புனித வெள்ளி

மறையுரை பணி. ஜெரால்டு குருஸ்

மறையுரை பணி. அருள்குமார்

மறையுரை பணி. ஜோசப் லியோன்


முழு வழிபாடு (வார்த்தை மற்றும் ஒலி வடிவில் பெற) இங்கே சொடுக்கவும்

முதல் வாசகம்

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52:13 - 53:12

இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. அவ்வாறே, அவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப்படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்துகொள்வர். நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? இளந்தளிர்போலும் வறண்ட நில வேர்போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை. அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம் தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். ஆடுகளைப்போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச்செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப் பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்துகொள்வார். ஆதலால், நான்அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்குக் கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திருப்பாடல் 31:1,5. 11-12, 14-15, 16 மற்றும் 24

பல்லவி: ``தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.''

1 ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்;
நான் ஒருபோதும் வெட்கமடைய விடாதேயும்;
உமது நீதிக்கேற்ப என்னை விடுவித்தருளும்.
5 உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்;
வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். -பல்லவி

11 என் பகைவர் அனைவரின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்;
என்னை அடுத்திருப்போரின் பேரிழிவுக்கு ஆளானேன்;
என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்;
என்னைத் தெருவில் பார்ப்போர் என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்.
12 இறந்தோர்போல் நினைவினின்று நான் அகற்றப்பட்டேன்;
உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன். -பல்லவி

14 ஆண்டவரே, நான் உம்மீது நம்பிக்கை வைத்துள்ளேன்;
`நீரே என் கடவுள்' என்று சொன்னேன்.
15 என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் உமது கையில் உள்ளது;
என் எதிரிகளின் கையினின்றும்
என்னைத் துன்புறுத்துவோரின் கையினின்றும் என்னை விடுவித்தருளும். -பல்லவி

16 உமது முகத்தின் ஒளி அடியேன்மீது வீசும்படி செய்யும்;
உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
24 ஆண்டவருக்காக நம்பிக்கையுடன் காத்திருப்போரே,
நீங்கள் அனைவரும் உள்ளத்தில் வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள். -பல்லவி

இரண்டாம் வாசகம்

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4:14-16; 5:7-9

வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல; மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக்கூடிய அருளைக் கண்டடையவும், அருள்நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறைமகனாய் இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வசனம்

கிறிஸ்து சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

 

யோவான் 18:1-19:42

தவக்காலம் -புனித வாரம் வெள்ளி

யோவான் 18:1 - 19:42

விரிஉரையாளர்: புனித யோவான் எழுதியபடி யேசுவின் திருப்பாடுகள்:

விரிஉரையாளர்: இவற்றைக் கூறியபின் இயேசு தம் சீடர்களோடு கெதரோன் என்னும் நீரோடையைக் கடந்து சென்றார். அங்கே ஒரு தோட்டம் இருந்தது. தம் சீடர்களோடு இயேசு அதில் நுழைந்தார். அவரைக் காட்டிக் கொடுத்த யூதாசுக்கு அந்த இடம் தெரியும். ஏனெனில், இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்குக் கூடுவர். படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான். தமக்கு நிகழப் போகிற அனைத்தையும் இயேசு அறிந்து அவர்கள்முன் சென்று,

இயேசு: "யாரைத் தேடுகிறீர்கள்?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அவர்கள் மறுமொழியாக,

மக்கள்: "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். இயேசு,

இயேசு: "நான்தான்"

விரிஉரையாளர்: என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களோடு நின்றுகொண்டிருந்தான். "நான்தான்" என்று இயேசு அவர்களிடம் சொன்னதும் அவர்கள் பின்வாங்கித் தரையில் விழுந்தார்கள்.

இயேசு: "யாரைத் தேடுகிறீர்கள்?"

விரிஉரையாளர்: என்று இயேசு மீண்டும் அவர்களிடம் கேட்டார். அவர்கள்,

மக்கள்: "நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். இயேசு அவர்களைப் பார்த்து,

இயேசு: "'நான்தான் ' என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்"

விரிஉரையாளர்: என்றார். "நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுள் எவரையும் நான் இழந்து விடவில்லை" என்று அவரே கூறியிருந்தது இவ்வாறு நிறைவேறியது. சீமோன் பேதுருவிடம் ஒரு வாள் இருந்தது. அவர் அதை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவரது வலக்காதை வெட்டினார். அப்பணியாளரின் பெயர் மால்கு. இயேசு பேதுருவிடம்,

இயேசு: "வாளை உறையில் போடு. தந்தை எனக்கு அளித்த துன்பக் கிண்ணத்திலிருந்து நான் குடிக்காமல் இருப்பேனோ?"

விரிஉரையாளர்: என்றார். படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி, முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார். இந்தக் கயபாதான், "ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது" என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர். சீமோன் பேதுருவும் மற்றொரு சீடரும் இயேசுவைப் பின்தொடர்ந்து வந்தனர். அந்தச் சீடர் தலைமைக் குருவுக்கு அறிமுகமானவர்; ஆகவே இயேசுவுடன் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் நுழைந்தார். பேதுரு வெளியில் வாயிலருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தலைமைக் குருவுக்கு அறிமுகமாயிருந்த அந்தச் சீடர் வெளியே வந்து, வாயில் காவலரிடம் சொல்லிப் பேதுருவை உள்ளே கூட்டிச் சென்றார். வாயில் காவல் செய்த அப்பணிப்பெண் பேதுருவிடம்,

பணிப்பெண்: "நீயும் இம்மனிதனுடைய சீடருள் ஒருவன் தானே?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். பேதுரு,

பேதுரு: "இல்லை"

விரிஉரையாளர்: என்றார். அப்போது குளிராய் இருந்ததால் பணியாளர்களும் காவலர்களும் கரியினால் தீமூட்டி அங்கே நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள்.

விரிஉரையாளர்: தலைமைக் குரு இயேசுவின் சீடர்களைப்பற்றியும் அவருடைய போதனையைப்பற்றியும் அவரிடம் கேட்டார். இயேசு அவரைப் பார்த்து,

இயேசு: "நான் உலகறிய வெளிப்படையாய்ப் பேசினேன். யூதர் அனைவரும் கூடிவரும் தொழுகைக் கூடங்களிலும் கோவிலிலும்தான் எப்போதும் கற்பித்து வந்தேன். நான் மறைவாக எதையும் பேசியதில்லை. ஏன் என்னிடம் கேட்கிறீர்? நான் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களிடம் கேட்டுப்பாரும். நான் என்ன சொன்னேன் என அவர்களுக்குத் தெரியுமே"

விரிஉரையாளர்: என்றார். அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர்,

காவலர்: "தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்?"

விரிஉரையாளர்: என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார். இயேசு அவரிடம்,

இயேசு: "நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார். சீமோன் பேதுரு அங்கு நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம்,

மக்கள்: "நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே"

விரிஉரையாளர்: என்று கேட்டனர். அவர்

பேதுரு: "இல்லை"

விரிஉரையாளர்: என்று மறுதலித்தார். தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர்,

பணியாளர்: "நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர். பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று. அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை. எனவே பிலாத்து வெளியே அவர்களிடம் வந்து,

பிலாத்து: "நீங்கள் இந்த ஆளுக்கு எதிராகக் கூறும் குற்றச்சாட்டு என்ன?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அதற்கு அவர்கள்,

மக்கள்: "இவன் குற்றம் செய்யாதிருந்தால் இவனை நாங்கள் உம்மிடம் ஒப்புவித்திருக்க மாட்டோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "நீங்கள் இவனைக் கொண்டுபோய் உங்கள் சட்டப்படி இவனுக்குத் தீர்ப்பு வழங்குங்கள்"

விரிஉரையாளர்: என்றார். யூதர்கள் அவரிடம்,

மக்கள்: "சட்டப் படி நாங்கள் யாருக்கும் மரண தண்டனை விதிக்க முடியாது"

விரிஉரையாளர்: என்றார்கள். இவ்வாறு, தாம் எப்படிப்பட்ட சாவுக்கு உட்படப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டு இயேசு கூறியிருந்ததை நிறைவேறச் செய்தார்கள். பிலாத்து மீண்டும் ஆளுநர் மாளிகைக்குள் சென்று இயேசுவைக் கூப்பிட்டு, அவரிடம்,

பிலாத்து: "நீ யூதரின் அரசனா?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். இயேசு மறுமொழியாக,

இயேசு: "நீராக இதைக் கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் என்னைப்பற்றி உம்மிடம் சொன்னதை வைத்துக் கேட்கிறீரா?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். அதற்கு பிலாத்து,

பிலாத்து: "நான் ஒரு யூதனா, என்ன? உன் இனத்தவரும் தலைமைக் குருக்களும் தானே உன்னை என்னிடம் ஒப்புவித்தார்கள். நீ என்ன செய்தாய்?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். இயேசு மறுமொழியாக,

இயேசு: "எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. அது இவ்வுலக ஆட்சி போன்றதாய் இருந்திருந்தால் நான் யூதர்களிடம் காட்டிக் கொடுக்கப்படாதவாறு என் காவலர்கள் போராடியிருப்பார்கள். ஆனால் என் ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல"

விரிஉரையாளர்: என்றார். பிலாத்து அவரிடம்,

பிலாத்து: "அப்படியானால் நீ அரசன்தானோ?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். அதற்கு இயேசு,

இயேசு: "அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்"

விரிஉரையாளர்: என்றார். பிலாத்து அவரிடம்,

பிலாத்து: "உண்மையா? அது என்ன?"

விரிஉரையாளர்: என்று கேட்டார். இப்படி கேட்டபின் பிலாத்து மீண்டும் யூதரிடம் சென்று,

பிலாத்து: "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே"

விரிஉரையாளர்: என்றான். மேலும்,

பிலாத்து: "பாஸ்கா விழாவின்போது உங்கள் விருப்பப்படி ஒரு கைதியை விடுதலை செய்யும் வழக்கம் உண்டே! யூதரின் அரசனாகிய இவனை நான் விடுதலை செய்யட்டுமா? உங்கள் விருப்பம் என்ன?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். அதற்கு அவர்கள்,

மக்கள்: "இவன் வேண்டாம். பரபாவையே விடுதலை செய்யும்"

விரிஉரையாளர்: என்று மீண்டும் கத்தினார்கள். அந்தப் பரபா ஒரு கள்வன்.

அதிகாரம் 19

விரிஉரையாளர்: பின்னர் பிலாத்து இயேசுவைச் சாட்டையால் அடிக்கச் செய்தான். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர் தலையின்மேல் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் வந்து,

மக்கள்: "யூதரின் அரசே வாழ்க!"

விரிஉரையாளர்: என்று சொல்லி அவருடைய கன்னத்தில் அறைந்தார்கள். பிலாத்து மீண்டும் வெளியே வந்து அவர்களிடம்,

பிலாத்து: "அவனை நான் உங்கள்முன் வெளியே கூட்டிவருகிறேன், பாருங்கள். அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை என்பதை அறிந்;துகொள்ளுங்கள்"

விரிஉரையாளர்: என்றான். இயேசு முள் முடியும் செந்நிற மேலுடையும் அணிந்தவராய் வெளியே வந்தார். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "இதோ! மனிதன்"

விரிஉரையாளர்: என்றான். அவரைக் கண்டதும் தலைமைக் குருக்களும் காவலர்களும்,

மக்கள்: "சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்"

விரிஉரையாளர்: என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள். இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை"

விரிஉரையாளர்: என்றான். யூதர்கள் அவரைப் பார்த்து,

மக்கள்: "எங்களுக்கு ஒரு சட்டம் உண்டு. அச்சட்டத்தின்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னையே இறைமகன் என உரிமைகொண்டாடுகிறான்"

விரிஉரையாளர்: என்றனர். பிலாத்து இதைக் கேட்டதும் இன்னும் மிகுதியாக அஞ்சினான். அவன் மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று இயேசுவிடம்,

பிலாத்து: "நீ எங்கிருந்து வந்தவன்?"

விரிஉரையாளர்: என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. அப்போது பிலாத்து,

பிலாத்து: "என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு, உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?"

விரிஉரையாளர்: என்றான். இயேசு மறுமொழியாக,

இயேசு: "மேலிருந்து அருளப்படாவிடில் உமக்கு என் மேல் எந்த அதிகாரமும் இராது. ஆகவே என்னை உம்மிடம் ஒப்புவித்தவன்தான் பெரும் பாவம் செய்தவன்"

விரிஉரையாளர்: என்றார். அதுமுதல் பிலாத்து அவரை விடுவிக்க வழிதேடினான். ஆனால் யூதர்கள்,

மக்கள்: "நீர் இவனை விடுவித்தால் சீசருடைய நண்பராய் இருக்க முடியாது. தம்மையே அரசராக்கிக் கொள்ளும் எவரும் சீசருக்கு எதிரி"

விரிஉரையாளர்: என்றார்கள். இவ்வார்த்தைகளைக் கேட்டதும் பிலாத்து இயேசுவை வெளியே கூட்டி வந்தான். "கல்தளம்" என்னும் இடத்தில் இருந்த நடுவர் இருக்கை மீது அமர்ந்தான். அந்த இடத்திற்கு எபிரேய மொழியில் "கபதா" என்பது பெயர். அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். ஏறக்குறைய நண்பகல் வேளை. பிலாத்து யூதர்களிடம்,

பிலாத்து: "இதோ, உங்கள் அரசன்!"

விரிஉரையாளர்: என்றான். அவர்கள்,

மக்கள்: "ஒழிக! ஒழிக! அவனைச் சிலுவையில் அறையும்"

விரிஉரையாளர்: என்று கத்தினார்கள். பிலாத்து அவர்களிடம்,

பிலாத்து: "உங்கள் அரசனை நான் சிலுவையில் அறையவேண்டும் என்கிறீர்களா?

விரிஉரையாளர்: என்று கேட்டான். அதற்குக் தலைமைக் குருக்கள்,

தலைமைக்குருக்கள்: "எங்களுக்குச் சீசரைத் தவிர வேறுஅரசர் இல்லை"

விரிஉரையாளர்: என்றார்கள். அப்போது பிலாத்து அவரைச் சிலுவையில் அறையுமாறு அவர்களிடம் ஒப்புவித்தான். அவர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள். இயேசு சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு "மண்டை ஓட்டு இடம்" என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர். அங்கே அவர்கள் இயேசுவையும் அவரோடு வேறு இருவரையும் சிலுவைகளில் அறைந்தார்கள்; அவ்விருவரையும் இரு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாக அறைந்தார்கள். பிலாத்து குற்ற அறிக்கை ஒன்று எழுதி அதைச் சிலுவையின் மீது வைத்தான். அதில் "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என்று எழுதியிருந்தது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்துக்கு அருகில் இருந்ததால் யூதருள் பலர் இந்தக் குற்ற அறிக்கையை வாசித்தனர். அது எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருந்தது. யூதரின் தலைமைக் குருக்கள் பிலாத்திடம்,

குருக்கள்: "'யூதரின் அரசன் ' என்று எழுத வேண்டாம்; மாறாக, "யூதரின் அரசன் நான்" என்று அவனே சொல்லிக் கொண்டதாக எழுதும்"

விரிஉரையாளர்: என்று கேட்டுக்கொண்டார்கள். பிலாத்து அவர்களைப் பார்த்து,

பிலாத்து: "நான் எழுதியது எழுதியதே"

விரிஉரையாளர்: என்றான்.

விரிஉரையாளர்: இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின் படைவீரர் அவருடைய மேலுடைகளை நான்கு பாகமாகப் பிரித்து ஆளுக்கு ஒரு பாகம் எடுத்துக் கொண்டார்கள். அங்கியையும் அவர்களே எடுத்துக்கொண்டனர். அந்த அங்கி மேலிருந்து கீழ்வரை தையலே இல்லாமல் நெய்யப்பட்டிருந்தது. எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி,

படைவீரர்: "அதைக் கிழிக்க வேண்டாம். அது யாருக்குக் கிடைக்கும் என்று பார்க்கச் சீட்டுக் குலுக்கிப் போடுவோம்"

விரிஉரையாளர்: என்றார்கள். "என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து என் உடைமீது சீட்டுப் போட்டார்கள்" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம்,

இயேசு: "அம்மா, இவரே உம் மகன்"

விரிஉரையாளர்: என்றார். பின்னர் தம் சீடரிடம்,

இயேசு: "இவரே உம் தாய்"

விரிஉரையாளர்: என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு,

இயேசு: "தாகமாய் இருக்கிறது"

விரிஉரையாளர்: என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறையப்புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள் அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு,

இயேசு: "எல்லாம் நிறைவேறிற்று"

விரிஉரையாளர்: என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.

(அனைவரும் முழந்தாள் படியிட்டு மெளனமாக ஜெபிக்கவும்)

விரிஉரையாளர்: அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள். ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன. இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். "எந்த எலும்பும் முறிபடாது" என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் "தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்" என்றும் மறைநூல் கூறுகிறது. அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் இயேசுவின் சீடர்களுள் ஒருவர்; யூதருக்கு அஞ்சியதால் தம்மைச் சீடர் என்று வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாதவர். அவர் இயேசுவின் உடலை எடுத்துக் கொண்டுபோகக் பிலாத்திடம் அனுமதி கேட்டார். பிலாத்தும் அனுமதி கொடுத்தான். யோசேப்பு வந்து இயேசுவின் சடலத்தை எடுத்துக்கொண்டு போனார். முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார். அவர்கள் இயேசுவின் உடலை எடுத்து யூத அடக்க முறைப்படி நறுமணப் பொருள்களுடன் துணிகளால் சுற்றிக் கட்டினார்கள். அவர் சிலுவையில் அறையப்படடிருந்த இடத்தில் ஒருதோட்டம் இருந்தது. அங்கே புதிய கல்லறை ஒன்று இருந்தது. அதில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்படவில்லை. அன்று பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாய் இருந்ததாலும் அக்கல்லறை அருகில் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

-------------------------

யோவான் 18: 1 – 19: 42
மாற்றி யோசி

சிலுவை நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அச்சத்தைக் கொடுக்கின்றது. ஏனென்றால் எந்த பக்கம் திரும்பினாலும் இந்த சிலுவை தான் நம் கண்களுக்கு தொிகின்றது. கணிதத்தில் க்ராஸ் என்பது கூட்டல் அல்லது பெருக்கல் ஆகும். அல்ஜிப்ராவில் க்ராஸ் என்பது வெறுமை என்பது ஆகும். டிராபிக்கில் க்ராஸ் என்பது வெறுமை என்பது ஆம்புலன்ஸ் ஆகும். பேட்டரி மற்றும் இரத்த வகை பாஸிட்டிவ் என்பது ஆகும். அடையாளங்களில் க்ராஸ் தடைசெய்யப்பட்ட பகுதி ஆகும். சாலைகளில் க்ராஸ் என்பது சந்திப்பு என்பது ஆகும். உரோமை எழுத்துக்களில் க்ராஸ் என்பது 10 என்பது ஆகும். விடைத்தாளில் க்ராஸ் என்பது தவறு என்பது ஆகும். ATM பின்னை பதிவு செய்யும்போது க்ராஸ் வந்தால் சீக்ரெட் என்பது ஆகும். இவ்வாறு எங்கு பார்த்தாலும் சிலுவை. இது பல அடையாளங்களை தருகின்றது. இதனை மாற்று வழியில் சிந்திக்கின்ற போது தான் இதன் மகத்துவம் நமக்கு தெரிய வருகிறது.

அது போல தான் அவமானத்தின் அடையாளமாக விளங்கிய சிலுவை மரம் இன்று மதிப்பும் வணக்கத்திற்குரிய பொருளாக மாறுகிறது. காரணம் என்னவென்றால் இன்று கிறிஸ்தவ வாழ்வின் மையமாக திகழ்கிறது. மடமையாக கருதப்பட்ட சிலுவை மாட்சியின் அடையாளமாக விளங்குகிறது. இயேசு எதற்காக சிலுவையை தூக்கிச் சென்றார் என்றால் சமுதாயத்தில் ஓரந்தள்ளப்பட்ட ஒதுக்கப்பட்ட மனிதர்களையும் நாம் இறையாட்சியின் விழுமியங்களை நோக்கி தூக்கி சுமந்து செல்ல வேண்டும் என்பதற்காக தான். ஏனென்றால் அவர்கள் தான் இறையாட்சிக்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதனைச் சுட்டி காட்டித்தான் சமாரியப் பெண், இடையர்கள், பேதுரு காரணம் ஒடுக்கப்படோரின் வாழ்வில் விடுதலை கொணர்வதற்காக தான் மீட்பு நடந்தது. அதனை எண்பித்துக் காட்டி தான் கடவுள் சிலுவை மரத்தினை தோ்வு செய்கின்றார்.

நாம் சிலுவையை எவ்வாறு பார்க்கின்றோம்? மரமாகவா அல்லது மனித பண்புகளாகவா? சிந்திப்போம்.

- அருட்பணி. பிரதாப்

================================

யோவான் 18: 1- 19 : 42
அவரின் மனநிலை

எத்தனையோ மக்கள் தம் உயிரைப் பிறர்க்கெனக் கொடுத்துள்ளார்கள். எத்தனையோ நாட்டுத் தலைவர்கள் தனது நாட்டு மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனால் எவரது இரத்தமும் பாவக் கறைகளைக் கழுவியதாக வரலாறு இல்லை. பலருக்காக ஒருவர் இறந்த சரித்திரம் இல்லை. ஆனால் ஆண்டவரின் இரத்தமே “பலருடைய பாவங்களுக்காகச் சிந்தப்படும் இரத்தம்” (மத்தேயு 26:29). நம்மை நீதிமான்களாக்கிய இரத்தம் (உரோ 5:9). விலை மதிக்கப்படாத இரத்தம் (1பேதுரு 1:19). கல்வாரியில் பெரிய வெள்ளியன்று சிந்தப்பட்ட இவ்விரத்தமே நம்மை மீட்கும் இரத்தம். இந்த இரத்தம்தான் நம் அடிமைத்தனத்தை மாற்றி எழுதியது. இப்படி இயேசு மக்கள் அனைவரையும் கடவுளுக்கு முன்பாக தனது சிலுவையின் மூலமாகக் கூட்டிச் சேர்த்தார். அவருக்கு முன் நிற்கத் தகுதியுள்ளவர்களைத் தரம் உயர்த்தினார்.

அநியாயக் குற்றம் சுமத்தி இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதை பிலாத்து உணர்ந்தான். எனினும் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டான். இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, சிகப்புப் போர்வைப் போர்த்தி, மரக்கட்டையில் அமர்த்தி, கோலால் தலையில் அடித்து, இவரைப் போலி அரசரெனக் கேலி செய்தனர் போர் வீரர்கள். உருக்குலைந்து நிற்கும் திருக்குமாரனை, “இதோ மனிதன்” என்று கூறி அடையாளம் காட்ட வேண்டிய நிலையில் இருந்தார் இயேசு. அவரைக் கொல்ல வேண்டுமென கொக்கரித்தது கூட்டம். “அவரிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை” என்று கூறிச் சிலுவைத் தீர்ப்பிட்டான் பிலாத்து. இதுவரை உலகில் நீதிமன்றங்கள் அளித்தத் தீர்ப்புகளில் மிகவும் அநீதியான தீர்ப்பு இது.

அந்நிலையிலும் தன்னைக் காட்டிக் கொடுத்தவருக்காக, மறுதலித்தவர்களுக்காக, விட்டுவிட்டு ஓடியவர்களுக்காக, ஏளனம் செய்தவர்களுக்காக, ஆடையைக் குலுக்கல் போட்டுப் பிரித்தவர்களுக்காக, தன்னைச் சாட்டையால் அடித்தவர்களுக்காக, தன்னை ஆணியால் அறைந்தவர்களுக்காக, தன்னை ஈட்டியால் குத்தியவர்களுக்காக தொடர்ந்து பரிந்து பேசி மன்னிப்பு வாங்கிக் கொடுத்தார் நமது மீட்பின் இயேசு. அவரின் மனநிலை நமதாகட்டும்.

- திருத்தொண்டர் வளன் அரசு

========================

திருப்பாடல் 31: 1, 5, 11 – 12, 14 – 15, 16, 24
”தந்தையே! உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்”

”தந்தை” என்கிற வார்த்தை ஆழமான அன்பை வெளிப்படுத்தக்கூடிய வார்த்தை. பொதுவாக, நாம் எல்லாருமே ”அம்மா” என்று அழைப்பதற்கு அதிக ஆவல் கொண்டிருப்போம். ஏனென்றால், தாயன்பு ஒரு பிள்ளையை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. நாம் தவறு செய்தாலும், நமக்காகப் பரிந்து பேசுகிறவள் தாயாகத்தான் இருப்பாள். அது குழந்தையை மேலும் மேலும் தவறு செய்ய தூண்டுவதல்ல, மாறாக, தன்னுடைய குழந்தையின் மீது அவள் வைத்திருக்கிற மாசுமருவற்ற அன்பை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாருமே, நிச்சயம் தாயிடத்தில் அதிக உரிமையோடு இருப்பதைப் பார்க்கலாம். அது கோபமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி. தாயிடத்தில் உரிமையோடு வெளிப்படுத்தலாம். ஆனால், ஒரு குடும்பத்தில் தந்தையுடனான நெருக்கம் சற்று இடைவெளி உள்ளது போல தோன்றும்.

 

ஒரு குடும்பத்தில்,கண்டிப்பு என்றால் அது தந்தையைச் சார்ந்தது. பிள்ளை எப்படி வளர வேண்டும்? என்பதை தீர்மானிக்கக்கூடிய சக்தியாகவும் தந்தை இருக்கிறார். அவருடைய வழிநடத்துதல் குடும்பத்தல் இருக்கிற பிள்ளைகளுக்குத் தேவைப்படுகிறது. தந்தையைப் பார்த்து ஒரு குழந்தை கொஞ்சம் பயப்படும். ஒருவிதமான இடைவெளி தந்தைக்கும், பிள்ளைகளுக்கும் இடையே எப்போதும் இருக்கும். அந்த இடைவெளியை நிரப்புகிறவராகத்தான் ஒரு குடும்பத்தில் தாய் இருப்பாள். இங்கே திருப்பாடல் ஆசிரியர், கடவுளை தந்தை என்று அழைக்கிறார். அதாவது, கடவுளின் கண்டிப்பை வெறுப்பவராக அல்ல,  கடவுளுடைய வழிநடத்துதலை விரும்பாதவராக அல்ல, மாறாக, அந்த உறவை அதிகம் விரும்புகிறவராக, அந்த உறவிற்காக ஏங்கக்கூடியவராக தன்னை வெளிப்படுத்துகிறார். அந்த தந்தையிடத்தில் தன் உயிரையுமே முழுமையாக ஒப்படைக்கிறார்.

 

கடவுள் நம் தந்தையாக இருப்பது, நமக்கெல்லாம் எப்படிப்பட்ட மகிழ்ச்சியைத் தருவதாக அமைய வேண்டும் என்பதை, இது நமக்கு வெளிக்காட்டுகிறது. தந்தை நம்மிடம் கண்டிப்போடு இருந்தாலும், அதனை நல்வழிப்படுத்துவதற்காகவே என்கிற முதிர்ச்சியுள்ள மனநிலையை நாம் பெறுவதற்கு, இந்த திருப்பாடல் நமக்கு உதவி செய்கிறது. அது நமது விண்ணகத்தந்தையாக இருந்தாலும், மண்ணகத்தில் இருக்கிற தந்தையாக இருந்தாலும், அவர்களிடத்தில் நாம் முழுமையாக அன்பு கொள்வோம்.

  1. அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------

கடவுளின் வாக்குறுதிகள்

இன்றைக்கு பேசுகிற பேச்சிலே சுத்தம் இல்லாத நிலை நிலவி வருகிறது. வாயில் வருகிற வார்த்தையையெல்லாம் பேசுவதும், அர்த்தமில்லாமல் எதுகை, மோனையை மனதில் வைத்துப்பிதற்றுவதும் அன்றாடம் நாம் வாசிக்கக்கூடிய செய்தியாகிவிட்டது. குறிப்பாக, அரசியல் தளத்தில், தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் செய்கிற வார்த்தை விளையாட்டுக்களுக்கு பஞ்சமே இல்லாமல், கேலிக்கூத்தாக மாறிக்கொண்டிருக்கக்கூடிய காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நேற்று ஒரு கட்சியில் இருக்கிறார். எதிர்க்கட்சியைப் பார்த்து பொறிந்து தள்ளுகிறார். ” அவரெல்லாம் திருந்தவே மாட்டார். நரகத்திலே தூக்கிப்போட்டாலும் அவர் திருந்த மாட்டார்” என்கிறார். சில நாட்களில் அந்த கட்சியில் சேர்ந்து, தான் வசைபாடியவரை, புகழ்ந்து பாட ஆரம்பிக்கிறார். நாளை மற்றொரு கட்சிக்கு சென்று, மீண்டும் பழைய பல்லவியை பாட ஆரம்பிக்கிறார். ”கூடா நட்பு கேடாய் முடியும்” என்று சொல்கிறார். மீண்டும் அவர்களோடு நட்பு பாராட்டுகிறார். கேட்டால் அது அரசியல் தந்திரம். இதற்கு அரசியல்வாதிகள் அகராதியில், “அரசியலில் நிரந்த பகைவரும் இல்லை. நிரந்தர எதிரியும் இல்லை“ என்று பெயர். இப்படி வார்த்தைகளின் கனத்தை உணராமல், தான்தோன்றித்தனமாக, ஊதாரரித்தனமாக வார்த்தைகளை, வெற்று வார்த்தைகளாக உதிர்த்து வரும் அரசியல் வியாபாரிகள் நிறைந்த இந்த காலக்கட்டத்தில், கடவுள் தன் வார்த்தைகள் எந்த அளவுக்கு பிரமாணிக்கமாய் இருக்கிறார் என்பதை, இயேசுவின் இறப்பு நிகழ்ச்சி நமக்கு எடுத்துரைக்கிறது.

”எல்லாம் நிறைவேறிற்று” என்கிற வார்த்தைகள், இரண்டு வார்த்தைகளின் தொகுப்பு அல்ல. இரண்டாயிரம் ஆண்டு காலமாக வாக்களிக்கப்பட்ட கடவுளின் வாக்கு நிறைவேறிய தீர்க்கம். கடவுள் தனது வாக்குறுதிகளுக்கு எந்த அளவுக்கு பிரமாணிக்கமாய் இருக்கிறார் என்பதை உணரச்செய்யும் தீவிரத்தை நாம் இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். கடவுளின் வார்த்தைகள் அனைத்துமே நிறைவேறியதை மத்தேயு நற்செய்தியாளர் ”இவ்வாறு மறைநூல் வாக்கு நிறைவேறியது” என்ற பாணியில் பதிவு செய்கிறார். கடவுளிடமிருந்து புறப்பட்ட வார்த்தைகள் இந்த மண்ணில் நிச்சயம் நிறைவேறியே தீரும். நாம் பிரமாணிக்கமாய் இருக்கிறோமோ இல்லையோ, கடவுள் பிரமாணிக்கமாய் இருக்கிறார் என்பதை, இது நமக்கு தெள்ளத்தெளிவாக்குகிறது. தொடக்கநூலிலிருந்து, இறைவாக்கினர்கள் வரை உதிர்க்கப்பட்ட வார்த்தைகள், கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இயேசுவின் இந்த வார்த்தையில் நிறைவேறுகிறது.

யார் எப்படி வாழ்ந்தாலும், நாம் எப்படி வாழ்கிறோம்? என்பது நமது வாழ்வில் மிகமுக்கியமானது. அடுத்தவர்களை மையமாக வைத்து நமது வாழ்வை நாம் வாழ்ந்தால், அது நிறைவான வாழ்வாக இருக்காது. யார் எப்படி வாழ்ந்தாலும், கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற மனச்சாட்சிக்கு ஏற்ப வாழ்வதுதான், சிறந்த வாழ்வாக இருக்கும்.
- அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

இயேசுவில் நம்பிக்கை கொள்வோம்.

கடைசி இரவு உணவு முடிந்ததும், இயேசுவும் அவருடைய சீடர்களும் கெத்சமெனி தோட்டத்திற்குச் செல்கிறார்கள். அவர்கள் அதை அடைவதற்கு கெதரோன்  ஓடையின் குறுக்கே கடந்து செல்ல வேண்டியிருந்தது. அதைக்கடக்கிறபோது, இயேசுவுக்கு தனது பாடுகளைப்பற்றிய நினைவு நிச்சயம் வந்திருக்கக்கூடும். அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை.

ஒவ்வொரு பாஸ்கா விழாவின் போதும், பல ஆடுகள் யெருசலேம் ஆலயத்தில் பலியிடப்பட்டன. இயேசு இறந்தபிறகு 30 ஆண்டுகளுக்குப்பிறகு மட்டும், 2,56,000 ஆடுகள் ஒரு பாஸ்கா விழாவின் போது பலியிடப்பட்டதாம். அந்த அளவு எண்ணிக்கையில் ஆடுகள் பலியிடப்பட்டன. பலியிடப்பட்ட ஆடுகளின் இரத்தம் பீடத்திலிருந்து வாய்க்கால் வழியாக, கெதரோன் ஓடையை வந்தடைந்தது. இயேசு அந்த வழியாக கெத்சமெனி தோட்டத்திற்குச் செல்வதற்கு முன்னதாக, அங்கே ஓடிக்கொண்டிருந்த ஆறு நிச்சயம் இரத்த ஆறாகத்தான் இருந்திருக்கும். அது இயேசுவுக்கு தனது பாடுகளைப்பற்றிய நினைவை ஏற்படுத்தியிருக்கும். அவர் அங்கே பார்த்த இரத்தம், அவருக்கு இன்னும் மனஉளைச்சலை ஏற்படுத்தியிருக்கும். அவரது மனதில் குழப்பத்தையும், உதறலையும் நிச்சயம் அது கொடுத்திருக்கும். இருக்கும் கொஞ்ச தைரியத்தையும் அது இழப்பதாக இருந்திருக்கும். ஆனாலும் இயேசு துணிந்து செல்கிறார். எதைப்பற்றியும் கலங்காமல் செல்கிறார். அந்த இரத்தத்தைப் பார்த்து, தனது பாடுகளை நினைத்து பயந்து ஓடவில்லை. துணிந்து செல்கிறார். அதற்கு அவருடைய செப வாழ்வு நிச்சயமாக உதவியாக இருந்திருக்கும்.

வாழ்வின் துன்பங்களைக்கண்டு நாம் பல வேளைகளில் பயந்து விடுகிறோம். இது நடந்து விடுமோ? என்று பயந்தே பல வேளைகளில் நமது வாழ்வை வாழாமல் இருந்து விடுகிறோம். பயமே நமது வாழ்க்கையாகி விடுகிறது. நிறைவில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயேசுவிடமிருந்து துணிவைக் கற்றுக்கொள்வோம். கடவுள் மட்டில் நமது நம்பிக்கையை அதிகமாக்குவோம்.

  • அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

--------------------------------------------------------

தியாகமும் வாழ்வும்

எங்கே தியாகம் இருக்கிறதோ, அங்கே வாழ்வு இருக்கிறது. இந்த உலகம் இருப்பதும், இயங்குவதும், வரலாற்றிலே, வாழ்ந்த தன்னலமற்ற தியாக உள்ளங்களினால் தான். எனை ஈன்ற தந்தைக்கும், எனை வளர்த்த தாய்நாட்டிற்கும், என்னால் சிறிதளவு நன்மை கிடைக்குமானால், செத்தொழியும் நாளும் எனக்கு திருநாளே. இதுதான், தமிழர்களாகிய நம்முடைய முன்னோர்களின் வாழ்வு முறை. இன்று நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? அடுத்தவனுக்கு குழிவெட்டி, எப்படியாவது நான் வாழ்க்கையில் முன்னேறிவிடலாம் என்கிற பார்வைதான் அதிகம். அப்படிப்பட்ட பார்வையை மறந்து, தியாக உள்ளங்களாக மாற இன்றைய வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது.

இயேசு கிறிஸ்து, தான் கடவுளின் மகன் என்கிற உயர்ந்த நிலையை நமக்காக தியாகம் செய்தார். நாம் வாழ்வு பெற வேண்டும் என்பதற்காக, தன்னையே வெறுமையாக்கி, அடிமையின் தன்மை பூண்டு, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச்சாவையே ஏற்கும் அளவுக்கு, தன்னை தியாகம் செய்தார். நமக்காக தன் உடலையே உணவாகத்தந்தார். எனவே, நாம் வாழ்வு பெற்றுள்ளோம். எவ்வாறு ஒரு மனிதனுடைய கீழ்ப்படியாமையால் இந்த உலகத்திற்கு சாவு வந்தததோ, அதேபோல ஒரு மனிதருடைய தியாகத்தினால் நாம் அனைவருமே, வாழ்வு பெற்றுள்ளோம். இயேசுவினுடைய தியாகம் கல்வாரி மலையோடு நின்று விடவில்லை. தொடர்ந்து ஒவ்வொரு நாளும், திருப்பலியிலே, நமக்காக தன்னை தியாகம் செய்கிறார். இந்த அப்ப, இரச வடிவிலே நமக்கு வாழ்வு கொடுத்துக்கொண்டிருக்கிறார். எனவே தான் இயேசு கூறுகிறார்: “வாழ்வு தரும் உணவு நானே: இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வர்”.

எங்கே தியாகம் இருக்கிறதோ, அங்கே வாழ்வு இருக்கிறது. இயேசுவினுடைய ஒவ்வொரு சீடரும், உலகமெங்கும், கடினமான , உயிருக்கு ஆபத்தான கப்பல் பயணத்தை மேற்கொண்டு, தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தார்கள். அதனால், உண்மை கடவுளை அறிந்தவர்களாக நாம் அனைவருமே வாழ்வு பெற்றுள்ளோம். உலகம் முழுமைக்கும் நற்செய்தியை கொண்டு சென்றவர் புனித சின்னப்பர். எத்தனை கப்பல் பயணங்கள், எத்தனை ஆபத்துகள். இருந்தாலும், அவற்றையெல்லாம், புறந்தள்ளிவிட்டு, தன்னுடைய வாழ்க்கையை தியாகம் செய்தார். எத்தனையோ மக்கள் வாழ்வு பெற்றிருக்கிறார்கள்.

கிறிஸ்தவர்களாக வாழ அழைக்கப்பெற்றிருக்கிற நாம் ஒவ்வொருவரும், தியாக வாழ்வை வாழ நினைவூட்டப்படுகிறோம். நம்முடைய தியாகம், நிச்சயம் மற்றவருக்கு வாழ்வு கொடுக்கும், என்றால், அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த திருவிழா நமக்கு அழைப்பு விடுக்கிறது. சாதாரண உணவு உடலில், பல்வேறு வேதிவினை மாற்றங்களை நிகழ்த்தும்போது, இயேசுவின் உடலையும், இரத்தத்தையும் உட்கொள்ளும், நம் வாழ்வில் ஆழமான, இன்னும் அதிகமான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இயேசுவின் செயல்பாடுகள் நம் செயல்பாடுகளாக மாற வேண்டும்.

- அருட்பணி. தாமஸ் ரோஜர்

=======================

ஆணி கொண்ட உம் காயங்களை...!

இன்று இயேசுவின் இறப்பையும், அந்த இறப்பை வழங்கிய சிலுவையையும் நாம் பற்றிக் கொள்கிறோம், ஆணி கொண்ட இயேசுவின் காயங்களை அன்புடன் முத்தி செய்கிறோம்.

இயேசு பாவமே இல்லாதவர். கடவுளுடைய மகன். "எல்லா வகையிலும் நம்மைப் போலச் சோதிக்கப்பட்டவர். எனினும், பாவம் செய்யாதவர்" என்று இன்றைய இரண்டாம் வாசகம் தெளிவாக எடுத்துரைக்கிறது. பாவமே இல்லாத ஒருவர் நமக்காக பாவத்தின் தண்டனையாம் சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்டார் என்பது மிகப் பெரிய தியாகம். இந்த நாளில் இயேசுவின் தியாகத்தைப் போற்றுகிறோம். அவரது காயங்களால் நாம் குணமடைந்தோம் என்பதை உணர்ந்து, அவரது காயங்களைப் போற்றுகிறோம்.

இயேசுவைப் போலவே, இன்னும் பலர் இந்த உலகில் தவறுகளே செய்யாமல் தண்டிக்கப்படுகிறார்கள், அவர்களுடைய காயங்களை நாம் முத்தம் செய்கிறோமா? புறக்கணிக்கிறோமா? நமது குடும்பத்திலே நமது தாய், தந்தை நமக்காகத் தியாகங்களைச் செய்துள்ளார்கள். அவர்களது தியாகத்தை நாம் போற்றுகிறோமா? அவர்களின் அன்பை முத்தம் செய்கிறோமா?

சில வேளைகளில் தவறு ஏதும் செய்யாவிடினும், நாம் குறைசொல்லப்படும்போது, நாம் ஏன் பொங்கி எழவேண்டும். இயேசுவைப் போல, பிறரின் நலனுக்காக அந்தக் குறைச் சொல்லை நாம் பொறுத்துக்கொண்டால், அது இயேசுவின் வழியைப் பின்பற்றுவதாகுமே!

இயேசுவின் காயங்களை முத்தம் செய்யும் நாம், இயேசுவைப் போல வாழ முயல்வோம்!

மன்றாடுவோம்: எங்களுக்காக அவமானத்தின் சின்னமான சிலுவைச் சாவை ஏற்றுக்கொண்ட ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். உமது காயங்களை அன்புடன் முத்தி செய்கிறோம். உம்மைப் போல நாங்களும் துன்பங்களைத் துணிவுடன் ஏற்று, பிறரின் வாழ்வுக்காக ஒப்புக்கொடுக்க அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

- பணி குமார்ராஜா

 

திருப்பாடுகளின் வெள்ளி !

இயேசுவில் இனிய இணைய தள அன்பர்களே,

இயேசு தன் உடல், மனம், ஆன்மா, உணர்வுகள் இவற்றோடு தன் உயிராற்றலையும் ஒப்புக்கொடுத்தார் என்னும் செய்தியை ஆண்டவர் இயேசு உயிர் துறந்த நாளாகிய இன்று சிந்திப்போம்:

  1. இயேசு தன் உயிராற்றலை ஒப்புக்கொடுத்தார்:

 மானிடரின் உடல், மனம், ஆன்மா, உணர்வுகள் அனைத்தையும்விட உயர்ந்தது நமது உயிராற்றல். வாழவேண்டும், செயலாற்ற வேண்டும், சாதிக்க வேண்டும் என்னும் தாகம், பேரார்வம் ஒவ்வொருவருடைய ஆளுமையின் ஆழத்திலும் புதைந்துகிடக்கிறது. ஆங்கிலத்தில் அதனை றுடைட என்றும், றுடைட Pழறநச என்றும் சொல்கிறோம்.

உடலும், மனமும், ஆன்மாவும், உணர்வுகளும் ஒரு திசையில் நோக்கினாலும், அதற்கு மாறான திசை நோக்கும் ஆற்றல் நமக்கு உண்டு. அதுவே நமது உயிராற்றல், அல்லது உயிரூயஅp;க்கம். விளையாட்டு வீரர்கள் பழைய சாதனைகளை முறியடித்து, புதிய சாதனைகளை நிகழ்த்த உதவுவது அவர்களின் உயிராற்றலே. ‘இத்தனை நாள்களில் இறந்துவிடுவார்’ என்று மருத்துவர் நாள் குறித்தபின்னும், உயிர் வாழ்ந்து மருத்துவரையும், பிறரையும் வியக்க வைக்கும் ஆற்றல் அதுவே. பூகம்பத்தின் இடிபாடுகளுக்கிடையில் நான்கு நாள்களுக்கு மேலானபிறகும், உடலும், மனமும், உணர்வுகளும் ஒடுங்கியபிறகும், ஒரு சிலர் உயிரோடு மீட்கப்படுகின்றனர் என்றால், அதற்கு காரணம் அவர்களது உயிராற்றலே.

நமது வாழ்க்கையில் உடலும், மனமும், உணர்வுகளும் நம்மோடு ஒத்துழைக்க மறுத்தாலும், நாம் செபிக்க முடியுமென்றால், அது நமது உயிராற்றலால்தான். எனவே, மிகவும் சோர்வான வேளைகளிலும் நாம் சொல்ல வேண்டியது: #8220;இறைவா, நான் செபிக்க விரும்புகிறேன். என்னை ஏற்றுக்கொள்ளும்” என்றுதான்.

இயேசு தன் வாழ்வின் இறுதிநாளில் உடல், மனம், உணர்வுகள் அனைத்தும் சோர்ந்துவிட்ட வேளையில், தன் உயிராற்றலால் இறைவனோடு ஒன்றித்திருந்தார், அவரது உயிராற்றலை இயேசு தாமாகவே முன் வந்து கையளித்தார். #8220;என்னுடைய உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக்கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன்” (யோவா 10:18) என்று மொழிந்தார். இறுதியில்,  #8220;தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்” என்று அவரது உயிராற்றலைத் தந்தையிடம் கையளித்தார். இவ்வாறு, தன் மானுட ஆளுமை முழுமையையும், தன்னை முற்றிலுமாக தந்தை இறைவனுக்கு அர்ப்பணித்தார். அதுவே சிறந்த செபம், அதுவே சிறந்த அர்ப்பணம். நாமும் இயேசுவைப் பின்பற்ற முயற்சி செய்வோம்.

மன்றாடுவோம்: எங்களுக்காக உம்மை முழுதும் ஒப்புக்கொடுத்த இயேசு ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உடல், மனம், ஆன்மா, உணர்வுகள், உயிராற்றல் அனைத்தையும் இறைவனுக்கு ஒப்புக்கொடுத்து, முற்றிலும் இறைவனுக்கு உகந்தவராக வாழ்ந்ததுபோல, நாங்களும் முற்றிலும் உமக்கே சொந்தமானவர்களாய் வாழ்வோமாக ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

--அருட்தந்தை குமார்ராஜா

---------------------

 

''இயேசு, 'எல்லாம் நிறைவேறிற்று' என்று கூறித்
தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்'' (யோவான் 19:30)

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

-- இயேசு சிலுவையில் அறையப்பட்டு ஒரு குற்றவாளியைப் போல இறந்தார். சிலர் அவரை அரசியல் குற்றவாளியாக, சமயக் கொள்கைகளை மறுத்த துரோகியாகப் பார்த்தார்கள். நாட்டிற்கும் சமயத்திற்கும் எதிராகச் செயல்படுவோர் சரியான தண்டனை பெறவேண்டும் எனக் கருதியோர் இயேசுவின் சாவு பற்றி அதிகம் கவலைப்பட்டிருக்கமாட்டார்கள். ஆனால் இயேசுவின் வரலாற்றில் மனித ஆட்கள் மட்டுமே செயல்படவில்லை. இயேசுவின் வரலாறு கடவுள் இவ்வுலகில் மக்களோடு செய்துகொண்ட அன்பு உடன்படிக்கையின் தொடர் வரலாறு. எனவே, கடவுளிடமிருந்து வந்த இயேசு தம் சொந்த விருப்பப்படி செயல்படாமல் தம்மை அனுப்பிய தந்தையின் விருப்பப்படியே செயல்பட்டார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றிய இயேசு தம் சொல், செயல், பணி வழியாக மக்களுக்கு நன்மை செய்துகொண்டே போனார். அவருடைய அன்பையும் இரக்கத்தையும் அனுபவித்து உணர்ந்த மனிதர் பலர் இருந்தனர். இயேசு யார் என்பதை அவர்கள் படிப்படியாக அறிந்துகொண்டார்கள். இயேசு ஆற்றிய பணியின் இறுதிக்கட்டம் அவருடைய சிலுவைச் சாவு ஆகும். அதே நேரத்தில் இயேசுவின் பணி முழுமைபெற்றதும் சிலுவையில்தான். எனவே, ''எல்லாம் நிறைவேறிற்று'' என இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறிய சொற்களை நாம் இரு விதங்களில் புரிந்துகொள்ளலாம். கடவுள் வகுத்த திட்டத்தை இயேசு நிறைவுக்குக் கொணர்ந்தார் என்பது ஒரு பொருள். இயேசு ஆற்றிய பணி தன் முழுமையை எய்தியது சிலுவையில் என்பது மறு பொருள். ஆக, இயேசு நிறைவேற்றிய பணி தன்னிலே முழுமைபெற்றது என்றாலும் அதன் பயன்கள் நம்மை வந்தடைய வேண்டும் என்றால் நாமும் இயேசுவின் பணியோடு நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும்.

-- சிலுவைச் சாவு இயேசு பெற்ற புதுவாழ்வுக்கு வழியாக அமைந்தது. எனவே, சிலுவையில் உயிர்துறந்த இயேசு ஏதோ ஒன்றை இழந்தவர்போல அல்லாமல் நமக்குத் தம்மையே மனமுவந்து கையளித்தார் என்பதே பொருத்தம். தம்மை நமக்குக் கையளித்த இயேசு தம் ''ஆவியை ஒப்படைத்தார்''. ஆவி என்பது உயிர்மூச்சைக் குறிக்கும். நாம் மூச்சுவிடும்போது உயிரோடு இருக்கிறோம் என்பது பொருள். மூச்சு நின்றுபோகும் வேளையில் உயிரும் நம்மைவிட்டுப் பிரிந்துவிடுகிறது. எனவே, இயேசு நமக்கு வழங்குகின்ற ''ஆவி'' அவர் நமக்குத் தருகின்ற உயிரைக் குறிக்கிறது. இயேசுவின் ஆவியைப் பெற்ற நாம் உயிர் வாழ்கிறோம். நமக்குப் புது வாழ்வு வழங்கப்பட்டது. எனவே இயேசுவின் சாவு குறித்து நாம் துயரப்படுவதற்குப் பதிலாக மகிழ்ச்சியடைய வேண்டும் எனலாம். நாம் பெற்ற வாழ்வைப் பிறரோடு பகிர்வது நம் பொறுப்பு.

மன்றாட்டு
இறைவா, உம்மிடமிருந்து நாங்கள் பெற்ற புதுவாழ்வுக்கு நன்றி!

 

--அருட்திரு பவுல் லியோன் வறுவேல்

பெரிய வெள்ளி - விரிவுரை
இயேசுவின் பாடுகள்

அன்பார்ந்த இணையதள நண்பர்களே!

நற்கருணையின் வாழ்க்கை வடிவத்திற்கு, பெரிய வியாழன் பாதம் கழுவும் பணிமூலம் முன்னுரை எழுதிய இயேசு, பெரிய வெள்ளியில் விரிவுரை எழுதுகிறார்.கெதரோன் நீரோடையில் தொடங்கி கொல்கொத்தா கல்லரையில் அடங்கும் வரையிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்விரிவுரை இரத்தத்தால் வரையப்பட்டுள்ளது. நள்ளிரவில் தொடங்கி, வாதம் விவாதமின்றி விடியலுக்குள் புதிய பாஸ்கா பலியை பலியாக்கிவிட்டனர். "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லையே"(யோவா18:38) " அவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" (யோவா19:4) "இவனிடம் குற்றம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை,"(யோவா 19:6) " நீங்களே இவனைக் கொண்டு போய்ச் சிலுவையில் அறையுங்கள்".பிலாத்துவின்; சாட்சியம் இது. ஆனாலும், கைவசம் உள்ள கைவந்த கொடுஞ்செயல் அனைத்தையும் கையாண்டனர்.வன்சொல், வசை மொழி, கேலி கிண்டல்,அடித்தல் இடித்தல்,முள்முடி சாட்டை அடி.. .. கிழிந்து தொங்கும் சதைகள், இரத்தம் வடியும் உடல், கண்ணீர் சிந்தும் கண்கள், ஏங்கும் இதயம், சிலுவைச் சுமை, சிலுவை மரணம் இவை அனைத்தும் நற்கருணையின் வாழ்க்கை வடிவத்திற்கான பல்வேறு விரிவுரைகள்.

மனிதனோடு என்றும் வாழ விரும்பிய இறைவன், அப்ப இரச வடிவில் தன் உடலையும் இரத்தத்தையும், பெரிய வியாழன் இராவுணவின் போது ஆன்ம உணவாக் கினார். இதே செயலின் இன்னொரு வடிவம் பெரிய வெள்ளிக்கிழமை முழுவதும் கடும் வேதனை, சோதனை, கொடுமை மத்தியில் நிகழ்ந்துள்ளது. நம் கணிப்பில் இரு நிகழ்வும் இரண்டு நாள் நிகழ்ச்சிகள். ஆனால் இரண்டும் ஒன்று. ஒரே பொழுதில் நிகழ்ந்தவை. ஆகவே ஒவ்வொரு திருப்பலியிலும் இவை இரண்டும் இணைந்தே நடைபெறுகின்றன.

நற்கருணை எனபது ஆண்டவனை மகிமைப்படுத்துவதை மட்டும் மையப்படுத்தியதல்ல.ஆண்டவன் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதனின் மீட்பையும் தன்னகத்தே கொண்டது. மனிதனை மீட்பதிலும் இறைவன் மாட்சியடைகிறார். ஒவ்வொரு திருப்பலியும் இவ்விரு நோக்கங்களுக்காகவும் பலியிடப்படுகிறது. கல்வாரியில்; நிகழ்ந்ததும் இதுவே. மனிதனோடு உறவு, சமாதானம் இல்லாத நற்கருணையும் , திருவிருந்தும் பொருளற்றது என்பதாலேயே, நற்கருணை விருந்தில் அமரும்முன் உறவை உருவாக்கிக்கொள்ள, 'ஒருவருக்கொருவர் சமாதானத்தை அறிவித்துக்கொள்வோம்' என்ற அழைப்பு கொடுக்கப்படுகிறது.பலியிட வரும் முன் " ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள்(மத்5:23-24) இதைச் செய்வதுதான் பெரிய வெள்ளி. கல்வாரிப் பலி.

அயலானுக்காக வாழ்வதென்பது ஒரு பெரிய வெள்ளி வாழ்க்கை. அநியாயத் தீர்ப்பு - பழிச் சொல்லுக்கு குறை இருக்காது. கண்ணீர் வடிக்காத நாளும் நேரமும் சகஐம். அலட்சியமும் அவமானமும் அடுக்கி வரும். நீதி மன்றம் காவல்நிலையம் அலையும் அலைச்சல் அதிகம் இருக்கும். உடலிலும் உள்ளத்திலும் வேதனை தொடரும். உருட்டல் மிரட்டல் சந்திக்க வேண்டியதிருக்கும். மொத்தத்தில் ஒரு பெரிய வெள்ளி, நற்கருணை வாழ்வு அங்கெல்லாம் நடைபெருகிறது. இறைவன் மகிமையடைகிறார். பாஸ்கா வாழ்வை வாழ்வோம்.இனிது வாழ்வோம். வாழ்த்துக்கள். ஆசீர்.

--அருட்திரு ஜோசப் லியோன்