொந்த ஆலயம் அல்லது செபக்கூடத்தில், திருப்பணியாளர் சபை அல்லது சமூகமாக இருந்தால் அவர்களுடைய தலைவராலும், இல்லையென்றால் சிறப்புப் பணிக்குருவினாலும் கொண்டாடப்படவேண்டும்.
தி.ச.1180. சட்டமுறைப்படி வேறொரு கல்லறை இறந்தவரால் அல்லது அவருடைய அடக்கத்திற்குப் பொறுப்புடையவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தாலன்றி, ஒரு பங்கு தன்னுடைய சொந்தக் கல்லறையைக் கொண்டிருந்தால், இறந்த விசுவாசிகளை அதில் அடக்கம் செய்யவேண்டும்.
2) இருப்பினும், சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலன்றி, அடக்கத்திற்காக கல்லறையைத் தெரிவு செய்ய எவருக்கும் அதிகாரம் உண்டு.
தி.ச. 1181. அடக்கச்சடங்குகளின்போது அளிக்கப்படும் காணிக்கைகளைப் பொறுத்த வரையில், தி.ச. 1264 ன் விதியமைப்புகளைக் கடைப்பிடிக்கவேண்டும். ஆயினும், அடக்கச் சடங்குகளின் போது ஆள்களிடையே வேறுபாடு காட்டாமலும், ஏழைகள் உரிய அடக்கச் சடங்குகளை இழக்காமலும் இருக்கக் கவனம் செலுத்தவேண்டும்.
தி.ச. 1182. அடக்கத்தற்குப்பின், தனிச்சட்ட விதிமுறைக்கேற்ப, இறப்புப் பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும்.
இயல் 2.
திருச்சபை அடக்கச்சடங்குகள் அளிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது மறுக்கப்பட வேண்டியவர்கள்.
தி.ச. 1183. அடக்கச்சடங்குகளைப் பொறுத்தவரையில், கிறிஸ்தவப் புகுமுகநிலையினரைக் கிறிஸ்தவ விசுவாசிகளாகக் கருதவேண்டும்.
2) பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குத் திருமுழுக்கு அளிக்க எண்ணியிருந்து, ஆனால் அக்குழந்தைகள் திருமுழுக்குப் பெறுவதற்குமுன் இறந்திருந்தால், அவர்களுக்குத் திருச்சபை அடக்கச்சடங்குகள் அளிக்கப்படத் தலத்திருச்சபை ஆளுநர் அனுமதிக்கலாம்.
3) கத்தோலிக்கமல்லாத ஏதாவதொரு திருச்சபை அல்லது திருச்சபைச் சமூகங்களில் திருமுழுக்குப் பெற்ற உறுப்பினர்களுக்கு, அது அவர்களுடைய விருப்பத்திற்கு நேர் மாறானது என்று தெளிவாகத் இருந்தாலன்றி மற்றும் அவர்களுடைய சொந்தப்பணியாளர் இல்லாமல் இருந்தால் மட்டுமே, தலத்திருச்சபை ஆளுநரின் விவேகமான கணிப்பிற்கேற்ப, திருச்சபை அடக்கச்சடங்குகளை அளிக்கலாம்.
தி.ச. 1184. இறப்பதற்குமுன், மனமாற்றத்திற்கான சில அடையாளங்களைக் காட்டியிருந்தாலன்றி, கீழ்க்கண்டவர்களுக்குத் திருச்சபை அடக்கச்சடங்குகளை மறுக்கவேண்டும்.
1) பகிரங்கமாக விசுவாசத்தை மறுதலிப்பவர், திரிபுக்கொள்கையாளர், சமயப்பிளவை உருவாக்குபவர்
2) கிறிஸ்தவ விசுவாசத்திறகு எதிரான காரணங்களுக்காகத் தங்களது உடல் எரித்தலைத் தெரிவு செய்து கொண்டவர்கள்.
3) விசுவாசிகளுக்குப் பகிரங்க இடறலின்றி, திருச்சபை அடக்கச் சடங்குகள் அளிக்கமுடியாத மற்ற பகிரங்கமான பாவிகள்.
2) ஏதாவது ஐயப்பாடு எழுந்தால், தலத்திருச்சபை ஆளுநர் கலந்தாலோசிக்கப்பட்டு, அவருடைய தீர்ப்பைப் பின்பற்றவேண்டும்.
தி.ச. 1185. திருச்சபை அடக்கச்சடங்கிலிருந்து விலக்கப்பட்டவருக்கு எவ்வித அடக்கத்திருப்பலியையும் மறுக்கவேண்டும்..
தலைப்பு 4.
தூயவர்கள், புனித உருவங்கள் மற்றும் புனிதர் சின்னங்களின் வணக்கம்.
தி.ச. 1186. இறைமக்களின் புனிதப்படுத்துதலைப் பேணிவளர்க்க, கடவுளின் அன்னையாகிய, மனிதர் அனைவரின் அன்னையாகக் கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்பட்ட, என்றும் கன்னியான பேறுபெற்ற மரியாவுக்குக் கிறிஸ்தவ விசுவாசிகளின் தனிப்பட்ட, பிள்ளைக்குரிய வணக்கத்தைத் திருச்சபை பரிந்துரைக்கிறது, மேலும், மற்றத் தூயவர்களின் உண்மையான, அதிகாரப்பூர்வமான வழிபாட்டையும் மேம்படுத்துகிறது. இவர்களுடைய எடுத்துக்காட்டால் மாதிரிகையும், பரிந்துரையால் உதவியும் கிறிஸ்தவ விசுவாசிகள் பெறுகின்றனர்.
தி.ச. 1187. திருச்சபையின் அதிகாரத்தால், தூயவர்கள் அல்லது பேறுபெற்றவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட இறையடியார்களுக்கு மட்டுமே பகிரங்க வழிபாட்டின் மூலம் வணக்கம் செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
தி.ச. 1188. ஆலயங்களில் விசுவாசிகளின் வணக்கத்திற்காகப் புனித உருவங்களை வைக்கும் பழக்கம் நிலைத்து நிற்கவேண்டும், இருப்பினும், கிறிஸ்தவ மக்களிடையே வியப்பைத் தூண்டாமலும், பொருத்தக் குறைவான பக்தியில் ஈடுபடாமலும் இருக்குமாறு, அவற்றை மிதமான எண்ணிக்கையிலும் பொருத்தமான ஒழுங்கிலும் வைக்கவேண்டும்.
தி.ச. 1189. காலம், கலை அல்லது வழிபாடு ஆகியவற்றின் காரணமாகச் சிறப்புமிக்கதும், ஆலயங்களிலும் செபக்கூடங்களிலும் விசுவாசிகளின் வணக்கத்திற்காக வைக்கப்பட்டதுமான விலையுயர்ந்த உருவங்களைப் பழுதுபார்க்கத் தேவைப்படும்போதெல்லாம், திருச்சபை ஆளுநரின் எழுத்து மூலமான அனுமதியின்றி ஒருபோதும் சீரமைக்கக் கூடாது, அவர் அனுமதி வழங்குமுன் வல்லுநர்களைக் கலந்தாலோசிக்கவேண்டும்.
தி.ச. 1190. புனிதர் சின்னங்களை விற்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
2) புகழ்பெற்ற புனிதர் சின்னங்களும், மக்களின் பெரும் வணக்கத்;தால் மரியாதை செலுத்தப்படும் மற்றவைகளும் திருத்தூதரக ஆட்சிப்பீடத்தின் அனுமதியின்றி எவ்விதத்திலும் செல்லத்தக்க விதத்தில் உடமை மாற்றம் செய்யப்படவோ நிரந்தரமாக இடம் மாற்றப்படவோ முடியாது.
3) எந்தவோர் ஆலயத்திலும் மக்களின் பெரும் வணக்கத்தால் மரியாதை செலுத்தப்படும் உருவங்களுக்கும், 2 ன் விதியமைப்பு பொருந்தும்.
தலைப்பு 5.
வார்த்தைப்பாடும் சத்தியவாக்கும்.
இயல் 1.
வார்த்தைப்பாடு.
தி.ச. 1191. சாத்தியமானதும் சிறந்ததுமான ஒரு நன்மை குறித்து இறைவனுக்கு அளிக்கப்படும் உளமார்ந்த, தன்னுரிமையுடைய வாக்குறுதி வார்த்தைப்பாடாகும், சமய நற்பண்பின் காரணமாக அதனை நிறைவேற்றவேண்டும்.
2) சட்டத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலன்றி, தக்க பகுத்தறிவுப் பயன்பாடுடைய அனைவரும் வார்த்தைப்பாடு கொடுக்கத் தகுதி உள்ளவர்கள் ஆவர்.
3) கனமான, அநீதியான பயம் அல்லது வஞ்சகத்தால் அளிக்கப்பட்ட வார்த்தைப்பாடு சட்டத்தாலேயே செல்லத்தக்கதல்ல.
தி.ச. 1192. சட்டமுறையான தலைவரால் திருச்சபையின் பெயரால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் பகிரங்க வார்த்தைப்பாடாகும்
2) திருச்சபையால் ஆடம்பர வார்த்தைப்பாடு என்ற முறையில் அங்கீகரிக்கப்பட்டால், ஆடம்பர வார்த்தைப்பாடாகும்.
3) வார்த்தைப்பாடு கொடுப்பவரால் ஒரு செயல் வாக்களிக்கப்பட்டால், அது ஆள் சார்ந்த வார்த்தைப்பாடுhகும், ஏதாவதொரு பொருள் வாக்களிக்கப்பட்டால், அது பொருள் சார்ந்த வார்த்தைப்பாடாகும், வார்த்தைப்பாடு ஆள் மற்றும் பொருள் சார்ந்த இயல்பைக் கொண்டிருந்தால், அது கலப்பு வார்த்தைப்பாடாகும்.
தி.ச. 1193. தன் இயல்பிலே வார்த்தைப்பாடு அதை அளிப்பவரை மட்டுமே கட்டுப்படுத்தும்.
தி.ச. 1194. கடமையை நிறைவேற்றுவதற்காகக் குறிக்கப்பட்ட காலம் முடிவடைவதால், அல்லது வாக்களிக்கப்பட்ட காரியத்தின் அடிப்படை மாற்றத்தால், அல்லது வார்த்தைப்பாடு சார்ந்துள்ள நிபந்தனையோ அதனுடைய முக்கியமான நோக்கமோ இல்லாததால், அல்லது விலக்கீட்டால் அல்லது மாற்றீடு செய்வதால் ஒருவார்த்தைப்பாடு முடிவுக்கு வருகிறது.
தி.ச. 1195. வார்த்தைப்பாட்டிற்குரிய பொருள்மீது அதிகாரம் கொண்டவர், வார்த்தைப்பாட்டை நிறைவேற்றுவது அந்த ஆளை எதிர்மறையாகப் பாதிக்கும் காலம்வரை, அதன் கடமையை இடைநிறுத்தம் செய்யலாம்.
தி.ச. 1196. உரோமைத் தலைமைக்குருவைத் தவிர விலக்கீடானது மற்றவர்களால் முயன்று பெறப்பட்ட உரிமைக்குத் தீங்கு விளைவிக்காமல் இருந்தால் மட்டுமே, கீழ்க்கண்டவர்கள், நியாயமான ஒரு காரணத்திற்காக, தனிப்பட்ட வார்த்தைப்பாடுகளிலிருந்து விலக்கீடு அளிக்கலாம்:
1) தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அனைவர் மற்றும் வழிப்போக்கர்களைப் பொறுத்தவரையில், தலத்திருச்சபை ஆளுநரும் பங்குக்குருவும்:
2) திருஆட்சிப்பீடத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட திருப்பணியாளர் துறவற சபை அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்களின் உறுப்பினர்கள், தொடக்கநிலைத் துறவியர்கள் மற்றும் சபை அல்லது சமூகத்தின் இல்லத்தில் இரவும் பகலும் தங்கி வாழ்பவர்கள் ஆகியோரைப் பொறுத்தவரையில், சபை அல்லது சமூகத்தின் தலைவர்,
3) திருத்தூதரக ஆட்சிப்பீடத்தாலோ தலத்திருச்சபை ஆளுநராலோ விலக்கீடு அதிகாரம் கட்டளைப் பேராண்மையால் கொடுக்கப்பட்டவர்கள்.
தி.ச. 1197. தனிப்பட்ட வார்த்தைப்பாட்டால் வாக்களிக்கப்பட்ட செயல், அதைவிட மேலான அல்லது அதற்குச் சமமான மற்றொரு நற்செயலுக்கு, வார்த்தைப்பாடு கொடுத்தவரால் மாற்றீடு செய்யப்படலாம், இருப்பினும், ச. 1196 ன் விதியமைப்புக்கேற்ப விலக்கீடு அளிக்கும் அதிகாரம் கொண்டவர், அதைவிடக் குறைவான ஒரு செயலுக்கு அதை மாற்றீடு செய்ய முடியும்.
தி.ச. 1198. துறவற உறுதிமொழிக்குமுன் கொடுக்கப்பட்ட வார்த்தைப்பாடுகள், வார்த்தைப்பாடு கொடுத்தவர் துறவற சபையில் இருக்கும் வரை இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன.
இயல் 2.
சத்திய வாக்கு
தி.ச. 1199. கடவுளுடைய பெயரை உண்மைக்குச் சாட்சியாக அழைப்பது சத்திய வாக்காகும், இதை உண்மை, தீர்மானம் மற்றும் நீதியிலன்றிச் செய்யக்கூடாது.
2) திருச்சபைச் சட்டங்கள் கோரும் அல்லது அனுமதியளிக்கும் சத்தியவாக்கு பதில்-ஆள் மூலம் செல்லத்தக்கவிதத்தில் செய்யமுடியாது.
தி.ச. 1200. தன்னுரிமையுடன் ஒன்றைச் செய்ய சத்தியவாக்களிக்கும் ஒருவர், சத்தியவாக்கால் உறுதிசெய்யப்பட்டதை நிறைவேற்றத் தனிப்பட்ட சமயக் கடமையால் கட்டுப்பட்டவர் ஆவார்.
2) வஞ்சகம், வலுவந்தம் அல்லது கனமான பயம் ஆகியவற்றால் அச்சுறுத்திப் பெற்ற சத்தியவாக்கு சட்டத்தாலேயே செல்லத்தக்கதல்ல.
தி.ச.1201. .உறுதிமொழியடங்கிய சத்தியவாக்கு அது இணைக்கப்பட்ட செயலின் இயல்பையும் நிபந்தனைகளையும் பின்பற்றிச் செல்கிறது.
2) சத்தியவாக்கானது மற்றவர்களுக்கு நேரடியாகத் தீங்கு விளைவிக்கும் அல்லது பொது நன்மைக்கோ முடிவில்லா மீட்புக்கோ ஊறு விளைவிக்கும் செயலோடு இணைக்கப்பட்டிருந்தால், இச்செயல் சத்தியவாக்கினால் வலிமை பெறுவதில்லை.
தி.ச. 1202. .உறுதிமொழியடங்கிய சத்தியவாக்கிலிருந்து எழும் கடமை கீழ்க்கண்ட விதங்களில் முடிவடைகிறது:
1) எவருடைய நலனுக்காகச் சத்தியவாக்கு அளிக்கப்பட்டதோ அவரால் விடுவிக்கப்பட்டால்,
2)சத்தியவாக்கின் பொருள் அடிப்படையில் மாற்றம் அடைந்திருந்தால், அல்லது சூழ்நிலைகளின் மாற்றத்தால் தீயதாக மாறினால், அல்லது நடுநிலையை அடைந்தால், அல்லது இறுதியாக, மேலான நன்;மைக்குத் தடையாக இருந்தால்,
3) சத்தியவாக்களிக்கப்பட்டதின் முக்கிய நோக்கம் அல்லது நிபந்தனை அற்றுப் போனால்,
4) ச, 1023 ன் விதிமுறைக்கேற்ப, விலக்கீட்டினால் அல்லது மாற்றீட்டினால்.
தி.ச. 1203. வார்த்தைப்பாட்டை இடைநிறுத்தம் செய்ய, அதற்கு விலக்கீடு அளிக்க, அதை மாற்றீடு செய்யக்கூடியவர்கள் அதே அதிகாரத்தை அதே காரணங்களுக்காக உறுதிமொழியடங்கிய சத்தியவாக்கு மீதும் கொண்டுள்ளனர், ஆனால், சத்தியவாக்கின் விலக்கீடானது அதன் கடமையிலிருந்து மன்னிப்பு அளிக்க மறுப்பவர்களுக்குத் தீங்கு விளைவித்தால், திருத்தூதரக ஆட்சிப்பீடம் மட்டுமே சத்தியவாக்கிலிருந்து விலக்கீடு அளிக்க முடியும்.
தி.ச. 1204 சத்தியவாக்கானது, சட்டம் மற்றும் சத்தியவாக்கு அளிப்பவரின் எண்ணத்திற்கேற்பக் கண்டிப்பான விளக்கம் பெறவேண்டும், அல்லது அவர் வஞ்சகத்தினால் செயல் பட்டால், சத்தியவாக்கு எவரிடம் செய்யப்பட்டதோ அவரின் எண்ணத்திற்கேற்ப விளக்கம் பெற வேண்டும்.
பகுதி 3
புனித இடங்களும் நேரங்களும்
தலைப்பு 1.
புனித இடங்கள்
தி.ச. 1205. திருவழிபாட்டு நூல்கள் விதியமைப்புச் செய்துள்ள நேர்ந்தளித்தல் அல்லது ஆசீர் மூலமாக விசுவாசிகளின் இறைவழிபாட்டிற்காகவோ அடக்கத்திற்காகவோ குறிக்கப்பட்டுள்ள இடங்கள் புனித இடங்களாகும்.
தி.ச. 1206. எந்த ஓர் இடத்தின் நேர்ந்தளிப்பும், மறைமாவட்ட ஆயருக்கும் சட்டத்தில் அவருக்கு இணையானவர்களுக்கும் உரியது. அவர்கள் தங்கள் எல்லைக்குள் எந்த ஓர் ஆயருக்கும், விதிவிலக்கான காரியங்களில், ஒரு குருவுக்கும் நேர்ந்தளிப்பு நிறைவேற்றும் பணியை ஒப்படைக்கலாம்.
தி.ச. 1207. புனித இடங்கள் திருச்சபை ஆளுநரால் ஆசீர்வதிக்கப்படுகின்றன, இருப்பினும், ஆலயங்களின் ஆசீர் மறைமாவட்ட ஆயருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால், இருவருமே இதற்காக மற்றொரு குருவுக்குக் கட்டளைப் பேராண்மை வழங்கலாம்.
தி.ச. 1208. ஆலயத்தின் நேர்ந்தளிப்பு அல்லது ஆசீர், அவ்வாறே கல்லறையின் ஆசீர் நிறைவேற்றப்பட்டதை எண்பிக்கும் ஆவணத்தைத் தயாரிக்கவேண்டும். அதன் ஒரு நகலை மறைமாவட்டச் செயலகத்திலும் மற்றொரு நகலை ஆலயத்தின் ஆவணக் காப்பகத்திலும் வைக்கவேண்டும்.
தி.ச. 1209. எந்த ஓர் இடத்தின் நேர்ந்தளிப்பும் அல்லது ஆசீரும், எவருக்கும் அதனால் தீங்கு ஏற்படாதிருந்தால் மட்டுமே, ஐயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு சாட்சியின் மூலம் கூடப் போதுமான அளவு எண்பிக்கப்படுகிறது.
தி.ச. 1210. வழிபாடு, பக்தி, சமயம் ஆகியவற்றின் செயல்பாட்டிற்கு அல்லது மேம்பாட்டிற்கு உதவும் காரியங்களை மட்டும் புனித இடத்தில் அனுமதிக்கவேண்டும். இடத்தின் புனிதத் தன்மைக்கு ஒவ்வாத எதுவும் தடை செய்யப்பட்டுள்ளது, இருப்பினும், திருச்சபை ஆளுநர், தனிப்பட்ட காரியங்களில், இடத்தின் புனிதத் தன்மைக்கு நேர்மாறாக இல்லாத மற்றப் பயன்பாடுகளை அனுமதிக்கலாம்.
தி.ச. 1211. மிகவும் தீங்கிழைக்கும், விசுவாசிகளுக்கு இடறலை உருவாக்கும் செயல்கள் புனித இடங்களில் நிகழ்வதால், அவை கெடுக்கப்படுகின்றன, இவை தலத்திருச்சபை ஆளுநரின் கணிப்பின்படி எவ்வளவு கனமானவையாகவும் இடத்தின் புனிதத்தன்மைக்கு முரணானவையாகவும் உள்ளன என்றால், அவற்றில், திருவழிபாட்டு நூல்களின் விதிமுறைக்கேற்ப, தவச்சடங்குமுறை மூலம் தீங்கு ஈடு செய்யப்படாதவரை, வழிபாட்டுச் செயல்களை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவதில்லை.
தி.ச. 1212. புனித இடங்கள், அவை பெருமளவில் அழிக்கப்பட்டிருந்தால், அல்லது சமயச் சார்பற்ற பயன்பாடுகளுக்காகத் தகுதி வாய்ந்த திருச்சபை ஆளுநரின் ஓர் ஆணை மூலமாகவோ நிகழ்வுப் பூர்வமாகவோ நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டுவிட்டால், நேர்ந்தளிப்பையும் ஆசீரையும் இழக்கின்றன.
தி.ச. 1213. திருச்சபை அதிகாரிகள் புனித இடங்களில் தங்களது அதிகாரங்களையும் பணிகளையும் தன்னுரிமையுடன் செயல்படுத்துகின்றனர்.
இயல் 1
ஆலயங்கள்
தி.ச. 1214. ஆலயம் என்ற சொல் இறைவழிபாட்டிற்காகக் குறிக்கப்பட்ட கட்டடம் என்று பொருள்படும், அங்கு விசுவாசிகள் இறைவழிபாட்டை, சிறப்பாக அதைப் பொதுவாக, நிறைவேற்றச் செல்வதற்கு உரிமையைக் கொண்டுள்ளனர்.
தி.ச. 1215. மறைமாவட்ட ஆயரின் தெளிவான, எழுத்து மூலமான ஒப்புதலின்றி எந்த ஓர் ஆலயத்தையும் கட்டக்கூடாது.
2) மறைமாவட்ட ஆயர், குருக்கள் மன்றத்தையும் அருகில் உள்ள ஆலயங்களின் அதிபர்களையும் கலந்தாலோசித்து, புதிய ஆலயம் ஆன்ம நலனுக்கு உதவக்கூடியது என்றும், ஆலயம் கட்டுவதற்கும் இறைவழிபாட்டிற்பும் தேவையான ஆதாரங்கள் எதிர் காலத்தில் குறைவுபடாது என்றும் கருதினாலன்றி, அனுமதி அளிக்கக் கூடாது.
3) துறவற சபைகளும், மறைமாவட்டத்தில் அல்லது நகரில் ஒரு புதிய இல்லத்தை நிறுவுவதற்கு மறைமாவட்ட ஆயரின் ஒப்புதலைப் பெற்றிருந்தாலும்கூட, ஓர் குறிப்பிட்ட, வரையறுக்கப்பட்ட இடத்தில் ஆலயம் கட்டுமுன், அவரது அனுமதியைப் பெறவேண்டும்.
தி.ச. 1216. ஆலயங்களைக் கட்டுவதிலும் புதுப்பித்தலிலும், வல்லுநர்களின் ஆலோசனையைப் பெற்று, திருவழிபாடு மற்றும் திருக்கலையின் கொள்கைகளையும் விதிமுறைகளையும் பின்பற்றவேண்டும்.
தி.ச. 1217. புதிய ஆலயத்தை முறைப்படி கட்டியெழுப்பியபின், திருவழிபாட்டுச்; சட்டங்களைக் கடைப்பிடித்து, அதனைக் கூடிய விரைவில் நேர்ந்தளிக்கவேண்டும் அல்லது குறைந்த அளவு ஆசீர்வதிக்கவேண்டும்.
2) ஆலயங்கள், சிறப்பாக மறைமாவட்டப் பேராலயங்களும் பங்கு ஆலயங்களும் ஆடம்பரச் சடங்குமுறையால் நேர்ந்தளிக்கப்படவேண்டும்.
தி.ச. 1218. ஒவ்வோர் ஆலயமும் தனது பெயரைக் கொண்டிருக்கவேண்டும், இப்பெரை நேர்ந்தளிப்பிற்குப்பின் மாற்ற முடியாது.
தி.ச. 1219. சட்டமுறைப்படி நேர்ந்தளி அல்லது ஆசீர்வதித்த ஆலயத்தில், பங்புக்குரிய உரிமைகளைக் கருத்திற்கொண்டு எல்லா இறைவழிபாட்டுச் செயல்களையும் நிறைவேற்றலாம்.
தி.ச. 1220. பொறுப்பானவர்கள், ஆலயங்களில் இறைவனின் இல்லத்திற்கு ஏற்ற தூய்மையும் அழகும் பாதுகாக்கப்படுவதையும், இடத்தின் புனிதத்தன்மைக்கு ஒவ்வாத எதுவும் தவிர்க்கப்படுவதையும் கவனித்துக் கொள்ளவேண்டும்.
2) புனிதமான, விலையுயர்ந்த பொருள்களைப் பாதுகாக்க, பேணிக்காப்பதற்கான சாதாரண அக்கறையையும் தக்க பாதுகாப்பு வழிமுறைகளையும் பயன்படுத்தவேண்டும்.
தி.ச. 1221. புனிதக் கொண்டாட்டங்களின் நேரத்தில் ஆலய நுழைவு தங்கு தடையின்றியும் இலவசமாகவும் இருக்கவேண்டும்..
தி.ச. 1222. ஓர் ஆலயத்தை எவ்விதத்திலும் இறைவழிபாட்டிற்குப் பயன்படுத்த முடியாது, அதை புதுப்பிக்கவும் முடியாது என்றால், அதை இழிவானதாக இல்லாத, சமய சார்பற்ற நோக்கத்திற்காகப் பயன்படுத்த ஆயர் அனுமதி வழங்கலாம்.
2) ஏதாவது ஒர் ஆலயத்தை இறைவழிபாட்டிற்காக இனி பயன்படுத்த முடியாது என்று வேறு கனமான காரணங்கள் தூண்டினால், மறைமாவட்ட ஆயர், குருக்கள் மன்றத்தைக் கலந்தாலோசித்தபின், சட்டமுறைப்படி ஆலயத்தின்மீது உரிமை பாராட்டுபவர்களின ஒப்புதலுடன், ஆலயத்தை இழிவானதாக இல்லாத சமய சார்பற்ற பயன்பாட்டுக்காக அனுமதிக்கலாம். அதனால் ஆன்மாக்களின் நலனுக்கு எவ்விதத் தீங்கும் விளையாதிருந்தால் மட்டுமே அவர் அவ்வாறு செய்ய முடியும்.
இயல் 2;
செபக்கூடங்களும் தனியார் சிற்றாலயங்களும்.
தி.ச. 1223. செபக்கூடம் என்பது, அங்கு ஒன்று கூடும் விசுவாசிகளின் ஏதாவதொரு சமூகம் அல்லது குழுவின் வசதிக்காக, திருச்சபை ஆளுநரின் அனுமதியுடன் இறைவழிபாட்டிற்காகக் குறிக்கப்பட்ட ஓர் இடம் என்று பொருள்படும். மற்றக் கிறிஸ்தவ விசுவாசிகளும், தகுதி வாய்ந்த தலைவரின் ஒப்புதலுடன் அவ்விடத்தை அணுகமுடியும்.
தி.ச. 1224. திருச்சபை ஆளுநர், தாமாகவோ மற்றவர் மூலமாகவோ செபக்கூடத்திற்காக குறிக்கப்பட்ட இடத்தை முதலில் பார்வையிட்டு, அது பொருத்தமாக அமைக்கப்பட்டுள்ளது என்று கண்டறிந்தாலன்றி, செப்கூடத்தைக் கட்டுவதற்குத் தேவையான அனுமதியை அளிக்கக் கூடாது.
2) ஆயினும், அனுமதி அளிக்கப்பட்டபின், அதே திருச்சபை ஆளுநரின் அனுமதியின்றி செபக்கூடத்தை சமய சார்பற்ற பயன்பாட்டுக்கு மாற்ற முடியாது.
தி.ச. 1225. சட்டமுறைப்படி நிறுவப்பட்ட செபக்கூடங்களினல், எல்லாத் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களும் நிறைவேற்றலாம், சட்டமோ தலத்திருச்சபை ஆளுநரின் விதியமைப்போ அவற்றைத் தடை செய்தாலோ அல்லது திருவழிபாட்டு விதிமுறைகள் அவற்றைத் தடுத்தாலோ அவற்றை நிறைவேற்றக்கூடாது.
தி.ச. 1226. தனியார் சிற்றாலயம் என்ற சொல், ஒரு மானுட அல்லது பல மானுட ஆள்களின் வசதிக்காக, தலத்திருச்சபை ஆளுநர் அனுமதியுடன், இறைவழிபாட்டிற்காகக் குறிக்கப்பட்ட இடம் என்று பொருள்படும்.
தி.ச. 1227. ஒரு செபக்கூடத்திற்குரிய அதே உரிமைகளைக் கொண்ட ஒரு தனியார் சிற்றாலயத்தை ஆயர்கள் தங்களுக்கென அமைத்துக் கொள்ளலாம்.
தி.ச. 1228. தி.ச. 1227 ன் விதியமைப்பைக் கருத்திற்கொண்டு, ஒரு தனியார் சிற்றாலயத்தில் திருப்பலி மற்றப் புனிதக் கொண்டாட்டங்கள் நிறைவேற்றத் தலத்திருச்சபை ஆளுநரின் அனுமதி தேவைப்படுகிறது.
தி.ச. 1229. திருவழிபாட்டு நூல்களில் விதியமைப்;புச் செய்யப்பட்டுள்ள சடங்குமுறைக்கேற்ப, செபக்கூடங்களும் தனியார் சிற்றாலயங்களும் ஆசீர்வதிக்கப்படுவது பொருத்தமானது. இருப்பினும் அவற்றை இறைவழிபாட்டிற்காக மட்டும் ஒதுக்கி வைக்கவேண்டும்., எல்லா இல்லப் பயன்பாடுகளையும் தவிர்க்கவேண்டும்.
இயல் 3.
திருத்தலங்கள்
தி.ச. 1230. திருத்தலம் என்ற சொல், தனிப்பட்ட பக்திநெறி காரணமாக, தலத்திருச்சபை ஆளுநரின் அங்கீகாரத்துடன், விசுவாசிகள் திரளான எண்ணிக்கையி;ல் திருப்பயணங்களைச் செய்கின்ற ஓர் ஆலயம் அல்லது மற்றப் புனித இம் என்று பொருள்படும்.
தி.ச. 1231. ஒரு திருத்தலம் நாட்டுத் திருத்தலம் என்று அழைக்கப்பட, ஆயர் பேரவையின் அங்கீகாரம் தேவை, அது பன்னாட்டுத் திருத்தலம் என்று அழைக்கப்பட, திருஆட்சிப்பீடத்தின் அங்கீகாரம் தேவை.
தி.ச. 1232. ஒரு மறைமாவட்டத் திருத்தலத்தின் விதிகளை அங்கீகரிக்கத் தகுதிவாய்ந்தவர் தலத்திருச்சபை ஆளுநர் ஆவார், நாட்டுத் திருத்தலங்களின் விதிகளை அங்கீகரிக்க திருஆட்சிப்பீடம் மட்டும் தகுதி வாய்ந்தவை.
2) ஒரு திருத்தலத்தின் விதிகள், முக்கியமாக அத்திருத்தலத்தின் நோக்கம், அதன் அதிபரின் அதிகாரம், அதன் சொத்துக்களின் உடைமையுரிமை மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை நிர்ணயிக்கவேண்டும்.
தி.ச. 1233. இடங்களின் சூழ்நிலைகள், திருப்பயணிகளின் திரளான எண்ணிக்கை மற்றும் குறிப்பாக விசுவாசிகளின் நலன் அதைத் தூண்டும் போதெல்லாம், ஒருசில சலுகைகளைத் திருத்தலங்களுக்கு அளிக்கலாம்.
தி.ச. 1234. திருத்தலங்களில் விசுவாசிகளுக்கு மீட்பின் வழிமுறைகள் பெருமளவில் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டும். இறைவார்த்தையைக் கவனமாக அறிக்கையிட்டு, திருவழிபாட்டு வாழ்வைக் குறிப்பாக நற்கருணை, ஒப்புரவுக் கொண்டாட்டத்தின் மூலம் பொருத்தமாகப் பேணி வளர்த்து, அங்கீகரிக்கப்பட்ட பொதுமக்களின் பாராட்டுதலுக்குரிய பக்தி முறைகளை வளர்க்கவேண்டும்.
2) மக்களின் பாராட்டுதலுக்குரிய கலை மற்றும் பக்திமிகு நேர்ச்சைக் காணிக்கைகள் திருத்தலங்களிலோ அவற்றுக்கு அருகிலுள்ள இடங்களிலோ காட்சிக்கு வைக்கப்பட்டுக் கவனமுடன் பாதுகாக்கவேண்டும்.
இயல் 4.
பீடங்கள்
தி.ச. 1235. நற்கருணைத் திருப்பலி கொண்டாப்படும் ஒரு பீடம் அல்லது மேசை தரையோடு இணைந்திருக்கும்படி கட்டப்பட்டு, அதனால் அது இ.டம் பெயர்க்க முடியாதது என்றால், அது "அசைக்க முடியாதது" எனப்படும். அதனை இடம் பெயர்க்க முடியும் என்றால்;, அது "அசைக்கக்கூடியது" எனப்படும்.
2) ஓவ்வோர் ஆலயத்திலும் அசைக்க முடியாத ஒரு பீடம் இருப்பது பொருத்தமானது, புனிதக் கொண்டாட்டங்களுக்காகக் குறிக்கப்பட்டுள்ள மற்ற இடங்களில், பீடம் அசைக்க முடியாததாகவோ அசைக்கக் கூடியதாகவோ இருக்கலாம்.
தி.ச. 1236. திருச்சபையின் மரபுவழக்கப்படி, அசைக்கமுடியாத பீடத்தின் மேசை, கல்லால், உண்மையிலே ஒற்றைக் கல்லால் ஆனதாக இருக்கவேண்டும். இருப்பினும், ஆயர் பேரவையின் தீர்மானத்தின்படி, தகுதியான மற்றும் உறுதியான மற்றொரு மூலப்பொருளைக்கூடப் பயன்படுத்தலாம். பீடக் கால்கள் அல்லது அடித்தளம் ஏதாவதொரு மூலப்பொருளால் செய்யப்படலாம்.
2) அசைக்கக்கூடிய பீடம் திருவழிபாட்டுப் பயன்பாட்டுக்குப் பொருத்தமான எந்த ஓர் உறுதியான மூலப்பொருளாலும் செய்யப்படலாம்.
தி.ச. 1237. திருவழிபாட்டு நூல்களில் விதியமைப்புச் செய்யப்பெற்ற சடங்குகளுக்கேற்ப, அசைக்க முடியாத பீடங்கள் நேர்ந்தளிக்கப்படவேண்டும்., ஆனால் அசைக்கக்கூடிய பீடங்களை நேர்ந்தளிக்கலாம் அல்லது ஆசீர்வதிக்கலாம்.
2) மறைசாட்சிகள் அல்லது மற்றத் தூயவர்களுடைய சின்னங்களை அசைக்கமுடியாத பீடத்தின் கீழ் வைக்கும் தொன்மையான மரபை, திருவழிபாட்டு நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கேற்ப, கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 1238. தி.ச. 1212 ன் விதிமுறைக்கேற்ப, ஒரு பீடம் தனது நேர்ந்தளிப்பை அல்லது ஆசீரை இழக்கிறது.
2) பீடங்கள் அசைக்க முடியாததாகவோ அசைக்கக் கூடியதாகவோ இருப்பினும், ஓர் ஆலயம் அல்லது மற்றொரு புனித இடம் சமயச் சார்பற்ற பயன்பாடுகளுக்காக மாற்றப்படுவதின் மூலம் தங்கள் நேர்ந்தளிப்பையோ ஆசீரையோ இழப்பதில்லை.
தி.ச. 1239. அசைக்க முடியாத மற்றும் அசைக்கக்கூடிய இருவகைப் பீடங்களையும் இநைவழிபாட்டிற்காக மட்டுமே ஒதுக்கி வைக்கவேண்டும், சமயச் சார்பற்ற எந்தவொரு பயன்பாட்டையும் விலக்கவேண்டும்.
2) பீடத்தின் அடியில் எந்த உடலையும் அடக்கம் செய்யக்கூடாது, செய்திருந்தால், அப்பீடத்தின் மேல் திருப்பலி நிறைவேற்ற அனுமதி இல்லை.
இயல் 5.
கல்லறைகள்.
தி.ச. 1240. எங்கு இயலுமோ அங்குத் திருச்சபை தனது சொந்த கல்லறைகளைக் கொண்டிருக்கவேண்டும், அல்லது குறைந்த அளவு அரசுக்குரிய கல்லறைகளில் இறந்த விசுவாசிகளுக்காகக் குறிப்பிடப்பட்டு, முறையாக ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு பகுதியையாவது கொண்டிருக்கவேண்டும்.
2) இருப்பினும், இது இயலாதெனில், ஒவ்வொரு முறையும் தனிப்பட்ட கல்லறைகளை உரிய முறையில் ஆசீர்வதிக்கவேண்டும்.
தி.ச. 1241. பங்குகளும் துறவற சபைகளும் தங்களது சொந்தக் கல்லறைகளைக் கொண்டிருக்கலாம்.
2) மற்றச் சட்டம்ஆள்கள் அல்லது குடும்பங்கள் தங்களது சொந்தக் கல்லறைகளை அல்லது இடுகாடுகளைக் கொண்டிருக்கலாம், இவற்றைத் தலத்திருச்சபை ஆளுநரின் கணிப்பின்படி ஆசீர்வதிக்கவேண்டும்.
தி.ச. 1242. உடல்களை ஆலயங்களில் அடக்கம் செய்யக் கூடாது. உரோமைத் தலைமைக்குரு, கர்தினால்கள், அல்லது மறைமாவட்ட ஆயர்களை, ஓய்வுபெற்றவர்களைக்கூட, தங்களது சொந்த ஆலயத்தில் அடக்கம் செய்யலாம்.
தி.ச. 1243. கல்லறைகளில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழங்குமுறைப் பற்றி குறிப்பாக அவற்றின் புனிதத்தன்மையைப் பாதுகாப்பதையும் பேணிவளர்ப்பதையும் பொறுத்தவரையில் பொருத்தமான விதிமுறைகளைத் தனிச்சட்டத்தால் நிர்ணயிக்கவேண்டும்.
தலைப்பு 2
புனித காலங்கள்.
தி.ச. 1244. அனைத்துலக திருச்சபைக்குப் பொதுவான திருவிழா நாள்களை அல்லது தவ நாள்களை ஏற்படுத்துவது, மாற்றுவது அல்லது நீக்குவது திருச்சபையின் உச்ச அதிகாரத்திற்கு மட்டுமே உரியது. இக்காரியத்தில் தி.ச. 1246, 2 ன் விதியமைப்பைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
2) மறைமாவட்ட ஆயர்கள் சிறப்பான திருவிழா நாள்களை அல்லது தவநாள்களைத் தங்களது மறைமாவட்டங்களுக்கு அல்லது இடங்களுக்கு, தனிப்பட்ட சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே, நிர்ணயிக்கமுடியும்.
தி.ச. 1245. நியாயமான ஒரு காரணத்திற்காக, மறைமாவட்ட ஆயரின் விதியமைப்புகளுக்கேற்ப, பங்குத்தந்தை, தனிப்பட்ட காரியங்களில், திருவிழாநாள் அல்லது தவநாளைக் கடைப்படிக்கவேண்டிய கடமையிலிருந்து விலக்கீடு அளிக்கலாம், அல்லது, மற்றப் பக்திநெறிச் செயல்களுக்கு அதை மாற்றீடு செய்யலாம். திருஆட்சிப்பீடத்தின் அதிகாரத்திற்குட்பட்ட, திருப்பணியளருக்குரிய துறவற சபை அல்லது மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகத்தின் தலைவரும் தமது ஆளுகைக்கு உட்பட்டவர்களையும், தமது இல்லத்தில் இரவும் பகலும் தங்கி வாழ்பவர்களையும் பொறுத்தவரையில் அதே அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். இக்காரியத்தில் தி.ச. 87 ல் குறிப்பிடப்பட்டுள்ள மறைமாவட்ட ஆயர்களின் உரிமையைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
இயல் 1.
திருவிழா நாள்கள்
தி.ச. 1246. திருத்தூதர் மரபின்படி, பாஸ்கா மறை பொருள் கொண்டாடப்படும் ஞாயிறை அனைத்துலகத் திருச்சபையின் முதன்மையான கடன் திருநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும். அவ்வாறே, கீழ்க்கண்ட கடன் திருநாள்களையும் கடைப்பிடிக்கவேண்டும். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பு, திருக்காட்சி, விண்ணேற்றம், கிறிஸ்துவின் திருவுடல் திருஇரத்தம், இறைவனின் அன்னை புனித மரியா, அவருடைய அமலோற்பவம் மற்றும் விண்ணேற்பு, புனித யோசேப்பு. திருத்தூதர்களான புனித பேதுரு, பவுல், இறுதியாக அனைத்துப் புனிதர்கள்.
2) இருப்பினும், திருத்தூதரக ஆட்சிப்பீடத்தின் முன் அங்கீகாரத்துடன், ஆயர் பேரவை குறிப்பிட்ட சில கடன் திருநாள்களை நீக்கிவிடலாம், அல்லது ஒரு ஞாயிற்றுக் கிழமைக்கு மாற்றிவிடலாம்.
தி.ச. 1247. ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்றக் கடன் திருநாள்களிலும் விசுவாசிகள் திருப்பலியில் பங்கேற்கக் கடமைப்பட்டுள்ளனர், இறைவனுக்குச் செலுத்தவேண்டிய வழிபாட்டையோ, ஆண்டவரின் நாளுக்குரிய மகிழ்ச்சியையோ, உள்ளத்திற்கும் உடலுக்கும் உரித்தான ஓய்வையோ தடை செய்கிற வேலைகளையும் வாணிப நடவடிக்கைகளையும் அவர்கள் விலக்கவும் வேண்டும்.
தி.ச. 1248. திருவிழாவன்றோ முந்தின நாள் மாலையிலோ எந்த இடத்திலும் கத்தோலிக்க வழிபாட்டு முறையில் கொண்டாடப்படும் திருப்பலியில் பங்கேற்பதால், திருப்பலியில் பங்கேற்க வேண்டிய கட்டளை நிறைவு செய்யப்படுகிறது.
2) திருப்பணியாளர் இல்லாததால் அல்லது வேறு ஒரு கனமான காரணத்தின் பொருட்டு நற்கருணைக் கொண்டாட்டத்தில் பங்கேற்க இயலவில்லையென்றால், பங்கு ஆலயத்திலோ வேறொரு புனித இடத்திலோ, மறைமாவட்ட ஆயரின் விதியமைப்புகளுக்கேற்பக் கொண்டாடும் இறைவார்த்தை வழிபாட்டில் விசுவாசிகள் பங்கேற்கும்படி, அல்லது தனியாக அல்லது குடும்பத்தில் வாய்ப்புக் கிடைக்கும்போது, பல குடும்பங்கள் சேர்ந்து உரிய நேரத்திற்கு இறைவேண்டலில் ஈடுப:டும்படி மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.
இயல் 2.
தவநாள்கள்.
தி.ச. 1249. அனைத்துக் கிறிஸ்தவ விசுவாசிகளும், தங்களுக்குரிய விதத்தில், தவம் செய்ய இறைச்சட்டத்தால் கடமைப்பட்டுள்ளனர், இருப்பினும், அனைவரும் ஒருசில பொதுவான தவ முயற்சிகளைக் கடைப்பிடிப்பதில் ஒன்று சேரும் வண்ணம், தவநாள்கள் விதிக்கப்பட்டுள்ளன, இந்நாள்களில் கிறிஸ்தவ விசுவாசிகள் சிறப்பாக மன்றாடுகின்றனர், பக்தி மற்றும் அன்புச் செயல்களில் ஈடுபடுகின்றனர், தங்கள் கடமைகளை மிகவும் உண்மையுடன் நிறைவேற்றி, குறிப்பாகக் கிழ்க்கண்ட திருச்சபைச்சட்ட விதிமுறைக்கேற்ப நோன்பு மற்றும் புலால் உணவைத் தவிர்த்தலைக் கடைப்பிடித்துத் தங்களையே ஒறுக்கின்றனர்.
தி.ச. 1250. அனைத்துலகத் திருச்சபையில் ஆண்டின் எல்லா வெள்ளிக் கிழமைகளும் தவக்காலமும் தவநாள்களும் ஆகும்
தி.ச. 1251. புலால் உணவைத் அல்லது ஆயர் பேரவையின் விதியமைப்புகளுக்கேற்ப வேறு ஓர் உணவைத் தவிர்த்தலை எல்லா வெள்ளிக் கிழமைகளிலும், அவை பெரும் விழாக்களாய் இருந்தாலன்றி, கடைப்பிடிக்கவேண்டும். திருநீற்றுப் புதன் மற்றும் பெரிய வெள்ளிக் கிழமையில் புலால் உணவைத் தவிர்த்தலையும் நோன்பையும் கடைப்பிடிக்கவேண்டும்.
தி.ச. 1252. பதினான்கு வயதை நிறைவு செய்தவர்கள் சுத்தபோசன சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளனர், பொறுப்பேற்கும் வயதை அடைந்த அனைவரும், தங்களின் அறுபதாவது வயது ஆரம்பிக்கும்வரை, நோன்புச் சட்டத்தால் கட்டுப்பட்டுள்ளனர். இருப்பினும், நோன்பு மற்றும் சுத்தபோசன சட்டத்தால் கட்டுண்டிராத பொறுப்பேற்கும் வயதை அடையாதவர்களும் தவத்தின் உண்மைப் பொருள் கற்பிக்கப்படும் வண்ணம் மேய்ப்பர்களும் பெற்றோர்களும் கவனம் செலுத்தவேண்டும்.
தி.ச. 1253. நோன்பு மற்றும் புலால் உணவைத் தவிர்த்தல்பற்றிக் கடைப்பிடிக்கவேண்டிய இன்னும் துல்லியமான வழிமுறைகளை ஆயர் பேரவை நிர்ணயிக்கலாம். நோன்பு அல்லது புலால் உணவைத் தவிர்த்தலுக்குப் பதிலாக, முழுமையாகவோ பகுதி அளவிலோ, மற்றத் தவமுறைகளைச், சிறப்பாக அன்புச் செயல்களையும் பக்தி முயற்சிகளையும் மாற்றீடு செய்யலாம்..